Tuesday 20 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -53

 சினிமாவில் மிக உச்சம் பெற்றவர் கிடையாது. முழுக்க முழுக்க நாயகியும் இல்லை. ஆனால் 35 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு தலைமுறை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், ரம்யா கிருஷ்ணன்.  

மலையாளம்,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இப்படி ஐந்து மொழிகளில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல் படம் 'வெள்ளை மனசு'. 1986ல் வந்த அந்த படத்தின் ஹீரோ ஒய்.ஜி.மகேந்திரன்.! இதே போல கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றான 'ராஜா எங்க ராஜா' படத்தின் ஹீரோயினும் இவர்தான். ஆரம்ப கால சத்யராஜின் 'முதல் வசந்தம்' படத்திலும் நாயகி. இப்படி நாயகியாக நடித்தாலும்  முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் துணை நாயகிதான்.


'படிக்காதவன்' படத்தில் ரஜினியின் தம்பி மனைவி, 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கமலுக்கு தங்கை, விஜயகாந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரனில்'  சரத்குமாரின் காதலி இப்படியாகவே சென்ற ரம்யா கிருஷ்ணன் நடிப்புக்கு தீனி போட்டது 'படையப்பா' நீலாம்பரி கேரக்டர். 

அதுவே திருப்பு முனையாக அமைய, பத்து ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் பிசியானார். பிரபுவுடன் 'பட்ஜெட் பத்மநாபன்', சரத்குமாருடன் 'பாட்டாளி'. கமலுடன் 'பஞ்ச தந்திரம்' என சிக்ஸரடித்தார். பஞ்ச தந்திரம்  மேகி அலைஸ் மரகதவல்லிக்கு கிட்டத்தட்ட 40 வயசு!

கூடவே, 1990களின் இறுதியில் தமிழ் திரையுலகில் அம்மன் படங்கள் என்றால் கூப்பிடு ரம்யாவை என்ற நிலைமைதான். 'ராஜகாளி அம்மன்', 'பொட்டு அம்மன்', 'அன்னை காளிகாம்பாள்', ' ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி',  இப்படி பலவிதமான அம்மன் அவதாரத்தில் தூள் கிளப்பினார்.


அப்புறம் கொஞ்சம் ஓய்வெடுத்து படங்களை குறைத்துக் கொண்டாலும் பிற மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த 80ஸ் நாயகியை 2கே கிட்ஸ்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தது 'பாகுபலி'. உலக அளவில் சினிமா ரசிகர்களிடம்  ராஜமாதா சிவகாமியாக ரம்யாவை கொண்டு சேர்த்தது 'பாகுபலி'. 

"இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்..." இந்த வசனம் அவரால்தான் உயிர் பெற்றது. கம்பீரம், அசால்ட்டான பார்வை, அலட்சியமான வசன உச்சரிப்பு இதுதான் ரம்யாவின் அடையாளம். இதுதான் 'குயின்' என ஜெயலலிதா வேடத்தில் அவரை நடிக்க வைத்தது.

சூர்யாவுடன் 'தானா சேந்த கூட்டம்', சிம்புவுடன்  'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என இன்றைய தலைமுறை வரை நடித்து விட்டார். 

1980களில் வெளியான படங்களின் ரம்யாவையும் இன்றைய ரம்யாவையும் பாருங்கள். மொத்தமாகவே மாறி இருப்பார். இன்று வரை பெரிய திரை சின்னத்திரை என கலக்கும் ரம்யாவின் அழகில் மயங்காதோர் யார்...?


"வயசானாலும் ஒன் அழகும் ஸ்டைலும் இன்னும் கொறையல..."

இந்த டயலாக் படையப்பாவுக்கு மட்டுமல்ல, நீலாம்பரிக்கும்தான்...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: