Thursday, 30 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -25

 திராவிட இயக்கங்களின் முதல் நடிகர், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப் பேரவைக்குள் நுழைந்த முதலாவது நடிகரும் இவர்தான். இவர் எஸ்எஸ்ஆர் எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை அருகே சேடப்பட்டி தான் இவரது சொந்த ஊர். இவரது தந்தையும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரும் நண்பர்கள். எஸ்எஸ்ஆருக்கு  ராஜேந்திரன் என்ற பெயரை வைத்தவரே தேவர்தான். 



சிவாஜி கணேசனை திரையுலகுக்கு தந்த பராசக்தி படம்தான்,  இவரையும் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த 'பைத்தியக்காரன்' படத்தில் சிறிது தலை காட்டினாலும் வாய்ப்பின்றி இருந்தவருக்கு 'பராசக்தி' படத்தில் சிவாஜியின் சகோதரர்களில் ஒருவராக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வருவார். பர்மா குண்டு வீச்சில் ஒரு காலை இழந்தவராக எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். இன்றளவும் பேசப்படும் எம்ஆர் ராதா நடித்த எவர்கிரீன் மூவி ரத்தக் கண்ணீர் படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வருபவர் எஸ்எஸ்ஆர். திராவிட இயக்கத்தில் எம்ஜிஆருக்கும் சீனியர். 


ஆரம்பத்தில் டிகேஎஸ் சகோதரர்கள் நாடக கம்பெனியில் நடிப்பு தொழிலை ஆரம்பித்த எஸ்எஸ் ஆருக்கு அப்பவே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நல்ல அறிமுகம் உண்டு. 



1951 முதல் 2001 வரை 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு சொந்தக் காரரான இவர் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க படாதபாடு பட்டார். பின்னணி பாடகராக விரும்பி ஆண்டாள் என்ற படத்தில் 'இன்ப உலகில் மன்மத பூக்கள்...' என்ற ஒரு பாடலோடு முடிந்தது. அல்லி என்ற ஒரு படத்தையும் இயக்கினார். ஆனால், திரையுலகில் தத்தளித்த போதிலும் புராண கதைகளை கொண்ட படங்களில் எஸ்எஸ்ஆர் நடித்ததில்லை. 


ராமாயண கதையை முழுமையாக கூறும் என்டி ராமாராவ் ராமராக நடித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க கேட்டு இவர் மறுத்ததால் அதில் சிவாஜி கணேசன்  நடித்தார். அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் எழுதிய வசனங்களையும் மிக தெளிவாக பேசுபவர். தூய தமிழ் வசன உச்சரிப்புக்கு சொந்தக்காரர். அதனாலேயே லட்சிய நடிகர் என்ற பட்டம் இவருக்கு உண்டு. 


இவர் நாயகனாக நடித்த படங்களில் முதலாளி, குமுதம், சிவகங்கை சீமை, பூம்புகார், தை பிறந்தால் வழி பிறக்கும் போன்றவை சூப்பர் ஹிட் ரகங்கள். முதலாளி படம் தான் எஸ்எஸ்ஆருக்கு ஹீரோ அந்தஸ்து அளித்தது. அந்த படத்தில்தான் நடிகை தேவிகா (நடிகை கனகாவின் தாயார்) அறிமுகம். 



முதலாளி படத்தில் 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..., பாடல், குமுதம் படத்தில் மாமல்லபுரத்தின் பெருமை சொல்லும் 'கல்லிலே கலை வண்ணம் கண்டார்...' பாடல், தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் டைட்டில் வரிகளிலே அமைந்த பாடல் எல்லாம் தமிழின் எவர்கிரீன் வரிசை பாடல்கள்.


சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு கருணாநிதி கதை வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் இவர்தான் கோவலன். இதுபோல மருது சகோதரர்களின் சுதந்திர போராட்ட வரலாறை அடிப்படையாக கொண்ட சிவகங்கை சீமை படமும் எஸ்எஸ்ஆர் நடிப்புக்கு உதாரணம்.



கதாநாயகனாக படங்களில் நடித்தாலும் சிவாஜியுடன் மனோகரா, பராசக்தி ஆலயமணி, பச்சை விளக்கு உட்பட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆருடன் ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். ஆனாலும் முக்கிய கதாபாத்திரம் இவருக்கு உண்டு. ஆலயமணி படத்தில் சரோஜாதேவியுடன் 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா..', என்ற ஒரு பாடலே இவருக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்ததோடு எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தையும் நடத்தி அதன் மூலம் தனியாக நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். அந்த வகையில்  மனோரமாவை நடிப்புக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் எஸ்எஸ்ஆரையே சேரும். 


கருப்பு வெள்ளை காலத்துக்கு பின் நடிப்புக்கு  இடைவெளி விட்ட எஸ்எஸ்ஆர், அதன்பிறகு 1990களில் தர்மா, சரத்குமாரின் ரிஷி, சிம்பு நடித்த தம், வடிவேலு நடித்த தீக்குச்சி திரைப்படங்களிலும் எஸ்எஸ்ஆர் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு தீவிர அரசியல்வாதி.

அவரது அரசியல் பயணத்தையும் பார்க்கலாம். ஆரம்பம் முதலே தீவிர திராவிட இயக்க பற்றாளர். அண்ணாவின் மிக தீவிர ஆதரவாளர். எஸ்எஸ்ஆர் வீட்டின் கிரக பிரவேச விழாவில் தான் புதுமனை புகுவிழா என்ற வார்த்தையை அண்ணா அறிமுகம் செய்ததாகவும் சொல்வார்கள்.

முதன் முதலில் 1957 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி களம் இறங்கியபோது இவருக்கும் சீட் வழங்கினார்கள். ஆனால், தோல்வியடைந்தார். அதன் பிறகு 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் எஸ்எஸ்ஆர். அதன்படி இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதலாவது நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். முதலாவது நடிகை என்றால் கே.பி.சுந்தராம்பாள்.


 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாகவும் திமுக சார்பாக பதவி வகித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்து 1980 சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் எஸ்எஸ்ஆர் தான். இதே தொகுதியில் தான் அடுத்த தேர்தலில் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் போட்டியிட்டு அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்றார். 



திராவிட இயக்க அரசியல்வாதி, எம்எல்ஏ, எம்பி, நடிகர் மட்டுமல்ல  தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் எஸ்எஸ்ஆர் இருந்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். பழம்பெரும் நடிகை விஜயகுமாரி இவரது மனைவிகளில் ஒருவர். சென்னையில் எஸ்எஸ்ஆர் பங்கஜம் என்ற தியேட்டர் அவரது மற்றொரு மனைவி பெயரில் அமைந்தது தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 24 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -24

எம்ஜிஆரை தோல்வியே காணாத ஹாட்ரிக் முதல்வராக வெற்றிகரமான கட்சித் தலைவராக திரையுலக வசூல் சக்கரவர்த்தியாக பலருக்கும் தெரியும். ஆனால், அவர் ஒரு வெற்றிகரமான வசூலை வாரிக் குவித்த திரைப்பட இயக்குநர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  மூன்று ஹிட் படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அதுவும் மிக நீண்ட இடைவெளிகளில்...

ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் சுமப்பவர் இயக்குநர் தான். ஆனால், நடிகர்கள் அளவுக்கு இயக்குநர்களை ரசிகர்கள் அறிவதில்லை. பல இயக்குநர்கள் வந்த வேகத்தில் காணாமல் போனதும் உண்டு. பிரபலம் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் ஹிட் தரும் இயக்குநர்கள் அபூர்வம். நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி வெற்றி பெறுவது சாதாரணம் அல்ல. அந்த திறமை எம்ஜிஆரிடம் இருந்தது. 



நடிக்க வந்து இருபது ஆண்டுகள் கழித்து, நாயகனாகி 10 ஆண்டுக்கு பின் முதல் படத்தை இயக்கினார். அதையும் பிறர் பணத்தில் சோதித்து பார்க்க விரும்பாமல் தானே தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். அதுதான் எம்ஜிஆர். எம்ஜியார் பிக்சர்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம் நாடோடி மன்னன். 1958லியே அதன் தயாரிப்பு செலவு 18 லட்ச ரூபாய். 


மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீளமான படம். கருப்பு வெள்ளை கோலோச்சிய காலத்தில் முதன் முதலாக கலர் தொழில் நுட்பம் அறிமுகம். இரட்டை வேட தொழில் நுட்பம். காங்கிரஸ் பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த சமயத்தில் படத்தின் டைட்டில் லோகோவே திமுக கொடி. இந்த துணிச்சல் தான் எம்ஜிஆர். கண்ணதாசன் வசனம், பட்டுக் கோட்டையாரின் எவர்கிரீன் பாடல்கள் என படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அறிமுகமானதும் இந்த படத்தில் தான். படத்தின் பிற்பகுதியில் சுமார் ஒரு மணி நேர கன்னித் தீவு காட்சிகள் எல்லாம் அன்றைய காலத்தில் மிக பிரமாண்டமானவை. கலர் புல்லானவை. பி.எஸ்.வீரப்பா, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என மூன்று வில்லன்கள். காமெடிக்கு சந்திரபாபு. இவர்கள் தவிர என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், பானுமதி, எம்.என்.ராஜம் என பிரபலங்களும் உண்டு. 



மிகப் பெரிய செலவில் படத்தை தயாரித்தபோது எம்ஜிஆர் சொன்ன வார்த்தைகள்.  "இந்த படம் வென்றால் நான் மன்னன். தோற்றால் நாடோடி". ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது, இந்த படம். அதற்கு முன் ஒரு கோடி வசூலித்த படம் மதுரை வீரன். இலங்கையில் கூட, 17 தியேட்டர்களில் ஓடி வசூலை வாரி குவித்தது, நாடோடி மன்னன். நாடோடி மன்னனில் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் நாடோடி மன்னனில் இருந்தாலும் எம்ஜிஆரை மட்டுமே நினைவில் கொண்டு வரும் படம் அது. 



மொத்தம் 10 பாடல்கள். செந்தமிழே வணக்கம்..., தூங்காதே தம்பி தூங்காதே... மாதிரியான பாடல்கள் எல்லாம் எவர்கிரீன். 60 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு மறு வெளியீட்டிலும் 25 நாட்களை கடந்து ஓடிய படம் நாடோடி மன்னன்.

(நாடோடி மன்னன் படத்தை 2018ல் மறுபடியும் திரையரங்கில் பார்த்து எழுதிய பதிவை இந்த லிங்கில் வாசிக்கலாம்)


http://thileeban81.blogspot.com/2018/04/blog-post.html?m=1  


நாடோடி மன்னன் வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு பின் (1973) இயக்கிய படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி தான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்பதை பதிவு செய்திருக்கிறார் எம்ஜிஆர். அந்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973ல் வெளியான இந்த படமும் மிகப் பெரிய செலவில் உருவானதுதான். இதன் தயாரிப்பாளரும் எம்ஜிஆரே. இதுவும் இரட்டை வேடம். முதல் படத்தை மன்னர் கால கதையாக எடுத்து ஹிட் கொடுத்த எம்ஜிஆர், இந்த படத்தை ஜனரஞ்சக துப்பறியும் கிரைம் கதையாக ஹிட் அடித்தார். 



தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படமும் இதுவே. ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் படமாக்கப்பட்ட படம். லதா மஞ்சுளா என 2 நாயகிகளுடன் தாய்லாந்து நாயகியையும் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். இந்த படத்தின் 11 பாடல்களுமே மறக்க முடியாத எவர்கிரீன் ரகங்கள் தான்.


சிரித்து வாழ வேண்டும்..., நிலவு ஒரு பெண்ணாகி..., தங்கத் தோணியிலே..., பச்சைக்கிளி முத்துச்சரம்..., லில்லி மலருக்கு கொண்டாட்டம்... - இந்த பாடல்கள் எல்லாம் இன்றும் கூட கேட்பவர்களை முணுமுணுக்க வைப்பவை. படத்தின் டைட்டில் ஸாங்கான நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., எம்ஜிஆர் போலவே சாகா வரம் பெற்றது. 



படத்தில் அரசியல் பேசுவதை பார்த்திருப்போம். ஒரு படமே அரசியலாக்கப்பட்டு தடைகளை எதிர் கொண்டது முதன்முறையாக இந்த படம்தான். அப்போது தான் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக ஆரம்பித்த தருணம். பட வெளியீட்டுக்கு அன்றைய ஆளும் திமுக அரசிடம் இருந்து ஏராளமான குடைச்சல்கள். போஸ்டர் ஒட்டுவதற்கு  தடை, தட்டி பேனர் வைக்க அனுமதி மறுப்பு. இதனால் படத்துக்கு ஸ்டிக்கர் பாணியிலான விளம்பரங்களை முதன் முதலில் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். அதற்கு உதவியவர் நடிகர் பாண்டு. 


இது ஒருபுறம் இருக்க, ரிலீசுக்கு பின்னும் தியேட்டர்களுக்கு படப் பெட்டிகளை கொண்டு செல்வது தடுப்பு, அப்படியே சென்றாலும் தியேட்டர்களில் மின் வெட்டு, திமுகவினரின் மிரட்டல் இப்படி பல இடையூறுகள். அது பற்றியே தனியாக எழுதலாம். இவற்றை எல்லாம் தகர்த்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஹிட் வரிசையில் சேர்ந்தது உலகம் சுற்றும் வாலிபன். 15 ஆண்டுகள் கழித்தும் தனது இயக்குநர் திறமையை நிரூபித்தார் எம்ஜிஆர். 



இதுபோல அவர் முதல்வரான ஆண்டில் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படமும் அவரது இயக்கமே. எம்ஜிஆர் ரசிகர்களாலும் அதிமுகவின் ஆரம்ப கால விசுவாசிகளாலும் இந்த படத்தையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை தலையெடுத்த நேரத்திலும் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர்.


அவருக்குள் இருந்த இயக்குநர் திறமை தான், அவரது பிற படங்களிலும் பளிச்சிட்டது. மற்ற நடிகர்களின் படங்களை விட எம்ஜிஆர் படத்தின் பாடல், காட்சி, வசனம், ஔிப்பதிவு, ஸ்டண்ட் போன்றவை வித்தியாசம் தெரியும்.  அதற்கு அவரும் காரணம்.




இந்த மூன்று படங்கள் மட்டுமில்லாமல் 1969ல் வெளியான அடிமைப்பெண் படமும் எம்ஜிஆரின் தயாரிப்பு தான். ஆனால் இயக்குநர் வேறு. இதிலும் எம்ஜிஆர் இரட்டை வேடம். நாயகி ஜெயலிதாவும் இரட்டை வேடம். தமிழ் திரைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனை இந்த படத்தில்தான் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகம் செய்தார். ஜெயலலிதா முதன் முதலில் பாடல் பாடிய படமும் அடிமைப்பெண் தான். ராஜஸ்தான் பாலைவனத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எம்ஜிஆர் சொந்தமாக வளர்த்த சிங்கம் ஒன்றும் இந்த படத்தின் சண்டைக் காட்சியில் நடித்திருக்கும். எம்ஜிஆர் தயாரித்த இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்.

ஆக.. 

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் வெற்றிக் கொடியை நாட்டியவர், எம்ஜிஆர். 

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 20 December 2021

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனமன்று எங்கள் ஊரில் உள்ள கோயில் விசேஷ நிகழ்வு படங்களை ஊர் வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்ததும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போனேன்...

பள்ளி நாட்களில் மார்கழி மாத அதிகாலை பனித் தூறலில் நனைந்தபடியே, ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் குளிக்கச் செல்வோம். குளித்து முடித்து வீடு திரும்பி நல்ல உடை அணிந்து, எங்கள் ஊரின் பெரிய கோயிலுக்கு செல்வது வழக்கம்.  



மார்கழி மாதம் முழுவதும் கோயிலின் மூன்று பிரகாரங்களை (தேரோடும் வீதி, சப்பரங்கள் வலம் வரும் வீதி, கோயிலின் உள் பிரகாரம்) சுற்றி வந்து தேவார திரட்டில் இருந்து பஜனை பாடல்களை பாடிச் செல்வோம். அப்படித்தான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 6 மணிக்கு தொடங்கும் பஜனை ஊர்வலம், 8 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு, வீடு திரும்பி, பள்ளி பயணம் ஆரம்பமாகும்.


மார்கழி திருவாதிரை திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பஜனை பாடல்கள் மாறும். தேவார பாடல்களுக்கு பதிலாக திருவெம்பாவை பாடல்களை பாடுவோம். ஆருத்திரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய 9வது நாள் தொடங்கி திருவெம்பாவை நோன்பு காலம் என்பதெல்லாம் பின்னாளில் அறிந்து கொண்ட தகவல். 



10வது நாளில் எங்கள் ஊர் வைத்தியலிங்க சுவாமி கோயிலில் ஆருத்திரா தரிசனம் விழா களை கட்டும். அன்றைய தினம்,  அதிகாலை எழுந்து கிணறுகளில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் குளித்து விட்டு 4 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகி விடுவோம். ஆருத்திரா தரிசன தினத்தன்று பிரம்ம முகூர்த்த வேளையில் (4.30 மணி முதல் 6 மணி) அனைத்து தேவர்களும் சிவனை தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம். 



சிவபெருமானை பிடிக்காத சிலர் ஒன்று சேர்ந்து அவர் மீது மதம் பிடித்த யானை, முயலகன் என்ற அரக்கன், உடுக்கை, தீப் பிழம்பு போன்றவற்றை ஏவி விட்டதாகவும் அவற்றை சிவன் லாவகமாக பிடித்ததோடு முயலகனை தனது வலது காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு உடுக்கை ஏந்தி, தீப்பிழம்பாக தனது செஞ்சடையை விரித்து இடது காலை தூக்கியபடி, அந்த முனிவர்கள் முன் நடனமாடிய தினமே ஆருத்திரா தரிசன நாள்  என்றும் கூறுவது உண்டு. 



அதிகாலை 5 மணி முதல் பெரிய கோயிலின் கொடி மரம் அருகில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகும். பல்வேறு விதமான அடுக்கு விளக்குகளில் தீபாராதனை (ஆரத்தி, மகா ஆரத்தி) முடிந்து திருவெம்பாவையின் 21 பாடல்களும் பாடப்படும். அதன்பிறகு நடராஜர் அலங்கரித்த சப்பரத்தில் நகர்வலம் வவருவார். மார்கழி மாத பனியில், அதிகாலை வேளையில் விழித்தெழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கோயிலில் தரிசனம் காண்பது என்பது வார்த்தைகளால் எளிதில் விவரிக்க முடியாத பேரனுபவம். 

திருவாதிரை விழா எனப்படும் ஆருத்திரா தரிசனத்தின் கூடுதல் விசேஷம் களி. கண்டங்களி என்றும் அதை கூறுவோம். சரியாக சொல்வது என்றால் சர்க்கரை பொங்கலின் மாறுபட்ட வடிவமாக அந்த பிரசாதம் இருக்கும். 

ஆருத்திரா தரிசன நாளில் சேந்தனார் என்ற தொழிலாளியிடம் சிவ பெருமான் களி வாங்கி சாப்பிட்டதாகவும் அதை நினைவு கூறும் விதத்தில், ஆருத்திரா தரிசன நாளில் இறைவனுக்கு களி படைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

பள்ளிப் பருவம் முடிந்த பிறகு, மார்கழி பஜனைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்போதெல்லாம் அந்த தரிசனத்தை முற்றிலுமாக தவற விடுவதாகவே கருதுகிறேன். மார்கழி மாத அதிகாலை 4 மணியானது நள்ளிரவு நேரமாகவே தெரிகிறது. 

வேலை அப்படி என்று மனதுக்குள் சொல்லி சமாளித்தாலும் எல்லாம் சிவன் செயல்...  அவன் அருளாலே அவன் தாள் பணிய முடியும்...



#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 9 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...-23

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நாயகர்கள் பலர், பின்னாளில் குணசித்திரம் காமெடி என களம் இறங்க தயங்கியதில்லை. அவர்களில் ஒருவர் டி.ஆர். ராமச்சந்திரன். நாயகிகளுக்கே உரித்தான முட்டை கண்கள், அப்பாவியான தோற்றம், பார்வை எல்லாம் நாயகனான இவருக்கு பிளஸ்.



திருச்சியை பூர்வீகமாக கொண்ட  டி.ஆர். ராமச்சந்திரன், படிப்பில் நாட்டம் இல்லாததால் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆண்டு 1937. முதல் படம் நந்த குமார். அதன் பிறகு 30 ஆண்டுகளில் 150 படங்களில் நடித்திருக்கிறார்.


ஆரம்பத்தில் கதாநாயகனாக சினிமா வாழ்வை துவக்கிய இவர் வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலி தேவி என அன்றைய முன்னணி நாயகிகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களுக்கு ஏற்றவாறு கதையை எழுதி கதாநாயகனாக்கும் டிரெண்ட் இவர் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன் இவரே. இவர் நடிப்பில் 1942ல் வெளியான 'சபாபதி' படம் அதற்கு சிறந்த உதாரணம். 1967ல் வெளியான சாது மிரண்டால் படமும் அப்படித்தான்.



ஏவி மெய்யப்ப செட்டியார் தயாரித்து இயக்கிய படம் சபாபதி. அன்றைய நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்துடன் 

(எனது 3வது பதிவு இவர் பற்றியது தான்...

http://thileeban81.blogspot.com/2020/07/3.html) 

சேர்ந்து இந்த படத்தில் டிஆர் ராமச்சந்திரன் அடிக்கும் காமெடி கலாட்டாவை இன்றும் கூட ரசிக்கலாம். இரண்டாம் உலகப் போரால் மன இறுக்கத்தில் இருந்த மக்களுக்காகவே ஏவிஎம் கொடுத்த முழு நீள நகைச்சுவைப் படம். அது மட்டுமல்ல,  டிஆர் ராமச்சந்திரனுக்கு நல்ல புகழ் வெளிச்சத்தையும் தந்தது.



அதன் பிறகு நாம் இருவர், திவான் பகதூர், ஸ்ரீவள்ளி, வாழ்க்கை உட்பட 25 படங்களில் கதாநாயகனாக டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். இதில் நாம் இருவர், ஸ்ரீவள்ளி படங்கள் எல்லாம் ஏவிஎம் இயக்கியவை. 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் சிவாஜி கணேசனே இவருக்கு அடுத்த செகண்ட் ஹீரோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புனர் ஜென்மம், மீண்ட சொர்க்கம், இருவர் உள்ளம், வண்ணக் கிளி என இவர் நடித்த ஏராளமான ஹிட் படங்களை பட்டியலிடலாம்.

பொன்வயல், (இந்த படத்தில் தான் பாடகராக சீர்காழி கோவிந்தராஜன் அறிமுகமானார்) கோமதியின் காதலன் என ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார், டிஆர் ராமச்சந்திரன். நடிப்பு, தயாரிப்பு மட்டுமல்ல... சுமார் 50 பாடல்களையும் பாடி இருக்கிறார். அன்றைய நாளில் இருந்த தொழில் நுட்பத்தில் நடிகர்களே பாடவும் வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

வாழ்க்கை படத்தில் 'செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் சுகம் பலவே பெற வாழ்வோம்...', என எம்எஸ் ராஜேஸ்வரியுடன் பாடல்..

பொன்வயல் படத்தில் 'நம்ம கல்யாணம் ரொம்ப நல்லா நடக்கோணும்...' என்ற பாடல் என அவர் பாடிய பாடல்கள் ஏராளம். 

நாயகன், தயாரிப்பாளர், பாடகர் என இருந்தாலும் ஈகோ பார்க்காமல் குணச்சித்திரம், நகைச்சுவை என தனது திரைப் பாதையை திருப்பிக் கொண்டார். அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலுவுடன் சேர்ந்து 'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..., பாடலில் அடிக்கும் லூட்டி இன்றளவும் ரசிக்கத் தக்கது.பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அப்பாவியாக இவர் செய்யும் கோமாளி சேட்டைகளை மறக்கவே முடியாது. 

எம்ஜிஆருடன் பாக்தாத் திருடன் படத்தில் நண்பராக நகைச்சுவை வேடத்தில் நடித்ததோடு 15 ஆண்டுகள் கழித்து எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் நாயகியின் தந்தையாகவும் கலக்கி இருப்பார். சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, ஆலயமணி, தங்கமலை ரகசியம் என ஏராளமான படங்களில் குணசித்திரம் பிளஸ் காமடியனாக டிஆர் ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். 


ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒரே படமான அன்பே வா படத்தில் சரோஜாதேவியின் தந்தையாக நடித்திருக்கும் டிஆர் ராமச்சந்திரன், புண்ணாக்கு புண்ணியக்கோடி கேரக்டரில் நாகேஷுடன் அடிக்கும் லூட்டி கலகலப்பின் உச்சம் சபாபதியில் இருந்த அதே காமெடி நடிப்பு 25 ஆண்டுகளுக்கு பின்னும் அவருக்குள் இருந்தது. அதே காலகட்டத்தில் 1966ம் ஆண்டு வெளியான சாது மிரண்டால் படத்தில் நாகேஷூடன் சேர்ந்து கலக்கி இருப்பார். 

சபாபதி (1942) படத்தையும் அன்பே வா, சாது மிரண்டால், (1966) இந்த இரண்டு படங்களையும் இப்போதும் யூ டியுப்பில் பார்த்தால் கால் நூற்றாண்டு கடந்தும் அவரது குறையாத காமெடி நடிப்பை வியந்து ரசிக்கலாம். 


1970களுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய டிஆர் ராமச்சந்திரன், அமெரிக்காவில் தனது மகள்களுடன் செட்டிலான நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே இறந்து விட்டார். 



நாகேஷ், தங்கவேலுவுக்கு முந்தைய தலைமுறை காமெடி நாயகனான டிஆர் ராமச்சந்திரன்தான் தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன். அந்த வகையில், தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் வரிசையில் டிஆர் ராமச்சந்திரனுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு

(பவளங்கள் ஜொலிக்கும்)

# நெல்லை ரவீந்திரன்

Sunday, 5 December 2021

ஜெ ஜெயலலிதா எனும் நான்...


சாதனைகளின் உச்சத்தையும் சறுக்கல்களின் மிச்சத்தையும் கூட விட்டு வைக்காமல் பார்த்த தைரியசாலி. 

நாயகியாக நடித்த முதல் படத்திலேயே 3000 ரூபாய் சம்பளம் (இன்றைய தேதியில் ஒன்றே கால் லட்சம்) வாங்கியவர். பதினைந்தே ஆண்டுகளில் 125 படங்களில் கதைநாயகி. அதில் 95% சூப்பர் ஹிட். ஒரே ஆண்டில் பத்து சூப்பர் டூப்பர் ஹிட். எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜி தொடங்கி அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்தவர்.

ராஜ்யசபாவில் அண்ணா அமர்ந்த இருக்கை. ஜெயலலிதாவின் முதலாவது தேர்தல் சின்னமும் (சேவல்) அண்ணாவின் முதலாவது தேர்தல் சின்னமும் ஒன்றுதான். தமிழகத்தின் ஒரே பெண் எதிர்க்கட்சி தலைவர்.  தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வரும் இவரே.

தமிழகத்தின் முதலாவது மிக வலிமையான எதிர்க்கட்சி என்ற  பெருமையை தனது கட்சிக்கு பெற்று தந்தவர். மக்களவையில் மிகப் பெரிய எண்ணிக்கையுடன் அமர்ந்த முதலாவது மாநிலக் கட்சி என்ற சாதனையும் அவரது உழைப்பின் பலனே.

2011, 2014, 2016 என ஹாட்ரிக் தேர்தல் வெற்றி பெற்றவர். 22 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரர். 234 சட்டப்பேரவை தொகுதி, 39 நாடாளுமன்ற தொகுதி என அனைத்திலும் தனது சின்னத்தையே நிறுத்தி, வெற்றியை கண்ட தைரியசாலி.

ஏமாற்றங்கள் நிறைந்த தனிப்பட்ட வாழ்க்கை. மிக க(கொ)டுமையான தனி நபர் விமர்சனம். அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள்.  எம்எல்ஏ கூட ஆக முடியாத அளவுக்கு தேர்தல் தோல்வியை கண்ட  ஒரே தமிழக முதல்வரும் அவரே. முதலமைச்சராகவே சிறை சென்ற ஒரே முதல்வரும் அவரே. வழக்குகளால் மூன்று முறை பதவி இழப்பு. 

இப்படி வெற்றி என்றால் சிகரத்தின் முகட்டையும் தோல்வி என்றால் பாதாள உலகையும் பார்த்த போதிலும் கூட தன்னம்பிக்கை,  துணிச்சலை சிறிதும் கைவிடாத தைரிய லட்சுமி. 

அரசியல் மட்டுமல்ல, எந்த துறை சார்ந்த பெண்களாக இருந்தாலும் சரி.  அவர்களுக்கு  இந்த இரும்பு தாரகையின் இறுதி நொடி வரையிலான ஒவ்வொரு  அத்தியாயங்களும்  நல்லதொரு பாடங்களே...

கலைச் செல்வி, சிந்தனை செல்வி, புரட்சி செல்வி, புரட்சி தலைவி, அம்மா...

எதிரிகளையும் வியக்கச் செய்யும் இந்த வளர்ச்சியை அவ்வளவு  சாதாரணமாக கருதி கடந்து விட முடியாது.

மிஸ் யூ அம்மா...


மீள்..

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 22

ஒன்றே கால் ஆண்டு இடைவேளைக்கு பின், மீண்டும் தமிழ் சினிமா பொக்கிஷத்தில் பவளங்களை தேடுவோம். அதை மங்களகரமாக துவக்கலாமா? 

திருமணம் போன்ற விசேஷ வீடுகள் என்றாலும் கோயில் விழாக்கள் என்றாலும் மைக் செட் கட்டியதும் முதலில் ஒலிப்பது இவரது குரல்தான். 'விநாயகனே வினை தீர்ப்பவனே...' தொடங்கி இவரது ஏராளமான பக்திப் பாடல்களை பெரும்பாலானோர் கேட்டிருப்போம். அவர்தான் சீர்காழி கோவிந்த ராஜன். பெயரை கேட்டதுமே அவரது கணீர் குரல் காதில் ஒலிப்பதை தவிர்க்க முடியாது. கூடவே அவரது ஆன்மீக பிம்பமும் மட்டுமே. 


இசைக் கல்லூரியில் படித்து கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்த சீர்காழி கோவிந்த ராஜனுக்கு சென்னை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழியில் பிறந்த கோவிந்த ராஜனை பக்தி பாடல்கள் பாடுபவர்கள் வரிசையிலேயே அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் பின்னணி பாடகர், நடிகர் என உலா வந்தவர். 

அவரது சினிமா வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம். தனது 19வது வயதில் பாட ஆரம்பித்த அவர், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1954. படம் "பொன் வயல்". கல்கி கதையை அடிப்படையாக கொண்டு அன்றைய பிரபல நடிகர் டிஆர் ராமச்சந்திரன் தயாரித்த இந்த படத்தில் மூன்று பாடல்களை பாடினார் சீர்காழி.

1950-களில் ஆரம்பித்து 1980-கள் வரை 35 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் சீர்காழி கோவிந்த ராஜன். இவரது கணீர் குரல் பல நடிகர்களுக்கு ஒத்துப் போகாத நிலையிலும் கூட எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், ஜெமினி, எஸ்எஸ்ஆர் என முன்னணி நடிகர்கள் துவங்கி நாகேஷ் போன்றவர்கள் வரை குரல் கொடுத்திருக்கிறார்.


எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் குரல் நிரந்தரமாகும் வரை, சீர்காழி கோவிந்தராஜன் தான் நிறைய படங்களில் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். நல்லவன் வாழ்வான் படத்தில்  'குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா..',  'சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்...', நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல்..., சக்கரவர்த்தி திருமகள் படத்தில் மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போகப் போக மாறுது.. 

அதே படத்தில் என்எஸ் கிருஷ்ணனுடன் சேர்ந்து லாவணி வகையிலான டைப்பில் பாடிய 'உலகத்திலே மிக பயங்கரமான ஆயுதம் எது..' மாதிரியான பாடல்கள் எவர்கிரீன்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... என்பது போன்ற எம்ஜிஆர் பாடல்களை கேட்கும்போது டிஎம்எஸ் குரல் போலவே எம்ஜிஆருக்கு அரசியல் அடித்தளம் அமைத்துத் தந்தது இவரது குரலும் தான் என்றே தோன்றும். 

எஸ்எஸ்ஆருக்காக பாடிய 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்...' மாதிரியான பாடல்கள் காதல் கீதங்களில் சாகா வரம் பெற்றவை. ரம்பையின் காதல் படத்தில் பாடிய, 'சமரசம் உலாவும் இடமே..' நீர்க்குமிழி படத்தில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' போன்ற  பாடல்கள் மனித வாழ்க்கை பற்றிய வரிசையில் அழியாத இடம் பிடித்ததாகும். 

டிஎம்எஸ், ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், டிஆர் மகாலிங்கம், லீலா, ஜிக்கி, சுசீலா, எல்ஆர் ஈஸ்வரி, பானுமதி, மனோரமா என இவர் இணைந்து பாடிய பாடகர் பாடகிகள் ஏராளம். 

சந்திரோதயம் படத்தில் நாகேஷுக்காக பாடிய 'காசிக்கு போகும் சன்னியாசி...', 'ஒம் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு...', 'ஏபிசிடி படிக்கிறேன் ஈஎப்ஜிஎச் எழுதுறேன்..., இப்படியாக காதல் காமெடி சோகம் என தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்த ராஜன்  பாடிய பாடல்கள் ஏராளம். 

பிரபல பின்னணி பாடகர்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை, இவரது சினிமா கிராஃபும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் சீர்காழி கோவிந்த ராஜன், நடிகரும் கூட...


அவரை நடிகராக அறிமுகம் செய்தவர் ஆன்மிக இயக்குநர் ஏபி நாகராஜன் (திருவிளையாடல் படத்தில் நக்கீரராக வருவாரே அவரே தான்). அந்த படம் 1967ல் வெளியான கந்தன் கருணை. அந்த படத்தில் சீர்காழி கோவிந்த ராஜனுக்கு நக்கீரர் வேடம். அதில் அவர் பாடி நடித்த 'அறுபடை வீடு கொண்ட திரு முருகா...' பாடலை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. 

அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி, தசாவதாரம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.


1972ல் வெளியான அகத்தியர் படத்தில் கதையின் நாயகன் அகத்தியர் அவரே தான். குறு முனி வேடத்தில் அவர் நடித்து பாடிய, உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்... பாடல் அமரத்துவம் பெற்றது. 

பத்மஸ்ரீ, டாக்டர், இசைமாமணி என 35 ஆண்டுகளில் நிறைவான புகழை வென்ற சீர்காழி கோவிந்த ராஜனால் எமனை வெல்ல முடியவில்லை. அவரது 55 வயதிலேயே காலம் அவரை அழைத்துச் சென்று விட்டது. 

ரங்காராவ், டிஎஸ் பாலையா, என்எஸ் கிருஷ்ணன் வரிசையில், புகழ் உச்சத்தில் இருந்தபோது ஐம்பதுகளிலேயே விண்ணுலகம் சென்று விட்டார், சீர்காழி கோவிந்த ராஜன்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 8 September 2021

அரசவைக் கவிஞருக்கு அஞ்சலி


கண்ணதாசன், வாலி தொடங்கி வைரமுத்து காலம் கடந்தும் புதிய தலைமுறை வரை பாடல்கள் எழுதியவர். எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் (1968) துவங்கி அவரது ஆஸ்தான கவிஞர். நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்..  பாடல் துவங்கி எஸ்பிபி தமிழில் பாடிய முதல் பாடலான ஆயிரம் நிலவே வா.. உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரர்.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கிறது... ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ஒன்றே குலமென்று பாடுவோம்... சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்கள் மட்டுமல்ல...

பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று... இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்... என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்... என காதல் ரச பாடல்களையும் சேர்த்து காலத்தால் அழியாத காவிய பாடல்களை வடித்தவர். 

தமிழக அரசின் அரசவைக் கவிஞர் (இந்த பதவியை அலங்கரித்த மற்றொருவர் கண்ணதாசன்). அன்றைய தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவர். அப்போது சட்ட மேலவை தலவராக இருந்தவர் தமிழக வட எல்லைக்காக போராடிய ம.பொ.சிவஞானம்.

எம்ஜிஆர் காலத்துக்கு பின்னும் பாக்யராஜ், கமல், ரஜினி, மம்முட்டி, பிரபு, விஜய், விக்ரம், வடிவேலு வரை பாடல்களை எழுதித் தள்ளியவர். 

உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி... அழகிய விழிகளில் அறுபது கலைகள்.. அம்மாடி இதுதான் காதலா... ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையோ... கண்மணியே பேசு... அடி வான்மதி என் வான்மதி பாரு பாரு என்றால்... அதோ மேக ஊர்வலம் இதோ காதல் உற்சவம்... கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா... தென் பாண்டிச் சீமையில தேரோடும் வீதியில... உன்னால் முடியும் தம்பி... சாதி மல்லி பூச்சரமே தங்கத் தமிழ் பாச்சரமே...

இப்படியாக அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களும் முணுமுணுக்கும் ஏராளமான பாடல்கள் இவருடையதுதான் என்றால் நம்புவது கடினம்.

வாலி எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதிய பாடல்களோ என்ற தோற்ற மயக்கத்தை தரும். அதுபோலவே இவரது பாடலும் கூட வாலி பாடல்களோ என்ற மாயை தருபவை.

இவரது பாடல்களில் தமிழும் இலக்கியமும் உவமையும் கூடிக் குலவி கொஞ்சுவதை தரிசிக்கலாம். எம்ஜிஆரின் சினிமா அத்தியாயத்தின் இறுதி பகுதியில் அவரது அரசியல் என்ட்ரிக்கு ஏற்ற பாடல்களை எழுதிய இவர்தான், வடிவேலு நடித்த எலி (2015) வரை பாடல்களை எழுதியிருக்கிறார்.

அவர், கவிஞர் புலமை பித்தன். 

எம்ஜிஆரின் அன்பை பெற்றதால் சினிமா மட்டுமின்றி,  அதிமுக அவைத்தலைவர் வரை அரசியல் வாழ்விலும் உயர்ந்த இவர்தான், அந்த கட்சியின் ஆரம்ப கால மேடைகளில் முழங்கிய பல பாடல்களை எழுதியவர். செயற்கரிய செயல்களை செய்தும் ஒரு சிலர் மட்டுமே ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக வெளியில் தெரியாமல் இருப்பார்கள். 

அவர்களில் ஒருவர், கவிஞர் புலமை பித்தன்..

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 2 June 2021

கலைஞர் ஒரு சகாப்தம்


 

எம்.ஜி.ஆர் நடிப்பில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் மந்திரி குமாரி. ராஜகுருவான எம்.என்.நம்பியாரின் மகன் எஸ்.ஏ.நடராஜன் கொள்ளைக்காரன். எஸ்.ஏ.நடராஜன் இறந்ததும் கொள்ளை கும்பலுக்குள் தகராறு வரும். அப்போது அந்த கும்பலில் ஒருவர் வந்து, சதா சர்வகாலமும் சமையலறையில் கிடக்கிறேனே எனக்கு என்ன கிடைக்கும்? என்பார். உடனே, நீ தான் உணவுத் துறை மந்திரி என்பார்கள். நான் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருக்கிறேனே எனக்கு என மற்றொருவர் கேட்க, நீதான் போக்குவரத்து மந்திரி என்பார்கள். 

சுதந்திரம் பெற்று முதலாவது பொதுத் தேர்தல் கூட நடக்காத நிலையில் வெளியான இந்த படத்தின் கதை வசனம் இன்றைய அரசியலுக்கும் கச்சிதமாக பொருந்தும். குண்டலகேசி காப்பியத்தை தழுவி இந்த கதை மற்றும் வசனம் எழுதியபோது கலைஞரின் வயது 27.

பின்னர் பராசக்தி, மனோகரா, பூம்புகார் என அவரது காவியங்கள் ஏராளம். எம்ஜிஆர் சிவாஜி எஸ்எஸ்ஆர் தொடங்கி விஜயகாந்த், வினீத், வடிவேலு, பிரசாந்த் வரை அவரது வசனத்தை பேசியவர்கள் தான். 1950களின் கிருஷ்ணன் பஞ்சு துவங்கி 1980களில் எஸ்ஏ சந்திரசேகர் போன்றவர்களை கடந்து 2000த்துக்கு பிந்தைய தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வரை பார்த்தவர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில், அதுவும் காங்கிரசை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரின் படத்துக்குள்  கடவுள் மறுப்பு கொள்கைளை புகுத்துவது நினைத்து பார்க்க முடியாத சூழ்நிலையில், பராசக்தியில் அதை சாதித்தார். 

இளமைப் பருவத்தில் தொடங்கிய அந்த போர்க்குணம் தொடர்ந்ததாலேயே ஏழு தசம ஆண்டுகளாக தமிழக அரசியலில் உதய சூரியனாக ஒளிர்ந்தார். 1956 துவங்கி 2016 வரை அவர் மட்டுமே உதய சூரியனை பெற்றவர். இந்தியாவில் வேறு யாருமே இவ்வளவு நீண்ட காலம் சட்டப்பேரவை அங்கத்தினராக இருந்திருக்க முடியாது.

ராஜாஜி, காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவத்சலம், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ், விஜயகாந்த், ஓ.பி.எஸ் வரை மாநில அரசியலிலும், 

நேரு, இந்திரா, சரண்சிங், மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், குஜ்ரால், தேவேகவுடா, என்.டி.ராமராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், சோனியா, மோடி என தேசிய அரசியலிலும் பல தலைமுறைகளை பார்த்தவர். 

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் அவரது அரசியல் நகர்வைத்தான்  தமிழகம் எதிர்பார்த்து காத்திருந்தது. 

எழுத்து, பத்திரிகை துறையிலும் கலைஞரின் சாதனை சாமான்யமானதல்ல. கல்லூரி, பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் கூட, அவரது தமிழ் சொல்லாடல்களுக்கு முன் தூசி.

காலை நாளிதழ்களில் எந்த செய்தி, எப்படி தலைப்பாக வரும் எப்போது அதை  தந்தால் சரியாக இருக்கும் என்பதை எல்லாம் அறிந்து அதற்கேற்ற செய்திகளை தரும் அரசியல் தலைவர் கம் பத்திரிகையாளர் அவர் ஒருவரே. 

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையிலும் அரை நூற்றாண்டாக ஒரு அரசியல் கட்சியை தனது கட்டுக்குள் வைத்திருந்து, நான்கைந்து தலைமுறை மக்களின் விருப்ப தலைவராக இருந்து, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியல் வரை நீ​ண்ட காலம் தன்னை முன்னிலைப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

கலைஞரின் அரசியலில் பலருக்கும் பல வித கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவரது 60 ஆண்டு ஆளுமை அனைவரையும் நிச்சயமாக வியக்கச் செய்யும். 

லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பான சொல்லாடல்களுடன் தமிழை பிழையற எழுதும் பாக்கியம் வாய்க்கும். லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பாக வசனங்களையும், புத்தகங்களையும் எழுதும் ஆற்றல்  அமையும்.  லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பான மேடைப் பேச்சு கை வரும். லட்சத்தில் ஒருவருக்குத்தான் மக்கள் செல்வாக்குடன் அரசியலிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தும் வரம் கிடைக்கும். 

எழுத்து, இலக்கியம், சினிமா, அரசியல், மக்கள் செல்வாக்கு, நீண்ட அரசியல் அனுபவம் என அனைத்தையுமே பெற்ற கலைஞர், கோடியில் ஒருவர். 

முக்கால் நூற்றாண்டுக்கு மேல் கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், கருணா மூர்த்தியான இறைவனின் கருணை அவர் மீது அதிகம். ஒரு வகையில் பார்த்தால், அவரே ஆண்டவர் தானே...?

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 19 May 2021

கி.ரா - அஞ்சலி

 கரிசல் மண் இலக்கிய தந்தை தமிழ்  எழுத்துலக  பிதாமகன் கரிசல் மண்ணிலேயே விதையாகி விட்டார்.

புதுச்சேரியில் இருந்த நாட்களில் அவருடன் கிடைத்த அனுபவத்தை அசை போட்டு பார்க்கிறேன். சில இடங்கள் மட்டும்தான் சிலரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். என்னை பொருத்த வரை அதுபோன்ற இடம் என்றால் புதுச்சேரி. ஆன்மீக பூமி, எழுத்தாளர்களின் சுவர்க்க புரி. நாற்பதுக்குள் மறைந்த பாரதியும் சரி. சதம் எட்டிய கி.ரா.வும் சரி. இதற்கு சரியான உதாரண நாயகர்கள்.

புதுச்சேரி பல்கலை கழகத்தின் கவுரவ விரிவுரையாளராக மட்டுமே பணியாற்றிய கி.ராஜநாராயணனுக்கு ஓய்வுக்கு பின்னும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கி கவரவம் செய்தது புதுச்சேரி அரசு. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உளள அந்த குடியிருப்பில்தான் பல தசம ஆண்டுகளாக அவர் வசித்தார். தமிழகத்தில் இப்படி ஒரு கவுரவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பத்து ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி சென்ற புதிதில் கி.ரா அங்கிருக்கிறார் என்பது மட்டும் தெரியும். எங்கிருக்கார் என தெரியாது. ஒருநாள் கமல்ஹாசன் அங்கு வந்து சென்றதாக செய்தி வந்தது. கி.ரா. 90வது பிறந்த நாளையொட்டி யாரும் அறியாமல் இரவு நேரம்  வந்து திரும்பி இருக்கிறார். எழுத்தாளர்களை பாராட்டுவதில் கமல் தனி ரகம். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை கவனித்திருக்கலாம்.

கமல் வந்து சென்ற பின்தான், லாஸ்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அவர் வசிப்பது தெரிந்தது. ஒருநாள் காலை வேளையில் அவரது வீட்டை தேடிச் சென்றபோது, அந்த குடியிருப்புக்குள்ளேயே பல தெருவை சுற்றி கடைசியாக ஒரு பிளாக்கில் மேல்தள வீடு ஒன்றை அங்குள்ளவர்கள் காட்டினார்கள். அங்கு சென்று பார்த்தால் அது எழுத்தாளர் பிரபஞ்சன் வீடு. ஆம். புதுச்சேரி அரசு அவருக்கும் அதே லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி இருந்தது.

இந்து தமிழ் இதழின் புதுச்சேரி பதிப்பு ஆசிரியரான பின்புதான் கி.ரா. அறிமுகம் வாய்த்தது. நான்கைந்து முறை அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அப்போது இந்து தமிழில் தொடர் ஒன்றை கி.ரா. எழுதிக்கொண்டிருந்தார். அவரது கையெழுத்துப் பிரதியை வாங்கி வருவதற்காக சென்றதுண்டு. ஆண்டுதோறும் நடத்தும் வாசகர் விழாவுக்கும் கி.ரா. வந்திருந்தார். அவருடன் பேசும்போது கிராமத்தில் தாத்தாவிடம் பேசும் உணர்வு தான் வரும். தமிழில் வட்டார மொழிகளை மறக்கக் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணம்.



இந்த சந்திப்புக்கெல்லாம் சிகரமான ஒரு சந்திப்பு உண்டு. அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாததொரு தருணம். 

அந்த நல்ல நாளின் காலைப்பொழுதில் இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக அவருடன் புதுச்சேரி வந்திருந்தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஏற்கனவே எனது புத்தக வெளியீடு மூலம் எஸ்.ரா. அறிமுகமாகி இருந்ததால் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் ஒன்று வெளியாகி இருந்த தருணம் அது. 

கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் என்றும் கி.ரா வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சிறந்த தருணம் அது. கடற்கரை சாலை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே புத்தகம் போடும் அளவுக்கு இருந்தது. 

கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை எல்லாம் எஸ்.ரா.வுடன் அசை போட்டுக் கொண்டார். சின்ன வயதில்  எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டிருக்கிறார். புதுமைப் பித்தனை பதம் பார்த்த அதே வியாதி. அதில் இருந்து மீண்டு, எமன் வாயில் இருந்து ஆங்கிலேய மருத்துவர் ஒருவர் அவரை மீட்டு வந்தது. புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். 

அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் கி.ரா. உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது. அவரவர் சொந்த ஊர் எத்தனை ஆண்டு பழமையானது, அதன் பெயர் காரணம் போன்றவயெல்லாம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எத்தனை பேர் அதில் குறைந்த பட்ச ஆர்வம் காட்டியிருப்பாம் என்ற எண்ணம் தான் அப்போது மேல் எழுந்தது.

அவருக்கு பதிலாக, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி சுவை. அவர் தேசாந்திரி என்பது அவரை வாசித்த வாசகர்கள் அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்தது,  அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, அந்த பகுதியின் புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. 

கிராமங்களின்  பெயர்கள் பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழில் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார் எஸ்.ரா. அங்குள்வர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார். இரண்டு இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது.



அதன்பிறகு, அதீதி ஓட்டலுக்கு எஸ்.ரா அவர்களுடன் திரும்பியபோது, கி.ரா. உடனான சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், 

"தற்சமயம், 90 வயது கடந்து வாழும் முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்".

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இருவருமே சதமடிப்பார்கள் என நினைத்தோம். காலத்தின் கணக்கு வேறு மாதிரியாகிப் போனது...

#நெல்லை_ரவீந்திரன் 

மிக அரிய வாய்ப்பின் தருணத்தை அன்றைய எனது மொபைலில் படம் எடுத்துக் கொடுத்தவர், கி.ரா.வின் புதல்வர்.

Monday, 19 April 2021

கடல்புறா... சுக அனுபவம்...

 சின்ன வயசில வாசிப்பு பழக்கம் ஆரம்பிச்சப்போ நிறைய தினசரி, வாரப்பத்திரிகைகளை படிப்பேன். அதுக்கப்புறம் ஆலங்குளம் லைப்ரரிக்கு போக ஆரம்பிச்சப்ப எனக்கு அறிமுகமானது அவரது எழுத்துகள். 

வரலாற்று நாவல்னாலே அவர்தான். அவர் மட்டும்தான். எனக்கு வேகமாக நகரும் கதையை விட காட்சிகளை நின்று நிதானமாக ரசித்து சொல்பவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் சாண்டில்யனின் நாவல்களும். என்னோட முதல் சாய்ஸ் அவர்தான்.

சாண்டில்யனுக்கு அப்புறமா, சின்ன காட்சிய கூட பல பக்கம்... பத்தி பத்தியா... சுவாரஸ்யமா எழுதுறவர், எஸ்.ரா. இது என்னோட எண்ணம். சாண்டில்யன் வரலாறுக்குன்னா இவர் சம கால சமூகத்துக்கு...

சின்ன வயசில லைப்ரரி மெம்பராகி கடல்புறா, ஜலதீபம், யவன ராணி, ராஜமுத்திரை மாதிரி நாவல்களையெல்லாம் ஒவ்வொரு பாகமா தேடித்தேடி சொல்லிவச்சி வாங்கிப் படிச்சிருக்கிறேன். அப்புறமா சென்னை பாண்டிச்சேரின்னு லைப்ரரிங்கள்ல மெம்பரானாலும் சாண்டில்யன் மட்டும் மிஸ்ஸாயிட்டே இருந்தாரு. சில நேரம் ரொம்ப பழைய புக்கா படிக்க உதவாதுன்னு சொல்லி ஓரங்கட்டி வச்சிருப்பாங்க...

ஒவ்வொரு முறை புத்தக கண்காட்சி போகும்போதும் சாண்டில்யன் புத்தகங்கள வாங்கனுமின்னு நினைச்சிப் போனா, வேற புத்தகங்கள வாங்கிட்டு இத வாங்க முடியாம போகும். டைம் இருக்காது.. இல்ல பணம் இருக்காது...



இந்த தடவை அப்பிடி இல்ல. இன்றைக்கு (பிப். 28) தி.நகர் பர்ச்சேஸ் முடிஞ்சி நேரா புத்தக கண்காட்சிக்குப் போய் மொதல்ல வாங்கினது, கடல்புறா புத்தகம்தான். ரொம்ப வருஷத்துக்கப்புறம் ஸோ ஹேப்பி..

.

.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம், (ஏப்.18) கடல் புறாவில் பயணம். உண்ணும்போதும் உறங்கும்போதும் அதில் கடல்வலம். காதல், வீரம், சோகம், அரசியல் சூழ்ச்சி, போர் வியூகம். இப்படியாக கடல்புறா தளத்தில் இளைய பல்லவன், அமீர், கண்டியத்தேவன், சேத்தனோடு கூடவே நானும்.

சிறு வயதில் இருந்தே பரிச்சயமான கடல்புறாவில் என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றவர், சாண்டில்யன். கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் காலத்துக்கு பின், மீண்டும் கீழ் திசை நாடுகளை கையகப்படுத்திய அநபாயன் எனும் குலோத்துங்க சோழன்காலத்து கதை.

தமிழகத்தின் புகாரில் புறப்பட்டு இன்றைய ஒரிசாவான அன்றைய கலிங்கத்தின் பாலூர் துறைமுகம் துவங்கி, ஸ்ரீவிஜயம், சுவர்ண தீவு, சாகர தீவு என கரம் பிடித்து கடல் வழியே அழைத்துச் சென்ற கடல் புறாவை பிரிய மனமில்லை. கதைக்களம் சரியாக இரண்டு ஆண்டுகள். ஒரு சித்திரா பவுர்ணமியில் துவங்கி, இரண்டாவது சித்ரா பவுர்ணமியில் நிறைவடைகிறது. நாவலை படித்து முடித்த இந்த தருணமும் கூட சித்திரா பவுர்ணமியின் நெருக்கம்தான்.


கடாரத்தின் கட்டழகி காஞ்சனா தேவி, சீனத்தின் கலப்பின மஞ்சளழகி என ஒரு புறம் மயக்க வைக்கின்றனர். சீனத்து கொள்ளைக்காரனும் பிற்கால சீன அரசனுமான அகூதா, அரேபியாவின் பிரம்மாண்ட அமீர், அவர்களிடம் கடல்போர் பயிற்சி பெற்ற நாயகன் சோழர் படை தளபதி இளைய பல்லவன் என மறுபுறம் வியக்க வைக்கின்றனர். 

கருணாகரன் என்ற இளையபல்லவன் என்ற கடல்புறாவின் தலைவர் வரும் காட்சிகளைப் படிக்கும் போது எல்லாம் எம்ஜிஆரும் அவரது சண்டைக் காட்சிகளும் நினைவில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. கடல்புறா நாவலின் மூன்றாம் பாக இறுதியை நோக்கிச் சென்றபோது, ஜெயா டிவியில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏதேச்சையாக ஔிபரப்பானது.

அந்த படத்துக்கும் கடல் புறாவுக்கும் பல ஒற்றுமைகள். மாநக்காவர தீவு தலைவன் கங்கதேவன், நம்பியாராகவும்... அட்சயமுனை தலைவனும் மஞ்சளழகியின் வளர்ப்புத் தந்தையுமான பலவர்மன், கன்னித்தீவு தலைவனும் ஜெயலலிதாவின் வளர்ப்புத் தந்தையுமான எஸ்வி ராம்தாஸாகவும்... தெரிந்தது. இப்படிப்பல... அதை தனியாகவே எழுதலாம். சாண்டில்யனின் கடல்புறா பாதிப்பில்தான் ஆயிரத்தில் ஒருவனை பி.ஆர்.பந்துலு எடுத்திருப்பார் போலும்.


சரி... கிட்டத்தட்ட ஒரு மண்டலமாக கடல்புறாவில் உலா வந்து, பிரிய மனமின்றி புகார் கரையில் இறங்கியாகி விட்டது. 

மறுபடியும் ஒரு கடல் பயணம் செல்லலாமா? என்ற யோசனை எழுந்த போது, சிவகாமியின் கொலுசு சத்தம் காதுகளில் கீதம் இசைக்கிறது. கூடவே மாறுவேட புலியான மகேந்திர வர்மரும் நரசிம்ம வர்மரும் அழைக்கிறார்கள், வாதாபியை நோக்கி... சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக...

#நெல்லை_ரவீந்திரன்