Friday 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் - 1


2016 பிப்ரவரியில் இதே நாளில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் பரவத் தொடங்கியும், தமிழக தேர்தல் பற்றிய நினைவுகளை எனது வலைப்பூவில் (திலீபன் சிந்தனை) அசை போட்டபோது 35 பகுதிகள் வரை போனது.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் காய்ச்சல் பரவ தொடங்கி விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்களாக இளம் தலைமுறையினர் வருகின்றனர். இந்த தேர்தலிலும் தான். சட்டப்பேரவை தேர்தல் போலவே நாடாளுமன்ற தேர்தல் நினைவுகளையும் சுழல விடலாம் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன்.
1947ல் சுதந்திரம் பெற்றபோது குத்தகைதாரரை காலி செய்து விட்டு ஹவுஸ் ஓனர் குடியேறிய வீடு போலத்தான் இந்தியா இருந்தது. இது, கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டு குத்தகையாக இருந்ததால் செப்பனிட வேண்டிய பணிகள் அதிகம். சமையலறை, ஹால் தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்தது புதுப்பிக்க வேண்டியிருந்தது.
அதாவது, தனி அரசியலமைப்பு உட்பட ஒட்டு மொத்தமாக மாற்றம் தேவைப்பட்டது. இதைத்தான் 1947 ஆகஸ்டில் அமைந்த நேரு, படேல் தலைமையிலான அரசு செய்தது. இந்தியாவுக்கென தனி அரசியலமைப்பு சட்ட கொள்கைகளை அம்பேத்கர் வகுத்தார். 1949 நவம்பரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட அனைத்து விதமான நிர்வாகங்களும் தயாரானது.
அடுத்தகட்டமாக குடியரசு நாடாக இந்தியாவை மாற்றும் பணிகள் தொடங்கின. நேரு தலைமையிலான அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் இடம் பெற்ற இடைக்கால தேசிய அரசு இந்த நடவடிக்கைகளை தொடங்கியது. 1950 ஜனவரியில் முறைப்படி குடியரசு எனப்படும் ஜனநாயக நாடாக இந்தியா மாறியது.
அதன் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கும் பணி. சுதந்திர அமைப்பாக தேர்தல் ஆணையத்தை ஏற்படுத்தியதும் அதில் ஒன்று. இந்த ஜனநாயக பணிகளில் கொஞ்சம் கோக்கு மாக்கு நடந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இப்போது நம்மால் பேச முடியாது. பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
புது வீட்டுக்கு குடியேறுவது போல பார்த்து பார்த்து செய்த வேலைகள் எல்லாம் நிறைவடைவதற்கு முழுமையாக 4 ஆண்டுகள் பிடித்தது. அதுவரையிலும் நேரு தலைமையில் தேசிய அரசு தொடர்ந்தது.
இறுதியாக 1951 மத்தியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் அறிவிப்பு வெளியானது. மிக நீண்ட காலம் நடைபெற்ற தேர்தல் அது..




(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

No comments: