Friday 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் - 3

முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் 36 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானோர் மட்டுமே, அதாவது பத்தரை கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது 489 இடங்களில் 364 இடங்களை நேரு தலைமையிலான காங்கிரஸ் கைப்பற்றியது. பதிவான மொத்த வாக்குகளில் நான்கே முக்கால் கோடி வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 1952ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று மீண்டும் பிரதமரானார், நேரு.
16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இந்த தேர்தலில் பல பெருந் தலைகள் உருண்டன. ஆச்சார்யா கிருபளானியின் கிஸான் மஸ்தூர் கட்சி 9 இடங்களை பிடித்தபோதிலும் உத்திர பிரதேச மாகாணம் பைசாபாத்தில் கிருபளானி தோல்வியடைந்தார்.
இதுபோல அம்பேத்கரின் எஸ்சி பெடரேஷன் கட்சிக்கு இரண்டு இடம் கிடைத்தும் பம்பாய் வடக்கு மத்தி தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். 1954ல் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலிலும் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. மேல்சபை வழியாக நியமன உறுப்பினராகத்தான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது.




1952 தேர்தலில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம். இந்து அமைப்புகள் 10 இடங்களை பிடித்திருந்தன. இந்து மகாசபா கட்சிக்கு 4 ஜன சங்கம் மற்றும் ராம ராஜ்ய கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. இதில் ஜனசங்கம் மட்டும் 32.5 லட்சம் வாக்குகளை வாங்கியது. இரண்டாவது பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் வாங்கிய மொத்த வாக்குகள் 35 லட்சம் என்பதும் கவனிக்கத்தக்கது.
முதலாவது, தேர்தலின்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டில் ஆந்திரா, கேரளா, மைசூர் போன்ற பகுதிகளும் இணைந்திருந்ததால் உ.பி. மாகாணத்துக்கு அடு்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மாகாணமாக இருந்தது.
மொத்தம் 62 தொகுதிகளில் இருந்து 75 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாகாணத்தில் தேர்வான 75 பேரில் 35 பேர் காங்கிரஸ் கட்சியினர். கம்யூனிஸ்ட் சார்பாக 8 பேர் வெற்றி பெற்றனர்.
ஆனால், இரண்டாவது நாாளுமன்ற தேர்தல் 1957ல் நடந்தபோது சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 34ஆக குறைந்து விட்டது.
(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

No comments: