Saturday 8 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -27

தமிழ் திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத, பலரும் அறியாத ஆளுமையாக  சிதம்பரம் எஸ். ஜெயராமனை சொல்லலாம். சுருக்கமாக சி.எஸ்.ஜெயராமன். பின்னணி பாடகர். 1949 தொடங்கி 1965 வரை திரைப்பட பின்னணி உலகில் கோலோச்சியவர். எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா தொடங்கி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டிஆர் என பலருக்கும் குரல் கொடுத்திருக்கிறார், சி.எஸ். ஜெயராமன். 



'பராசக்தி' படத்தில் தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி... நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்... கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்போட ஓடி வாங்க...


'ரத்தக் கண்ணீர்' படத்தில் எம்ஆர் ராதாவின் குரலுடன் இணைந்து வரும் குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி ஏது...? என அவர் பாடிய பாடல்கள் எல்லாம் அந்தக் கால சூப்பர் ஹிட். 

இதுபோலவே,  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு... காவியமா நெஞ்சில் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா.. வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள் கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்...

உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப் பித்தன் படத்தில் எம்ஜிஆருக்காக)... அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை அது அறுந்திடாமல் பாதுகாக்கும் பாசவலை... அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் அன்பே உடல் நின் உயிர் நீ ... 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்கு கோனாரே இத ஓட்டி ஓட்டி திரிபவர்கள் ஒரு முடிவுங்காணாரே... உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்... ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே மனுஷன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே... இன்று போய் நாளை வா என எனை ஒரு மானிடன்... (சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணனுக்காக)... 

இவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சிஎஸ் ஜெயராமன் பாடிய பாடல்களில் சில முத்துக்கள். அவர் பாடியவற்றில் பெரும்பாலானவை, 60ஐ கடந்தவர்கள் மட்டுமல்ல இன்றைய தலைமுறையும் ரசிக்கும் வகையிலான பாடல்கள்.

இசைக்காக தன்னையே அர்ப்பணித்தவர் சிஎஸ் ஜெயராமன் என்றே சொல்லலாம். தியாகராஜ பாகவதருக்கே இரண்டு ஆண்டுகள் பாட்டு கற்று கொடுத்திருக்கிறார்.

தெய்வப்பிறவி படத்துக்காக அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்... என இவர் பாடிய பாடலில் வரும் பெண் குரல் ஹம்மிங்குக்காக  பாட வந்த எஸ் ஜானகியை மற்றவர்கள் திரும்ப அனுப்பியபோது தடுத்து நிறுத்தி ஜானகியை பாட வைத்திருக்கிறார். அந்த வகையில் பாடகி எஸ்.ஜானகியை தமிழ் திரையுலகுக்கு தந்தவர் சிஎஸ் ஜெயராமன் என்றே சொல்லலாம். 



சி.எஸ்.ஜெயராமனுக்கு பின்னணி பாடகர் தவிர, இன்னும் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்று இசையமைப்பாளர் முகம். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எவர்கிரீன் ஹிட் படமான ரத்தக் கண்ணீருக்கு இசையமைப்பாளர் இவர் தான். அந்த படத்தில் குற்றம் புரிந்தவன் பாடலுக்கு இடையே எம்ஆர் ராதா பேசும் வசனமும் வரும். அது போன்று திரைப்பட பாடலில் அறிமுகம் செய்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்றார். 

எல்லாவற்றுக்கும் முன்பாக ஆரம்பத்தில் சிஎஸ் ஜெயராமன் ஒரு நடிகர். அப்படித்தான் 16 வயதிலேயே திரையுலகில் அடி எடுத்து வைத்தார். தமிழில் பேசும் படம் வெளியான மூன்றாம் ஆண்டில் (1934) இவர் நடித்த கிருஷ்ண லீலா வெளியானது. அதில் இவர்தான் கிருஷ்ணர். இதுபோல, கிருஷ்ண பக்தி, நல்ல தங்காள், துருவா, விஜயகுமாரி என 1950 வரை படங்களில் நடித்தார்.

அதன் பிறகுதான் அவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் எல்லாம். 



திரையுலகை தாண்டியும் சிஎஸ் ஜெயராமனின் சாதனைகள் அதிகம். சிதம்பரத்தில் 'கலைஞன்', என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஒரு சில ஆண்டுகள் நடத்தி இருக்கிறார். அண்ணா ஆட்சியில் இசைக் கல்லூரி முதல்வராகவும் எம்ஜி ஆர் ஆட்சியில் அனைத்து இசைக் கல்லூரிகளின் கவுரவ ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். 

இது தவிர டேபிள் டென்னிஸ், கேரம் விளையாட்டுகளில்  இவர் சாம்பியன். கேரம் விளையாட்டில் பதக்கம் தட்டியவர். கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பிளேசர் ரக காரை சென்னையில் வாங்கிய இரண்டாவது ஆள் இவரே. மொத்தம் 8 கார்களை வைத்திருந்தாராம் சிஎஸ் ஜெயராமன்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி அம்மாளின் மூத்த சகோதரர் தான் சிஎஸ்  ஜெயராமன். கருணாநிதியின் மகனும் நடிகருமான மு.க.முத்துவுக்கு தாய்மாமன். 

தமிழ் சினிமாவின் மிக ஆரம்ப காலத்தில் நுழைந்து என்.எஸ்.கே, தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர்,  சிவாஜி, எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா என திரை பிரபலங்களின் நெருங்கிய நண்பரான சிஎஸ் ஜெயராமன் பிறந்த தினம் இன்று ஜனவரி 6.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: