Monday 17 January 2022

அது ஒரு பொ(ற்)ங்கல் காலம்

வருஷா வருஷம் களை கட்டுற நாலு நாள் பொங்கல் திருழாவுக்காவ நாலு வாரத்துக்கு முன்னேயே ரெடியாயிருவோம். நெட்டூரு ரோட்டுல சுண்ணாம்பு காளவாயிக்கு போயி சாக்குல சுண்ணாம்புக் கல் வாங்கியாந்து தண்ணீரில கொட்டினதும் சுறுசுறுன்னு பொங்க ஆரம்பிச்சதுமே சந்தோஷமும் பொங்க ஆரம்பிச்சிரும். மறுநா காலைல அடங்கிக் கிடக்கிற சுண்ணாம்புத் தண்ணியில நீலப் பொடிய கலந்து சுவத்துக்கு அடிச்சதும் பொங்கல் களை கட்ட ஆரம்பிச்சிரும்.

இப்பல்லாம் ஒரு வாட்டி அடிச்சா ஏழெட்டு வருஷம் நிம்மதியா இருக்கலாம்னு பெயிண்ட் வந்தாச்சி, வீடுங்களும் மாறியாச்சி.

.

மழைய மட்டுமே எதிர்பாத்து கிடக்குற விளங்காட்டில விளைஞ்ச தட்டைப் பயிறு, கானம், சிறு பயிறு இதெல்லாம் அறுவடை முடிஞ்சி வர ஆரம்பிச்சிரும். கூடவே, பனங்காட்டு குழியில போட்டிருந்த பனங்கொட்டையும்  நல்ல பனங் கிழங்கா விளைஞ்சிருக்கும். இதெல்லாம் பொங்கல் கால ஸ்பெஷல் அயிட்டங்கள்.

.

வெள்ளையடிச்ச பிறகு, வீட்டு திண்ணையில (இப்பல்லாம் கிராமங்கள்ல கூட திண்ணைய பாக்க முடியல) காவி கலரில பட்டை பட்டையா கோடு போட்டதும் வீட்டுக்கே ஒரு பொலிவு வந்திரும்.

செம்மண்ணை எடுத்து வந்து கொழைச்சி சின்ன சைஸ் குத்துச்சட்டி அளவுக்கு கட்டியா பிடிச்சி, காய வச்சி, அதுக்கும் சுண்ணாம்பு, காவில்லாம் ரெண்டு நாளைக்கு முன்னே அடிச்சி காய வச்சிருவோம். இதுதான் பொங்கல் பானை வைக்கிறதுக்கு கல். இப்ப ஸ்டவ்விலயே பொங்கல் வைக்க ஆரம்பிச்சாச்சி. 

.

ரெண்டு வாரத்துக்கு முன்னே கடைகளல்லாம் கலர் கலர் படங்களா பொங்கல் கிரீட்டிங் கார்டு குவிஞ்சி கிடக்கும். 25 பைசா அட்டையில ஆரம்பிச்சி, கவருக்குள்ள வச்சி அனுப்புறா மாதிரி கட்டிங் படங்கள், ஜிகினா படங்கள்னு விதம் விதமா தொங்க விட்டிருப்பாங்க.



அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சினிமா எம்ஜிஆர் தொடங்கி ரஜினி, கமல், சில்க், அம்பிகா, ராதான்னு ஒரு வகையான படங்களும் வயல்வெளி, சாமிங்கன்னு மற்றொரு வகையான படங்களும் நிறைஞ்சிருக்கும். தீபாவளிக்கு பட்டாசுன்னா பொங்கலுக்கு இதுதான். 



சில கிரீட்டிங் கார்டுகள்ல இருக்கிற படத்தை பார்த்ததும் அனுப்பவே மனசே வராம வீட்டில ஓரமா வச்சிருந்ததும் உண்டு. தேவையான அளவு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பலைன்னா கிரீட்டிங் கார்ட போஸ்ட் மேன் தரும்போது ஃபைன் போடுவாங்க.



பொங்கல் முடிஞ்ச பிறகு ஒரு வாரத்துக்கு நன்றி கார்டு சீஸன். பொங்கல் வாழ்த்து சொல்லி அனுப்புன ஒவ்வொருத்தருக்கும் பதிலுக்கு அந்த கார்ட அனுப்புவாங்க. அதுக்காக தனியா பொங்கல் நன்றி கார்டுகளும் விப்பாங்க... இப்பல்லாம் உடனடியா வாட்ஸ் ஆப்பிலயே ரிப்ளை பண்ணிடுறோம்.

.

மார்கழி கடைசி நாள் ராத்திரி பனங் காட்டில இருந்து பனை ஓலைக் கட்டு, பச்சை பனை மட்டை (பொங்கல் சோறு கிளறுவதுக்காக), ஆவாரம் பூ, மாவிலை, கண்புழை செடி, அருகம் புல். அப்புறம் கடையிலருந்து கரும்பு, மஞ்சக் கொழை எல்லாம் வீட்டுக்கு வந்து சேந்திரும். ஒரு பொங்கல் ன்னிக்கு காட்டிலருந்து கொண்டு வந்து தந்த ஓலைக்கட்டுக்குள்ள சின்ன சைஸ் பாம்பு ஔிஞ்சிருந்ததும் அதை உரல் உலக்கையாலேயே அம்மா அடிச்சி கொன்னதும் நினைவுகள்.

.

தை முதல் நாள் பொங்கல் அன்னிக்கு குளிருக்குள்ள காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி, குளிச்சிட்டு... காவி அடிச்சி வச்சிருக்கிற மண்ணு கட்டிய அடுப்பா கூட்டி... வெண்கலப் பானையில அம்மா பச்சரிசிய களைஞ்சி போடுவாங்க. பனை ஓலைய எடுத்து வைக்கிற வேலை எங்களது. சரியா ஈசான மூலையில பொங்க பான பொங்கி வரவும் காலையில சூரியன் வரவும் ரொம்ப சரியா இருக்கும். அப்ப அம்மா விடுற குலவைச் சத்தம் இன்னும் காதுக்குள்ளாற கேட்டுக் கிட்டே இருக்கு.

அந்த அடுப்பிலயே பச்சை மட்டைய கரண்டியாக்கி பொங்கல் சோறு ஆக்கி (பச்சை மனை மட்டை வாசத்தோட அந்த பொங்கல் சோறு இப்பவும் நாசிய சுத்திகிட்டு கிடக்கு), நிறைய காய்கனிகளை போட்டு சாம்பார், அவிச்ச பனங்கிழங்குன்னு எல்லாத்தையும் அம்மா ரெடி பண்ணிருவாங்க. அதுக்குள்ள அப்பாவோட சேந்து சாமி கும்பிட கரும்பு கட்டுறது, வீடு முழுசா சந்தனம் குங்குமம் வைக்கிறதுன்னு வேலை போயிட்டிருக்கும்.

.

ஒரு வழியா ஒம்பது மணிக்குள்ள பொங்கல் வச்சி முடிஞ்சி சாமி கும்பிட்டுட்டு, புது டிரஸ் போட்டுட்டு ஆலங்குளம் தியேட்டருக்கு முதல் ஆட்டம் (அப்ப அஞ்சி ஷோ. மொத ஷோ காலை 9.30மணிக்கு ஆரம்பிக்கும்)பார்க்க கிளம்புவோம்.

உதயகீதம், காக்கிச் சட்டை, சிப்பிக்குள் முத்து, பாட்டி சொல்லை தட்டாதே, கரகாட்டக்காரன்னு  பொங்கல் படங்கல்லாம் இன்னும் ஞாபத்துக்குள்ள, புஸ்தக மயிலிறகா பத்திரமா இருக்கு.

.

பொங்கலுக்கு மூணு நாலு நாளைக்கு விளையாட்டு விழா நடக்கும். பானை உடைத்தல், மங்கைக்கு திலகம் வைத்தல், முறுக்கு கடித்தல்னு ஜாலி விளையாட்டில தொடங்கி ஓட்டப் பந்தயம், கபடி, சைக்கிள் ரேஸ்னு வீர விளையாட்டுகள் வரை நடக்கும். பக்கத்து ஊரெல்லாம் சுத்தி வருவது மாதிரில்லாம் சைக்கிள் ரேஸ் நடக்கும். ஊரே அங்கின தான் கூடி நிப்பாங்க. சைக்கிள் ஸ்லோ ரேஸ், நைட்ல நடக்கிற மேடை போட்டிங்கள்ல பேச்சுப் போட்டி என்னோட பேவரைட். பரிசெல்லாம் கூட  வாங்கிருக்கேன்.

.

இப்பல்லாம் தை குளிருக்கு போர்வைக்குள்ள பதுங்கி கிட்டு வாட்ஸ் ஆப்பில வாழ்த்து அனுப்பும் போது, பொங்கல் விளையாட்டு விழா பாக்கும் போது அந்த கூட்டத்துக்குள்ள எங்க ஊரு போஸ்ட் மேன் காந்தி சார், தேடி வந்து வாழ்த்து அட்டைய தந்ததும் ஜன்னல் வழியா பொங்கல் வாழ்த்து கார்டை போட்டுட்டு போன ஃபிரண்டு ரவியும்தான் செல்போன் ஸ்கிரீன்ல தெரியுறாங்க.

.

ஏழு மணிக்கு எழுந்திருச்சி, ஸ்டவ் அடுப்பிலேயே அவசர பொங்கல் வச்சிட்டிருக்கப்ப தீபாவளி மாதிரி பொங்கலுக்கு மட்டன் கிடையாதாப்பான்னு பையன் கேக்குறப்ப பொங்கல கெட்டி தயிர் ஊத்தி சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருது.

பத்து பதினோரு மணிக்குள்ள பொங்கல முடிச்சிட்டு டிவியில சினிமா, ஜல்லிக்கட்டுன்னு லைவ் ஷோ பார்த்துட்டு, இந்தக்கால பொங்கலும் நிழற்படமாத்தான் போயிட்டிருக்கு, அடுத்த தலைமுறைக்கு எந்தவொரு உணர்வுப்பூர்வமான பொங்கல் நினைவுகளையும் பரிமாற முடியாமலேயே...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: