Tuesday 20 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 23

புதுச்சேரி செய்தித் துறையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் செய்தியாளர்களுக்கான அங்கீகார (அக்ரிடேசன்) அட்டை வழங்குவது வழக்கம். அதற்கு, செய்தித் துறை இயக்குனர் தலைமையில் பத்திரிகையாளர்கள் 4 பேர் அடங்கிய குழு உண்டு. அதில் நானும் உறுப்பினராக இருந்தேன். அந்த குழுவில் புதுச்சேரி தினமலர் நிர்வாகி சுரேஷ் சாரும் (அந்துமணி ரமேஷ் சாரின் சகோதரர்) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் இந்த அளவுக்கு எனக்கு சிறப்பான இடம் கிடைப்பதற்கும், 5 ஆண்டு இனிய அனுபவத்துக்கும் முழு முதல் காரணகர்த்தா ஒருவர் உண்டு. எனக்கு எல்லாமுமாக இருந்த அந்த முதன்மையானவரை மறக்க முடியாது. அவர் தான், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர். என்னுடைய எழுத்துகள் மற்றும் அனைத்து முயற்சிக்கும் ஆதரவாக இருந்தவர் அவரே.

பத்திரிகை உலகிலும் சரி மீடியாவிலும் சரி திறமையானவர்களை கண்டறிந்து பயன்படுத்துவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் சன் குழுமம் முதன்மையானது என்பது எனது கருத்து. பெரும்பாலான மீடியாக்களில் மீண்டும் மீண்டும் ஒருவரிடமே வாய்ப்புகள் குவியும். சன் குழுமம் அப்படி அல்ல. அந்த வகையில் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர் எனக்கு அளித்த வாய்ப்பு மறக்க முடியாதது.

அவரை எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் சந்தித்தபோது, எனக்கு மூன்று வாய்ப்புகள் தந்தார். புதுச்சேரி, பெங்களூர், வேலுர், மூன்று நகரங்களில் உள்ள தினகரன் பதிப்புகளில் ஏதாவது ஒரு பதிப்புக்கு செய்தி ஆசிரியராக செல்கிறாயா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது. சென்னையிலேயே 15 ஆண்டுகள் இருந்த எனக்கு வேறு ஊருக்கு செல்ல சற்று தயக்கமாக இருந்தது.

ஆனால், பத்திரிகை பணியில் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். பெங்களூர் நகரின் காஸ்ட் ஆப் லிவிங், வேலூரின் வெயில் ஆகியவற்றை கருதி, சற்று யோசனையுடனேயே புதுச்சேரிக்கு செல்வதாக ஆர்.எம்.ஆர். சாரிடம் கூறினேன்.

அவருடனான அறிமுகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, தலைமை நிருபர் சுரேஷ் மற்றும் எனது நண்பர் குமரன். சென்னையில் தினகரன் தலைமை செய்தி ஆசிரியர் கதிர் சார், அசோசியேட் ஆசிரியர் ராமன் சார் மற்றும் ரவீந்திரன் சார் உள்ளிட்ட செய்தி ஆசிரியர்கள் அளித்த பயிற்சிக்கு பிறகு, அமைந்தது எனது புதுச்சேரி பயணம்.

(அனுபவம் இனிக்கும்)

No comments: