Monday 24 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -59

தமிழ் சினிமாவில் இயக்குநர் டூ நடிகர்கள் பலர் உண்டு. ஆனால், இசையமைப்பாளர் டூ நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நாகர்கோவில் காரர். அடிப்படையில் சவுண்ட் என்ஜினீயர். அவருக்கு விஜய் என்ற பெயரை சூட்டியவர் இளைய தளபதி விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏசி.

2 கே சினிமாக்களில் இசையமைப்பாளராக  நுழைந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் ராப் பாடல்களுக்கு சொந்தக்காரர். 'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்', 'அங்காடி தெரு', 'உத்தம புத்திரன்', 'வேலாயுதம்' இப்படி பல படங்களில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம்.

"டைலமோ டைலமோ, டைல டைல டைலாமோ காலைலேக்கி ராத்திரி மேல் காதலே..."

"ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திச் சூடி..."

"அட்றா அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க.."

"மஸ்காரா போட்டு மயக்குறீயே..."

"என் உச்சி மண்டைல சுர்ருங்குது..."

"தப்பெல்லாம் தப்பே இல்லை..."

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..".

"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் வருமா..."

"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே..."

"கரிகாலன் கால போல கருத்திருக்கு குழலு...

"இடிச்ச பச்சரிசி புடிச்ச மா விளக்கு... "


இப்பிடியான வெரைட்டியான பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, பல பாடல்களை பாடியும் இருக்கிறார், குறிப்பா ராப் டைப் பாடல்கள்

 "ஆத்திச்சூடி.." பாடலில் அவரே ஆடிப்பாடி நடித்திருப்பார். அவர் முழுமையான நடிகராக மாறியது, 'நான்' படத்தில் தான்.  யாரையும் சோதனை செய்து பரீட்சித்து பார்க்காமல் அவரே அந்த படத்தை சொந்தமாக தயாரித்தார்.



தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் இன்றைய நடிகர்களாக இரண்டு பேரை சொல்லலாம். ஒருவர் விஜய் ஆண்டனி. அடுத்தவர் அருள்நிதி.

கதையைப் போலவே தன்னுடைய படத்தின் டைட்டில்களிலும் வித்தியாசம் காட்டி, எதிர்மறையான பெயர்களாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாதவர், விஜய் ஆண்டனி.

விஜயகாந்த் நடித்த 'தெருப்பாடகன்' பட டைட்டிலையே 'புதுப்பாடகன்' என மாற்றிய அளவுக்கு சென்டிமெண்டில் சிக்கி தவிக்கும் தமிழ் திரையுலகில், இவரது பட டைட்டில்களைப் பாருங்கள். 'எமன்', 'சைத்தான்', 'பிச்சைக்காரன்', 'கொலை', 'கொலைகாரன்'... 



விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' படம், சாமான்யன் ஒருவன் முதல்வர் ரேஞ்சுக்கு உயருவது போன்ற கதை. ஒரு மாஸ் ஹீரோ அதில்  நடித்திருந்தால் அரசியலுக்கு அச்சாரம் போடும் படமாக இருந்திருக்கும்.

'திமிரு பிடிச்சவன்' - மாநரில் போதை பொருள் கடத்தல் தாதாவை ஒழிக்கும் காவல் அதிகாரியின் கதை.

'காளி' - டிஎன்ஏ மூலமாக தனது தந்தையை கண்டு பிடிக்கும் ஒரு டாக்டரின் கதை.

அவரது படம் எல்லாமே ஒன் லைனில் மிக எளிமையாக இருந்தாலும் திரைக்கதையும் படத்தை கொண்டு செல்லும் விதமும் அருமையாக இருக்கும். விஜய் ஆண்டனி படம் என்றால் போரடிக்காமல் போகும் என்பது உறுதி.



பெரும்பாலும்  திரில்லர் கலந்த கிரைம் ஸ்டோரியாகத்தான் அவரது படம் இருக்கும். அதே நேரத்தில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனது படங்களில் மிகத் தெளிவாக பதிவு செய்பவர், விஜய் ஆண்டனி.

'பிச்சைக்காரன்' படம் அவரது திரை வாழ்வின் அச்சீவ்மெண்ட். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தை அவரது பிச்சைக்காரன் படத்தில் முன்கூட்டியே பேசியதெல்லாம் வேற லெவல்.

கிரைம் பிளஸ் திரில்லரை தாண்டி, 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் எம்.எஸ் பாஸ்கர்,  மனோபாலா ஜெகன் ஆகியோருடன் காமெடியில் கலக்கி இருப்பார். 

'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில், மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கி மறு பிறவி எடுத்து வந்துள்ள விஜய் ஆண்டனி அவரது பாணியிலேயே மேலும் பல படங்களை கொடுக்க வாழ்த்துகள்.

 கூடவே, இசையமைப்பாளராக  துள்ளல் பாடல்களும் நிறைய தர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

ஜூலை 24, அவரது பிறந்த தினம்.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: