Monday 7 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 19

தமிழ் சினிமாவின் முதல் சமூக, குடும்ப கதைகளின் வெற்றி இயக்குநர், இன்றைய டிவி சீரியல்களின் சிக்கலான அழுகாச்சி கதைகளுக்கு முன்னோடி, இந்த கேள்விகளை எழுப்பினால் பதிலாக வந்து நிற்பவர் இயக்குநர் பீம்சிங். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டாலும் சென்னையில் படித்து வளர்ந்த இவர், சினிமாவில் அடியெடுத்து வைத்தது எடிட்டராகத்தான். அதாவது படத்தொகுப்பாளர். "பராசக்தி" படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சுவிடம் அசிஸ்டென்டாக சேர்ந்து உதவி இயக்குநராக உயர்ந்தவர்.


"பராசக்தி" படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களை உதவி இயக்குநராக சிவாஜி கணேசனுக்கு சொல்லிக் கொடுத்தவர், இவர்தான். இந்த பழக்கம் தான் பின்னாளில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் கதைப் போக்கையே மாற்றிப் போட உதவியது. இயக்குநரானதும்  பீம்சிங் இயக்கிய "அம்மையப்பன்", "ராஜா ராணி" என முதல் இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் பீம்சிங்கை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது "பதி பக்தி" படம்தான். அதன் பிறகு, இவருக்கு ஏறுமுகம். மன்னர் கதைக்கள டைப் படங்களாகவே வெளியாகி வந்த தமிழ் சினிமாவை குடும்ப கதைகளின் பக்கம் திருப்பியதில் பீம்சிங்கின் பங்கு அதிகம்.

'ப'கர வரிசை டைட்டில்களில் பீம்சிங் கொடுத்த சுமார் 20 படங்களில்,  பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், பச்சை விளக்கு என ஹிட்டடித்த படங்கள் ஏராளம். 1960களில் பீம்சிங், சிவாஜி, கண்ணதாசன், எம்எஸ்வி ராமமூர்த்தி கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே வலம் வந்தது. "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து..."

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை...", "எல்லோரும் கொண்டாடுவோம்..." என எவர்கிரீன் பாடல்களை கொண்ட பாவ மன்னிப்பு படத்தின் கதையே வித்தியாசமானது. மத நல்லிணக்கத்தை சொல்லும் அந்த கதை, நடிகர் சந்திரபாபுவினுடையது. அதை மெருகேற்றியவர் பீம்சிங். இன்று வரை அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணம் காட்டப்படும் "பாசமலர்" வேறு மாதிரியான கதை. புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் டாக்டர், அவரிடம் பணிபுரியும் நர்ஸ் இடையிலான காதலை சொல்லும் "பாலும் பழமும்". இப்படி மூன்று வெவ்வேறு கதைகளைக் கொண்ட படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து மூன்றையும் வெற்றிப் படங்களாக்கியவர், பீம்சிங்.

இந்த படங்களின் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்...", "மலர்ந்தும் மலராத பாதி மலர் போலே...", "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...", "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...", "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்..." உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே 60 ஆண்டுகளை கடந்து இன்றும் ரசிகர்களின் மனதை இனிமையாக்குபவை.



இவை தவிர, பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பார் மகளே பார் என சிவாஜி கணேசனின் நடிப்பு தாகத்துக்கு சரியான தீனி போட்டவர் பீம்சிங் என்றே சொல்லலாம். "ஒரு இயக்குநர் என்பவர் நல்ல எடிட்டராகவும் இருக்க வேண்டும்" என்பது பீம்சிங் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.



தனது வெற்றிப் படங்களை எல்லாம் இந்தி, தெலுங்கு என ரீமேக் செய்வது இவரது வழக்கம். அதன்படி, 25 ஆண்டு இயக்குநர் வாழ்க்கையில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் படங்களை இயக்கி இருக்கிறார். "களத்தூர் கண்ணம்மா" படத்தின் இயக்குநரும் இவரே. இந்த படத்தின் மூலமாக உலக நாயகன் கமலஹாசனை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்த பெருமை பீம்சிங்கையே சேரும். 



குடும்ப படங்கள் மட்டுமல்ல, கிரைம் கலந்த முழு நீள நகைச்சுவை படத்தையும் தன்னால் தர முடியும் என "சாது மிரண்டால்" படம் மூலம் நிரூபித்தவர். இந்த படத்தின் சுட்ட ஸீன்கள் தான், டாக்சியில் பிணத்தோடு வடிவேலு பயணம் செய்யும் நகைச்சுவை.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கதையை படமாக்கி இருக்கிறார், பீம்சிங். இந்த படத்துக்காக நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது கிடைத்தது. கருணாநிதியின் கைவண்ணத்தில் தனது இயக்குநர் பாதையை தொடங்கிய பீம்சிங்கின் கடைசி படத்துக்கு கதை  ஜெயகாந்தன். அந்த படம், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" (1978).

இதில் தனது மகன் பி.கண்ணனை ஔிப்பதிவாளராக, திரை வாரிசாக பீம்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கண்ணன் வேறு யாருமல்ல. "பாரதிராஜாவின் கண்கள்" என போற்றப்படும் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஔிப்பதிவாளரே தான். 


படத் தொகுப்பாளர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகம் இருந்தாலும் படத் தொகுப்புக்கு முக்கியத்துவம் அளித்த பீம்சிங்கின் பெயரை அவரது மற்றொரு மகன் தமிழ் சினிமாவில் காப்பாற்றி விட்டார். அவர் படத் தொகுப்புக்காக விருதுகளை பெற்ற பிரபல எடிட்டர் பி.லெனின். 

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: