Friday 28 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -30

தமிழ் சினிமாவில் கணவன் -மனைவி அண்ணன் -தம்பி, அம்மா -மகள் அப்பா -மகன் இப்படி பலர் வலம் வந்திருக்கின்றனர். அது போன்ற ஒருத்தரைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர், பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன். தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார்.  ஆனால், இவர்  திரை உலகுக்குள் நுழைந்தது ஒரு நடிகராகத்தான். 



சிறு வயதிலேயே மேடை நாடக குழுக்களில் சேர்ந்து பி.யு.சின்னப்பா, காளி என்.ரத்தினம், எமஜிஆர் என அக்கால பிரபலங்களுடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு பாடும் திறமையும் இசை ஞானமும் இருப்பது கூடுதல் பலம். அப்படித்தான் இவரும். இவருக்கு பாட மட்டுமல்ல... வயலின் மற்றும் மிருதங்கம் வாசிக்கவும் தெரியும். இவரது தந்தை லட்சுமண பாகவதர் கர்நாடக இசைக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.



1947ல் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்த ஏ.எல்.ராகவன். கிருஷ்ண விஜயம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை பின்னணி பாடகராகத்தான் சினிமா உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காண்பித்தது. பாடகராக்கியவர் அன்றைய பிரபல பின்னணி பாடகர் சி.எஸ்.ஜெயராமன் (எஸ்.ஜானகியை பாடகியாக அறிமுகம் செய்தவரும் சி.எஸ்.ஜெயராமன் தான்). படம் விஜயகுமாரி. அப்போது ஏ.எல். ராகவனுக்கு சிறு வயது என்பதால் படத்தின் நாயகிக்காக பெண் குரலில் பாடினார். 



அதன் பிறகு 1950 தொடங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளளுக்கு மேலாக தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார். 1970களுக்கு பின் அவ்வப்போது பாடிய ஏ.எல்.ராகவன் கடைசியாக பாடியது,  'ஆடாம ஜெயிச்சோமடா' படம்...!

சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வி, எஸ்.வி. வெங்கட்ராமன் என தொடங்கி இளையராஜா, தேவா வரையிலான ஏராளமான  இசையமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார். டி.எம்.எஸ்., ஏ.எம். ராஜா, ஜிக்கி, ஜமுனா ராணி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, மனோரமா, வாணி ஜெயராம் ஸ்வர்ணலதா வரையிலான பாடக, பாடகிகளுடன் இணைந்து பின்னணி பாடி இருக்கிறார், ஏ.எல். ராகவன்.



இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் காமெடி பிளஸ் நையாண்டி ரகம். அன்றைய தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு மட்டுமல்ல... நாகேஷ், தங்கவேலு போன்ற  காமெடியன்களுக்கும் பாடல்கள் இருக்கும். நம்பியார், அசோகன்,  எம்.ஆர்.ராதா, டி.எஸ். பாலையா எல்லாம் திரைப் பாடல்களுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். 

இன்று வரையிலும் கேட்டு பார்த்து ரசிக்க கூடிய ஹிட் பாடலான 'இருவர் உள்ளம்' படத்தின் "புத்தி சிகாமணி பெத்த பிள்ளை..." என்ற பாடல் எம்.ஆர்.ராதா நடித்ததுதான். அந்த பாடலை அவருக்காக பாடியவர், ஏ.எல்.ராகவன். 


இது போலவே "மணக்கும் ரோஜா மை லேடி, எனக்கு நீதான் சரி ஜோடி..." என்ற பாடலை 'கவிதா' படத்தில் டி.எஸ். பாலையாவுக்காக பாடி இருக்கிறார்.


அதே நேரத்தில் ஜெமினி, முத்து ராமன், கல்யாண் குமார், பாலாஜி, நாகேஸ்வர ராவ் மாதிரியான கதை நாயகர்களுக்கும் பாடி இருக்கிறார். 


'நெஞ்சில் ஒரு ஆலயம்' படத்தில் கல்யாண் குமாருக்காக பாடிய  "எங்கிருந்தாலும் வாழ்க, உன் இதயம் அமைதியில் ஆழ்க...", பாடலும்


'பார்த்தால் பசி தீரும்' படத்தில் ஜெமினிக்காக பாடிய... "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ..."  பாடலும்


ஏ.எல்.ராகவனின் பெயரை காலா காலத்துக்கும் ஒலிக்கும் எவர்கிரீன் ரகங்கள்


ஏ.எல்.ராகவனின் குரல் மிகவும்  ரசிக்கத்தக்கதாகவும் பெகுலியர் வாய்ஸாகவும் இருந்தது ஸ்பெஷல். குறிப்பாக நாகேஷுக்கு இவரது குரல் ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.


"சீட்டுக்கட்டு ராஜா ராஜா என்னை திரும்பிப் பாரு லேசா லேசா..."


"உலகத்தில் சிறந்தது எது..."


"ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறைஞ்சிருக்கு..."


இவை நாகேஷுக்கு பாடிய பாடல்களில் சில.


"பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு..." (படிக்காத மேதை படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக)


"ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாலி..."


"என்ன வேகம் நில்லு பாமா, என்ன கோபம் சொல்லலாமா..."


இவையெல்லாம் ஏ.எல். ராகவன் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களில் சில துளிகள்


பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் எவர்கிரீன் நகைச்சுவை இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை, படத்தில் முத்துராமனுக்காக (நடிகர் கார்த்திக்கின் தந்தை) ஏ.எல். ராகவன்  பாடியிருக்கிறார். 


இதுபோலவே 'மனிதன் மாறவில்லை' படத்தில் நாகேஸ்வர ராவுக்காக (நடிகர் நாகார்ஜுனாவின் தந்தை) பாடிய..., "காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பக சோலையும் ஏனோ..?" என்ற காதல் பாடலை பாடியவரும் இவரே.


தமிழ், மலையாளம் கன்னடம் தெலுங்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார், ஏ.எல்.ராகவன்.



திருவிழாக்களில் களை கட்டிக் கொண்டிருக்கும் மேடைக் கச்சேரிகள் எனப்படும் ஆர்க்கெஸ்ட்டிராவை முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் ஏ.எல். ராகவனையே சேரும்.  எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்டிராவை ஆரம்பித்தவர் இவரே. எக்கோ எனப்படும் எதிரொலி டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே குரலிலேயே எக்கோ ஜாலம் காட்டியவர்.


'வேட்டைக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்..." பாடலில் இடையே அவ்வப்போது வரும், "ஹா ஊ ஹா..." என்ற எக்கோ ஹம்மிங் இவருடையதே.


பாடகராகவே அறியப்பட்டாலும் இவருக்குள் இருந்த நடிகன் அவ்வப்போது எட்டிப்பார்க்க  தவறவில்லை. பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜனுடன் சேர்ந்து படமும் தயாரித்து நடித்திருக்கிறார். 1968ல் வெளியான 'கல்லும் கனியாகும்' படம் இவர்கள் இருவரின் தயாரிப்புத்தான். அதில் இவர்கள் இருவருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். 



இதுபோல 1980ல் 'கண்ணில் தெரியும் கதைகள்'  என்ற படத்தையும் ஏ.எல்.ராகவன் தயாரித்திருக்கிறார். சரத்பாபு, ஸ்ரீபிரியா நடித்த இந்த படத்துக்கு கே.வி.மகாதேவன், சங்கர் -கணேஷ், ஜி.வி.வெங்கடேஷ், இளையராஜா என ஐந்து இசையமைப்பாளர்கள்...!


நடிகர், பின்னணி பாடகர் தயாரிப்பாளர் என பல முகங்களை காட்டிய ஏ.எல். ராகவன் இன்றைய டி.வி. யுகத்திலும் கால் பதித்திருக்கிறார். ஆம், தனது 65வயதுக்கு பிறகு சன் டிவியில் 2000களில் ஔிபரப்பான 'அலைகள்', 'அகல்யா' ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார்.



கடந்த பதிவில் நாம் பார்த்த 'வின்னர்' படத்தில் பாட்டியாக நடித்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமின் கணவர்தான் இந்த ஏ.எல்.ராகவன் என்பது கூடுதல் தகவல்.

தற்போது வரை உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு கடந்த 2020ம் ஆண்டில் தனது 87வது வயதில் இரையாகிப் போனார் ஏ.எல்.ராகவன்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: