Saturday 10 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 21

புதுச்சேரி என்றதும் பலருக்கும் ஒரே மாதிரியான பிம்பம் மட்டுமே மனதில் பதிவாகி இருக்கும். வார இறுதி நாட்களில் இங்கு வரும் கூட்டமே அதற்கு சாட்சி. ஆனால், புதுச்சேரியில் இருந்து 100 கி.மீ தொலைவுக்குள் இருப்பவர்கள் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அளவுக்கு, கோவில்கள் நிறைந்த ஊர் புதுச்சேரி. மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் போன்ற பழமையான கோவில்கள் இருக்கின்றன.
இது தவிர, மிக உயரமான பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்ச நேயர், 48 அடி உயர மொரட்டாண்டி சனீஸ்வரர், மிக பிரமாண்டமான பாதாள பிரத்தியங்கிரா காளி கோவில், மயிலம் முருகன், திருவக்கரை வக்கிரகாளி அம்மன் என முக்கியமான பல கோவில்கள் உள்ளன.
பிரெஞ்சியர் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் பழமையான தேவாலயங்களுக்கும் குறைவில்லை. கடற்கரையோரம் ஐ.ஜி அலுவலகம் அருகில் இருக்கும் கப்ஸ் கோவில் முக்கியமானது. கடலோர உப்புக்காற்றால் பாதிக்கப்படாத வகையில் சுண்ணாம்புக் கல், முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை கொண்டு கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தது, அந்த தேவாலயம். மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி மாதா தேவாலயமும் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயம் தான்,



கப்ஸ் கோவில் அருகே உள்ள சிறிய கல்லறை தோட்டத்தில், பிரெஞ்சு தளபதி புஸ்ஸி கல்லறை இருக்கிறது. ஆங்கிலேயருக்கு ராபர்ட் கிளைவ் போல, பிரஞ்சியருக்கு வரப்பிரசாதமாக வந்தமைந்த டூப்ளெக்ஸின் வலது கரம் தான் இந்த புஸ்ஸி. ஆற்காடு, செஞ்சி போன்ற இடங்களை பிரெஞ்சு ஆதிக்கத்தில் கொண்டு வந்ததில் புஸ்ஸியின் பங்கு குறிப்பிடத்தக்கது.



இதுபோல, உப்பளம் பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டம், சுமார் 2 நூற்றாண்டு பழமையானது. நீண்ட தூண் போன்ற வடிவிலான சமாதி, பூ வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கண்கவரும் சமாதி என விதம் விதமான பிரெஞ்சியர் சமாதிகளை இங்கு பார்க்கலாம். புதுச்சேரியின் முதல் முதலமைச்சரான எதுவார் குபேர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறைகளும் இங்குதான் இருக்கின்றன. நவம்பர் மாதத்தில் கல்லறை தினத்தன்று ஏராளமான பிரெஞ்சியர்கள் இங்கு வந்து, தங்கள் முன்னோருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
(அனுபவம் இனிக்கும்)

No comments: