Monday 20 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -25

இந்தியாவின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கான முயற்சியும் இரண்டே ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தாலும், 40 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆதிக்கத்தின் முடிவுரை துவங்கி வைக்கப்பட்டது. பிரதமர் சந்திரசேகர் அரசு கவிழ்ந்து 1991ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் காஷ்மீர், பஞ்சாபில் 19 தொகுதிகள் தவிர்த்து நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவித்தார்கள். 

திமுக ஆட்சி கலைக்கப் பட்டதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தது. ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எம்ஜிஆரின் கூட்டணி பார்முலாப்படி, சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு, நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு என ஒதுக்கப்பட்டது. இதனால், 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் அதிமுக களமிறங்கியது. 

இதுதவிர, பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கின. அத்வானியின் ரத யாத்திரையை தொடர்ந்து ராமர் கோவிலை தேர்தல் கோஷத்தில் முன் வைத்தது பாஜக. 1980 தேர்தல் போலவே, காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்ற கோஷத்தை எழுப்பியது. 1991 மே 20ம் தேதியன்று 211 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. 

இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தமிழகத்தில் மே 21ம் தேதியன்று தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என உயிரிழந்தது, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரம் வெடித்தது. திமுகவுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடியது. வெளி மாநிலங்களில் தமிழர்களை விரோதமாக பார்க்க, மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.





ஒத்தி வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு ஜூன் மாதத்தில் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் 1991 ஜூன் மாதத்தில் தான் இரண்டு தேர்தல்களும் நடைபெற்றன. ராஜீவ் கொலையால் நாடே உறைந்திருந்ததால் வாக்குச் சாவடிக்கு வர மக்கள் அச்சப்பட்டனர். இதனால், அதுவரை இல்லாத அளவில் 53% வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக வெளியாகின.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

No comments: