Thursday 3 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...18

சினிமாவில் அம்மா, அப்பா, அண்ணன் இப்படி சில வேடங்களை பேசும்போது ரசிகர்கள் மனதில் சிலரது பெயர்கள் மட்டுமே வந்து போகும். அந்த வகையில் அம்மா வேடம் என்றாலே தமிழ் ரசிகர்களினா நினைவுக்கு வருபவர் பண்டரிபாய். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வரை அம்மாவாக நடித்தவர். ஆனால், அவரது சினிமா பின்னணியை புரட்டிப் பார்த்தால் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. 



அடிப்படையில் அவர் ஒரு கன்னட நடிகை. சிறு வயதிலேயே மராத்தியில் நீண்ட நேரம் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு திறமைசாலி. அதனாலேயே 10 வயதில் கன்னட சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழில் அவரது அறிமுகம் 14 வயதில். படம், 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்த தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸ்" (1944). அந்த படத்தில் சிறிய வேடம்தான். பெண் பித்தனாக ஹரிதாஸ் துரத்தும் பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் தமிழே தெரியாது. ஏவிஎம் ஏற்பாட்டில் தமிழ் கற்றுக் கொண்ட இவர், பின்னாளில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசும் அளவுக்கு தமிழை தெளிவாக கற்றுக் கொண்டார். அதனாலேயே தேன்மொழியாள் என்றும் அவரை அழைப்பதுண்டு. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, கன்னடம் என ஏழு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவரது தமிழ் படங்கள் நூறுக்குள் தான். ஆனால், அனைத்து மொழிகளிலுமே சொந்த குரலில்தான் பேசி, நடித்திருக்கிறார், பண்டரிபாய்.




1950களில் நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த பண்டரிபாய், அன்றைய இரண்டாம் நாயகர்களான சித்தூர் நாகையா, பிரேம் நசீர், டிஆர் மகாலிங்கம்  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான "பராசக்தி" படத்தின் கதாநாயகி பண்டரிபாய் தான். அதன்பிறகு, சிவாஜி கணேசனின் அடுத்தடுத்த படங்களான "திரும்பிப்பார்", "அந்த நாள்" படங்களுக்கும் பண்டரி பாய்தான் ஹீரோயின். கன்னட ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான "பேடர கன்னப்பா" படத்தின் நாயகியும் இவரே. இருவரின் முதல் படங்களிலும் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இருவருக்குமே தாயாகவும் பின்னாளில் நடித்தார், அதுதான் சினிமா உலகம்.


1960களில் முழு நேர தாய் வேடத்துக்கு மாறிய பண்டரிபாய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா ஆனார். தெய்வமகன், கவுரவம், பாவை விளக்கு, இரு துருவம், இரும்புத்திரை, ராஜா, டாக்டர் சிவா, வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என அம்மாவாக நடித்த சிவாஜி படங்கள் ஏராளம். தெய்வ மகனில் அப்பா சிவாஜிக்கு ஜோடியாகவும் மகன்களான இரண்டு சிவாஜிக்கு தாயாகவும் 3  சிவாஜிகளுக்கு இணையாக சிறப்பாக நடித்திருப்பார். இதுபோல, "கவுரவம்" படத்தில் வக்கீல் ரஜினிகாந்த் சிவாஜிக்கும் மகன் கண்ணன் சிவாஜிக்கும் இடையே பண்டரிபாயின் நடிப்பு ஆஸம்.



எம்ஜிஆர் என்றாலே தாய்க்குலம், தாய்ப்பாசம் இப்படி தோன்றும் எண்ணத்துக்கு வலு சேர்த்தவர் பண்டரிபாய். தெய்வத்தாய், தாயின் மடியில், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, காவல்காரன், சந்திரோதயம், அன்னமிட்ட கை, இதயக்கனி என எம்ஜிஆருக்கு தாயாக நடித்த படங்களின் பட்டியல் மிக நீளம். பெரும்பாலான படங்களை பார்த்தால் டைட்டிலே தாயை பற்றியதாகத்தான் இருக்கும். "தாயின் மடியில் தலை வைததிருந்தால் துயரம் தெரிவதில்லை...", "தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை...", தெய்வத்தாய் படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் டைட்டில் ஸாங்.. என பண்டரி பாய் அம்மா வேடத்தில் நடித்த எம்ஜிஆர் படங்களில் தாயின் புகழ் பாடும் பாடல்களும் அதிகம். இத்தனைக்கும் எம்ஜிஆரை விட 11 வயது இளையவர், பண்டரிபாய்.



1970, 1980களில் கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு தாயாக நடித்த பண்டரிபாய், தமிழிலும் ரஜினிக்கு தாயாக நடித்திருக்கிறார். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." என்ற 'மன்னன்' பாடலின் அம்மா, பண்டரிபாய் தான். சினிமாவுக்கு பிறகு கன்னட சின்னத்திரையில் நுழைந்த பண்டரிபாய், 2000 வரையிலும் கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: