Friday 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் 4

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன், மொழிவாரி மாநில மறுவரையறை குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. 1948ல் அமைக்கப்பட்ட அந்த குழு, ஏழெட்டு ஆண்டு ஆய்வுக்கு பிறகு அளித்த பரிந்துரையை 1956ம் ஆண்டில் மத்திய அரசு ஏற்று 'மாநில மறுவரையறை சட்ட'த்தை கொண்டு வந்தது. அதன்படி, சென்னை மாகாணமும் பிரிக்கப்பட்டு சிறியதானது.

கேரளா, மைசூரு, ஆந்திரா என புதிய மாநிலங்கள் உருவானதால் சென்னை மாகாணத்தின் பகுதிகள் அங்கு சென்றன. இதனால், 75 எம்பிக்களை கொண்டிருந்த சென்னை மாகாணம் 34 உறுப்பினர்களை கொண்டதாக சுருங்கியது. அதே நேரத்தில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 494ஆக அதிகரித்தது. மூன்று உறுப்பினரை தேர்வு செய்யும் தொகுதி ரத்து செய்யப்பட்டது.

மொத்த தொகுதிகளான 403ல் 312 தொகுதிகளில் தலா ஒரு எம்பியும் 91 தொகுதிகளில் தலா 2 எம்பிககளும் (கூடுதலாக எஸ்சி அல்லது எஸ்டி வேட்பாளர்) தேர்வு செய்யும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான மாற்றங்களுடன் 1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.




வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்று ஐந்தாறு மாதங்களுக்கு தேர்தல் பணிகள் நீடித்தன. இந்தியாவின மேனோபோலி கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் மறுபடியும் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், திமுக களமிறங்கிய முதலாவது தேர்தல், சுயேச்சைகளின் ஆதிக்கம் என சுவாரஸ்யங்களுக்கு இந்த தேர்தலில் பஞ்சமில்லை.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

No comments: