Monday 25 July 2011

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

பரந்து விரிந்த இந்த உலகில் பட்டங்களை ஆளவும், சட்டங்களை போடவும் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதை 75 ஆண்டுகளுக்கு முன்பே தேசியக் கவி பாரதி கனவாக பார்த்தார். 21&ம் நூற்றாண்டை கடந்து விட்ட போதிலும் பாரதியின் கனவு, கனவாகவே நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

இந்தியாவின் உயரிய பதவிகளாக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்வர் என அத்தனை அதிகாரம்மிக்க பதவிகளையும் பெண்கள் அலங்கரித்து விட்டனர். ஆனால், அந்த பதவிகளுக்கு வந்த அனைவருமே தனிப்பட்ட திறமைகளால் உயர்ந்தவர்கள். ஆணாதிக்க சமூகத்தை வென்று வெற்றிக் கனியை பறித்தவர்கள்.
அதே நேரத்தில், உயரிய அதிகார அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பங்கை இதுவரை பெற முடியவில்லை. வாக்காளர்களில் 45 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள பெண்கள் சமுதாயத்தில் இருந்து 10 சதவீதம் பேர் கூட பாராளுமன்றத்துக்கோ, சட்டசபைகளுக்கோ தேர்வு செய்யப்படுவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் கூட, 9 சதவீதத்துக்கு குறைவாகவே பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தொகையில் ஆண்களுக்கு சரி நிகராக உள்ள பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33 சதவீதம்) இடங்களையாவது ஒதுக்கீடு அளிக்குமாறு நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை ஒலிக்கிறது.
இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சியின்போது, 1996&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக, அரசியல் சட்டத்தில் 81&வது திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
ஆனால், அறிமுக நிலையிலேயே பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்களுக்கான ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அவர்களில் ஒரு தரப்பினரின் வாதம்.
வெளித் தோற்றத்துக்கு மிகவும் நல்ல வாதம் போல தோன்றினாலும், பெண்கள் இட ஒதுக்கீட்டை தள்ளிப் போட நினைக்கும் சூழ்ச்சியே அதில் மேலோங்கி நிற்கிறது. உண்மையும் அதுதான். அதனால் தான், மசோதா நிறைவேறவே இல்லை.
அதன் பிறகு, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு சார்பில் 1998&ம் ஆண்டு மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, வேறு மூன்று சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டதால், அரசியல் சட்டத்தில் 84&வது திருத்தம் செய்யும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
இரண்டாவது முறையும் பெண்கள் மசோதா தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு, 1999, 2002, 2003, 2004 என அடுத்தடுத்து பாராளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதே தவிர நிறைவேறவே இல்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தாலும், அந்த ஆட்சி முடிந்ததும் தானாகவே மசோதா காலாவதி ஆகி வந்ததால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய யுக்தியை கையாண்டது.
டெல்லி மேல்&சபைக்கு ஆயுள் காலம் முடிவே கிடையாது. எனவே, மசோதா காலாவதியாகாமல் இருப்பதற்காக டெல்லி மேல்சபையில் 2008&ம் ஆண்டு தாக்கல் செய்தது. பல்வேறு முட்டுக்கட்டைகள், இடையூறுகளை தாண்டி 2010&ம் ஆண்டு மார்ச் 9&ந் தேதி அன்று டெல்லி மேல்சபையில் மசோதா நிறைவேறியது.
அப்போதும் கூட, சாதாரணமாக மசோதா நிறைவேறி விடவில்லை. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8&ந் தேதி அன்று உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் டெல்லி மேல்சபையில் அமளியும், மைக் உடைப்புகளும் அரங்கேறின. அதையும் மீறி, அதற்கு மறுநாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையில் இருந்த 245 எம்.பி.க்களில் 186 பேர் ஆதரவு அளித்தனர்.
அதன் பிறகு, பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் பாராளுமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க முடியவில்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும், 'இந்த கூட்டத் தொடரில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்வோம்' என்பது மத்திய ஆட்சியாளர்களின் வழக்கமான பல்லவியாகவே அமைந்து விட்டது.
இப்போது நடைபெறுகிற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் வழக்கம்போல(!) மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக, கடந்த ஜூலை மாதம் மட்டும் இரண்டு முறை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கூட்டி விட்டார். ஆனாலும், பலனில்லை.
அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு தான் இந்த சட்டத்தை அமல் படுத்துவோம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த உறுதிக்கு என்ன காரணம் என யாருக்குமே தெரியவில்லை. ஏனெனில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் என பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. இந்த கட்சிகளின் ஆதரவு இருந்தாலே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்.
முதன் முதலில் 1996&ம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகமாகும் போது, அரசியல் சட்டத்தின் 81&வது திருத்தமாக கொண்டு வரப்பட்டது. ஆனால், 2008&ம் ஆண்டு டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்தபோது அரசியல் சட்டத்தின் 108&வது திருத்தமாக மசோதா தாக்கலானது. அதாவது, இந்த காலகட்டத்துக்குள் 27 திருத்தங்களை அரசியல் சட்டத்தில் செய்துள்ளனர். ஆனால், மகளிர் மசோதாவுக்கு மட்டும் தான் இன்னமும் விடிவு காலம் பிறக்கவில்லை.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக, காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு என அனைத்து அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்களும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், 'அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு மட்டுமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வறட்டு பிடிவாதம் காட்டுவது அரசியல் நாடகம்' என பெண்கள் அமைப்பினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
அனைத்து நிலைமைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களுடைய கூற்று முற்றிலும் நிதர்சனமாக உண்மை. இந்த அரசியல் நாடகம் முடிந்து, 'கிளைமாக்ஸ்' மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்பதே இந்திய பெண்களின் எதிர்பார்ப்பு.
‘மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்’ என்பார்கள். ஆனால், இந்திய பெண்கள் என்ன பாவம் செய்தனரோ-? ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய உரிமைப் போராட்டம் முடிவின்றி நீடிக்கிறது.
ஒரு ஆண் கல்வி கற்றால் ஒருவர் மட்டுமே பயனடைவார். ஆனால், ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒட்டு மொத்த குடும்பம் அல்லது 100 பேர் வரை கல்வியறிவு பெறுவார்கள். கல்விக்கு மட்டுமல்ல அதிகாரத்துக்கும் இது பொருந்தும். இதை அனைவரும் உணர்ந்தால் சமூகத்துக்கு நல்லது.
''''''''''''''''

பாக்ஸ் 1
=====
பெண்களுக்கு எத்தனை தொகுதிகள்?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்தால் பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதுபோல, இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் மொத்தம் இருக்கும் 4109 எம்.எல்.ஏ. பதவிகளில் 1370 எம்.எல்.ஏ. பதவிகள் பெண்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகள் அனைத்தும் மூன்று தேர்தல்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2009&ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 59 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர். அதில், காங்கிரஸ் சார்பாக 23 பேரும், பா.ஜனதா சார்பாக 13 பேரும் வெற்றி பெற்றனர். இது, 11 சதவீதம். அதுபோல, தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். இது, வெறும் 6 சதவீதம். நியமன எம்.எல்.ஏ.வாக நான்சி அனன் என்ற பெண் டாக்டர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
''''''''''''

பாக்ஸ் 2
=======
எதிர்ப்பாளர்களின் குரல்


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி என அனைவருமே கூறும் ஒரே காரணம், மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.
இதில் முலாயம் சிங் மட்டும் சற்று வித்தியாசமான விளக்கத்தை கூறுகிறார். ஏற்கனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக 22 சதவீத பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனி பெண்களுக்கும் 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கினால் பாராளுமன்றத்தில் 55 சதவீத இடங்கள் இட ஒதுக்கீட்டிலேயே போய் விடும். இது தான் முலாயம் எடுத்து வைக்கும் வாதம்.
அதற்கு பதிலாக 10 சதவீத இடங்களை பாராளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கலாம். அரசியல் கட்சிகளே 10 சதவீத இடங்களை கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். என்பது போன்ற யோசனைகளையும் அவர் தெரிவிக்கிறார். இது தவிர, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கலாம் என்ற யோசனையையும் எதிர்ப்பாளர்களில் சிலர் முன் வைக்கின்றனர்.

No comments: