Wednesday, 22 January 2020

இடக்கை - நாவல்

 ஒவ்வொரு வருஷமும் புத்தக காட்சிக்கு போனாலும் சில புத்தகங்கள் சிலரது புத்தகங்கள் மட்டுமே என்னை கவரும். முன்பெல்லாம் படிப்பதற்கு நிறைய நேரம் இருக்கும்.  செய்தி சேனல் வேலையில் அது சாத்தியமில்லாதது இப்போது ஒரு காரணம். ஆபீஸ் வீடு இடையிலான பயண தூரம் நேரமும் கூட மற்றொரு காரணம் தான். இந்த முறையும் சென்று வந்ததோடு வழக்கம் போல சில புத்தகங்களை மட்டுமே வாங்கி வந்தேன். சின்னவன், பெரியவன் விருப்ப லிஸ்ட் தனி.


கதைகள், நாவல், வருணனை நிறைந்த கட்டுரைகள் என்னைக் கவருபவை. அந்த வகையில் எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்தாளர் சாண்டில்யன். மிகப்பெரிய கதையோட்டத்தின் ஊடே அவரது வருணனை பூஞ்சோலை. காட்சிகளை அவர் விவரிப்பது மனதுக்குள்ளேயே அழகிய திரைச் சீலையை விரித்து பயாஸ்கோப் காட்டும். வெறுமனே ஓடும் கதைகள் என்னை கவர்வதி்ல்லை. பொன்னியின் செல்வனை விடவும் கடல்புறா தான் எனது ஆல்டைம் ஃபேவரைட். போர்க்களக் காட்சி, நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரணை இது மாதிரி நிறைய சொல்லலாம். காதல் காட்சிகளும் கூடத்தான். சாண்டில்யன் வேற லெவல்.


சாண்டில்யனை போலவே, என்னை கவர்ந்த நான் ஆராதிக்கும் எழுத்தாளர் எஸ்ரா. இப்போது இந்த கணத்தில் கண் முன்னே நிகழும் ஒரு காட்சியை கூட அருமையான ரசனையான கட்டுரையாக மாற்றும் எழுத்தாற்றல் அவருக்கே சொந்தமானது. எனது மானசீக குருவும் கூட. விகடனில் வெளியான துணையெழுத்து, தேசாந்திரி தொடர்களில் இருந்தே அவரை தொடர்கிறேன். 



இந்த புத்தகக் காட்சியிலும் அவரது "இடக்கை" வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்தால், 20 பக்கங்களுக்குள் அவருக்கே உரித்தான எத்தனை மேற்கோள் வாசகங்கள். யான் பெற்ற அனுபவத்தை ஊரும் பேரும் பெற இதோ சில....


"எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை" 

- அந்திம அவுரங்கசீப் நினைவில்  எஸ்ரா வார்த்தைகள்.


"உறக்கம் இரவு புகட்டும் பால். முட்டி முட்டி பால் குடித்த குழந்தை கண் அயர்வது போலத்தான் மனிதர்கள் உறங்குகிறார்கள். உறக்கம் எவ்வளவு சிறந்த மருந்து. எல்லா இரவும் ஒன்றுபோல் தோன்றினாலும் ஒவ்வொரு இரவும் தனித்துவமானது. தனி வாசனையும் இயல்பும் கொண்டது"


"அதிகாரத்தை ருசிக்க விரும்புகிறவன் கடவுளையும் ஏமாற்றவே முயற்சிக்கிறான். அவன் மனக்குரல் கடவுளை சாந்திப்படுத்த என்ன வேண்டும். கடவுளிடம் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என கற்றுத் தருகிறது"


"எந்த பேரரசனாலும் உதிர்ந்த பூவை மரத்தில் ஒட்ட வைத்து விட முடியாது. இயற்கையை எவராலும் வெல்ல முடியாது. அது ஒரு மர்மம். புதிர். அவிழ்க்க அவிழ்க்க நீண்டு கொண்டே செல்லும் புதிர்"


"காலில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தால் உதறுவதில்லையா. மணலை நாம் கண்டு கொண்டா இருக்கிறோம். எளிய மனிதர்களின் சாவும் காலில் ஒட்டிய மணல் போலத்தானே என நினைத்திருந்தார். ஆனால், காலம் அந்த மணல் கண்ணில் விழுந்த துகள் போல உறுத்திக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தி விட்டது"


"மனித நாக்கு ஓநாயினுடையதை விடவும் சிறியது. ஆனால், அது எவ்வளவு பேசுகிறது. புரள்கிறது. சதி செய்கிறது"

Thursday, 7 November 2019

கமல் '65... கலை.'60....

திரைத்துறையில் 60 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறையினரை சரியாக புரிந்து வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஏவி மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்.



'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

திரையுலக பிரபலத்தின் மூலம், அடுத்தகட்ட உயர்வை எதிர்பார்த்து கிடக்கும் நடிகர்கள் மத்தியில், தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 

பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது.

16 வயதினிலே, அவள் அப்படித்தான், ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள், குணா, மூன்றாம் பிறை, பேசும்படம், ஆளவந்தான், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

கமலின் 60 ஆண்டு கலைப்பயணத்தை 60 ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். கமலின் குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல். 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

எந்த துறையில் இருப்பவர்களுக்கும், அவரவர் துறையில் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா, வசூல் ராஜா என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. 

16 வயதினிலே, மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி,  என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்

ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விருமாணாடி, விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, இந்தியன் தாத்தா, அவ்வை சண்முகி மாமி, தசாவதாரம் பாட்டி என தன்னை முற்றிலும் மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 

மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 

கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி. அம்பிகா, ராதா, ரேகா. சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் தொடரும் முன்னணி நாயகன். 



இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு கடந்து சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னை அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம். 

அட... கமலின் தாயார் ராஜலட்சுமி, அவரை எப்போதுமே உண்மை பெயரான பார்த்தசாரதி என்றே கூப்பிடுவாராம்... தெரியுமா...?

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 29 October 2019

சுஜித்... ஒரு பாடம்...

வழக்கம் போலவே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஃபா்வர்டு மெஸேஜ் குவிகின்றன. விசேஷ தினங்களில் வாழ்த்து செய்திகள் போலவே, இப்போதும் துக்கம், கண்ணீர் என... எவ்வளவு அழுது புண்டாலும், குழந்தை சுஜித் திரும்பப் போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் இதை படிப்பினையாக எடுப்பார்கள். இது மில்லியன் டாலர் கேள்வி. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே சமாளிப்பது கடினம். அதுவும் தவழும் பருவத்தில் இருந்து நடக்கும் பருவம் என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையை சமாளிக்க பத்து பேராவது தேவை. அதாவது, பத்து இருபது கண்கள் அவசியம்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுவரில் மாட்டும் எல்ஈடி கிடையாது. அப்போது, வீடுகளில் ஸ்டாண்டில் இருக்கும் டிவியை இழுத்து தலையில் விழுந்து பலியான சோகங்கள் நடந்ததுண்டு. இப்போதும் பெரிய சைஸ் தண்ணீ்ர் பாததிரத்துக்குள் குழந்தை விழும் பரிதாபங்களும் நீடிக்கிறது.

சுஜித் வீடு இருப்பது பல ஏக்கர் விளை நிலத்துக்கு மத்தியில். அதில் சோளப்பயிர் வேறு. அவர்கள் வீட்டு ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டதோடு, அதன் அருகே நான்கு மற்றும் இரண்டு வயது குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தது அஜாக்கிரதை அல்லாமல் வேறு என்ன? அரை கிலோ மீட்டர் இடைவெளியில் தான் மற்ற வீடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

விடுமுறை காலங்களில் ஏரி, கல் குட்டைகளில் மூழ்கி பலியாவது சமீபத்திய பேனர் பலி வரை அஜாக்கிரதையோடு தனி மனித ஒழுக்கமும் குறைந்து வருவதே கூடுதல் காரணம். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானதும் குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் முதல் பிறந்த நாள் தொடங்கி காது குத்து,  பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பணி நிறைவு, 16ம் நாள் காரியம், நினைவு நாள் என அக்கம்பக்கத்தினர் பற்றிய சுய நினைவின்றி பேனர் வைத்திருப்பார்கள். எங்கள் தெரு முனையில் மாதந்தோறும் பத்து பதினைந்து பேனர்களாவது முளைத்து விடும், திருப்பத்தில் வரும் வாகனங்களை மறைத்தபடி... இதில் எதுவும் அரசியல் பேனர்கள் கிடையாது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தினசரி செய்தியான நிலையில், சாலையில் எத்தனை பேர் முறையான ஆவணங்கள், லைசன்சுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சின்ன சின்ன பசங்க கைகளில் இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது எதனால்..? அங்கும் தனி மனித ஒழுக்கம் மிஸ்ஸிங். 

அந்த சிறுவர், சிறுமிகள் எஸ்கேப்ஆகி போனாலும் அவர்களின் தாறுமாறு டிரைவிங்கால் எத்தனை விபத்துகள் தெரியுமா? ஒருவேளை அவர்களுக்கே ஏதாவது நேரிட்டால்...? எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் மூலம், வருங்கால தலைமுறைக்கும் தனி மனித ஒழுக்கத்தை மறக்கடித்து விட்டோம்.

அத்தி வரதர் என்றதும் ஒரு சிறிய நகருக்கு பெருங் கூட்டமாக கிளம்பி சென்று நெரிசலில் சிக்கி சாவது. மாமல்லபுரத்தை சுத்தமாக்கி வைத்திருந்தால் ஒரே நாளில் படையெடுத்துச் சென்று அந்த ஏரியாவையே ஒட்டு மொத்த குப்பையாக்கி வருவது. சுஜித் மீட்பு பணி என்றதும் வல்லுநர் குழு போல கிளம்பி வருவது. அவன் மறைந்ததும் நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி வருந்துவது.

உணர்வில் ஓவர் பொங்கலாகவும் சுய அறிவை கழற்றி வைத்து விட்டு, யாரோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டம் போடும் தோல் பொம்மையாகவும்  இருக்கும் மக்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தவிர...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 23 October 2019

ஊங்கூரு அம்மங் கொட

 புரட்டாசிய பெருமாளுக்கு குடுத்திட்டதால, ஆடி தான், சென்னையில அம்மன் மாசம். ஆனா, திருநவேலி பக்கம்லாம் புரட்டாசி, ஐப்பசி மாசந்தான் அம்மன் கோயிலுங்க எல்லாம் களை கட்டும். மூணு நாள் கொடை விழாவில ரெண்டு செட்டு மேளம், ரெண்டு ஜோடி கரகம், வில்லு கச்சேரி, கணியான் கூத்துன்னு செம போர்சா நடக்கும். திங்கள் கெழம ஆரம்பிச்சி, புதன்கெழம சாயந்திரம் கெடா வெட்டோட கொடை முடியும்.

கொஞ்சம் வசதியா இருக்க கோயிலா இருந்தா, ஞாயிற்று கெழம நைட்ல பெரிய தெர கட்டி சினிமா போடுவாங்க. திருநவேலி ஐங்சன்ல போய், படத்துக்கு புக் பண்ணிட்டு வருவாங்க. மொதல்ல கருப்பு வெள்ள படம். நைட் 10 மணிக்கு மேல த்ரீ பேஸ் கரண்டு வந்த பெறவு கலர் படம். பெரும்பாலும் எம்ஜிஆர் சிவாஜி படந்தான். பட்டிக்காடா பட்டணமா, மாட்டுக்கார வேலன் மாதிரி படங்கல்லாம் மண்ண குவிச்சி வச்சி பாத்திருக்கோம். இளவட்டங்க சங்கம் இருக்கிற ஊருல, கூட ஒரு புதுப்படமும் ஓடும். அப்பிடித்தான் நல்லவனுக்கு நல்லவன் படம் முடிஞ்சப்ப, திங்க கெழம விடிஞ்சிட்டு.

கால் நூற்றாண்டு ஓடுனதே தெரியல. எவ்ளோ மாற்றம். நான் மட்டும் என்ன அப்பிடியேவா இருக்கேன். ஒவ்வொரு ஊரும் பத்து வருஷத்துக்கு ஒருக்கா, பாம்பு சட்டய உரிச்ச மாதிரி, புதுசா மாறும்னு சொல்லுவாங்க. அத அனுபவிச்சி பாத்திருக்கேன். அப்பிடித்தான், எங்க ஊரு அம்மன் கொடயும். சுமாரா 10 வருஷத்துக்கு அப்புறமா, இந்த வருஷம் எப்பிடியாவது போயே தீரணும்னு முடிவு பண்ணி, போயிட்டு வந்தேன்

ஏழு நாள் கொடையா மாறிப் போயிருக்கு, எங்கூரு அம்மன் கொட. டிவியிலயே சகட்டு மேனிக்கு படம் போடுறதால சினிமாப்படம் பிடிச்சிருந்த இடத்த... நகைச்சுவை பட்டிமன்றம் ஒரு நாள், பாட்டுக் கச்சேரி ஒரு நாள், விளக்கு பூஜை ஒரு நாள்னு வரிசையா பிடிச்சிருந்திச்சி. அப்புறமா கோயில்ல வழக்கமா நடக்கிற பூஜை, பொங்கல், கெடா வெட்டுதான். ஆனா... நெறையவே மாற்றம்... 

ரெண்டு செட்டு மேளத்தில ஒண்ணு கட்... செண்ட மேளம் புதுசா சேந்திருக்கு... மூணு நாள் பாடுன கணியான் கூத்து... ஒரு நாள் நைட்  மட்டும்னு மாறியாச்சி. அங்கேயும் அஞ்சாறு பாட்டிங்க மட்டும் கத கேக்க இல்லைன்னா கணியான் கூத்து ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் தான். அப்புறம் நையாண்டி மேளம்,  கரகாட்டம்... அங்கன பாத்தா வழக்கம்போல நல்ல கூட்டம்... அம்மன் சன்னதிலயே நடந்ததால வில்லு பாட்டு பக்கம் கூட்டம் பரவால்ல.

செவ்வாய் கிழமை சாயந்தரம் சாமி ஊர் விளையாடி வரும்போது, நையாண்டி மேளம், செண்ட மேளம்னு வழக்கமான உற்சாகம் கொறையல. அந்த நேரத்தில, தெருவில குறுக்கால குறுக்கால ரெண்டு பக்க வீட்டை இணைக்கிறா மாதிரி  வேப்பிலை தோரணம் கட்டிட்டே போவாங்க. இப்ப அது முன்ன மாதிரி அதிகமா இல்ல. ஒவ்வொரு தெருவிலயும் பேருக்கு ஒண்ணு ரெண்டு தான். அத கட்டுறதுக்கு களம் இறங்குற ஆளுங்க இல்லயா... மாடி வீடுங்களா மாறினதாலயான்னு பட்டி மன்றம் வைக்கலாம் போல...

செவ்வா நைட்ல திரும்பவும் அடுத்த ரவுண்டு சாமி ஊர் சுத்தினப்ப... செண்ட மேளம், நையாண்டி மேளத்தோட ஆயிரங்கண் பானை, மொளப்பாரி ஊர்வலம்னு ஊரே களை கட்டிச்சி... நள்ளிரவுக்கு பிறவு, சப்பரத்தில வீதி, வீதியா முத்தாரம்மன் உலா வந்தது, எனக்கு புதுசு. எங்க வீட்டு முன்னால அதிகாலை 4 மணிக்கு சாமி வந்தப்ப... பரவசம்... மகிழ்ச்சி...

புதன்கிழமை மஞ்சப்பான பொங்கல்... கெடா வெட்டு... மொளப்பாரிய சுத்தி வந்து கும்மிப்பாட்டுன்னு கொடை நிறைவா முடிஞ்சிச்சி.




முத்தாரம்மனுக்கும் அசுரனுக்கும் நடக்கிற சண்டையில, கடைசியா சரணடையிற அசுரன், தனக்கு பலி கொடுக்கணுமின்னு வேண்டுவானாம். இது வில்லுப்பாட்டு கதையில பாடினாங்க. கெடா வெட்டும்போது அதுதான் நினைவுக்கு வந்திச்சி. கடைசி நாளில அண்டா கணக்கில சோறு வடிச்சி, கறிக் கொழம்பு வச்சி படையல் போட்டு முத்தாரம்மனுக்கு படைச்சிருந்தாங்க. இந்த பெரும் படப்பு பத்தி தனியாவே எழுதலாம்... 

எழுதியிருக்கேன்... 

👇👇

http://thileeban81.blogspot.com/2015/11/blog-post.html?m=1

கொடை விழாவில முத்தாரம்மன் தொடங்கி, சந்தன மாரியம்மன், கருப்பசாமின்னு ஒவ்வொரு கூடத்திலயும் ஆடின சாமியாடிங்கள பார்த்தப்ப...  சின்ன சின்ன பசங்களா தெரிஞ்சாங்க... அவங்களோட பழைய உருவம் தெரிஞ்சிது.. அப்பல்லாம் தாத்தாக்கள் தான் சாமியாடுவாங்க... இப்ப ரெண்டு பெண் சாமியாடிங்களும் இருந்தாங்க.. இவங்க அடுத்த தலைமுறைன்னு தெளிவானப்பத்தான், நம்ம வயசும் அரை சதத்தை எட்டுதேங்கிறது லேசா ஒறைச்சிது.

நெல்லை ரவீந்திரன்

Sunday, 11 August 2019

காற்றின் மொழி

பைக் வேகம் அதிக பட்சம் 40, 45 கிலோ மீட்டர். 30 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற ஆபீசுக்கு போற வழியில பாதியில ஒரு குட்டி பிரேக். இது மாதிரி சில கொள்கையோட ஒரு வாரமா மறுபடியும் பைக் ஓட்ட ஆரம்பிச்சாச்சி. அப்பிடித்தான்  மெரினா பீச் பக்கம் ஆல் இண்டியா ரேடியோ எதிரில இன்னிக்கு காலையில குட்டி பிரேக். 

அந்த டீக்கடையில நாலு பேர் மேல என் கவனம் போச்சிது. ஒரு அம்மா, அப்பா, ரெண்டு பசங்க. அவங்களுக்கு சுமாரா பதினைஞ்சி வயசுக்கு மேல இருக்கும். பசங்க ரெண்டு பேருமே வித்தியாசமா சைகை பண்ணிட்டிருந்ததை கவனிச்சப்பத்தான் புரிஞ்சிது. அவங்க, டெஃப் அண்ட் டம்ப் பசங்க. அந்த ரோட்டிலேயே பக்கத்தில இருக்கிற பள்ளியில படிக்கிறவங்க போலும்.

விடுமுறை நாள்ங்கிறதால பையன பாக்க அப்பா, அம்மா வந்திருக்காங்க. கூட இருந்தது பையனோட பிரண்ட்... காத்துல கை வெரல்கள வீசி.. உள்ளங் கைகள குவிச்சி... ரெண்டு கைகளையும் ஒரு மாதிரியா விரிச்சி... தன்னோட மூக்கு, காது, வாய்னு தொட்டுகிட்டு ... 60 கிலோ மீட்டர் வேகத்தில அவங்க பேசுறத பாத்தப்ப எனக்கு என்னல்லாமோ நெனப்பு. அந்த அப்பாவுக்கு அந்த பாஷை பரிச்சயம் இல்ல போல. அந்த அம்மா ஓரளவுக்கு பையன்கிட்ட அவனோட மொழியில பேசிட்டிருந்தாங்க. 

என் பாஷை உன் பாஷைன்னு அடிச்சிட்டிருக்கோமே. காத்துல கோடு கிழிச்சி படம் வரைஞ்சி அபிநயம் பிடிச்சி பேசுற இந்த சைகைமொழி எவ்வளவு உயர்ந்தது. இத கிமு 5ம் நூற்றாண்டில கண்டு பிடிச்சிருக்காங்க. உலகம் முழுசும் 137 வகையான சைகை மொழி இருக்காம். இது மட்டும் இல்லைன்னா எத்தனை பேர் வாழ்க்கை இருண்டு போயிருக்கும். இன்னமும் கூட, எத்தனைை பேர்  இந்த மொழிய அங்கீகரிச்சிருக்கோம். சினிமா, டிவிய எல்லாம் இவங்களால பார்த்து லேசில புரிஞ்சிக்க முடியுமா? இது மாதிரி நிறைய கேள்விங்க எனக்குள்ள...



முன்னெல்லாம் தூர்தர்சன்ல இவங்களுக்காகவே ஒரு நியூஸ் டைம் உண்டு. இப்ப உண்டான்னு தெரியல. தூர்தர்சன்ல சினிமா போடும்போது கூட, விண்டோ பாக்ஸ் வச்சி அந்த பாஷை தெரிஞ்ச டீச்சர் ஒருத்தர் கைகளால வெளக்குவாருன்னு ஞாபகம். இப்ப உள்ள டிவிக்கள்ல புதிய தலைமுறை டிவியில அது மாதிரி ஒரு நியூஸ் புல்லட்டின் தெனமும் ஓடுது.

காலேஜ் டைம்ல டைப் ரைட்டிங் கிளாஸ் போனப்ப இது மாதிரி ஒரு பிரண்ட் உண்டு. அங்க வேலை பாத்துக்கிட்டே படிச்சிட்டிருந்தான். டைப்பிங், ஸ்டென்சில் கட்டிங் (80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும்), ஜெராக்சுன்னு அவன் பம்பரமா சுத்துவாப்ல. எனக்கு கிளாஸ் டைம் ஈவினிங்கிறதால அப்ப ஓய்வா இருப்பான். அந்த சமயத்தில இன்ஸ்டிடியூட் இன்சார்ஜ் அக்கா கூட உக்காந்து அரட்டை அடிக்கிறப்ப அவனோட பாஷை மெள்ள மெள்ள புரிஞ்சிது. ஜோக், அன்னிக்கு நடந்த சுவாரஸயம்னு அவனோட மொழியில கேக்கிறப்ப வித்தியாசமா இருக்கும்.

காலேஜுக்கு பிறகு பாளயங்கோட்டையில ஒரு சீட்டு கம்பெனில (அப்ப சீட்டு கம்பெனிங்க ரொம்ப பேமஸ்) வேல பாத்தப்ப ஜெயிலுக்கு பக்கத்தில ஹாஸ்டலோட சேந்து டெஃப் அண்ட் டம்ப் ஸ்கூல் ஒண்ணு இருந்திச்சி. அங்க உள்ள ஃபாதர் சீட்டு போட்டிருந்ததால மாசம் ரெண்டு மூணு தடவ அங்க போவேன். அந்த ஸ்கூல் பசங்க (எல்லாம் குட்டி பசங்க) பேசிட்டிருப்பத பாக்கிறப்ப மனசு லேசா வலிக்கும். என்னோட பழய நெனப்பையெல்லாம் ரெண்டு பசங்களும் இன்னிக்கு கிளறி விட்டிட்டாங்க. 

தினசரி வாழ்க்கையில ஓவரா பேசுறவங்க... இங்கேயும் அங்கேயும் போட்டு குடுக்கிறவங்க... பொரணி பேசுறவங்க.. இந்த மாதிரி கேரக்டருங்கள பாக்கிறப்ப... ஆண்டவா வாயையும் காதையும் ஏன் படைச்சேன்னு தோணும். ஆனா... அந்த நெனப்பு தப்புன்னு சொல்றதுக்காகவே இந்த பசங்க என் கண்ணில பட்டாங்கன்னு நெனைக்கிறேன்..

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...

கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது... என்ற அவ்வையின் பார்வையில் நாம் பாக்கியசாலிகள்.

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 24 July 2019

கண்களுக்கு நிகரானவை கைகள்...

அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.


வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.



வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்

போக்குவரத்து... விதிகளை மதிப்போம்...

 அது ஒரு ஃபைன் ஈவினிங்.

இப்பிடி சொல்லத்தான் ஆசை. ஆனால், அது ஒரு மோசமான பின் அந்தி கருக்கல் பொழுது என்பதே உண்மை. 

இரவுப் பணிக்காக புறப்பட்டபோது அந்த கருக்கலின் கோர காத்திருப்பை நான் அறியவில்லை. நேரு ஸ்டேடியம் பக்கத்தில் பைக்கில் பயணித்தபோது குறுக்காக பாய்ந்த ஆட்டோ ஒன்று, என்னுடைய அடுத்த மூன்று வார காலத்தை எடுத்துச் செல்லப்போவதை  நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பைக்கின் வலது பக்கம், ஆட்டோவின் பின் பகுதியில் மோத, இதை முன் கூட்டிய அவதானித்ததால் ஒரு பக்கமாக சரிந்த எனது வலது கையில் செம்ம வலி. எழுந்து பார்த்தால், சென்னை ஆட்டோவுக்கே உரித்தான கொள்கைப்படி அந்த ஆட்டோ எஸ்கேப். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் அப்போது இல்லாததால் கையில் வலியோடு இரவுப் பணியில் ஆஜர்.

அடுத்தடுத்த நான்கு நாட்கள் அலுவலகம் போன போது, கையின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வலி குறையாததால் எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் வலது உள்ளங்கையில் விரலின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு. 'கண்களுக்கு நிகரானது கைகள். அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. மருத்துவமனையின் இந்த வாசகங்கள், அடுத்தடுத்த நாட்களில் அனுபவப்படுத்தின.




வலது உள்ளங்கையில் முழுமையாக கட்டு போட்டதோடு முறிந்த எலும்பு மீண்டும் ஒன்று சேர மூன்று வாரங்களாகும். கட்டிலும் தண்ணீர் படக் கூடாது என்ற அறிவுரை பிளஸ் மாத்திரைகளை தந்து அனுப்பினார், ஆர்த்தோ டாக்டர்.

அந்த மூன்று வாரங்கள் மிக கொடுமையானவை. வேலை இல்லாதவனின் பகல் பொழுதுகள் மிக நீளமானவை என்ற வார்த்தைகளின் பொருள் அறிந்த தருணங்கள் அவை. வீட்டில் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்ற பிறகு, படிக்கட்டுகளில் வழிந்தோடும் வெயிலும், அதை துரத்தி துரத்தி பிடிக்கும் பாதாம் மரத்தின் இலைகளுமே துணை. அவ்வப்போது அணிலும், பூனைகளும், பாதாம் பழத்தை ருசிக்க வரும் பசுக்களும் நலம் விசாரித்துச் செனறன.

வைரமுத்து சிறுகதைகள், வேல.ராமமூர்த்தி சிறுகதைகள், பதின் அப்புறம் தேசாந்திரி துணையெழுத்து, பொன்னியின் செல்வன் புத்தகங்களின் மறுவாசிப்பு... இப்படியாக வாரங்கள் கழிய, இதோ மற்றொரு எக்ஸ் ரேக்கு பிறகு கட்டு அவிழ்த்தாகி விட்டது.

வீட்டுச் சிறையில் இருந்து எனக்கு விடுதலை. மாவு கூண்டுக்குள் இருந்து வலது கைக்கு விடுதலை. ஒரு வழியாக மீண்டும் வழக்கமான பணிகள். விரல்களும் கைகளும் கண்களை போல எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விபத்தால் உணர்ந்தேன். எனது தொழிலுக்கும் அவைதான் மூலதனம்.

சாலைப் பயணம் செல்லும் முன் எனது அனுபவத்தை ஒரு படிப்பினையாக்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே. பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் மிகக் கவனமாகவே செல்லுங்கள். நமக்கோ, நம்மாலோ ஆபத்து நேரிடாமல் கவனம் காப்போம்.

சிறிய சாலை விபத்துகள் கூட, பெரிய அளவில் உடல், மன வருத்தங்களை தரும், நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும். விரலின் வீரியத்தால் விளைந்த  முன்று வார வேதனை கூறுகிறது, 

"போக்குவரத்து விதிகள் என்பது சட்டமல்ல. வாழ்வியல் வழிமுறைகளின் அங்கம்".

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 25 June 2019

ஜனநாயகத்தின் கருப்பு தினம்

45 ஆண்டுகளுக்கு முன்.... 

இதே நாளில்... 

1975 ஜூன் 25... 

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம். 

அன்றைய தினம் தான் ரேபரேலி தொகுதி எம்பியாக தேர்வான தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவருடைய ஆணையை ஏற்று எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால், 1975 மிசா நிலைமை முற்றிலும் வேறானது. கொடுமைகள் நிறைந்தது.

சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்க தேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு சாதாரன மனிதன் தண்டனை தருவதா...? என்ற மனோபாவத்தில் எழுந்த எண்ணம்...! 

இந்திராவின் எமர்ஜென்சி ஐடியாவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்க முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே மற்றும் இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இந்திராவுக்கு எதிராக தேர்தல் வழக்கு போட்டவர் உட்பட... அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர். 

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி. 

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது. மாநில அளவிலும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அதற்கு இணையான கொடுமைகளும் அரங்கேறின. இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்களும் சிறையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. 

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் கூட எமர்ஜென்சியால் மனம் நொந்து இருந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்றாவது  எமர்ஜென்சி முடிவுக்கு வரும் (1977 ஜனவரி வரை எமர்ஜென்சி இருந்தது) என எதிர்பார்த்து இருந்த காமராஜரின் காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது வரலாறு. 

எந்த பதவியிலும் இல்லாத இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை காலத்தில் அதிகார மையமாக இருந்தார் என்றால்  நிலைமையை யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. 



பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன. 



1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (இது சர்வதேச நாடுகளின் கணக்கு) கைது செய்யப்பட்டனர். டெல்லி ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. 



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 45 ஆண்டுகளாகி விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கசப்பான வரலாறு.

- #நெல்லை_ரவீந்திரன்

Monday, 24 June 2019

புகைப்படமாக மாறிப்போன கழுதை

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதையை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? 

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். 

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக  அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர். அதற்காக வீடுகளிலேயே கழுதைகளை வளர்த்து வந்தனர்.  

ஊர் முழுவதும் வீடுகளில் அழுக்கு துணியை எடுத்து வந்து வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். இந்த வெள்ளாவி வைப்பது தனி வேலை. வட்டமாக திறந்த வெளி அடுப்பு ஒன்று வீட்டு முன் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மீது அழுக்கு துணியை ஈரமாக்கி வேக வைப்பதுதான் வெள்ளாவி.

அதிலேயே விடாப்பிடி அழுக்கெல்லாம் லேசாக உதிர தொடங்கியதும் கழுதை மேல் பொட்டலத்தை ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் குளம், ஊருணியில் துவைத்து அங்கேயே காய வைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். 



இப்பல்லாம் குளமும் இல்லை ஊருணியும் இல்லை. அதனால கழுதைகளும் இல்லை. ஊரில் திருவிழா என்றால் பந்தலில் கலர் துணி அலங்காரத்துக்கு இப்பிடி துவைத்த சேலைகளைத்தான் பயன் படுத்துவார்கள். கோயிலில் தன்னோட சேலையை பார்த்து அதிர்ச்சியாகும் பெண்கள் பலரும் மறுநாள், அந்த சலவை தொழிலாளிக்கு தனியாக கொடை குடுப்பது தனிக் கதை. இப்பல்லாம் பந்தல் அலங்காரததுக்கு தனியாகவே துணி தயாராகிறது.

பண்டிகை, கோயில் கொடைவிழா மாதிரி விசேஷ தினங்கள் தான் கழுதைங்களுக்கு விடுமுறை நாட்கள். எங்கள் ஊரில் வைத்தியலிங்க சாமி கோயிலில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்தைப்பகுதியில் கூடி நிற்கும்.

அதை சீண்டிப் பார்ப்பதுதான் திருவிழா ஜாலி. கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும். நாங்களும் துரத்திச் செல்வோம்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் கம்ப்யூட்டர் கேமில் தொலைந்து விட்டார்கள். டெம்பிள் ஃபெஸ்டிவலில் ஓடிய சிறுவர்கள் இப்போது இல்லை. டெம்பிள் ரன் சிறுவர்கள் தான். 

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.

அது மாதிரியே... இப்பல்லாம் 'கழுத கெட்டா குட்டிச் சுவர்' கிடையாது... 'முகநூல் சுவருதான்'... 😂😂

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 10 June 2019

காற்றில் கரைந்த கிரேஸி..

டிவி சீரியல்கள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் 'கிரேஸி டைம்ஸ்', 'விடாது சிரிப்பு' மாதிரியான தொடர்கள் தான் ஃபேவரைட். இரவு சாப்பாடு முடிந்ததும் ரிலாக்ஸ் அதுதான். அப்படித்தான் கிரேஸி மீது கிரேஸ் ஆனேன். அப்புறம் நம்ம ஃபேவரைட் ஹீரோவின் ஆஸ்தான எழுத்தாளர் என தெரிந்ததும் கூடுதல் பற்று. சென்னை வந்த புதிதில் அவ்வப்போது மேடை நாடகங்களும் பார்ப்பதுண்டு.

.



நகைச்சுவை நடிப்பு என்றால் வடிவேலுவுக்கு மாற்றாக யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல, நகைச்சுவை ஸ்கிரிப்ட் என்றால் கிரேஸி மட்டும் தான். சதிலீலாவதி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, வசூல்ராஜா மாதிரி படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. காரணம், இந்த விகடானந்தா தான்.


சேது ராமன் கிட்ட ரகசியமா..? 

ஓ நர்சோட பர்ஸா...?

மார்கபந்து முதல் சந்து...

மனமிருந்தா மார்க பந்து...

நீயும் எம்பி எம்பி பிஎஸ் படி...

ராமண்ணா... ஆங்.. அவரு பழைய டைரக்டரு...

முன்னாடி... பின்னாடி... 

என் பிரதர் கோ பரதன்...

எச்சக்கல சிங்கம்... எச்சக்கல புலி... இது மாதிரி... 

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளோவா நகைச்சுவை நீரோடை வழிந்தோடுவதும் டைமிங் காமெடியும் சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் கிரேஸி பெருங்கடலின் சில சொட்டுகள் தான். 

திரையுலக பயணம் ஒரு பக்கம் இருந்தாலும் 6500 நாடக அரங்கேற்றம். அதிலும் சாக்லேட் கிருஷ்ணா மட்டும் 500 முறை. தம்பி பாலாஜியோடு சேர்ந்து மாது, சீனு, மைதிலி, ஜானகி கேரக்டர்களோடு கிரேஸியின் அதகளம்.. தனி ரகம். ஜானகி, மைதிலி கேரக்டர் பெயர்களுக்கு தனது ஆசிரியை நினைவாக சூட்டிய பெயர் என அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

இதுபோல,  வெண்பா இலக்கண வரம்புக்குள் நான்கு வரி வெண்பா எழுதுவதிலும் வல்லவர் அவர். கூடவே கார்ட்டூன் வரைவதிலும் கில்லாடி. நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கம் வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவை எழுத்தாளர், வெண்பா கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என ஒரு மெக்கானிகல் என்ஜினீயருக்குள் ஏராளமான திறமைகளை நிரப்பி அனுப்பிய கடவுள், சாக்லேட் கிருஷ்ணனை திரும்பவும் அழைத்துக் கொண்டார். 

திரை, நாடக எழுத்தாளர், கவிஞர் என யாராவது மறைந்தால் அவரது துக்ககரமான வசனங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவரது வசனத்தில் ஒன்று கூட தேடிப் பார்த்தாலும் தென்படவே இல்லை. பாசக் கயிற்றுடன் வந்த எமன் கூட, நிச்சயமாக இவரது வசனங்களை கேட்டு, சிரித்தபடியேதான் உயிரை எடுத்துச் சென்றிருப்பான். எமனுக்கும் கூட அந்த சமயத்தில் ஏதாவது ஒரு டைமிங் காமெடி சொல்லி விட்டுத்தான் பயணித்திருப்பார், கிரேஸி...

ஜானகி, மைதிலி, மாது, சீனு இவர்களுடன் நாங்களும் மிஸ் யூ கிரேஸி...

-நெல்லை ரவீந்திரன்