Tuesday 1 December 2015

வழக்கங்களை கைவிட்டு முன்னேறிய சமூகத்தின் கதை




மாற்றம்... முன்னேற்றம்... 


பாரம்பரியத்தை மாற்றிக் கொண்ட ஒரு சமூகத்தின் கதை


 1960ம் ஆண்டுகளில் சாதி ரீதியாக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ‘சம்ஸ்கரா’. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய இந்த நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு இதே பெயரில் கன்னட மொழியில் 1970ம் ஆண்டு திரைப்படமும் வெளியானது. பிராமண சமுதாய வாழ்வியல் நெறிமுறைகளை மீறி வாழும் நரனப்பா என்ற பிராமண சமுதாயத்தில் பிறந்த ஒரு மனிதன் இறந்ததும் இறுதிச் சடங்கில் எழும் சர்ச்சையும் அதைத் தொடர்ந்து எழும்பும், யார் உண்மையான பிராமணன்? என்ற கேள்வியும் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தருணம் அது





தமிழ் பிராமண்ஸ் - ஒரு மத்திய நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கம்என்ற புத்தகம் அதற்கு பதிலளிக்கிறது.  கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறிய தமிழ் பிராமண சமூகத்தினர் பற்றி சி.ஜே. புல்லர் மற்றும் ஹரிபிரியா நரசிம்மன் ஆகியோர் எழுதிய  இந்த புத்தகத்தை ‘தி யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் பிராமண சமுதாயத்தின் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கட்டமைப்பு தொடங்கி சுதந்திரத்துக்கு பிறகு அதன் மாற்றம் வரை ஒரு நூற்றாண்டு கால அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியையும் சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை அந்த சமூகத்தினர் மாற்றிக் கொண்ட விதத்தையும் புத்தகம் விவரிக்கிறது.

நவீன யுகத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றத்தை சுவீகரிப்பதோடு தனது பாரம்பரிய முறையையும் கைவிடாமல் இருப்பது என்ற இறுக்கமான சூழலுடன் அந்த சமூகம் பயணிக்கிறது. அதே வேளையில், தமிழகத்தில் மொத்தம் 10.4 லட்சம் பேரை மட்டும் மக்கள் தொகையாக கொண்ட அந்த சமூகம், தனது அடையாளத்தை மட்டுமன்றி கலாச்சாரம், அரசியல், சமூக அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிராமணர் என்றால் கோயில்களில் பூசை செய்யும் சமூகம் என்றே பொதுவாக கருதுகின்றனர். ஆனால், அந்த சமூகத்தின் மிகவும் அடித்தட்டு மக்களில் சிலரே அந்த தொழிலை செய்கின்றனர். நிலச்சுவான்தாரர்களாகத்தான் பலரும் இருந்தனர். ஏராளமான நிலங்களை அவர்கள் வைத்திருந்தாலும் உடல் வளைத்து வயல்களில் வேலை செய்தது இல்லை. கைகளில் அழுக்கு படிவதை அவர்கள் விரும்பவில்லை. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் ஆடையில் அழுக்குப்படாத வேலைகளிலேயே அவர்களின் ஆர்வம் இருந்தது. அதனால் தான், 19ம் நூற்றாண்டின் மத்தியில் கிராம பகுதிகளில் இருந்து நகர பகுதிகளை நோக்கி அவர்களின் இடப்பெயர்ச்சி தொடங்கியது.

சாதி ரீதியிலான தங்களின் ஆண்டாண்டு கால மேலாதிக்க உரிமையை அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே, சட்டம், கல்வி மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வேரூன்ற தொடங்கும் வரை இந்த போக்கே நீடித்தது. பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியதுமே, தமிழ் பிராமணர்கள் உடனடியாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.

தங்கள் சமூகத்தின் பாரம்பரிய ஆடையான பஞ்சகட்சத்தை ஆண்கள் துறந்து நீள கால்சட்டையான பேண்ட் அணிய தொடங்கினர். பூணூலை மறைக்கும் விதத்தில் சட்டையையும் அணிந்தனர். பெண்களும் கூட 16 முழ மடிசார் புடவையை துறந்து 8 முழ புடவை அணியத் தொடங்கினர். இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சல்வார் கமீஸ் அணிகின்றனர்.  நகரங்களுக்கு குடியேறிய பின்னர் தாராளமயமாக்கலுக்கு பிறகு நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கை முறையையும், நவநாகரீகத்தையும் தமிழ் பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

வேலையில் கூட பணிப் பாதுகாப்பு, அதிகபட்ச மரியாதையுடன் கூடிய அதிகாரிகள் பணி போன்றவற்றை நோக்கிய பயணத்தை அந்த சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் விட்டு விட்டனர்.  அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, அரசியல் போன்றவை கலந்த பிறகு அதிக சம்பளம், விரைவில் பதவி உயர்வு போன்றவற்றை தரும் தனியார் வேலையின் மீது இளம் தலைமுறை பிராமணர்களின் பார்வை திரும்பி உள்ளது. அதுவும் .டி. துறையின் வளர்ச்சிக்கு பிறகு, அந்த போக்கு அதிகமாகி விட்டது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் தாக்கம் அதிகமாக தொடங்கியதும் பெரும்பாலானோர் வெளிநாட்டு படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலையில் ஆர்வமாகி விட்டனர்.  

வழக்கமான பாணியிலேயே செல்வதை தவிர்த்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களின் முயற்சிகளையும் திசை திருப்பி பிராமணர்கள் வெற்றி பெற்று வருவதை திரும்ப திரும்ப நூல் ஆசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதுபோல கல்வியறிவு பெற்ற மத்திய நடுத்தர குடும்பத்தில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதையும் கல்வியுடன் சேர்ந்து வயலின், கர்நாடக இசை, பரதம் என கலைகளுக்கு அவர்கள் இடமளிப்பதையும் புத்தகத்தில் சுட்டிக் காட்டி உள்ளனர்.

சமூதாயத்தின் மிகவும் சிறிய அளவிலான, அதே நேரத்தில் அதிகாரம் செலுத்திய ஒரு சமூதாயம் எவ்வாறு பாரம்பரியத்தில் இருந்து படிப்படியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்கும் மிக முக்கியமான புத்தகம், ‘தமிழ் பிராமண்ஸ்’. அடிக்கடி குறுக்கிடும் அரசியல், சமூக இயக்கங்களை எதிர்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் அந்த சமுதாயம் தங்கள் முன்னேற்றத்தை எப்படி தக்கவைத்துக் கொண்டு வருகிறது என்பதை விளக்குகிறது. தமிழ் பிராமணர்களின் பொருளாதார நிலைமை, சமூக அந்தஸ்து போன்றவற்றோடு தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் தொடர்வது எங்ஙனம்? என்பதையும் இந்த புத்தகம் விரிவாக கூறுகிறது.


பிராமணர்களை பற்றி எழுதும் பெரும்பாலான நூலாசிரியர்களின் புத்தகங்களில் இருந்து இந்த புத்தகம் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. தமிழ்நாட்டில் அரசியலும் சாதியும் இணைந்து இருப்பது மற்றும் பிராமணர்களுக்கு எதிரான சுயமரியாதை இயக்கம் போன்றவை பற்றியே பேசப்படும் சூழ்நிலையில், அந்த இயக்கத்தை மீறி, தங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டு தமிழ் பிராமணர்கள் எவ்வாறு வெற்றிகளை தொடருகின்றனர் என்பதை விளக்கமாகவே இந்த புத்தகம் கூறுகிறது.

நூலாசிரியர்களில் ஒருவரான ஹரிபிரியா நரசிம்மன், சென்னையில் மத்திய நடுத்தர வகுப்பு பெண்ணாக வளர்ந்த தனது சொந்த அனுபவத்தையே ஆதாரமாக கூறுகிறார். சில பிராமணர்கள், தங்கள் குடும்பத்தினர் அனுமதிக்காத போதிலும் வெளியில் அசைவ உணவு சாப்பிடுகின்றனர். ‘புனிதம்’ என்ற பெயரில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட சமூகத்தில் இது மிகப்பெரிய மாற்றம். இதுபோல, வீட்டில் முட்டை சாப்பிடாத போதிலும் வெளியில் முட்டை கலந்த கேக் சாப்பிடுகின்றனர். பாரம்பரிய ‘கொலு’ பண்டிகை கொண்டாட்டத்தில் இடம்பெறும் பொம்மைகள் மாற்றம் பெற்று விட்டன. மது அருந்துவதும் கூட சமூகத்தின் மாற்றங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் மிக கவனமாக எழுதியுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சமூகத்தினர் எப்படி தங்களுடைய பாரம்பரிய கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு தங்களின் சரியான இலக்கை எட்டுகின்றனர் என்பதை ‘தமிழ் பிராமண்ஸ்’ புத்தகம் நிச்சயமாக தெளிவு படுத்துகிறது என கருதலாம். தமிழ் பிராமணர்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டும் இந்த புத்தகத்தை படிக்கும்போது, கடந்த 1960களில் அதிர்வலைகளை எழுப்பிய ‘யார் உண்மையான பிராமணன்?’ என்ற கேள்வி வெகு சாதாரணமாகி விட்டது.


(தி இந்து / ஆங்கிலத்தில் 22.11.2015 அன்று வெளியானது)


 தமிழில் வை.ரவீந்திரன்.

No comments: