Sunday 10 May 2015

எக்காளமிடுகிறது இயற்கை...


 
திட்டமிட்டு சேர்த்த
தங்கம், வெள்ளி
எல்லை தகராறுடன்
எழுப்பிய வீடு - அனைத்தும்
கணப்பொழுதில் வீழ்ந்தன
புழுதிப்படலம் சூழ
மண்ணில்

பாசம் ஊட்டிய அன்னை
அறிவு வளர்த்த தந்தை
பரிவு காட்டிய உறவுகள்
ஓருயிராய் இணைந்த மனைவி
வாழ்வை அர்த்தமாக்கிய மழலை
எவருமில்லை ஒரு நொடியில்
கதறி அழவும் ஆளில்லை

பணம், செல்வாக்கு, அதிகாரம்
அனைத்தும் போலி என உணரும்
வலிமிகு அந்த தருணத்தில்
கண்ணீரும் இழப்பீடும்
மீட்டுத் தரப்போவதில்லை
இழந்து விட்ட
எந்த ஒன்றையும்...

உடலா, உயிரா,
சொத்தா, சொந்தமா
மிதந்து கொண்டிருக்கும்
புழுதிச் சாம்பலில்
பிரித்தறிய முடியாவண்ணம்
புதைந்து விட்டன அனைத்தும்
ரிக்டர் கூறிய நடுக்கத்தினால்...

எல்லாம் வென்ற மமதையில்
நிற்கும் மனிதனை வென்று
எக்காளமிடுகிறது இயற்கை...
காதறுந்த ஊசியும்
கடைவழி வருமோ...?
காலம் வென்ற இவ்வுண்மையை
முற்றாய் உணர்ந்தார் யாரோ?

= வை.ரவீந்திரன் 


No comments: