Tuesday 20 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 24

புதுச்சேரி தினகரன் பதிப்பில் எனது சுதந்திரமான செயல்களுக்கு முழு ஆதரவை எங்கள் நிர்வாக இயக்குர் ஆர்.எம்.ஆர் சார் அளித்தார். பத்திரிகை சர்குலேசனை அதிகரிக்க புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். மற்ற பத்திரிகைகளில் சென்னை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அந்த முயற்சி தொடங்கும். தினகரனை பொறுத்தவரை, அந்தந்த பதிப்பு ஆசிரியர்களும் அதற்கான முயற்சிகளை செய்யலாம். அதன்படி, புதுச்சேரி பதிப்பில் புதுப்புது பகுதிகளை அறிமுகம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.

திங்கள் தோறும் மாணவர்களின் ஓவியங்கள், கவிதை கட்டுரைகள் அடங்கிய மாணவர் களம், செவ்வாய் தோறும் விவசாய செய்திகள் அடங்கிய வேளாண் பூங்கா, புதன் கிழமை தோறும் புதுவையின் பழமை கட்டுரைத் தொடர், வியாழன் தோறும் வேலைவாய்ப்பு செய்தி மற்றும் குழந்தைகளின் படங்களுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து என தொடங்கவும் அவர் உறுதுணையாக இருந்தார்.

சில மாதங்களில் ‘வெல்கம் வியாழன்’ என்ற தலைப்பில் 4 பக்க இணைப்பு இதழும் கொண்டு வந்தேன். இதுபோன்ற 4 பக்க இணைப்பிதழ் என்பது சென்னையில் இருந்து மட்டுமே வெளியாகும். பத்திரிகைகளில் உள்ளவர்களுக்கு இது பற்றி தெரியும். ஆனால், தனியாக ஒரு பதிப்பில் இருந்து இதுபோன்ற இணைப்பை கொண்டு வருவதற்கு முழுமையாக சுதந்திரம் அளித்ததோடு, அதை முறையாக கண்காணித்து ஆலோசனைகளையும் ஆர்.எம்.ஆர். சார் வழங்கியதை மறக்க முடியாது.

மத்திய அரசின் செய்தி துறை சார்பாக, பத்திரிகையாளர்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதுபோன்ற வாய்ப்புகளை பத்திரிகை நிர்வாகங்கள் வழங்கும். அதுபோல ராஜஸ்தான் மாநிலத்துக்கு பத்திரிகையாளர்களை 2012ல் மத்திய அரசின் தகவல் தொடர்பு அலுவலகம் அழைத்துச் சென்றது. அப்போது, புதுச்சேரியில் இருந்த எனக்கு அந்த வாய்ப்பை தந்தவர், ஆர்.எம்.ஆர். சார்.

சென்னையில் இருந்து மும்பை வழியாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் என ஒரு வார காலம் அந்த சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பயணத்தின் போது, தார் பாலைவனம், பொக்ரான், பாகிஸ்தான் எல்லை, ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ராணுவ ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஒரு நாள் தங்கி இருந்து சுற்றி பார்க்கும் வாய்ப்பு என நினைவில் இருந்து நீங்காத அனுபவங்களும் வாய்த்தன.

பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்து வருகிற பிப்ரவரி 1ஆம் தேதியுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1997ஆம் ஆண்டில் சென்னை கதிரவன் நாளிதழில் பணிக்கு சேர்த்துக் கொண்ட பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த எனது மரியாதைக்குரிய பாசமிகு மாமா ஆலடி அருணா இருவரும் எனது வாழ்வில் முக்கியமானவர்கள்.
வாழ்க்கை என்பதே அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் அடி மனதில் கற்கண்டாய் இனித்து கிடக்கும் அனுபவம் ஏதேனும் ஒன்று இருக்கும். என்னை பொருத்தவரை புதுச்சேரி வாழ்க்கை அதுபோன்றதே. பிரதிபலனாக, அங்கு உள்ளவர்களே அறியாத சில வரலாற்று தகவல்களை, எளிமையான அறிமுகம் செய்து வைத்த மன நிறைவு எனக்குள் இருக்கிறது. அங்குள்ளவர்களே, இதை என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
மாற்றம் (என்ற வார்த்தை) ஒன்றே மாறாதது. மற்ற அனைத்துமே மாற்றத்துக்கு உட்பட்டவையே. எனது, பத்திரிகை பணியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்த புதுச்சேரி அனுபவம் விரிவானது. எனினும், இந்த அளவில் அதை நிறைவு செய்து விட்டு, மற்றொரு சப்ஜெக்டுடன் சந்திக்கிறேன், நண்பர்களே…

நன்றி.

No comments: