Sunday 21 August 2016

மனித நேயம்....

உலகெலாம் உறவென
பூச்செண்டு கரம் நீட்டிய
பூங்குன்றனாரும்
வாடிய பயிர் கண்டு
வாடிய வள்ளலாரும்
அவதரித்த மண் இது...

சமய குரோதங்கள்
சங்கறுத்து நிற்க
சாதி பேதங்களும்
சுற்றி நின்று அச்சுறுத்த
வீச்சரிவாளின் நுனியில்
பேச்சின்றி கிடக்கிறது
இன்றைய மனித நேயம்...

கடல் கடந்த தேசத்தின்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
கண் காணா ஊரில்
துடிக்கும் உயிருக்கும்
கண்ணீர் வடிக்கும்
இதயங்களில் இருந்து
கண்ணெதிரில் நசுங்கும்
மனித நேயத்துக்காக
துளியும் ஈரமில்லை....

இனி ஒரு விதி செய்வோம்
நம் வீதிகளில் இருந்தே
மனித நேய சாலையை
செப்பனிடுவோம்...

தொடங்கும் இப்பணியால்
நாளைய நம் உலகில்
மனித நேயம் பூச்செடி
மலர்ந்து மணம் வீசட்டும்...
சாதி சமய மாச்சரியங்கள்
அதற்கு எருவாகட்டும்...

No comments: