Friday 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் 2

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தேர்தலில் களமிறங்க தலைவர்கள் பலர் தயாரானார்கள். ஜனநாயகம் என்றாலே பல கட்சிகளின் பங்களிப்பு தானே. நேரு தலைமையில் இருந்த தேசிய இடைக்கால அரசில் அங்கம் வகித்த தலைவர்கள் பலர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் கட்சிகளை தொடங்கினார்கள். தேர்தலில் போட்டியிடும் ஏற்பாடுகளையும் தொடங்கினார்கள்.
எஸ்சி பெடரேசன் என்ற கட்சியை அம்பேத்கர் தொடங்கினார். இந்த கட்சி தான் பின்னாளில் குடியரசு கட்சியாக மாறியது. கிஸான் மஸ்தூர் கட்சியை ஆச்சார்யா கிருபளானியும் ஜன சங்கம் கட்சியை ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தொடங்கினார்கள். இது போல ஏராளமான கட்சிகள் தொடங்கப்பட்டன. மாகாண அளவிலும் மாகாணங்கள் அளவிலும் செல்வாக்கு பெற்றிருந்தன, அந்த கட்சிகள். இது தவிர, அப்போது பலமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருந்தது.
உண்மையான ஜனநாயக நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 'சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்காக போராடிய காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் எனவும் சுதந்திர போராட்டத்துக்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது' எனவும் காந்தி கூறியது உண்டு. ஆனால், சுதந்திரம் பெற்ற சில மாதங்களியே காந்தி மறைந்து விட்டதால் அது ஈடேறவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சுதந்திம் வாங்கித் தந்த கட்சி என்ற கிரெடிட்டுடனேயே தேர்தலில் களமிறங்கியது. மக்களுக்கும் அதன் மீது பெரிதான கிரேஸ் இருந்தது.
இப்படியான காட்சிகளுடன் புதுப்புது கட்சிகளும் களமிறங்கிய முதலாவது பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பல கட்டங்களாக 120 நாட்கள் நடைபெற்றது. சென்னை மாகாணம் உட்பட 25 மாகாணங்கள். மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. முதல் தேர்தலிலேயே காஷ்மீரின் பங்களிப்பு கிடையாது. இமாச்சலில் பனி காரணமாக ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.



இந்தியா முழுவதும் வாக்களிக்க தகுதியானவர்களாக 36 கோடி பேர் இருந்தனர். 6 மாதங்களுக்கு மேலாக நீடித்த தேர்தல் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கிலான ஊழியர்கள் ஈடுபட்டனர். அன்றைய தேர்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் ரிசர்வ் (தனி) தொகுதிகள் கிடையாது. மாற்றாக இரட்டை பிரதிநிதித்துவ முறை அமலில் இருந்தது. எப்படி..?
நாடாளுமன்றத்துக்கு 489 பேரை தேர்வு செய்யும் தேர்தல் என்றாலும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 401தான்.
இந்த 401ல் 314 தொகுதிகளில் தலா ஒரு எம்பி தேர்வானார். 86 தொகுதிகளில் எஸ்சி அல்லது எஸ்டி ஒருவரை கூடுதலாக தேர்வு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது இரட்டை உறுப்பினர்கள் தொகுதிகள். ஒரே ஒரு தொகுதியில் மூன்று எம்பிக்கள் தேர்வானார்கள்.
இப்படியான பல்வேறு வித்தியாசமான அனுபவங்களுடன் நடந்த முதலாவது பொதுத் தேர்தலிலேயே பல அதிர்ச்சிகரமான முடிவுகளை இந்திய வாக்காளர்கள் அளித்தனர். முக்கியமான பிரபலமான தலைவர்கள் பலர் தோல்வியடையும் வரலாறும் அந்த தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

No comments: