Thursday 9 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -34

தமிழ் சினிமாவில் இவரோட ஸ்டைலே தனி. பெயரை சொன்னாலே கண்ணை சிமிட்டி புருவத்தை அசைத்தபடி அழுத்தமாக பேசும் டயலாக் டெலிவரிதான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வரும்.

"ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்"

"ஏண்டாாா எடுத்தேஏஏ எதுக்குடா எடுத்தேஏஏ"

இது மாதிரியான வசனங்களும் கூடவே நினைவிலாடுவதை தவிர்க்க முடியாது. அவர்தான் அசோகன்.



நம்பியார், எஸ்.வி.ரங்காராவ் இருவரும் கலந்த ஒரு கேரக்டரில் பொருந்துவது அசோகன்.

வில்லன்களில் நம்பியார் ஒரு ரகம் என்றால் இவர் வேறு ரகம். நம்பியார் படம் என்றால் நாலைந்து சண்டையாவது இருக்கும். ஆனால், இவரோ பெரும்பாலும் நேரடியாக மோதாத புத்திசாலி வில்லன். கிளைமாக்சில்தான் மூன்று அடி அடித்துவிட்டு அதன் பிறகு அடி வாங்குவார். நம்பியாருடன் சேர்ந்து இவரும் வில்லனாக மிரட்டினால் அந்த படம் பிளாக் பஸ்டருக்கு உத்தரவாதம். எம்ஜிஆரின் 'என் அண்ணன்' அதற்கு உதாரணம்.



வில்லன் தவிர்த்து அப்பா, மாமனார், பண்ணையார், ஊர் பெரியவர் என கேரக்டர் ரோல்களிலும் எஸ்.வி.ரங்காராவ் போலவே கலக்கியவர். நல்ல குணமான ஊர் பெரிய மனிதர், ஜமீன்தார் வேடங்களுக்கு ரங்காராவ் என்றால் அதே கேரக்டர்களின் கொடூரமான பிம்பத்தில் அதகளப்படுத்தியவர் அசோகன். இதற்கு 'ரிக்சாக்காரன்' படத்தை உதாரணம் காட்டலாம்

அசோகனின் திரையுலக வாழ்க்கை மொத்தம் 30 ஆண்டுகள். தனது  மொத்த வாழ்வையும் திரையிலேயே கழித்தவர். திருச்சியின் மிக பழமை வாய்ந்த பிரபலமான  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றதும் சினிமா ஆசையில் சென்னை வந்த அந்தோணியை அசோகன் ஆக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டிஆர் ராமண்ணா. 1953ல் வெளியான அன்றைய ஹிட் படமான கேபி சுந்தராம்பாள் நடித்த 'அவ்வையார்' தான் அறிமுகம். முதல் வேடமே மன்னன் வேடம் தான்.



அன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள், வறுமை போன்ற பல்வேறு சூழலால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் நாடகங்களில் வேஷம் கட்டிய கையோடு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்திருந்தனர். அதனால் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே சினிமாவில் நிறைந்திருந்தனர். அப்படி பார்த்தால் அசோகன்தான் தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்றே கூறலாம். டைட்டில் கார்டிலேயே அசோகன் பி.ஏ என்று தான் போடுவார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்னதாக தலை காட்டிய அசோகனுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால் 1960 தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டு காலம் அவர் காட்டில் அடைமழை பெய்தது. ஆண்டெின்றுக்கு தலா பத்து படங்களுக்கு மேல் எல்லாம் நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 80  படங்கள். (இது எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகம்)



எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் அசோகன்தான் மெயின் வில்லன். அதே நேரத்தில் 'அன்பே வா' படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் முறைப் பையனாக விமான பைலட் கேரக்டரில் மிக அமைதியான ஜென்டில்மேனாகவும் அசோகன் கலக்கி இருப்பார்.



சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காத மேதை, பாதகாணிக்கை, களத்தூர் கண்ணம்மா, கர்ணன் இப்படி அசோகனின் தரமான நடிப்பை சொல்லும் படங்கள் ஏராளம்.

கூடவே, பாடியும் இருக்கிறார் அசோகன். ஜெய்சங்கரின் அறிமுக படமான 'இரவும் பகலும்' படத்தில் "இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். அத இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துடடான்...' என்ற பாடலை பாடியவர் சாட்சாத் அசோகனே தான்.

வில்லன், குணசித்திரம் என கலக்கியதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  இது சத்தியம், தெய்வ திருமகள், காட்டு ராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன்... இவை அசோகன் ஹீரோவாக நடித்த படங்களில் சில. 



நாயகன் என்றால் டூயட் பாடல்கள் இல்லாமலா..?

"மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது...", 

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்..." 

"காட்டு ராணி, உன் முகத்தை காட்டு ராணி..." 

இவை அவரது டூயட்டுகளில் சில.

'பாத காணிக்கை' படத்தில் ஊன்று கோலுடன் தோன்றி நடித்த "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..." பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்களில் ஒன்று.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில திரைப்படங்களையும் அசோகன் தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'நேற்று இன்று நாளை' தயாரிப்பாளர் இவர்தான்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலகட்டத்துக்கு பின், 1980களில் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு', 'தர்மயுத்தம்',  'தீ', 'பில்லா', 'முரட்டுக்காளை', 'சவால்', 'சங்கர்லால்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களில் சிவகுமார், ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் அசோகன் நடித்திருக்கிறார். 

'ஆனந்த ஜோதி', 'களத்தூர் கண்ணம்மா' என குழந்தை கமலுடன் நடித்த அசோகன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் ஹீரோ கமலுடனும் நடித்திருக்கிறார்.  "ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்..."னு தனக்கே உரித்தான குரலில் பூதம் வேடத்தில் கமலுடன் கலக்கி இருப்பார்.



1950களில் துவங்கி 1980கள் வரை நீடித்த அசோகனின் திரைப் பயணம் அவரது 51வயதிலேயே முடிந்து போனது. 50 வயதிலேயே மறைந்த  டி.எஸ்.பாலையா, ரங்காராவ், என்எஸ்கே போன்ற தமிழ் திரையுலக பிரபலங்களின் பட்டியலில் அசோகனும் இடம் பிடித்து விட்டார்.

பவளங்கள் ஜொலிக்கும்

#நெல்லை_ரவீந்திரன்

2 comments:

Anonymous said...

Wonderful article abt ever rememberable villainous actor, the great SA Asokan. Congrats bro.

Anonymous said...

Thank you sir