Friday 30 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -55

 "எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்... அது எதற்கோ..."

"மேகமே... மேகமே..." என காற்றில் கலந்த கலைவாணி...


19 மொழிகளில் பத்தாயிரம் பாடல்கள். ஆயிரத்துக்கும் அதிகமான தனி ஆல்பம் பாடல்கள். குஜராத் (1975), ஒடிஷா (1984), ஆந்திரா (1979), தமிழ்நாடு (1979) என நான்கு மாநிலங்களில் அரசு விருது. பத்மபூஷண். இப்படி சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைவாணி என்கிற வாணி ஜெயராம், வேலூரில் சாஸ்த்ரீய இசை குடும்பத்தில் பிறந்து சென்னையில் படித்து மும்பையில் பாடகி ஆனவர்.



கல்லூரி முடித்து பாரத ஸ்டேட் வங்கி பணியில் சேர்ந்து மணமாகி ஐதராபாத்தில் இருந்தபோது அவரது இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம், மும்பைக்கு குடி பெயர்ந்து  இந்துஸ்தானி படிக்க வைத்து இசை பயணத்துக்கு வழி காட்டினார். தனது கணவரின் பெயரையும் சேர்த்து கலைவாணி,  வாணி ஜெயராம் ஆனார்.



1969ல் இசைக் கச்சேரியில் பாடியபோது இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை கவனித்து தனது மராத்தி மொழி பாடல் ஆல்பத்தில் பாட வைத்தார். அப்படியே இந்தி படத்திலும் பின்னணி பாடகியாக்கினார். 1971ல் வெளியான அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் நடித்த 'GUDDY' தான் அவரது முதல் படம். வாணி ஜெயராம் பாடிய முதல் திரைப்பாடலே ("போலே ரே பாபிஹரா...") அந்த ஆண்டின் சிறந்த பாடல். இந்தியில் ஆர்.டி.பர்மன் பண்டிட் ரவி சங்கர் போன்ற பிரபலங்களின் இசையில் பாடியவர் அப்படியே தெலுங்கில் அடியெடுத்து வைத்தார்.

தெலுங்கில் 1973ல் வெளியான 'அபிமான வந்துலு' படத்தில் முதல் பாடல். தெலுங்கில் இயக்குநர் கே.விஸ்வநாத் மற்றும் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் கூட்டணியில் இவரது பாடல்கள் ஹிட் ரகம். அதற்கு 'சங்கராபரணம்' படத்தின் எவர் கிரீன் பாடலான "மானஸ ஸங்கரரே..." உதாரணம்.



அதன்பிறகு, தமிழில் என்ட்ரி கொடுத்த வாணி ஜெயராமின் முதல் பாடல் கண்ணதாசன் எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தின் "ஓரிடம் உன்னிடம்... என் தேவையை கேட்பது யாரிடம்..." பாடல். 

ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகம் செய்தது,  1974ல் வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தின் "மல்லிகை  என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா..." பாடல் தான். அந்த ஆண்டு 'எங்கம்மா சபதம்' படத்தில் பாடியதை தொடர்ந்து அதன் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கன்னடத்திலும் வாணி ஜெயராமை அறிமுகம் செய்தார்.

1970களின் மத்தியில் துவக்கி 1980களின் பிற்பகுதி வரை தமிழில் சுசீலா, ஜானகி குரல்களுக்கு நிகராக  இவர் குரலும் ஒலித்தது. பலரும் இவர் பாடிய பாடல்களை ஜானகி என்றே  நினைத்திருப்பார்கள். வாணியை பெண் எஸ்பிபி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குரலில் லாவகம், உச்சரிப்பு, சுத்தம் இருக்கும். 80களின் வானொலி ரசிகர்களால் இவரது பாடல்களை மறக்கவே முடியாது.


"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா...", 

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..."

"இன்று சொர்கத்தின் திறப்பு விழா.. புது சோலைக்கு வசந்த விழா..."

""பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா..."

"மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும்...", 

"நான் ஒன்ன நெனைச்சேன் நீ என்ன நெனைச்சேன் தன்னாலே ரெண்டு ஒண்ணாச்சி...",  

"மழைக்கால மேகம் ஒன்று.."

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." 

"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே..."

"மூங்கில் இலை காடுகளே முத்து மணி மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்.."

"சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்கார பூங்குயிலே..."


எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, கமல், ரஜினி, பாக்யராஜ், ராம்கி படங்கள் வரை பாடியிருக்கும் அவரது பாடல்களை பட்டி(யலு)க்குள் அடைக்க முடியாது. 

1990களின் துவக்கத்திலேயே பாடுவதை குறைத்தாலும் முருகன், அம்மன், கண்ணன் பக்தி பாடல்கள் பஜனைகள், கீதா கோவிந்தம், இசை ஆல்பங்கள் அதிகம் பாடி இருக்கிறார். 

1980களில்  ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பாடியவர்.

மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மார்வாரி, பெங்காளி, ஒரியா, போஜ்புரி, ராஜஸ்தானி, உருது, பஞ்சாபி, துளு, படகா, சமஸ்கிருதம், ஹர்யான்வி, ஆங்கிலம் என பாடியவர். 

"எல்லா மொழிகளிலும் அதன் த்வனி தவறாமல் உச்சரிக்கும் வாணி ஒரு ஆயுள் கால பாடகி..." இது வாணி ஜெயராம் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள். 

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்..." என பாடியவர் உயரிய பத்ம பூஷண் விருது அறிவிப்பை கேட்டும் அதை கைகளில் பெறாமலேயே தைப்பூச நாளில் முருகனிடம் சென்று விட்டார்.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: