Friday 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 5

முதல் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு நிறத்தில் பெட்டி இருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ அதற்கான நிற பெட்டியில் வாக்குச் சீட்டை போட வேண்டும். ஆனால், 1957 தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய சின்னம் இரட்டை காளை மாடு. இந்திய கம்யூனிஸ்டுக்கு (அப்போது ஒரே கம்யூனிஸ்ட்) நெல்கதிர் அரிவாள் சின்னம். சுயேச்சைகளுக்கும் தனியாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.


வாக்குச்சீட்டுகளை பெட்டியில் போடும் முறை என்பதால், பெட்டிகளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடுவது, பெட்டிக்குள் மையை ஊற்றுவது, வாக்குச் சாவடியையே கைப்பற்றி முறைகேடு செய்வது போன்றவை எல்லாம் பின்னாளில் நடைபெற்ற தேர்தல் சம்பவங்கள். அதுபோன்று சம்பவத்தை முதலில் அறிமுகம் செய்தது 1957 தேர்தல் தான். அறிமுகம் செய்தவர்கள் பீகார்காரர்கள். அந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் மதிஹானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரட்சியாகி கிராமத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். வாக்குச்சாவடியை கைப்பற்றி முறைகேடு நடந்தது.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைமுறை ஜரூராக நடந்ததால் 1957ல் அநேக மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் ஒன்றாக நடைபெற்றன. அதுபோல தமிழகத்திலும் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில்தான் முதன் முறையாக தேர்தலை சநதித்தது, திமுக. அங்கீகாரம் பெறவில்ல என்பதால் சுயேச்சை சின்னங்களிலேயே பலர் களமிறங்கினார்கள். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி உட்பட பலருக்கு உதயசூரியன் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் அண்ணாவுக்கு சேவல் சின்னம்தான் கிடைத்தது.



இந்த தேர்தலில் சென்னை மாகாணத்தின் 34 எம்பிக்களில் 24 பேர் காங்கிரசில் இருந்து வெற்றி பெற்றனர். திமுக, கம்யூனிஸ்டுக்கு தலா 2 பேர். சுயேச்சைகள் 6 பேர். 1957ம் ஆண்டு நடந்த இந்த தேர்தல் மூலம் முதன்முறையாக திமுக சார்பாக நாடாளுமன்றத்துக்கு எம்பிக்கள் சென்றனர்.


அகில இந்திய அளவில் 403 தொகுதிகளில் இருந்து தேர்வான 494 எம்பிக்களில் 371 பேர் காங்கிரஸ்காரர்கள். 27 பேர் கம்யூனிஸ்ட் கட்சியினர். இதுபோல, ஜெயபிரகாஷ் நாராயணின் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் 19 பேர் தேர்வாகினர். ஜனசங்கம் கட்சியில் இருந்து 4 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில்தான் மிக அதிக அளவிலான 42 சுயேச்சை எம்பிக்கள் வெற்றி பெற்றனர். இந்த சாதனை இதுவரை நடந்த எந்த ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும் முறியடிக்கப்படவே இல்லை. இப்படியான பல ருசிகரங்களை 1957 தேர்தல் பதிவு செய்தது.
(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: