Saturday 15 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -58

"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி...", "கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ஆனா கை விட்டிருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்..." - பாட்ஷா

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும தப்பு இல்ல...", "அவன நிறுத்த சொல்லு நின் நிறுத்துறேன்...", "தாத்தா... நீங்க நல்லவரா? கெட்டவரா? தெரியலியேப்பா..." -நாயகன்

"கோபமோ, ஆத்திரமோ, பத்து வரைக்கும் எண்ணு. அப்புறமா முடிவு பண்ணு..." -காதலன்

"நான் தனி ஆள் இல்ல...", "இது ஒரு கருப்பு சரித்திரம்..." -சிட்டிசன்

"பயப்படுறீயா குமாரு..." -புதுப்பேட்டை

இப்படி தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற வசனங்களை வடித்தவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

தமிழ் இலக்கிய உலகின் பொக்கிஷம். சுமார் 200 நாவல்கள், 100 சிறுகதைகள் வாரி வழங்கிய அவரது

உடையார், கங்கை கொண்ட சோழன் என தஞ்சை பெருவுடையார் கோயிலையும் ராஜராஜ சோழனையும் அவனது மைந்தன் ராஜேந்திர சோழனையும் பேசிய நாவல்களாகட்டும்...

இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அம்மையப்பன் தெரு, கடரோர குருவிகள், கல்யாண முருங்கை, மீட்டாத வீணை என சமூகம் பற்றி பேசும் புத்தகங்களாகட்டும்...

மகாபாரதம், பிருந்தாவனம் (ராகவேந்திரர்), பேய் கரும்பு (பட்டினத்தார்), காதல் பெருமான் (அருணகிரி நாதர்) சிம்மாசனம் (குமரகுருபர்) என பக்தி சுவை ஊட்டும் வரிசைகளாகட்டும்...

அவரது புத்தகங்களின் ஒவ்வொரு வரிகளுமே வாழ்வியலுக்கான அறிவுரை கூறுபவை. அதனாலேயே, அவர் எழுத்துச் சித்தரானார். 

'விசிறி சாமியார்' எனப்படும் யோகி ராம்சுரத் குமாரின் சீடரான இவரும் தவ யோகியே.

ஆரம்ப கால ஆனந்த விகடன், குமுதம், கல்கி என வார பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகளும் கதைகளும் நாவல்களும் பெரும்பாலும் பெண்மையை முன்னிலைப் படுத்துபவையே.

ஒரு மனிதரால் அதிகபட்சம் பத்து பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக எழுத முடியும். அதன் பிறகு வாசகர்களை கவர முடியாது அல்லது வேறு வீச்சுக்கு மாறி விடும். ஆனால், 40 ஆண்டுக்கு மேல் தொய்வே இல்லாமல் எழுதியவர். 

1970களில் வெளியான 'மவுனமே காதலாக...' அவரது முதல் எழுத்து படைப்பு. அவரே இன்றைய டிரெண்டுக்கு புதுப்பேட்டை திரைப்படத்துக்கும் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்...!

அவரது எழுத்துகளை பற்றி அறியாதவர்களுக்கு அவரை வேறு வகையில் அறிமுகம் செய்ய முடியும்.

ஜனரஞ்சக துறையான சினிமாவிலும் கால் பதித்து சுமார் 25 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் பாலகுமாரன். 'குணா', 'நாயகன்', 'பாட்ஷா', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'சிட்டிசன்', 'முகவரி', 'புதுப்பேட்டை', 'மன்மதன்'.... இப்படி அந்த படங்களின் வரிசை மிக நீளம்.

கே.பாலசந்தரிடம் 'புன்னகை மன்னன்', 'சிந்து பைரவி' படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்துக்கு இவர்தான் இயக்குநர்...!



சித்தர்களுக்கு ஒருபோதும் இறப்பு இல்லை...


#நெல்லை_ரவீந்திரன்

No comments: