Thursday, 30 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -46

ஒரு நடிகரையே சூப்பர் டூப்பர் ஹீரோவாக்கிய குரல், இவருடையது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், நடிகர் இப்படி பன்முக கலைஞரான இவர், இளைய தளபதி விஜயின் தாய்மாமன். அவர்தான் எஸ்.என்.சுரேந்தர். 

சிறு வயதிலேயே குழந்தை பாடகராக பாடல்களை பாடியிருக்கிறார். 1960களின் ஹிட்டான 'பாமா விஜயம்' படத்தில் வரும் "வரவு எட்டணா செலவு பத்தணா..." பாடலில் வரும் குழந்தை குரல் இவருடையதுதான்.


சினிமாவில் நடிகராகவோ, பின்னணி பாடகராகவோ மாற வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் பின்னணி குரல் கொடுப்பவராகி விட்டார். சீயான் விகரம் கூட, முதலில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதன் பிறகு தான் நடிகரானார் தெரியுமா?

கன்னடத்தில் இருந்து டப்பிங் செய்து தமிழில் வெளியான, 'அதிசய மாப்பிள்ளை' என்ற படத்தில்தான் சுரேந்தர் முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு, 'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்தார். இதுதான் அவர் டப்பிங் பேசிய முதல் தமிழ் படம். ஆதன் பிறகு, பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக 600 படங்களில் முன்னணி ஹீரோக்கள் உட்பட ஏராளமான நடிகர்களுக்கு எஸ்.என்.சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். 

'மைக்' புகழ் நடிகர் மோகனுக்கு முற்றிலுமாக இவரது இரவல் குரல்தான். ஆனால், மோகனின் முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே', படத்தின் ஹீரோவான நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனுக்குத்தான் எஸ்.என். சுரேந்தர் குரல் கொடுத்திருப்பார்.

டி.ராஜேந்தரின் 'ரயில் பயணங்களில்' படத்தில் ஹீரோ ஸ்ரீநாத்துக்கு, 'ஒரு தலை ராகம்' சங்கருக்கு... 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்குக்கு, 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் விஜயகாந்துக்கு, 'ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் ரகுவரனுக்கு... 1980ஸ் டிஸ்கோ டான்சரான நடிகர் ரவீந்தர் என சுரேந்தர் குரல் கொடுத்த நடிகர்கள் பட்டியல் ஏராளம். 'அந்நியன்' படத்தில் விக்ரமின் தந்தையாக வரும் மலையாள நடிகர் நெடுமுடி வேணுவுக்கும் இவரது குரல்தான்.

தமிழ் சினிமாவில் 1980களின் பெரும்பாலான அறிமுக நடிகர்களுக்கு முதலில் இவரது குரலைத்தான் பயன் படுத்தி இருக்கிறார்கள். 

ஆனால், இவரது குரல் என்றாலே மோகன் தான் நினைவுக்கு வருவார். (எனக்கும் கூட மோக் பற்றி எழுதியதுமே இவர் நினைவுக்கு வந்ததால் தான் இந்த கட்டுரை) 1981ல் 'கிளிஞ்சல்கள்' படம் துவங்கி 1987 வரை 75 படங்களுக்கு மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். படங்களில் மோகன் தான் வசனம் பேசுவதாகவே ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இவரது குரல் கன கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

மென்மையான ரொமான்டிக்கான,  வார்த்தைகளுக்கு வலிக்காத மென்மையான குரல் எஸ்.என்.சுரேந்தருக்கு. கண்களை மூடியபடி கேட்டால், 1990ஸ் படங்களில் நடிகர் விஜயின் குரல் போலவே இருக்கும். அவரது தாய்மாமன் இல்லையா? 


விஜயுடன் 'நாளைய தீர்ப்பு', 'பிரியமுடன்', 'நெஞ்சினிலே' மாதிரியான சில படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் நடித்திருக்கிறார். 'சென்னை 28' படத்திலும் தலை காட்டியிருக்கிறார்.

டப்பிங் குரல் கொடுப்பதை தாண்டி, எஸ்.என். சுரேந்தர் மிக அருமையான பின்னணி பாடகர். நான்கு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். இவரது காதல் டூயட் பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடுபவை.


"மா மரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா..."

"பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே..."

"கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா..."

"தனிமையிலே ஏஏஏ ஒரு ராகம்.. " 

"தேவதை போலொரு பெண் ஒன்று வந்தது இங்கே..."

"மாலை என் வேதனை கூட்டுதடி..."

இவை எல்லாம் சாம்பிள்தான்.. 


விஜய்க்காக 'தேவா', 'ஒன்ஸ்மோர்', 'விஷ்ணு', 'மாண்புமிகு மாணவன்', 'காதலுக்கு மரியாதை' என பல படங்களில் பாடி இருக்கிறார். அதில் சில...

"பூவே பூவே பெண் பூவே.. என் பூஜைக்கு..."

"ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..."

"சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா பாட்டு வரும்..."


பின்னணி பாடகர் ஒருவர் பாடல்களையும் பாடிக் கொண்டு, படங்களில் பின்னணி குரலும் கொடுத்துக் கொண்டு தனது குரலாலேயே தமிழ் சினிமாவுக்கு உச்ச நட்சத்திரமாக ஒருவரை அடையாளப்படுத்தியவர், எஸ்.என்.சுரேந்தர் ஒருவராகத்தான் இருக்கும்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 8 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -45

சினிமா என்றாலே வெவ்வேறு விதமான மயக்கம் தான். வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்றோ வாணி ஜெயராமுக்கும் சுசீலாவுக்கும் வேறுபாடு அறியாமலோ 1990களின் தேவா பாடல்களை இளையராஜா என்றோ நினைத்து பலரும் மயங்குவதுண்டு. அப்படித்தான் 1980களின் இவரது பல பாடல்களை இளையராஜா என்றே நினைப்போம். ஆனால் இவர் இளையராஜாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகுக்கு வந்தவர். அவர்தான் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.



தமிழின் மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தியிடம் தான் இவரும் சங்கரும் இசை படித்தனர். பிறகு, எம்.எஸ்.வி. தனியாக இசையமைத்தபோது அவரிடம் உதவியாளர்களாக சேர்ந்தனர். சங்கர் கணேஷ் இரட்டையர்களை தனியாக இசையமைப்பாளராக்கியவர் கவியரசர் கண்ணதாசன். அவர் தயாரித்த 'நகரத்தில் திருடர்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் நின்று போனது. அதன் பிறகு சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 'மகராசி' படத்துக்கு அவர்களை கண்ணதாசன் சிபாரிசு செய்தார். ஆனால் அந்த படத்தின் நாயகன் ரவிச்சந்திரனுக்கு உடல் நல குறைவால் படம் தள்ளிப் போக, நாயகியான ஜெயலலிதாவும் தேவரிடம் இவர்களுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்.

காரணம், திரைக்கு வரும் முன்பே ஜெயலலிதாவின் 'காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாட்டிய நாடகப் பணிகளில் சங்கர் கணேஷ்  இருந்திருக்கின்றனர். நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக போயஸ் தோட்ட இல்லத்துக்கும் சென்றதால் அறிமுகம். பல தடங்களுக்குப் பிறகு ஒரு வழியாக 'மகராசி' படம் 1967ல் வெளியானது. 

அதன் பிறகு ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்ற இரண்டாம்கட்ட நாயகர்களின் படங்களில் இசையமைத்த இவர்களுக்கு 1971ல் எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில், "உனது விழியில் எனது பாடல்...", "சித்திரச் சோலைகளே..." "தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு..." என அனைத்து பாடல்களுமே ஹிட்.  இதுபோல 1972ல் வெளியான எம்ஜிஆரின் 'இதய வீணை' படத்துக்கும் (காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்... பொன்னந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு... மாதிரியான ஹிட் பாடல்கள்) இவர்தான் இசை. அப்போதிருந்தே எம்ஜிஆருடன் கணேஷூக்கு நல்ல பழக்கம்.

1970களில் நிறைய படங்களுக்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இதற்கிடையே சங்கர் மரணமடைய, சங்கர் கணேஷ் என்ற இரட்டை பெயரிலேயே கணேஷ் தொடர்ந்து இசையமைத்தார். தமிழ் ரசிகர்களிடம் அவரை அடையாளம் காட்டிய படம், 1977ல் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு'. தேவர் தயாரித்த அந்த படத்தில் "பருத்தி எடுக்கையில என்ன பல நாளும் பாத்த மச்சான்...", "ஆத்துல மீன் பிடிச்சி..." பாடல்கள் இன்றளவும் ஹிட்...

கமலுக்கு 'நீயா', 'மங்கம்மா சபதம்'. ரஜினிக்கு 'தாய்வீடு', 'ரங்கா', 'ஊர்க்காவலன்'. பாக்யராஜுக்கு 'கன்னிப் பருவத்திலே', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'எங்க சின்ன ராசா'. விசுவுக்கு 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'வீடு மனைவி மக்கள்' என தொடங்கி 1990களின் ஆரம்பம் வரை 15 ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்திருக்கிறார் கணேஷ். 

சில்க் ஸ்மிதா அறிமுகமான 'வண்டிச்சக்கரம்' படத்தின் இசையமைப்பாளரும் கணேஷ் தான். அந்த படத்தில் எஸ்பிபி பாடிய "வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட..." பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ரகம். 

இதே டைப்பிலான 'வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் டிகேசி நடராஜன் பாடிய, "என்னடி முனியம்மா ஒன் கண்ணில மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..." பாடலும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த பாடல்தான்.

1950, 1960களில் பிரபலமான பழம்பெரும் பாடகர் ஏ.எம்.ராஜாவை திரும்ப அழைத்து வந்து "செந்தாமரையே செந்தேன் இதழே..." பாடலை பாட வைத்து ஹிட்டாக்கினார்.



"செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..."

"உத்தரவின்றி உள்ளே வா, உன்னிடம் ஆசை கொண்டேன் வா..."

"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..."

"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..."

"பட்டு வண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம்..."

"மேகமே மேகமே பால் நிலா காயுதே... தேகமே தேயினும்..."

"ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு..."

"மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..."

"ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்..."

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது..."

"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட..."

"ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்..."

"பட்டுக்கோட்டை அம்மாளே பாத்துப்புட்டான் நம்மாளே..."

"மாசி மாசம் தான் சொல்லு சொல்லு... மேள தாளம் தான்..."

"மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்  மண்ணில் இறங்குது ஆகாசம்..."


இப்பிடி ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் சங்கர் கணேஷின் ஹிட் பாடல்கள் ஏராளம். 1980களின் வானொலிகளில் இளையராஜாவுக்கு இணையாக இவர் பாடல்கள் ஒலிப்பது வழக்கம்.

1980களில் 'டிஸ்கோ டான்ஸ்' மிக  பிரபலமாக இருந்தபோது 'டிஸ்கோ டான்சர்' இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்த எடுத்த 'பாடும் வானம்பாடி' படத்துக்கும் இவர்தான் இசை. நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நாயகனாக நடித்த இந்த படத்தில் அனைத்து டான்ஸ் பாடல்களுமே ஹிட்.

எம்.எஸ்.வி.யிடம் இருந்தபோது 'கலாட்டா கல்யாணம்' மாதிரி ஒரு சில படங்களில் கணேஷ் பாடியும் இருக்கிறார்.  இது போலவே 1980 வரை சில படங்களிலும் கணேஷ் நடித்திருக்கிறார். 'ஒத்தையடி பாதையிலே' படத்தின் ஹீரோ இவர்தான். அதில் கே.ஜே.யேசுதாஸ் குரலில் "செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா நான் விக்கிப் போறேன் தாகத்தில நில்லம்மா..." ன்னு டூயட் பாடலும் கணேஷுக்கு உண்டு.

1986ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் தபாலில் அனுப்பிய குண்டு வெடித்ததால் கணேஷின் கை விரல்கள் சிதறியதோடு வலது கண் பார்வையும் பறி போனது. இன்று வரை கையில் உறையுடனும் கருப்பு கண்ணாடி அணிந்தபடியும் கணேஷ் இருப்பதற்கு இதுதான் காரணம்.

குண்டு வெடிப்பால் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அப்பலோவில் சிகிச்சை பெற்ற கணேஷுக்கு முழு உதவியும் செய்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். எம்ஜிஆரை தனது தெய்வம் என்றுதான் கணேஷ் சொல்வார். அவரது படத்துக்கு இசையமைத்ததில் இருந்தே கணேஷூக்கு எம்ஜிஆருடன் நல்ல பழக்கம். ஆரம்ப கால அதிமுக காரர் என்றே கணேஷை சொல்லலாம். 

ஐந்து ஆண்டுகள் கழித்தும் கணேஷை வெடிகுண்டு தாக்குதல் துரத்தியது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் ஸ்ரீபெரும்புதுரில் கொலை  செய்யப்பட்டபோது அங்கு நடந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவரது இசைக் கச்சரிதான். மனித வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் மேடையில் இருந்தார்.

1980க்கு பிறகு திரைப்படம், இசைக் கச்சேரி மட்டுமே என இருந்த கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆயிரம் படங்களில் சுமார் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். உடலை ஒட்டி பிடித்தபடி டைட்டான சட்டை, கழுத்து கைகளில் நகைகள், 1960, 70களில் பிரபலமாக இருந்த நறுக்கு மீசை, இதுதான் இசையமைப்பாளர் கணேஷின் அடையாளம்.



இவரது மகனும் நடிகர் தான் சன், விஜய் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ இவரது மகன் தான்.

இசையமைப்பாளர் கணேஷுக்கு மார்ச் 4ல் 80ஆவது பிறந்த நாள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 2 March 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -44

1980களில் ரஜினி, கமலுக்கு செம டஃப் கொடுத்த நடிகர் இவர். இவரது பாதி படங்களுக்கு மேலாக சில்வர் ஜூப்ளி ஹிட் ரகங்கள். இன்று வரை பலரது இரவு தாலாட்டு கீதமாக நிச்சயம் இவரது படப் பாடல்களும் இருக்கும். நடிகர் மோகன். 'மைக்' மோகன் என செல்லமாக அழைப்பார்கள். 



கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இன்று வரை (35 ஆண்டுகளாக படம் எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும் கூட) இருப்பவர். 

கர்நாடகாவில் சாதாரணமா ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்க, அப்படியே அங்கிருந்து மோகனை சினிமாவில் அறிமுகம் செய்தவர், இயக்குநர் பாலு மகேந்திரா. 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? கமல். அடுத்த நான்கைந்து ஆண்டுகளிலேயே நமக்கு போட்டியாக மோகன் படங்கள் இருக்கும் என கமல் நிச்சயமாக அப்போது நினைத்திருக்க மாட்டார்.



கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்கில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்கான, தூர்ப்பு வெல்லே ரயிலு' என வலம் வந்த மோகனை தமிழுக்கு 1980ல் அழைத்து வந்தவர், இயக்குநர் மகேந்திரன். 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகம் செய்தார். இந்த படத்திலும் அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான ரோலில் நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே ஹிட்.

முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின்  "பருவமே புதிய பாடல் பாடு..." பாடலில் இருந்து மோகனின் வெற்றிக் கணக்கு  தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோகனே கதாநாயகனாக நடித்து வெளியான 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை' இரண்டும் அதிரி புதிரி ஹிட். இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. இந்த படங்களை இப்போது பார்த்தாலும் அறிமுக நாயகன் மாதிரியே தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஹிட் ரகம் தான்.  குறைந்தது 175 நாட்களை தாண்டின. 



1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கேமரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் ரிலீசான வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.



அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை

என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர். 

பாரதிராஜாவின் அறிமுகமான நடிகர் சுதாகர், தமிழில் தவற விட்ட இடத்தை மோகன் கச்சிதமாக பிடித்துக் கொண்டார். மோகன் நடித்த படங்களில் பைட் ஸீன் எதுவுமே இருக்காது. மசாலா படமாகவும் இருக்காது. ஆனாலும், மோகன் படங்களுக்கு திருவிழா கூட்டம் போல மக்கள் குவிந்தனர்.



அப்பாவித்தனமாக முகத்துடன் உருகி உருகி காதலிப்பது, மைக்கை பிடித்துக் கொண்டு நிஜ பாடகர் போலவே பாடி நடிப்பது என கலக்கியதால் மைக் மோகன் ஆனார்.

இப்படி ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக  'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.



வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக',  'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே'  'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன  பட்டியலுக்குள் அடங்காது. 

இது போலவே,


"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்..."

"இளைய நிலா பொழிகிறது..."

"வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்..."

"பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..."

"ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே..."

"தேவதாசும் நானும் ஒரு சாதிதானடி.."

"பாடவா உன் பாடலை..."

"தேவன் தந்த வீணை அதில் தேவி உந்தன் கானம்..."

"சங்கீத மேகம் தேன் சிந்தும் வானம்..."

"தென்றல் வந்து என்னைத் தொடும் சத்தமின்றி முத்தமிடும்..."

"கண்மணி நீ வர காத்திருந்தேன்..."

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது..."

"இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்..."

"வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்..."

"நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா..."

"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..."

"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ..."

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா..."

"ஊரு சனம் தூங்கிடுச்சி ஊதக் காத்தும் அடிச்சிடுச்சி..."

"வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..."

"மலையோரம் வீசும் காத்து மனசோரம் பாடும் பாட்டு கேட்குதா.."


இதெல்லாம் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டும் மோகன் ஹிட்ஸ்களில் வெகு சில. 1980களின் காதலர்களுக்கு மோகன் பாடல்கள் தான் காதல் கீதங்கள்.  

தமிழ் சினிமாவை இப்படி பலவிதமாக கலக்கிய நடிகர் மோகன் தனது சொந்தக் குரலில் படங்களில் பேசவில்லை. மைக்கை அடையாளமாகவே வைத்து மேடை பாடகராக நடித்து ஹிட் கொடுத்த மோகனுக்கு படங்களில் குரல் கொடுத்தவர் ஒரு பாடகர். அவர்தான் இளைய தளபதி விஜயின் தாய் மாமாவும் அன்றைய பிரபல பினனணி பாடகருமான எஸ்.என்.சுரேந்தர். 

மோகன் நடித்த தமிழ் படங்களில் 70%க்கும் அதிமானவை சுரேந்தர் குரல் தான். 1981ல் 'கிளிஞ்சல்கள்' துவங்கி 1987ல் வெளியான 'கிருஷ்ணன் வந்தான்' படம் வரை சுரேந்தர் குரல் தான் மோகனுக்கு. ஆனால் டப்பிங் குரல் என்பது கூட  ரசிகர்களுக்கு தெரியாத வகையில் மிக அருமையாக நடித்திருப்பார் மோகன். பாடலுக்கு எஸ்பிபி...! வசனத்துக்கு எஸ்.என்.சுரேந்தர்...!

முதல் படத்தில் இருந்தே வசனம் பேசுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த மோகன் 'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. மோகன் குரலே நன்றாக இருப்பதால் அவரையே பேச சொல்லுங்கள் என  கருணாநிதி சொன்னதால் அந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் மோகன் பேசினார்.

இதற்கிடையே, எஸ்.என்.சுரேந்தரும் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்த, கூடவே திரை வட்டாரத்தில் மோகனின் உடல் நிலை குறித்து வதந்தியும் பரவ, மோகனின் திரையுலக வாழ்க்கை இறங்கு முகமானது. 

அதன்பிறகு இப்போது வரை அவ்வப்போது தமிழில் மோகன் தலை காட்டினாலும் 1980களின் மோகன் தான் ரசிகர்களின் மனதில் என்றென்றும் ததும்பி நிற்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 21 February 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -43

தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தது போல சில நட்சத்திரங்கள் மின்மினியாக தோன்றி ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஔிர்ந்து கொண்டிருக்கும். அது போன்ற நட்சத்திரம் தான் இவர். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக்கு பிந்தைய வெற்றிடத்தை பிடிக்கும் ரேஸில் இவரும் இருந்தார் என்றே சொல்லலாம். ரஜினி, கமல் தலையெடுக்க துவங்கிய ஆரம்ப கால போட்டியாளர் இவர். 1980களின் தமிழ் ரசிகைகளுக்கு கமலுக்கு முந்தைய காதல் இளவரசன். 

அவர் தான் சுதாகர்.

தமிழில் வெறும் 5 ஆண்டுகள் தான் இவரது காலம். அதற்குள் சுமார் 50 படங்களை நடித்தார். 1980ல் மட்டும் நாயகனாக இவரது 7 படங்கள் வெளியாகின. சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தபோது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் செட். அவருக்கு முன்பே சினிமாவுக்குள் நுழைந்து விட்டார் சுதாகர்.

சுதாகரை 1978ல் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. '16 வயதினிலே' படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் தான் சுதாகர் அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவும் அறிமுகம். அதன் பிறகு இந்த ஜோடி மட்டும் 11 படங்களில் நடித்திருக்கிறார்கள்.

சுருட்டை முடி , களையான முகம், வித்தியாசமான தலை வகிடு, சின்ன மூக்கு, வசீகரமான தோற்றம் என மனதை கவர்ந்த சுதாகருக்கு ரசிகர் ரசிகைகள் கூட்டம் அதிகம் உண்டு. பாக்யராஜ் படமான 'சுவரில்லா சித்திரங்கள்' படத்தில் சுதாகர்தான் ஹீரோ என்றால் பாருங்கள். 

இயக்குநர் பாரதிராஜா, ஹீரோ போல  பிரதான வேடத்தில் நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் சுதாகரும் ஒரு ஹீரோ. கமலுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்திலும் ரஜினியுடன் 'அதிசயப் பிறவி' படத்திலும் நடித்திருக்கிறார்.


அறிமுகமான ஒரு சில ஆண்டுக்குள்ளேயே, 'நிறம் மாறாத பூக்கள்', 'மாந்தோப்பு கிளியே', 'எங்க ஊரு ராசாத்தி', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'கரும்பு வில்', 'கரை கடந்த ஒருத்தி', 'தைப்பொங்கல்' ('ஆல் இன் ஆல் அழகுராஜா...' படத்தில் சந்தானம் காமெடியில் சொல்லுவாரே...) என 1980ஸ் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதாகரின் படங்கள் ஏராளம்.


கூடவே...,


"கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ... இங்கு வந்ததாரோ..."

"மாஞ்சோலை கிளிதானோ.. மான் தானோ... வேப்பந் தோப்பு கிளியும் நீதானோ.."

"ஆயிரம்  மலர்களே மலருங்கள்... அமுத கீதம் பாடுங்கள்..."

"சிறு பொன்மணி... அசையும்... அதில் தெறிக்கும்... புது இசையும்..."

"காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே... வானில் ஊர்கோலமாய்..."

"முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே... என் காதல் கண்மணியே..."

"பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன்... நான் வந்த நேரம் அந்த மான் அங்க இல்லே..."

"மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..."


இது மாதிரியான சுதாகர் நடித்த படங்களின் ஏராளமான எவர்கிரீன் பாடல்களும் ரசிகர்கள் மனதுக்குள் இனிக்கும்...

மினிமம் பட்ஜெட்டில் ஏராளமான வெற்றிப் படங்கள், ரசிகர், ரசிகைகள் பட்டாளம்... என 1980களில் ரஜினி, கமலுக்கு இணையாக, சுதாகரும் 'உதிரிப் பூக்கள்' விஜயனும் செம டஃப் கொடுத்தாலும் விதி வலியது...! சினிமாவுக்கே உரித்தான உள் குத்து அரசியலும் இருந்திருக்கலாம். 

சினிமாவில் நல்ல உச்சத்தில் இருக்கும் சமயத்தில், படப்பிடிப்புக்கு போதையில் வருவது, தாமதமாக வருவது என சுதாகர் குழப்பினார். அதுவும் ஷோபா, அம்பிகாவுடன் நடித்த 'சக்களத்தி' படத்தின் படப்பிடிப்பில் அது பெரியதாக வெடித்ததால் சுதாகரின் திரை வாழ்க்கை திடீரென மங்கத் துவங்கியது.

தமிழில் உச்சத்தில் இருந்தபோதே அவரது தாய் மொழியான தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார். அங்கும் இதேபோன்ற பிரச்சினைகளால் வாய்ப்புகள் குறைந்ததால் 1990களின் துவக்கத்தில் தெலுங்கில் காமெடியனாக அரிதாரம் பூசினார். அவரது குரலும் மிமிக்ரி திறமையும் அதற்கு கை கொடுத்தது.

இந்த சமயத்தில்தான் ரஜினியின் 'அதிசயப் பிறவி' படத்தில் சுதாகர் நடித்தார். 

ஹாலிவுட் சூப்பர் ஹிட் 'பேபிஸ் டே அவுட்' படத்தின் ரீமேக்கான 'சுட்டிக் குழந்தை' படத்தில் குழந்தையை கடத்தும் காமெடி வில்லன்களில் சுதாகரும் ஒருவர். அதில் அவரது குரல் மாடுலேஷன், தெத்துப் பல் தோற்றத்தை பார்த்தால் 1980ஸ் சுதாகரா இவர் என்ற கேள்வி நிச்சயமாக எழும்.

40 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த சுதாகர், போதையால் புகழை இழந்து, காமெடியனாக மாறி, உடல் நிலையையும் கெடுத்து வைத்திருக்கிறார். கனவு தொழிற்சாலை தரும் புகழ் போதையுடன் நிஜ போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்பதற்கு சுதாகரும் ஒரு உதாரணம்...

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 29 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -42

எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், இலக்கியவாதி, முதல் தமிழ்தேசியவாதி இப்படி ஏராளமான முகம் கொண்டவர். காலத்தால் அழியாத திரைப்பாடல்களை படைத்ததில் கண்ணதாசனின் முன்னோடியான கவிஞர் கா.மு.ஷெரீப், தமிழ் திரையுலகின் பவளம்.

'முதலாளி' படத்தில் "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே..."

'அன்னையின் ஆணை' படத்தில் "அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..."

'பணம் பந்தியிலே'  படத்தில் "பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே, பிழைக்கும் மனிதனில்லே..." 

'டவுண் பஸ்' படத்தில் "சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்.."

"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா..."

"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா..."

"வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்.."


இப்படி 1950களின் இறுதி துவங்கி 1960களின் துவக்கம் வரை சுமார் நானூறு பாடல்களை எழுதிய கா.மு.ஷெரீப்பின் சொந்த ஊர் தஞ்சை. பள்ளிக்கூடம் பக்கமே  போகாத இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். 'ஔி', 'சாட்டை', 'தமிழ் முழக்கம்' என பத்திரிகைகளை நடத்திய பத்திரிகை ஆசிரியர்.


நாடகம், கவிதை, அரசியல், கட்டுரைகள், இலக்கியம், இஸ்லாமியம் என பல வகைகளில் சுமார் 50 புத்தகங்களை எழுதி இருக்கிறார். சீறாப்புராண சொற்பொழிவுகள் பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 'கருணாநிதி 63' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பல கவிதை தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார். 'ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்', 'கண்ணகி', 'விபீஷணன் வெளியேற்றம்', 'நபியே எங்கள் நபியே' என பல புத்தகங்ளை எழுதிய இவர் சீதக்காதி பதிப்பகம் மூலம் பதிப்பாளராகவும் இருந்தவர்.



இவரது முதல் கவிதை 1933ல் குடியரசு பத்திரிகையில் வெளியானது. காங்கிரஸில் இருந்த இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அதே நேரத்தில் தீவிரமான தமிழ் பற்றாளர். தமிழ் தேசியம் பேசுபவர்களின் முன்னோடி. தமிழ்நாட்டுக்கு திருத்தணி என்ற வட எல்லையை மீட்டுத் தந்த ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் பின்னாளில் இருந்தார். திராவிட இயக்க தலைவர்களுடனும் நல்ல நட்பு உண்டு.



1950களில் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுந்தரம், பாடலாசிரியர் மருதகாசி போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமானவர். கா.மு.ஷெரீப்பின் முதல் பாடல் இடம் பெற்ற படம் 'பொன்முடி'. அந்த படம் 1950ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. அதன் இயக்குநர் பிரபல ஆங்கிலேயரான எல்லீஸ் ஆர்.டங்கன். 


கலைஞர் கருணாநிதியை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான். அந்த காலத்தில் எல்லாம் கதாசிரியர்  மாதிரியானவர்களை எல்லாம் மாத சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்வது தயாரிப்பு நிறுவனங்களின் வழக்கம். அது நாடக கம்பெனிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியின் முதல் படியாகவும் சொல்லலாம். அப்படி ஐநூறு ரூபாய் மாத சம்பளத்தில் கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கா.மு.ஷெரீப் தான் சேர்த்து விட்டார். நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதியே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமான கருணாநிதி கதை வசனத்தில் வெளியான 'மந்திரி குமாரி' படத்தில் "உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிது போவது போல்..." என்ற பாடலை எழுதியவர் கா.மு.ஷெரீப்.


எம்ஜிஆரின் 'சர்வாதிகாரி', எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த 'கூண்டுக் கிளி' சிவாஜியின் 'மக்களை பெற்ற மகராசி', வில்லன் நடிகர் நம்பியார் நாயகனாக நடித்த 'திகம்பர சாமியார்', தியாகராஜ பாகவதரின் 'அமரகவி' இப்படி அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருக்குமே பாடல்களை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

இவரது பாடல்களை தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தரராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, லீலா என அன்றைய முன்னணி பாடகர்கள் அனைவரும் பாடி இருக்கிறார்கள்.

இதுபோலவே ஜி.ராமநாதன், டி.ஆர்.பாப்பா, கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு என 1950களின் பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் இவரது பாடலுக்கு இசையமைத்திருக்கின்றனர். 

கவிஞர் கா.மு.ஷெரீப் என்றதும் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்த 'முதலாளி' படத்தில் வரும் "ஏரிக் கரையின் மேலே போறவளே பொன் மயிலே..." பாடலைத்தான் எல்லாரும் சொல்வார்கள். அந்த பாடல் பற்றி ஒரு கூடுதல் தகவல்.

அப்போதெல்லாம் ஆறேழு நிமிடம் வரை  மிக நீளமான பாடல்கள் வெளிவருவதுண்டு. சினிமா பாடல்களை  வட்ட வடிவமான ரிக்கார்டு முலமாகவே கேட்க வேண்டும். சின்ன பாடல் ஒரு பக்கத்தில் முடிந்து விடும். நீளமான பாடலாக இருந்தால் ஒரு பக்கம் முடிந்ததும் ரிக்கார்டு எனப்படும் இசைத்தட்டை மாற்றி போட்டு மீதி பாட்டை கேட்க வேண்டும். அது போன்ற இரண்டு பக்க பாடல்தான் ஏரிக்கரை மேலே பாடல்...

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு மூத்தவர் கா.மு.ஷெரீப். அவர் கவியரசர் என்றால் இவரை கவிஞர் என்றே அழைப்பார்கள். பாடல் வாய்ப்புக்காக இவர் யாரையும் தேடிச் சென்றதும் கிடையாது. பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என கறாராக பேசியதும் கிடையாது.

இஸ்லாமியராக பிறந்தாலும் வாழ்நாள் முழுக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டவர், கா.மு.ஷெரீப். சினிமாவை தாண்டி சிறந்த எழுத்தாளராகவும்  இலக்கியவாதியாகவும் சிந்தனையாளராகவும் மனித நேயராகவும் வாழ்ந்தவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

எழுத்தாளர்களை வந்து சேரும் வறுமை வாட்டியபோதும் மனம் தளராதவர். கருணாநிதி,  எம்ஜிஆருடன் நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் பதவியில் இருந்தபோது, எந்தவித உதவிக்கும் அவர்களிடம் செல்லாத மனிதர். 1960களிலேயே திரைப்பாடல்களின் வரிகள் தாறுமாறாக மாறியதும் சினிமாபாடல்கள் எழுதுவதையே நிறுத்திக் கொண்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 22 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -41



தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் நாயகர்கள் யாராவது அவ்வப்போது வருவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் இவர். 1960களில் காதல் நாயகன். 1980களில் மிரட்டல் வில்லன். அவர்தான் ரவிச்சந்திரன்.

மலேசியாவில் பிறந்தவர். இவரது தந்தை மலேசியாவில் 'தமிழ் நேசன்' பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரி படிப்புக்காக திருச்சிக்கு வந்தவருக்கு மருத்துவம் படிக்க ஆசை. சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவராக இருந்த அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஸ்ரீதர் (கடந்த பதிவில் பார்த்தோமே தலைமுறை கடந்த இயக்குநர் அவர்தான்...)

1963ல் வெளியான 'காதலிக்க நேரமில்லை' படம் தான் ரவிச்சந்திரன் அறிமுகம். படம் சூப்பர் டூப்பர் ஹிட். முத்துராமன், காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், டி.எஸ்.பாலையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த அந்த படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி ரகம்.

முதல் படத்திலேயே கனவு நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த ரவிச்சந்திரன் நடித்த அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அமோக வரவேற்பை பெற்றவை. ஜெயலலிதாவுடன் நடித்த 'நான்', திரில்லர் படமான 'அதே கண்கள்' (கமலின் 'விக்ரம் 2' படத்தின் raw version), 'இதய கமலம்',  'உத்தரவின்றி உள்ளே வா',  'கவுரி கல்யாணம்', 'வாலிப விருந்து'...  இப்படி 100 நாட்களை கடந்த படங்கள்   ஏராளம். 

எம்ஜிஆர் போலவே படங்களை கொடுத்ததால் 'சின்ன எம்ஜிஆர்' 'ரொமான்ஸ் ஹீரோ'... இப்பிடி நிறைய பட்டங்களை கொடுத்து 1960களின் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடி தீர்த்தனர். பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி வசூல் நாயகனாக ரவிச்சந்திரன் வலம் வந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளி விட்ட அவர், 1980களில் வில்லனாக சினிமாவுக்குள் மீண்டும் வந்தார். 1986ல் வெளியான 'ஊமை விழிகள்' படத்தில் மிரட்டியிருப்பார். 80ஸ் கிட்ஸ்களை தூக்கத்தில் கூட திகிலூட்டிய அந்த படத்தில் அடுத்தடுத்து கொலைகளை செய்யும் மர்ம மனிதனாக அதகளம் செய்திருப்பார் ரவிச்சந்திரன்.



அதே ஆண்டில் விஜயகாந்தின் 'அம்மன் கோயில் கிழக்காலே', படத்தில் நாயகி ராதாவின் தந்தையாக வில்லனாக நடித்தார்.



கொஞ்ச காலம் வில்லனாக இருந்தவர் அப்புறமாக தந்தை, தாத்தா என குணச்சித்திர நடிகராக மாறினார். ரஜினியுடன் 'குரு சிஷ்யன்', 'ராஜா சின்ன ரோஜா', 'அருணாச்சலம்' கமலுடன் 'பம்மல் கே சம்பந்தம்' என நடித்த ரவிச்சந்திரன் 'கண்டேன் காதலை' படத்தில் தமன்னாவின் தாத்தாவாக சந்தானத்துடனும்  காமெடி பண்ணியிருக்கிறார்.



ரவிச்சந்திரனின் மொத்த குடும்பமும் சினிமா குடும்பம் தான். அவருக்கு இரண்டு மனைவிகள். சூப்பர் ஹிட் மலையாள படமான 'செம்மீன்' நாயகி ஷீலா இவரது இரண்டாவது மனைவி ('சந்திரமுகி' படத்தில் நாசர் வீட்டின் ஆளுமையாக அகிலாண்டேஸ்வரி வேடத்தில் வருவாரே அவர்தான்...)



ரவிச்சந்திரன் தனது 100வது படத்தை தானே இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 2005ல் வெளியான 'மந்திரன்' என்ற அந்த படத்தின் ஹீரோ அவரது  மகன் ஹம்ஸ வர்தன். ரவிச்சந்திரன் 7 படங்கள் வரை இயக்கி இருக்கிறார். அவரது மகன் ஹம்ஸவர்தனும் 10க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.



ரவிச்சந்திரனின் மற்றொரு மகன் ஜார்ஜ் விஷ்ணுவும் நடிகர் தான். துணை நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 'நகரம்' படத்தில் வடிவேலு போகும் இடமெல்லாம் சுந்தர்.சி செல்லும் காமெடியில் சுந்தர் சியுடன் ஆட்டோ ஓட்டுநராக வருபவர் இவர்தான்.


நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் இன்றைய பிரபல சினிமா நட்சத்திரம் தான். சசிகுமாருடன் 'பலே வெள்ளையத் தேவா', உதயநிதி ஸ்டாலினுடன் 'நெஞ்சுக்கு நீதி', விஜய் சேதுபதியின் 'கருப்பன்' படங்களின் ஹீராயின் தான்யா ரவிச்சந்திரன் தான் அவர்...

#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 7 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -40

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர். கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல பிரபலங்களுக்கு அறிமுகம் கொடுத்தவர். அவர்தான் இயக்குநர் ஸ்ரீதர்.



பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கதை என சுற்றியவர் 18 வயதிலேயே வந்து சேர்ந்த இடம் ஏவிஎம். ஆனால், 1951ல் சினிமாவுக்குள் வந்த அவரை மெருகேற்றியது அன்றைய பிரபலமான டிகேஎஸ் பிரதர்ஸ் குரூப்பின் அவ்வை டி.கே.சண்முகம். நிறைய நாடகம், வாய்ப்புகளை தந்து ஸ்ரீதரின் எழுத்துப் பசிக்கு தீனி போட்டார், டி.கே.எஸ். 1950களின் ஹிட் படங்களான ரத்த பாசம், எதிர் பாராதது, புனர்ஜென்மம், அமரதீபம்... இவரது எழுத்துகளே. வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யின் ஒரிஜினல் வெர்சனான சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த 'உத்தம புத்திரன்' படமும் இவரது திரைக்கதைதான்.



அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இவருடையதுதான், நண்பர்களுடன் சேர்ந்து படங்களை தயாரித்தார். கூடவே மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், வி.சந்தானம் போன்ற அன்றைய பிரபல இயக்குநர்களுடனும் நல்ல பழக்கமாகி இயக்குநர் அவதாரம் எடுத்தார், ஸ்ரீதர். அப்படி அவர் இயக்குநரான முதல் படம் ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு'. 1959ல் வெளியான அந்த படம், இன்று வரை தமிழில் பேசப்படும் படங்களில் ஒன்று.


காஷ்மீரில் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தமிழ் படமான 'தேனிலவு' இவரது இயக்கம். மீண்ட சொர்க்கம், ஊட்டி வரை உறவு, நெஞ்சில் ஆலயம், போலீஸ்காரன் மகள், கலாட்டா கல்யாணம்... இப்படி நிறைய படங்களை 1960களிர் ஸ்ரீதர் இயக்கி இருக்கிறார். 

இதில் 1962ல் வெளியான முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் எல்லாம் ஒரு மருத்துவமனைக்கு உள்ளேயே மொத்த படத்தையும் ஸ்ரீதர் எடுத்திருப்பார். அதுவும் ஒரே வாரத்துக்குள் படப்பிடிப்பு முடிந்ததாக சொல்வார்கள். முக்கோண காதல் கதை கொண்ட இந்த படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் வசூலை வாரி குவித்தது.



தமிழின் முதல் ஈஸ்ட்மெண்ட் கலர் படமான 'சிவந்த மண்', நிறைய பிரபலங்களை அடையாளம் காட்டிய 'வெண்ணிற ஆடை',  நாகேஷ் என்றாலே இன்று வரை நினைவுக்கு வரும் கதை சொல்லும் சீன் இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை'... எல்லாமே ஸ்ரீதர் இயக்கம் தான்.



ஹீரோவாக இருந்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு காமெடி பாதை, தங்கவேலுவுக்கு 'கல்யாண பரிசு'... நாகேஷுக்கு 'காதலிக்க நேரமில்லை'... 'வெண்ணிற ஆடை' படம் மூலம் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி... இதுபோல ரவிச்சந்திரன், முத்து ராமன், காஞ்சனா என பலருக்கும் அடையாளம் கொடுத்தவர், இயக்குநர் ஸ்ரீதர். 1970களில் துவங்கி 1980ஸ் வரை பெயர் பெற்ற சித்ராலயா பட நிறுவனத்தை சித்ராலயா கோபுவுடன் இணைந்து துவக்கியதும் இவர் தான். 



ஸ்ரீதர் பாணி படங்கள் எல்லாம் எம்ஜிஆருக்கு ஒத்து வராதவை. அதனால் அவரை அதிகம் இயக்கவில்லை.  ஆனால் 1970களின் ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் சிக்கலில் இருந்த ஸ்ரீதருக்கு எம்ஜிஆர் கைகொடுத்தார்.  'உரிமைக் குரல்' படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் தான். அடுத்து 'மீனவ நண்பன்', 'அண்ணா நீ என் தெய்வம்' என எம்ஜிஆர் படங்களை இயக்கினார். 1977ல் எம்ஜிஆர் முதல்வரானதால் படம் நடிப்பதை நிறுத்தியதால் 'அண்ணா நீ என் தெய்வம்' பாதியில் நின்று போனது. அந்த படத்துக்காக ஸ்ரீதர் எடுத்த காட்சிகள் தான் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் இயக்கி 2 வேடங்களில் நடித்த 'அவசர போலீஸ் 100' படத்தில் சேர்க்கப்பட்டன. 

இப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், முத்துராமன் இயக்கிய ஸ்ரீதர், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களையும் 1980களில் இயக்கினார். அதுதான் இயக்குநர் ஸ்ரீதர்.



ரஜினி, கமல் இணைந்து நடித்த  'இளமை ஊஞ்சலாடுகிறது', கமலின் 'நானும் ஒரு தொழிலாளி', ரஜினியின் 'துடிக்கும் கரங்கள்', முத்துராமனின் மகன் கார்த்திக்கும் ஜெமினி மகள் ஜீஜியும் இணைந்து நடித்த 'நினைவெல்லாம் நித்யா', 80ஸ் கனவு நாயகன் மோகன் நடித்த 'தென்றலே என்னைத் தொடு'... அப்புறம் யாரோ எழுதிய கவிதை, ஒரு ஓடை நதியாகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்... என 80ஸ் வரை ஸ்ரீதர் இயக்கிய படங்கள் ஏராளம். சீயான் விக்ரமை நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய 1991ல் வெளியான 'தந்து விட்டேன் உன்னை' படமும் ஸ்ரீதர் இயக்கம் தான்.



1950, 60களில் தமிழுடன் ஏராளமான இந்தி படங்களையும் இயக்கியவர், ஸ்ரீதர். இந்தியில் 1956ல் கிஷோர் குமார் துவங்கி 1980களில் சத்ருகன் சின்ஹா வரை இயக்கி இருக்கிறார்.

ஸ்ரீதர் படம் என்றாலே பாடல்கள் நிச்சயம் ஹிட் என்றே சொல்லலாம். மேலே சொன்ன படங்களின் பாடல்களே அதை உறுதி செய்யும். பாடகர் கம் இசையமைப்பாளர்களான ஏ.எம்.ராஜா துவங்கி எஸ்பிபி வரையிலும் அவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது போலவே எம்எஸ்வி தொடங்கி இளையராஜா வரை இசையமைத்திருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி பாடல்களுக்கு உயிரூட்டியவர்.



40 ஆண்டு கால நாயகர்கள் அல்லது நீண்ட காலம் நடித்த நடிகர்களை பார்த்திருப்போம். ஆனால் 40 ஆண்டுகளாக திரைக்கதை, இயக்கம் என கோலோச்சி தமிழிலும் இந்தி ரீ மேக்கிலும் ஹிட் படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் ஸ்ரீதர் மட்டுமே.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 4 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -39

தமிழ் சினிமா உலகில் திடீரென உச்சம் சென்று ரசிகர்களை கவர்ந்த வெகு சிலரில் ஒருவர் இவர். தான் நடித்த படத்தின் பெயரையே அடையாளமாக சொல்லும் நடிகர்களில் ஒருவர். 'ரமணா' வில்லன் என்றால் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும். அவர்தான் 'உதிரிப் பூக்கள்' விஜயன். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்... எப்படி பார்த்தாலும் அவர் ஒரு லெஜண்ட்.

கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.


1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ. 2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார். 


பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் தமிழில் 11 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல  லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.


கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.

இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்'  மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்போதெல்லாம் பிலிம் ரோல் காலம். 'புதிய ஸ்வரங்கள்' படம் பணிகள் முடிந்து லேபில் இருந்த பிலிம் சுருள் தீ விபத்தில் கருகியதால் அவரது இயக்குநர் கனவும் கருகிப் போனது. புதிய ஸ்வரங்கள், அபஸ்வரங்களாகிப் போனது. இப்படி, விஜயனின் வாழ்வில் துன்பியல் அதிகம். 


1992க்கு பின் 2002 வரை பத்து ஆண்டுகள் விஜயனின் திரை பயணத்தில் பிரேக்... இந்த கால கட்டத்தில் மது, புகைப் பழக்கம் என சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களை சந்தித்தார், விஜயன். முன்னணி இயக்குநர்கள் படத்திலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடத்தது மட்டுமல்ல... 1980களில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்த ஒரு நடிகர், யாருமே கண்டு கொள்ளாத நிலைமையில் இருந்தார்.


அவரை மறுபடியும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த படம் 'ரமணா'. 2002ல் வெளியான அந்த படத்தில் விஜயகாந்துக்கு மெயின் வில்லனாக அதகளம் பண்ணியிருப்பார். அதே ஆண்டு மாதவன் நடித்த 'ரன்' படத்திலும் வில்லன் அதுல் குல்கர்னியின் வலதுகரமாக விஜயன்  நடித்தார். இதுபோல, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகனின் தந்தையாக, குண சித்திர நடிகராகவும் நிரூபித்திருப்பார்.

'உதிரிப்பூக்கள்' விஜயன், 'ரமணா' விஜயனாக இரண்டாவது சுற்று வலம் வர தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் அவரது வாழ்க்கையே முடிந்து போனது. 'ஆயுதம் செய்வோம்'  படப்பிடிப்பில் மாரடைப்பால்  மரணமடைந்தார். மறைந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் 'உதிரிப் பூக்கள்' விஜயனுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்