Sunday 5 June 2022

பாடும் நிலா பாலு



 தமிழை சுமந்தபடி தவழும் தென்றல் காற்றை கற்கண்டாக மாற்றிய ரசவாதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவுக்கு முதன் முதலில் குரல் தந்து அரை நூற்றாண்டாக குரலில் மாயவித்தை காட்டிய மந்திரவாதி. இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் நிறைந்திருக்கிறார், எஸ்பிபி.

நான் அறிந்தவரை எவ்வளவு சிக்கலான பாடலாக இருந்தாலும் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடியது அவர் ஒருவர்தான். எவ்வளவு உச்சஸ்தாயி போனாலும் சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. எப்படி பாடினாலும் கூடவே சிரிப்போ, சோகமோ, எள்ளலோ அசால்ட்டாக நொடியில் கொண்டு வந்து வரிகளையும் பாடும் திறமைசாலி. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதை குறிப்பிடலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும்.  'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கான 'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இந்திரன் சந்திரன் படத்திலும் ஒரு கமலுக்கு இவர்தான் குரல். தசாவதாரத்திலும் ஒரு சில கேரக்டர்களுக்கு எஸ்பிபி குரல்தான். 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொரு பாடலும் எஸ்பிபியையே எனக்கு முன்னிறுத்தும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடுவதை வேறு யாரையும் கொண்டே நினைத்துப் பார்க்கவே முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என பயணித்து இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி,  உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வி இருவருமே புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே.

சிகரம், ரட்சகன், காதலன், மின்சார கனவு இப்படி நிறைய படங்களில் நடிகராகவும், பல படங்களை தயாரித்தும், துடிக்கும் கரங்கள் (அந்த படத்தின் மேகம் முந்தானை ஆடுது தன்னாலே...  பாடல் ஒன்றே போதும் அவரது இசைக்கு) போன்ற படங்களின் இசையமைப்பாளராகவும் ஜெயித்த அவரால் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன ஒரு காரணம்: என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. இயக்குநராக இருந்தால் அதை செய்ய நேரிடும். இதுதான் எஸ்பிபி

மக்கள் நாயகன் ராமராஜன்,  மைக் மோகன் இருவருமே திரை வானின் உச்சத்தில் ஜொலித்ததற்கு எஸ்பிபி பாடல்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. இருவரின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டடித்தன.

இசையால் பாடல் வரிகள் உயிர் பெற்றாலும், எஸ்பிபி பாடியதாலேயே   அவை அமரத்துவம் பெற்று ஜீவித்து நிற்கின்றன. மகிழ்ச்சி, சோகம், காதல், பாசம், தோல்வி இப்படி ஒவ்வொருவரின் அந்தந்த சமயத்தின் எந்தெந்த உணர்வுக்கும் அவர் குரலே அருமருந்து. தூக்கம் இல்லா நீள் இரவுகளில் அவரது குரலே நல் விருந்து. நீண்ட தூர பயணங்களுக்கும் அதுவே வழித்துணை.

இன்று எஸ்பிபி பிறந்த தினம்

#நெல்லை_ரவீந்திரன்

No comments: