Monday 27 May 2019

சைக்கிள் எனும் காதல் வாகனம்

 அத காதல் வாகனம்னும் சொல்லலாம். கனவு வாகனம்னும் சொல்லலாம். அதில ஏறி ஊர சுத்துறதே தனி சுகம். வீட்டுக்கு ஒண்ணு இருக்கிறதே அதிசயம். கொஞ்சம் வசதியான வீடுங்கள்ல ரெண்டு கூட இருக்கும். சைக்கிள் தாங்க அது.



மொத மொத அத ஓட்டிப் பழகிறதே பெரிய சாதன. சைக்கிள் கடைங்கள்ல குட்டி சைக்கிள், கொஞ்சம் பெரிசு, அத விட பெரிசுன்னு ரக வாரியா வாடகைக்கு கிடைக்கும் அப்பல்லாம்.. ஊருக்கு ரெண்டு மூணு சைக்கிள் கடைங்க இருக்கும். ஆனாலும் லீவு நாட்கள்ல சைக்கிள் கிடைக்காது. ஒரு மணி நேரத்துக்கு வாடகை 50 பைசா.


ஊரு பெரிய கோவில் ரத வீதிங்களும்… வியாழக்கிழமை சந்த நடக்கிற கிரவுண்டும் தான் சைக்கிள் பழகும் இடம். ரெண்டாப்பு படிக்கும்போது பழைய சைக்கிள் ஒண்ண எங்க வீட்டுக்கு வாங்கினப்ப ரொம்ப பெரிசா தெரிஞ்சிச்சி. குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து பழகி இருந்ததால, கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் பழக ஆரம்பிச்சேன். சைக்கிள் சீட்டுக்கும் முன்பக்க ஹேண்ட் பாருக்கும் நடுவில இருக்கிற கம்பிக்கு கீழ தொங்கிக்கிட்டே மிதிக்கிறது தான் கொரங்கு பெடல். 


அப்புறம், கொஞ்சம் வளந்ததும் பெடலுக்கு கால் எட்டாட்டாலும் சீட்டில உக்காராமலே அசைஞ்சி அசைஞ்சி மிதிக்கிறதே தனி சாதனையா நினைச்ச காலம். அப்புறம் டபுள்ஸ் வச்சி சைக்கிள் மிதிக்க படிக்கிறது தனிக் கத. நானெல்லாம் எங்க அண்ணன பின்னால உக்கார வச்சி ஓடைக்குள்ள குப்புறத் தள்ளி டபுள்ஸ் ஓட்ட படிச்சேன்.


குட்டி சைக்கிள்ல இருந்து படிப்படியா வளந்த முன்னேற்றம் இது. ரோட்டுல இறக்கத்தில வண்டிய ஓட்டி, வௌங்காட்டுக்கு போயிட்ட வந்த ஒரு தாத்தா மேல சைக்கிள மோதிட்டு பயந்து நடுங்கின அனுபவமும் உண்டு.

அதுக்கு பிறவு, நான் ஐஸ்கூல் போன சமயத்தில குலுக்கல் சீட்டுல புது சைக்கிள் வாங்கினோம். வாரம் 50 ரூபா கட்டணும். அந்த சைக்கிள ஓட்டுறதில அண்ணன் கூட பெரிய போட்டியே நடக்கும்.


சாயந்திர நேரம் சைக்கிள எடுத்திட்டு காசியாபுரத்திலேருந்து ஆலங்குளம் வரைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாறதும் வைகாசி பொறந்தாச்சி பிரசாந்த் மாதிரி யாரையாவது வம்பிழுத்து சைட் அடிச்சதும் தனிக் கதை.


ஆடியோ கேசட்டில இருக்கிற ஒலி நாடாவ ஒரே அளவா துண்டு துண்டா கட் பண்ணி, சைக்கிள் ஹேண்ட் பாரில் ரெண்டு பக்கமும் இருக்கிற கைப்பிடியில ஒட்ட வச்சி சில பேரு சைக்கிள ஓட்டுவாங்க. ராசுக்குட்டி படத்தில பாக்யராஜ்  புல்லட்டில ஒட்டி வச்சிருப்பாரே அத மாதிரி. அந்த புல்லட் அலங்காரம் மாதிரியே சைக்கிளிலும் விதம் விதமா அலங்கரிச்சி சுத்துறது தனி பேஷன். அதுவும் சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் நாட்கள்ல சைக்கிளையும் அலங்காரம் பண்ணி அதே அளவுக்கு அலங்காரத்தோட புது டிரஸ் போட்டு சுத்துற சுகமே தனி.


இளசுங்களோட சைக்கிள் கத இதுன்னா… பொடிசுங்களோட கத வேற லெவல். சைக்கிள் வீலுங்கள்ல இருக்கிற போக்ஸ் கம்பியில படுற மாதிரியே பலுன ஊதி கட்டி விட்டு, அது போடுற வித்தியாசமான சத்தத்தை ரசிச்சிகிட்டே சைக்கிள ஓட்டுவாங்க. இத மாதிரி சைக்கிள்ல நிறைய வித்தைங்கள காட்டுவாங்க.


அப்புறம் டைனமோ வச்ச சைக்கிள் வச்சிருந்தா அது தனி கெத்து. பின் வீல் டயரில் உரசிற மாதிரி, சின்ன எண்ணெய் பாட்டில் சைசில ஒரு டைனமோ இருக்கும். டயர் சுத்துற வேகத்துக்கு ஏத்த மாதிரி அதிலேருந்து கரண்டு உருவாகும். அந்த கரண்டினால சின்ன ஒயர் மூலமா முன்பக்கம் இணைச்சிருக்கும் டைனமோ லைட் எரியும். பைக் ஹெட் லைட் மாதிரி இது. இந்த லைட் இல்லாட்டா, நைட் நேரத்தில போலீஸ் பிடிச்சிக்கும். தாலாட்டு கேட்குதம்மா படத்தில பிரபும், கவுண்டமணியும் சைக்கிள்ல போவாங்களே அந்த சீன் மாதிரி நடக்கும். காலேஜ் பஸ்ட் இயர் படிச்சப்ப எனக்கும் அந்த அனுபவம் உண்டு.


இப்பிடி நிறைய பேரோட அனுபவங்கள தனக்குள்ள புதைச்சி வச்சி சுத்திகிட்டு இருக்கிற சைக்கிள், இப்பலாம் எக்சர்சைஸ் இன்ஸ்ட்ரூமென்டா போச்சி. பாண்டிச்சேரியில இருக்கிற வரைக்கும் காலங்காத்தால சைக்கிள எடுத்துகிட்டு சில கிலோ மீட்டர் ஓட்டுறது வழக்கமா இருந்திச்சி. இப்போ... ஹும்..


நெல்லை ரவீந்திரன்

No comments: