Sunday 9 June 2019

இதே நாளில் அன்று

எமர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வென்று மத்திய ஆட்சியை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைப்பற்றி இருந்தார், இந்திரா காந்தி. தமிழ் நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை பிடித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக 2 எம்பி இடங்களை மட்டுமே பிடித்தது.

இதனால், ஆட்சியை கைப்பற்ற இதுவே சரியான தருணம் என நினைத்த கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்குமாறு இந்திராவுக்கு நிர்பந்தம் கொடுத்தார். விளைவு, மத்திய ஆட்சிக்கு வந்த மறு மாதமே எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திரா. தமிழகத்தில் எம்ஜிஆர் அரசு உட்பட இந்தியா முழுவதும் ஜனதா ஆதரவு கட்சிகளின் அரசு மற்றும் ஜனதா கட்சி அரசு என ஒரே நாளில் 17 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 பிரிவை பயன்படுத்தி எதிர்க்கட்சி மற்றும் பிடிக்காத முதல்வர்களின் அரசுகளை கலைப்பது காங்கிரசுக்கு கைவந்த கலை.

இப்படியாக, எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு 1980ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மீண்டும் களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ஜனதா, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு இரண்டும் தனியாக போட்டியிட்டன. குமரி அனந்தனின் காகாதேகா, பழ. நெடுமாறன் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 177 இடங்களில் அதிமுக களமிறங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்தாவது மாதத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக அணியில் அதிமுக மட்டும் 130 இடங்களை பிடித்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர். தமிழக மக்களின் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பை வைத்து கருணாநிதியும் இந்திராவும் கணித்த கணிப்பு பொய்யாக முடிந்தது.

தமிழக அரசியலில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றார், எம்ஜிஆர். (இந்த பட்டியலில் 2016ல் ஜெயலலிதா இடம் பெற்றார்) அப்படி இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழக  முதல்வராக எம்ஜிஆர் மீண்டும் பதவியேற்றது இதே நாளில் தான்... 9-6-1980.



அதன்பிறகு, 1984 தேர்தலிலும் மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தில் யாருமே முறியடிக்காத ஹாட்ரிக் வெற்றியை எம்ஜிஆர் அழுத்தமாக பதிவு செய்தார் என்பது வரலாறு.

No comments: