Sunday 21 August 2016

கழுதை....

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதை என்ற விலங்கை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர், அதற்கென வீடுகளில் கழுதைகளை வளர்த்து வந்தனர். அதிக அளவில் அழுக்கு இருக்கும் துணியை வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, ஊருக்கு வெளியே உள்ள குளம், ஊருணி போன்றவற்றில் துவைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். விசேஷ தினங்கள் தான் கழுதைக்கு விடுமுறை தினம்.

எங்கள் ஊரில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரு இடத்தில் கூடி நிற்கும். கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். தனக்கு பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. இது வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் இப்போது இல்லை. ஏனென்றால், இது டெம்பிள் ரன் காலம். அதனால் தான், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.
= பாரு. இங்க ஒரு கழுத கம்ப்யூட்டர் முன்னால ஒக்காந்துகிட்டு பழச கிளறிகிட்டு இருக்கு..ன்னு ‘சின்ன கவுண்டர்’ கவுண்டமணி பாணியில நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது...

No comments: