Thursday 1 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -49

 டைரக்டர் டச்...

டைரக்டர் டச்னு சொல்லுவாங்க அது இவருக்காகவே வந்த வார்த்த. 

மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே  சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா தெறமைய தவிர வேறென்ன..?


கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' மாதிரியான கிரைம் திரில்லருக்கு இவருதான் அஸ்திவாரம். 'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?

ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'பாமா ருக்மணி' வர இவருக்கு இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. 'மவுன கீதங்கள்'தான் இவரோட மொத சொந்த குரல் படம். அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...

அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம்தான். 



1980களில் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு ஹீரோவா பேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் வராது...

இவரு ஒரு ரூட்டுன்னா, டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம். அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர்கள் உண்டு. 

'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விசேஷங்க'... இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம். தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் தாவணிக் கனவுகள்னு சொல்லுவாங்க...

ரஜினியோட நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.

இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியா ஹீரோயினாக்கி அழகு பாத்தவர்.

நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே  இவரு ஒருத்தரு தான். 

அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.

ஆர்.பாண்டிய ராஜன், பார்த்திபன் இவரோட சிஷ்யங்கன்னா பாத்துக்கோங்க.. படத்தில சூப்பரா ரசிகர்கள கவருத மாதிரி ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு கார்டு போடுறது இவரோட ஸ்டைல். இவரோட திரைக்கதையை பார்த்து அமிதாப் பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'

இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட. 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசை இவர்தான்...! அந்த படத்தில "பச்ச மலை சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டு இவர் பாடுனதுதான்...!

தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்கு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக்காய், சின்ன வீடு மாதிரி   நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர். 

எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான். 

எம்ஜிஆர மாதிரியே இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு. என்னையே 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு..

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர், பத்திரிகையாசிரியர் பாக்யராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் (ஜனவரி 7) வாழ்த்துகள்...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: