Thursday 9 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...-23

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நாயகர்கள் பலர், பின்னாளில் குணசித்திரம் காமெடி என களம் இறங்க தயங்கியதில்லை. அவர்களில் ஒருவர் டி.ஆர். ராமச்சந்திரன். நாயகிகளுக்கே உரித்தான முட்டை கண்கள், அப்பாவியான தோற்றம், பார்வை எல்லாம் நாயகனான இவருக்கு பிளஸ்.



திருச்சியை பூர்வீகமாக கொண்ட  டி.ஆர். ராமச்சந்திரன், படிப்பில் நாட்டம் இல்லாததால் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆண்டு 1937. முதல் படம் நந்த குமார். அதன் பிறகு 30 ஆண்டுகளில் 150 படங்களில் நடித்திருக்கிறார்.


ஆரம்பத்தில் கதாநாயகனாக சினிமா வாழ்வை துவக்கிய இவர் வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலி தேவி என அன்றைய முன்னணி நாயகிகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களுக்கு ஏற்றவாறு கதையை எழுதி கதாநாயகனாக்கும் டிரெண்ட் இவர் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன் இவரே. இவர் நடிப்பில் 1942ல் வெளியான 'சபாபதி' படம் அதற்கு சிறந்த உதாரணம். 1967ல் வெளியான சாது மிரண்டால் படமும் அப்படித்தான்.



ஏவி மெய்யப்ப செட்டியார் தயாரித்து இயக்கிய படம் சபாபதி. அன்றைய நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்துடன் 

(எனது 3வது பதிவு இவர் பற்றியது தான்...

http://thileeban81.blogspot.com/2020/07/3.html) 

சேர்ந்து இந்த படத்தில் டிஆர் ராமச்சந்திரன் அடிக்கும் காமெடி கலாட்டாவை இன்றும் கூட ரசிக்கலாம். இரண்டாம் உலகப் போரால் மன இறுக்கத்தில் இருந்த மக்களுக்காகவே ஏவிஎம் கொடுத்த முழு நீள நகைச்சுவைப் படம். அது மட்டுமல்ல,  டிஆர் ராமச்சந்திரனுக்கு நல்ல புகழ் வெளிச்சத்தையும் தந்தது.



அதன் பிறகு நாம் இருவர், திவான் பகதூர், ஸ்ரீவள்ளி, வாழ்க்கை உட்பட 25 படங்களில் கதாநாயகனாக டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். இதில் நாம் இருவர், ஸ்ரீவள்ளி படங்கள் எல்லாம் ஏவிஎம் இயக்கியவை. 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் சிவாஜி கணேசனே இவருக்கு அடுத்த செகண்ட் ஹீரோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புனர் ஜென்மம், மீண்ட சொர்க்கம், இருவர் உள்ளம், வண்ணக் கிளி என இவர் நடித்த ஏராளமான ஹிட் படங்களை பட்டியலிடலாம்.

பொன்வயல், (இந்த படத்தில் தான் பாடகராக சீர்காழி கோவிந்தராஜன் அறிமுகமானார்) கோமதியின் காதலன் என ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார், டிஆர் ராமச்சந்திரன். நடிப்பு, தயாரிப்பு மட்டுமல்ல... சுமார் 50 பாடல்களையும் பாடி இருக்கிறார். அன்றைய நாளில் இருந்த தொழில் நுட்பத்தில் நடிகர்களே பாடவும் வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

வாழ்க்கை படத்தில் 'செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் சுகம் பலவே பெற வாழ்வோம்...', என எம்எஸ் ராஜேஸ்வரியுடன் பாடல்..

பொன்வயல் படத்தில் 'நம்ம கல்யாணம் ரொம்ப நல்லா நடக்கோணும்...' என்ற பாடல் என அவர் பாடிய பாடல்கள் ஏராளம். 

நாயகன், தயாரிப்பாளர், பாடகர் என இருந்தாலும் ஈகோ பார்க்காமல் குணச்சித்திரம், நகைச்சுவை என தனது திரைப் பாதையை திருப்பிக் கொண்டார். அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலுவுடன் சேர்ந்து 'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..., பாடலில் அடிக்கும் லூட்டி இன்றளவும் ரசிக்கத் தக்கது.பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அப்பாவியாக இவர் செய்யும் கோமாளி சேட்டைகளை மறக்கவே முடியாது. 

எம்ஜிஆருடன் பாக்தாத் திருடன் படத்தில் நண்பராக நகைச்சுவை வேடத்தில் நடித்ததோடு 15 ஆண்டுகள் கழித்து எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் நாயகியின் தந்தையாகவும் கலக்கி இருப்பார். சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, ஆலயமணி, தங்கமலை ரகசியம் என ஏராளமான படங்களில் குணசித்திரம் பிளஸ் காமடியனாக டிஆர் ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். 


ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒரே படமான அன்பே வா படத்தில் சரோஜாதேவியின் தந்தையாக நடித்திருக்கும் டிஆர் ராமச்சந்திரன், புண்ணாக்கு புண்ணியக்கோடி கேரக்டரில் நாகேஷுடன் அடிக்கும் லூட்டி கலகலப்பின் உச்சம் சபாபதியில் இருந்த அதே காமெடி நடிப்பு 25 ஆண்டுகளுக்கு பின்னும் அவருக்குள் இருந்தது. அதே காலகட்டத்தில் 1966ம் ஆண்டு வெளியான சாது மிரண்டால் படத்தில் நாகேஷூடன் சேர்ந்து கலக்கி இருப்பார். 

சபாபதி (1942) படத்தையும் அன்பே வா, சாது மிரண்டால், (1966) இந்த இரண்டு படங்களையும் இப்போதும் யூ டியுப்பில் பார்த்தால் கால் நூற்றாண்டு கடந்தும் அவரது குறையாத காமெடி நடிப்பை வியந்து ரசிக்கலாம். 


1970களுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய டிஆர் ராமச்சந்திரன், அமெரிக்காவில் தனது மகள்களுடன் செட்டிலான நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே இறந்து விட்டார். 



நாகேஷ், தங்கவேலுவுக்கு முந்தைய தலைமுறை காமெடி நாயகனான டிஆர் ராமச்சந்திரன்தான் தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன். அந்த வகையில், தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் வரிசையில் டிஆர் ராமச்சந்திரனுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு

(பவளங்கள் ஜொலிக்கும்)

# நெல்லை ரவீந்திரன்

No comments: