Sunday 25 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -54

 தமிழ் படங்களை தாண்டி பிற மொழி படங்களை பார்க்கும் ஆர்வம் சாதாரணமாக வராது. அந்தந்த மொழிகளில் யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர் நம்மை கவர்ந்தால்தான் ஆர்வம் வரும். அப்படி மலையாளத்தில் என்னை கவர்ந்தவர் மம்முட்டி. வழக்கறிஞர் முகமது குட்டி, மம்முட்டியாக திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது.



1971ல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்த மம்முட்டி, அடுத்த பத்து ஆண்டுகளில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார். 1980களில் தொடங்கிய திரை ஆட்டம், அவரது மகன் துல்கர் சல்மான் வருகைக்கு பின்னும் தொடர்கிறது.


துப்பறியும் கேரக்டர் மம்முட்டியின் ஸ்பெஷால். அடிதடி, ஆக்ரோஷம், அனல் பறக்கும் சண்டை எதுவுமே இல்லாமல் உண்மையை வரவழைக்கும் கேரக்டர். சுருக்கமாக சொன்னால் சிபிஐ அதிகாரி. அவரை அடையாளப்படுத்தியதும் அதுதான் (ஒரு சிபிஐ டைரி). அதற்காக ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. அம்பேத்கர் வேடமெல்லாம் அவரது வாழ்நாள் சாதனை.



மலையாளம் தாண்டி தமிழ் உட்பட பல படங்களில் அதகளம் செய்திருக்கிறார். தமிழில் 1990களில் அறிமுகமான மம்முட்டியின் முதல் படம் 'மவுனம் சம்மதம்'. அமலா ஜோடி. வில்லனாக நாகேஷ். நடிகர் சரத்குமார் அதில் ஜூனியர். கொலை வழக்கில் வக்கீலாக ஆஜராகி துப்பறியும் வேடத்தில் பின்னி இருப்பார். அந்த படத்தில் எதுகை மோனையோடு ஜதி லயம் கூட்டும் 'கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா...' பாடல் இப்போதும் அனைவரையும் முணுமுணுக்க வைக்கும்.


அடுத்து பாலசந்தரின் 'அழகன்'. அதிக படிப்பறிவு இல்லாத சாதாரண ஓட்டல் ஓனர்.  வீட்டில் ஏராளமான குழந்தைகளை வளர்க்கும் மனைவியை இழந்த நபர். பானுப்ரியா, மதுபாலா என பல நாயகிகள்  கொண்ட இந்த படத்தில் மம்முட்டியை தவிர வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியாது. மலையாளம் கலந்து பேசும் தமிழ், அலட்டாமல் சிரமப்படாமல் வெகு இயல்பான நடிப்பு இதெல்லாம் அவரது பலம். விடிய விடிய காதலியுடன் தொலைபேசியில் பேசும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா..." பாடல் எவர் கிரீன் காதலர் கீதம். அதில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே..." பாடலும் அப்படித்தான்.


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் மம்முட்டி இணைந்த 'தளபதி', இன்றளவும் நட்புக்காக கொண்டாடப்படும் படம். தாதா வேடத்தில் மம்முட்டி. தேவா, சூர்யா கேரக்டர்கள் சாகா வரம் பெற்றதற்கு காரணம் மம்முட்டி. 



மக்களாட்சி, மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, புதையல், எதிரும் புதிரும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம், விஸ்வ துளசி இப்படி மம்முட்டியின் நேரடி படங்கள் பட்டியல் ரொம்ப குறைச்சல். அவரது தமிழ் டப்பிங் படங்களும் அப்படித்தான். ஆனால் மம்முட்டியை தெரியாத தமிழ் ரசிகர்கள் இல்லை என்பதே நிஜம்.




விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர், ரஜினிக்கு எஜமான் மாதிரி மம்முட்டிக்கு மறுமலர்ச்சி. ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார். 'நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு..' பாடல் ஹிட் வரிசை ரகம். கிளிப்பேச்சு கேட்க வா படத்தின் கனகாவுடன் பாடும்  'சிவகாமி மனசில...' டூயட் பாடலும் அப்படித்தான்.


கன்டெய்னர் லாரியில் பணத்தை அள்ளிச் சென்ற தமிழக அரசியலை பேசிய படம் 'மக்கள் ஆட்சி'. ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் மிக லோ கிளாஸாக இருந்து முதல்வராவார் மம்முட்டி.  ஜோடி ரோஜா. 'இருவர்' படத்துக்கு முன்னோடி இந்தப்படம். ரோஜா, ஆர்.சுந்தர்ராஜன் இருவருடனும் சேர்ந்து படம் முழுவதும் பின்னி இருப்பார் மம்முட்டி.


நான்கு அண்ணன் தம்பிகளில் மூத்த அண்ணனாக கூட்டு குடும்ப தலைவனாக 'ஆனந்தம்', ராணுவத்தில் கால் இழந்து ஒருதலைக் காதலராக 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. மெல்லிய குடும்ப கதைக்கு 'விஸ்வ துளசி'. இப்படி மம்முட்டியின் ஒவ்வொரு படமும் மனம் கவர்ந்தவை. அரை நூற்றாண்டை கடந்து விட்டது, அவரது திரைப் பயணம்.



தமிழில் ரஜினி, அஜித், முரளி, நாகேஷ், நெப்போலியன், சரத்குமார், அரவிந்த்சாமி, மணிவண்ணன், டெல்லி கணேஷ், அமலா, பானுப்ரியா, ரோஜா, கனகா, தேவ்யானி, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா என பிரபல நட்சத்திரங்களுடனும் பாலசந்தர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களிடமும் இணைந்து நினைவில் நிற்கும் படங்களை தந்தவர் மம்முட்டி...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: