Thursday, 9 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -34

தமிழ் சினிமாவில் இவரோட ஸ்டைலே தனி. பெயரை சொன்னாலே கண்ணை சிமிட்டி புருவத்தை அசைத்தபடி அழுத்தமாக பேசும் டயலாக் டெலிவரிதான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வரும்.

"ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்"

"ஏண்டாாா எடுத்தேஏஏ எதுக்குடா எடுத்தேஏஏ"

இது மாதிரியான வசனங்களும் கூடவே நினைவிலாடுவதை தவிர்க்க முடியாது. அவர்தான் அசோகன்.



நம்பியார், எஸ்.வி.ரங்காராவ் இருவரும் கலந்த ஒரு கேரக்டரில் பொருந்துவது அசோகன்.

வில்லன்களில் நம்பியார் ஒரு ரகம் என்றால் இவர் வேறு ரகம். நம்பியார் படம் என்றால் நாலைந்து சண்டையாவது இருக்கும். ஆனால், இவரோ பெரும்பாலும் நேரடியாக மோதாத புத்திசாலி வில்லன். கிளைமாக்சில்தான் மூன்று அடி அடித்துவிட்டு அதன் பிறகு அடி வாங்குவார். நம்பியாருடன் சேர்ந்து இவரும் வில்லனாக மிரட்டினால் அந்த படம் பிளாக் பஸ்டருக்கு உத்தரவாதம். எம்ஜிஆரின் 'என் அண்ணன்' அதற்கு உதாரணம்.



வில்லன் தவிர்த்து அப்பா, மாமனார், பண்ணையார், ஊர் பெரியவர் என கேரக்டர் ரோல்களிலும் எஸ்.வி.ரங்காராவ் போலவே கலக்கியவர். நல்ல குணமான ஊர் பெரிய மனிதர், ஜமீன்தார் வேடங்களுக்கு ரங்காராவ் என்றால் அதே கேரக்டர்களின் கொடூரமான பிம்பத்தில் அதகளப்படுத்தியவர் அசோகன். இதற்கு 'ரிக்சாக்காரன்' படத்தை உதாரணம் காட்டலாம்

அசோகனின் திரையுலக வாழ்க்கை மொத்தம் 30 ஆண்டுகள். தனது  மொத்த வாழ்வையும் திரையிலேயே கழித்தவர். திருச்சியின் மிக பழமை வாய்ந்த பிரபலமான  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றதும் சினிமா ஆசையில் சென்னை வந்த அந்தோணியை அசோகன் ஆக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டிஆர் ராமண்ணா. 1953ல் வெளியான அன்றைய ஹிட் படமான கேபி சுந்தராம்பாள் நடித்த 'அவ்வையார்' தான் அறிமுகம். முதல் வேடமே மன்னன் வேடம் தான்.



அன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள், வறுமை போன்ற பல்வேறு சூழலால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் நாடகங்களில் வேஷம் கட்டிய கையோடு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்திருந்தனர். அதனால் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே சினிமாவில் நிறைந்திருந்தனர். அப்படி பார்த்தால் அசோகன்தான் தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்றே கூறலாம். டைட்டில் கார்டிலேயே அசோகன் பி.ஏ என்று தான் போடுவார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்னதாக தலை காட்டிய அசோகனுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால் 1960 தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டு காலம் அவர் காட்டில் அடைமழை பெய்தது. ஆண்டெின்றுக்கு தலா பத்து படங்களுக்கு மேல் எல்லாம் நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 80  படங்கள். (இது எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகம்)



எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் அசோகன்தான் மெயின் வில்லன். அதே நேரத்தில் 'அன்பே வா' படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் முறைப் பையனாக விமான பைலட் கேரக்டரில் மிக அமைதியான ஜென்டில்மேனாகவும் அசோகன் கலக்கி இருப்பார்.



சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காத மேதை, பாதகாணிக்கை, களத்தூர் கண்ணம்மா, கர்ணன் இப்படி அசோகனின் தரமான நடிப்பை சொல்லும் படங்கள் ஏராளம்.

கூடவே, பாடியும் இருக்கிறார் அசோகன். ஜெய்சங்கரின் அறிமுக படமான 'இரவும் பகலும்' படத்தில் "இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். அத இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துடடான்...' என்ற பாடலை பாடியவர் சாட்சாத் அசோகனே தான்.

வில்லன், குணசித்திரம் என கலக்கியதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  இது சத்தியம், தெய்வ திருமகள், காட்டு ராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன்... இவை அசோகன் ஹீரோவாக நடித்த படங்களில் சில. 



நாயகன் என்றால் டூயட் பாடல்கள் இல்லாமலா..?

"மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது...", 

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்..." 

"காட்டு ராணி, உன் முகத்தை காட்டு ராணி..." 

இவை அவரது டூயட்டுகளில் சில.

'பாத காணிக்கை' படத்தில் ஊன்று கோலுடன் தோன்றி நடித்த "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..." பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்களில் ஒன்று.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில திரைப்படங்களையும் அசோகன் தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'நேற்று இன்று நாளை' தயாரிப்பாளர் இவர்தான்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலகட்டத்துக்கு பின், 1980களில் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு', 'தர்மயுத்தம்',  'தீ', 'பில்லா', 'முரட்டுக்காளை', 'சவால்', 'சங்கர்லால்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களில் சிவகுமார், ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் அசோகன் நடித்திருக்கிறார். 

'ஆனந்த ஜோதி', 'களத்தூர் கண்ணம்மா' என குழந்தை கமலுடன் நடித்த அசோகன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் ஹீரோ கமலுடனும் நடித்திருக்கிறார்.  "ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்..."னு தனக்கே உரித்தான குரலில் பூதம் வேடத்தில் கமலுடன் கலக்கி இருப்பார்.



1950களில் துவங்கி 1980கள் வரை நீடித்த அசோகனின் திரைப் பயணம் அவரது 51வயதிலேயே முடிந்து போனது. 50 வயதிலேயே மறைந்த  டி.எஸ்.பாலையா, ரங்காராவ், என்எஸ்கே போன்ற தமிழ் திரையுலக பிரபலங்களின் பட்டியலில் அசோகனும் இடம் பிடித்து விட்டார்.

பவளங்கள் ஜொலிக்கும்

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 5 June 2022

பாடும் நிலா பாலு



 தமிழை சுமந்தபடி தவழும் தென்றல் காற்றை கற்கண்டாக மாற்றிய ரசவாதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவுக்கு முதன் முதலில் குரல் தந்து அரை நூற்றாண்டாக குரலில் மாயவித்தை காட்டிய மந்திரவாதி. இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் நிறைந்திருக்கிறார், எஸ்பிபி.

நான் அறிந்தவரை எவ்வளவு சிக்கலான பாடலாக இருந்தாலும் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடியது அவர் ஒருவர்தான். எவ்வளவு உச்சஸ்தாயி போனாலும் சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. எப்படி பாடினாலும் கூடவே சிரிப்போ, சோகமோ, எள்ளலோ அசால்ட்டாக நொடியில் கொண்டு வந்து வரிகளையும் பாடும் திறமைசாலி. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதை குறிப்பிடலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும்.  'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கான 'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இந்திரன் சந்திரன் படத்திலும் ஒரு கமலுக்கு இவர்தான் குரல். தசாவதாரத்திலும் ஒரு சில கேரக்டர்களுக்கு எஸ்பிபி குரல்தான். 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொரு பாடலும் எஸ்பிபியையே எனக்கு முன்னிறுத்தும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடுவதை வேறு யாரையும் கொண்டே நினைத்துப் பார்க்கவே முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என பயணித்து இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி,  உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வி இருவருமே புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே.

சிகரம், ரட்சகன், காதலன், மின்சார கனவு இப்படி நிறைய படங்களில் நடிகராகவும், பல படங்களை தயாரித்தும், துடிக்கும் கரங்கள் (அந்த படத்தின் மேகம் முந்தானை ஆடுது தன்னாலே...  பாடல் ஒன்றே போதும் அவரது இசைக்கு) போன்ற படங்களின் இசையமைப்பாளராகவும் ஜெயித்த அவரால் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன ஒரு காரணம்: என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. இயக்குநராக இருந்தால் அதை செய்ய நேரிடும். இதுதான் எஸ்பிபி

மக்கள் நாயகன் ராமராஜன்,  மைக் மோகன் இருவருமே திரை வானின் உச்சத்தில் ஜொலித்ததற்கு எஸ்பிபி பாடல்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. இருவரின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டடித்தன.

இசையால் பாடல் வரிகள் உயிர் பெற்றாலும், எஸ்பிபி பாடியதாலேயே   அவை அமரத்துவம் பெற்று ஜீவித்து நிற்கின்றன. மகிழ்ச்சி, சோகம், காதல், பாசம், தோல்வி இப்படி ஒவ்வொருவரின் அந்தந்த சமயத்தின் எந்தெந்த உணர்வுக்கும் அவர் குரலே அருமருந்து. தூக்கம் இல்லா நீள் இரவுகளில் அவரது குரலே நல் விருந்து. நீண்ட தூர பயணங்களுக்கும் அதுவே வழித்துணை.

இன்று எஸ்பிபி பிறந்த தினம்

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 28 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -33

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத வசனங்கள் பல உண்டு. அவற்றை பட்டியலிட்டால் டாப் 10 ரகங்களுக்குள் இந்த வசனங்கள் நிச்சயமாக வரும். 

"சபாஷ்... சரியான போட்டி...", "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி...", "அண்டாக்கா கஸம் அபுக்கா குஸூம் திறந்திடு சீஸே..." இந்த வசனங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர், வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. நம்பியார் காலத்துக்கு முந்தைய அரசர் கால கதை களங்களில் அதகளம் செய்தவர்.



கம்பீரமான உருவம், அசால்ட்டான பார்வை, கணீர் குரலில் மிக அலட்சியமான வசன உச்சரிப்பு, அட்டகாசமான வில்லத்தன சிரிப்பு. இப்படி வில்லனுக்கே உரித்தான இலக்கணத்தை வகுத்தவர் இவரே. இவரது ஹஹா ஹஹா ஹஹா.. என்ற வெடிச் சிரிப்பே பயங்கரமானது. கேட்டாலே அச்சமூட்டும் ரகம்.



படத்தில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும்போது யார் ஜெயிப்பார் என்ற பரபரப்பை கூட்டும் விதமாகவே இருக்கும். இணையான வில்லன் ஒருவர் இருந்தால் தான் ஒரு ஹீரோவுக்கு சிறப்பு. அது போன்ற ஒரு வில்லன் பி.எஸ்.வீரப்பா.



கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் பிறந்து பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த பி.எஸ்.வீரப்பா, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தை பார்க்க வந்த கே.பி.சுந்தராம்பாள், இவரது நடிப்பை பாராட்ட, அவரிடமே சிபாரிசு கடிதம் பெற்று சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானார் பி.எஸ்.வீரப்பா. இவரை அறிமுகம் செய்தவர் அன்றைய பிரபல இயக்குநரான வெள்ளைக்காரர் எல்லீஸ் ஆர்.டங்கன்.


(எல்லீஸ் ஆர்.டங்கன் பற்றி அறிய...  http://thileeban81.blogspot.com/2020/08/15.html?m=1)


வீரப்பாவின் முதல் படம் 1939ல் வெளியான 'மணிமேகலை'.


இதே காலகட்டத்தில் குட்டி குட்டி வேடங்களில் தலைகாட்டிய எம்ஜிஆருடன் அறிமுகம் ஏற்பட்டு அது மிக நீண்ட கால நட்புறவாக மாறியது. நாயகனாக எம்ஜிஆர் நடிக்க துவங்கிய பின் அவருடன் ஏராளமான படங்களில் பி.எஸ்.வீரப்பா நடித்திருக்கிறார்.


தமிழின் முதல் முழு நீள கலர் படமான 'அலிபாபாவும் 40 திருடர்களும்', எம்ஜியாரின் சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்', எம்ஜியாரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி தயாரித்து இயக்கிய 'அரச கட்டளை', 'சக்கரவர்த்தி திருமகள்', 'மகாதேவி', 'மருதநாட்டு இளவரசி', 'கலையரசி', 'மன்னாதி மன்னன்', 'விக்கிரமாதித்தன்' என எம்ஜிஆருடனான பி.எஸ்.வீரப்பாவின் பட பட்டியல் மிக நீளம். 



நாடோடி மன்னனில் எல்லாம் இவர் மிரட்டியிருப்பார். "மார்த்தாண்டனாம் மன்னனாம்...", "சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை...", "நாடாம் நாடு... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..."


இந்த வசனங்களை எல்லாம் இவரது உச்சரிப்பில் கேட்பதே மிரட்டல் ரகம். இதுபோல 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் முகத்தில் முழு நீள வெட்டுத் தழும்புடன் மிக கொடூரமான திருடனாகவே வாழ்ந்திருப்பார்.



சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார், பி.எஸ்.வீரப்பா. ஜெமினியுடன் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரின் போட்டி நடனத்தின் நடுவே இவர் பேசும் வசனம் தான் தமிழ் சினிமா உலகில் சாகா வரம் பெற்ற "சபாஷ் சரியான போட்டி..." 


1960களுக்கு பின், குடும்ப கதை படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'ஆலயமணி', 'இரு துருவம்', 'ஆனந்த ஜோதி', 'மீனவ நண்பன்', 'பல்லாண்டு வாழ்க' எல்லாம் அந்த ரகங்கள் தான். அந்தந்த கால கட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுடனும் திரைப் பயணம் செய்தவர். ஆனாலும் அரசர் கதை படங்கள் தான் பி.எஸ்.வீரப்பாவின் பெயரை கூறுபவை.



எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல ரஜினி, கமலுடன் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1979) விஜயகாந்துடன் 'கரிமேடு கருவாயன்' (1986) என நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஆறு முதல்வர்களுடன் நல்ல அறிமுகம் உடையவர்.



நடிப்புடன், பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்ற பெயரில் ஏராளமான தமிழ், இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறார். 1960களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குநர் கே.சங்கருக்கு முதன் முதலில் அடையாளம் பெற்றுத் தந்த படம் 'ஆலயமணி'. சிவாஜி கணேசன் நடித்த அந்த படத்தை தயாரித்தவர், இவர்தான். இந்த படத்தை இந்தியிலும் தயாரித்தார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த ராமராஜன் இவரது அறிமுகம் தான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் துணை இயக்குநராக திரையுலகில் போராடிக் கொண்டிருந்த ராமராஜனை இயக்குநராக உயர்த்தியவர் பி.எஸ்.வீரப்பா. முதன் முறையாக ராமராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'மண்ணுக்கேத்த பொண்ணு' (1985) திரைப்படம் இவரது தயாரிப்புதான். பிரபல நடிகராகும் முன் பல வெற்றி படங்களை ராமராஜன் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த இடத்தில் கூடுதல் தகவல்.

1958 முதல் 1991 வரை ஏராளமான தமிழ், இந்தி படங்களை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருக்கிறார். அன்றைய பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இவரது நெருங்கிய நண்பர். இவரது வில்லன் சிரிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிரந்தர ரசிகர். தமிழ் திரையுலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் பி.எஸ்.வீரப்பாவின் "சபாஷ்... சரியான போட்டிக்கு..." முன் யாருமே போட்டி இல்லை என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

Wednesday, 16 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -32

தமிழ் திரையுலகில் மிக நீண்ட காலம் கலைப்பயணம் மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 1917ல் நாடக நடிகராக நடிப்புலகில் நுழைந்து, 1937ல் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அன்றைய காலத்தில் எல்லாம் பெயருடன் ஊர் பெயரை சேர்த்துக் கொள்வது திரை பிரபலங்களின் வழக்கம். விருதுநகர் கே ராமசாமி, சிதம்பரம் எஸ் ஜெயராமன், திருச்சி லோகநாதன் மாதிரியான வரிசையில் சென்னைக்கு பெருமை சேர்த்தவர். ஆம் இவரது ஒரிஜினல் பெயர், மெட்ராஸ் ஆர். ராதாகிருஷ்ணன். 



எம்.ஆர்.ராதா என்ற பெயரை சொன்னதுமே ஒரு பிம்பம் நம்முடைய  மனதுக்குள் வருமே? அது, இவரது 50  பிளஸ் வயது தோற்றம் தான். சின்ன வயதிலேயே நடிக்க வந்தாலும் 50 பிளஸ் வயதில்தான் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். காரணம், மேடை நாடகங்களுக்காகவே தன்னை ஒப்படைத்திருந்தார்.



அரசியல், கடவுள் மறுப்பு கொள்கை, துணிச்சல், சர்ச்சை, நாடகம் இப்படி பல வகைகளில் இவர் பற்றி ஏராளமாக எழுதலாம். மிகச் சிறந்த நடிகர், ஆனால் நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர். ராணுவத்தில் இருந்த இவரது தந்தை ரஷ்யாவில் உயிரிழந்த நிலையில், பத்து வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.

வீட்டில் கோபித்துக் கொண்டு, வெளியேறி  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை நடிக்க வைத்தது, ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி. பிரபல நடிகர்கள் பலருக்கும் நாடகம் அடிப்படையாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த பின் அங்கு திரும்பிச் சென்றதில்லை. ஆனால், இவர் அந்த ரகம் இல்லை.

1917ல் துவங்கிய 20 ஆண்டு கால நாடக வாழ்க்கைக்கு பின் தனது 30ஆவது வயதில் முதன் முதலில் சினிமாவுக்கு வந்தார், எம்.ஆர்.ராதா. 1937ல் அறிமுகமாகி 'ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி', 'பம்பாய் மெயில்', 'சந்தன தேவன்', 'சத்யவாணி' என சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் நாடக உலகுக்கே திரும்பி விட்டார். முழுக்க முழுக்க ஊர் ஊராகச் சென்று மேடை நாடகம் போடுவதிலேயே ஆர்வம் காட்டினார். இவரது நாடகங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகங்கள். அதில் ஒன்று தான் 'ரத்தக் கண்ணீர்'. அதை சினிமாவாக்க விரும்பினார். 



இதற்காக, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, தனது 45ஆவது வயதில் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார், எம்.ஆர்.ராதா. ஆனால், அந்த படம் பலராலும்  பாராட்டி பேசப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக பெரிய லாபம் ஈட்டவில்லை. இதனாலேயே, மேடை நாடகங்களில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார், எம்.ஆர்.ராதா. 


ஆனால், 1950களில் ரசிகர்களிடம் சினிமாத் துறை பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால், மேடை நாடக கலை தடுமாற்றத்தில் இருந்தது. இதனால் சினிமா உலகுக்கே மீண்டும் திரும்பினார்.  அவருக்கு கை கொடுத்தவர்கள் வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன். இப்படியாக 51ஆவது வயதில், தமிழ் சினிமாவில் 3ஆவது இன்னிங்சை துவக்கினார், எம்.ஆர்.ராதா. 



புதிய வளமான துவக்கத்தை ஆரம்பித்து வைத்த படம் 'நல்ல இடத்து சம்பந்தம்'. ஹீரோவான இவர் ஹீரோயின் சவுகார் ஜானகியை டார்ச்சர் செய்யும் வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ராதா காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது. எம்.ஆர்.ராதா மொத்தம் நடித்துள்ள 125 படங்களில் 90% படங்கள், இந்த காலகட்டத்தில் நடித்தவை தான்.



வில்லனாக மிரட்டுவதாகட்டும், காமெடியாகட்டும், காமெடி கலந்த வில்லனாகட்டும் எம்.ஆர். ராதாவுக்கு நிகர் அவர் மட்டும்தான். திரைப்படங்களில் பாடல்களிலும் கூட நடித்திருக்கிறார். 'இருவர் உள்ளம்' (1963) படத்தில் 'புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...' பாடல் இவர் நடிப்புதான். எம்ஜிஆர், சிவாஜியின் கருப்பு வெள்ளை கால படங்களை எல்லாம் இவர் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது.



சிவாஜியுடன் 'ஆலயமணி', 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என ஏராளம். 1962ல் வெளியான 'பலே பாண்டியா' படத்தில் சிவாஜியுடன் பாடி லூட்டி அடிக்கும் "மாமா  மாப்ளே..." பாடலை இன்றும் பார்த்து ரசிக்கலாம். எம்ஜிஆருடன் 'பெற்றால்தான் பிள்ளையா', 'குடும்பத் தலைவன்', 'பாசம்', 'நீதிக்கு பின் பாசம்' என பெரிய லிஸ்ட் உண்டு.



இந்த இடை விடாத திரை ஓட்டம், 1967ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று வாய் தகராறு ஒன்றில் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுடும் வரை தொடர்ந்தது. அந்த சம்பவத்துக்கு பின், பெரிய அளவில் எம்.ஆர்.ராதாவுக்கு படங்கள் இல்லை.  எல்லாம் முடிந்து 1974ல் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நடித்த 'சமையல்காரன்' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தாலும் சொற்ப எண்ணிக்கையிலான படங்களே வாய்த்தன. 



எம்.ஆர்.ராதா இயற்கையிலேயே கோபம் மற்றும் துணிச்சல் அதிகம் உடையவர், வித்தியாசமானவர். ஊர் ஊராக மக்களிடமே நேரடியாக சென்று 5000 நாடகங்களுக்கு மேல் போட்டிருக்கிறார். மேடை நாடக உலகின் சூப்பர் ஸ்டார் இவர் ஒருவரே. ராமாயணத்தை கிண்டல் செய்து 'கீமாயணம்' என்ற பெயரில் இவர் போட்ட நாடகம் சர்ச்சையாகி தமிழக சட்டப் பேரவையில் நாடக தடை மசோதா போடும் வரை போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசி வரிசை ரசிகர் வரை வசனம் கேட்கும் வகையில் மிக சப்தமாக வசனம் பேசுவாராம். அதற்காக வெங்காயம், பழைய சோறு என அதிகமாக சாப்பிடுவாராம். அதே நேரத்தில் தனது நாடக கம்பெனி ஆட்களுக்கு நான் வெஜ் கொடுப்பதில் நல்லவர். சமையலிலும் வல்லவர். நாடக மேடையிலேயே பைக் ஓட்டுவது, ரசிகர்களுக்கு முதுகை காட்டியபடியே 15 நிமிடம் வரை இடைவிடாமல், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் வசனம் பேசுவது என கலக்கியவர்.

முதலிலேயே சொன்னது போல் இவர் பற்றி ஒவ்வொரு வகையிலும் ஏராளமாக எழுதலாம். இறப்பதற்கு முன்பு கூட, சிங்கப்பூர் மலேசியா என நாடகம் போட்டு விட்டுத்தான் திரும்பி இருந்தார்.



திராவிட இயக்கம், குறிப்பாக பெரியாரின் கடவுள் மறுப்பு நாத்திக கொள்கையில் சமரசம் இல்லாமல் கடைசி வரையிலும் மிகுந்த பிடிப்போடு இருந்தவர் எம்.ஆர்.ராதா. குழந்தைகளுக்கு பழனி, சிதம்பரம், திருப்பதி என வைப்பது போல் தனது மகளுக்கு ரஷ்யா என பெயர் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எம்.ஆர்.ராதா மறைந்தது கூட பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியில்தான் (1979ம் ஆண்டு).

நடிகர்கள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, வாசு விக்ரம், நடிகைகள் ராதிகா, நிரோஷா... இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசுள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 6 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -31

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் 55 ஆண்டு காலம் சத்தமே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த ஒருவர் தான் இன்றைய நமது பவளம். பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிற்கும் அவரை நகைச்சுவை நடிகராகத்தான் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவரது கலையுலக பின்னணி ஆச்சரியங்களின் குவியல். 

விருதுநகரை பூர்வீகமாக கொண்ட வி.கே.ராமசாமிக்கு சின்ன வயது முதலே நடிப்பில் ஆர்வம். ஆனால், அவரது குடும்பம் வியாபார குடும்பம் என்பதால் அதை கவனிக்கச் சொல்ல, வீட்டை விட்டு பலமுறை வெளியேறி நாடக குழுக்களில் வேஷம் கட்டி இருக்கிறார். தந்தையும் உறவினர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் அவருக்கு அணை போட முடியவில்லை. தனது சொந்த அண்ணனின் நாடக கம்பெனி தொடங்கி அன்றைய பிரபல நாடக குழுவான பாய்ஸ் கம்பெனி வரை பலவற்றில் நடித்திருக்கிறார், வி.கே.ராமசாமி.

ஒரு முறை, நாடகத்தில் கள்ளச் சந்தை வியாபாரி (1940, 1950களில் பெரு வியாபாரிகள், பண்ணையார்கள், செல்வந்தர்கள் எல்லாம் உணவு தானியங்களை பதுக்கி விற்பது போன்ற கதைகள் தான் அதிகமாக நாடகங்கள், சினிமாக்களாவது சகஜம்) வேடத்தில் 60 வயது பெரியவராக நடித்திருந்தார். அந்த நாடகத்தை பார்த்து இம்ப்ரஸாகிப் போன தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அந்த நாடகத்தை சினிமாவாக்க விரும்பி பேச்சு நடத்தியபோது, யாரோ ஒரு பெரியவர் தான் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறார். கடைசியில் மிக சிறு வயது பையன் என்பதை அறிந்து ஆச்சரியமாகிப் போயிருக்கிறார், ஏ.வி.எம். அந்த பையன் வி.கே.ராமசாமி.



அப்படியே 'நாம் இருவர்' என்ற பெயரில் அந்த நாடகத்தை படமாக தயாரித்தபோது பிளாக் மார்க்கெட் சண்முகம் என்ற அந்த 60 வயது வேடத்துக்கு வி.கே.ராமசாமியையே நடிக்க வைத்தார் ஏவிஎம். இதுதான் வி.கே.ராமசாமியின் முதல் திரைப்பட அறிமுகம். அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்த அந்த படம் வெளியான ஆண்டு 1947. தனது முதல் அறிமுக படத்திலேயே 60 வயது கேரக்டரில் நடித்த வி.கே.ராமசாமிக்கு அப்போது வயது வெறும் 21 தான். 


அதன் பிறகு 55 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது, அவரது திரைப் பயணம். ஆனால், சின்ன வயதுக்கேற்ற தோற்றத்தில் அவர் நடித்ததே இல்லை. தமிழ் திரையுலகில் டி.எஸ்.பாலையா, ரங்காராவ் இவர்கள் இருவரைப் போலவே வி.கே.ராமசாமியும் பருவ வயதிலேயே முதுமை வேடங்களை ஏற்று அதையே தொடர்ந்தவர்.



'நாம் இருவர்' படத்தை தொடர்ந்து எம்.என்.நம்பியார் ஹீரோவாக நடித்த 'திகம்பர சாமியார்'. சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' என தொடர்ந்து வயதான பண்ணையார், கள்ளச்சந்தை வியாபாரி மாதிரியான வேடங்களே அவரை பின் தொடர்ந்து வந்தன. ஆனாலும் சலிக்கவில்லை. பண்ணையார், கள்ளச் சந்தை என்றால் வில்லத்தனம் வேண்டாமா? அப்படித்தான் அன்றைய கொடூர வில்லனாகவும் வி.கே.ராமசாமி நடித்தார்.



1960களுக்கு பின் நகைச்சுவை பிளஸ் குணச்சித்திரத்துக்கு மாறினார். அந்த வி.கே.ராமசாமி என்ற பிம்பம்தான் இப்போது வரை அனைவரின் மனதிலும் இருக்கிறது. குணச்சித்திர வேடத்துக்கு மாறிய பின் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா என 1960களின் திரை பிரபலங்களுக்கு தந்தை அல்லது மாமனாராக வெளுத்து வாங்கி இருப்பார். சிலவற்றில் நகைச்சுவை, சிலவற்றில் சோகம், அவ்வப்போது வில்லன் கோஷ்டி என பலவித கேரக்டர் ரோலில் கலந்து கட்டி அடித்திருப்பார்.



நாகேஷ், மனோரமா, சோ மாதிரியான நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் காலத்திலும் காமெடியில் ஈடு கொடுத்திருப்பார். அடுத்த தலைமுறை நாயகர்களான கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், பாண்டிய ராஜன் என 1980, 1990களிலும் மாதவன், சிம்பு என 2000த்திலும் தொடர்ந்து நின்று விளையாடியவர். 1947ல் அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கத்துக்கு தந்தையாக நடித்தவர், 2000ம் ஆண்டுகளில் குஷ்பூவுக்கு தந்தை, ஜோதிகாவுக்கு தாத்தா என நடித்திருக்கிறார் என்றால் பாருங்கள்.



பட்டிக்காடா பட்டணமா, வீரபாண்டிய கட்டபொம்மன், மாட்டுக்கார வேலன்,  தர்மத்தின் தலைவன், கல்யாண ராமன், வருஷம் 16, அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, டும் டும் டும் என வி.கே.ஆரின் 55 ஆண்டு கால படங்களின் லிஸ்ட் மிக நீளம்.


'மாட்டுக்கார வேலன்' படத்தில் "ஊருக்குள்ள நான் எவ்ளோ பெரிய வக்கீல். நான் செத்துப் போயிட்டேன்னு எவ்ளோ சின்ன செய்தியா போட்டிருக்கான்னு..."  அவர் பேசுற ஸ்டைலே தனி. வசனங்களும் கூட, சில ஸீனுக்கு ஏற்றவாறு அவரே சேர்த்துக் கொள்வதும் உண்டாம்.



1960களில் அடித்த அதே லூட்டியை 1980, 1990களில்  'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் அப்பா வேடத்திலும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் ஜனகராஜுடன் சேர்ந்து பலான படத்தை வீட்டில் ஸ்கிரீன் போட்டு பார்க்கும் பெரிய மனுஷன் கேரக்டரிலும்  'அரங்கேற்ற வேளை'யில் பிரபு -ரேவதியுடன் சேர்ந்து கலக்கும் நாடக கம்பெனி ஓனர் வேடத்திலும் அப்படியே பார்த்து ரசிக்கலாம். அதுதான் வி.கே.ராமசாமி. 'அருணாச்சலம்' படத்தில் ரஜினியின் வில்லன்களில் ஒருவர்..! 'வேலைக்காரன்' படத்தில் ரஜினிக்கு தாத்தா...!



ஆரம்ப கால நாடக நடிகர் என்பதால் அவரது குரல் மிகவும் தனித்தன்மையாக இருக்கும். அதோடு அவரது டயலாக் டெலிவரி முறையும் தனித்துவமானது. அதுதான் அவரது ஸ்பெஷல். நடிகர் மட்டுமல்ல, கதாசிரியர் தயாரிப்பாளர் என்ற வேறு பல முகங்களும் வி.கே.ராமசாமிக்கு உண்டு.

பிற்கால பிரபலங்கள் பலருடன் அவர்களது ஆரம்ப காலத்திலேயே அறிமுகமும் நட்பும் இருந்தது. அதில் சூப்பர் ஹிட் புராண படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் ஒருவர். அவருடன் இணைந்து 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்துக்கு கதாசிரியரும் வி.கே.ராமசாமி தான். அப்படியே, பின்னாளில் தனியாகவும் 15 படங்களை தயாரித்திருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர்,  வி.கே. ராமசாமி. அதற்கு முன் இரண்டு முறை திரையில் நுழைந்து சோர்ந்து போன எம்.ஆர்.ராதா நாடகங்களுக்கே திரும்பிய நிலையில், 1950களில் நாடகங்கள் நொடிந்து போக தொடங்கின. அவரது 'ரத்தக் கண்ணீர்' படமும் கமர்சியலாக சரியாக போகவில்லை. இந்த சமயத்தில் தான் 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் எம்.ஆர்.ராதாவுக்கு புது பாதையை வி.கே.ராமசாமி. அந்த படத்தின் கேரக்டர்தான் எம்.ஆர். ராதாவின் அக்மார்க்காகி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிசியான நடிகராக இருந்தார். இப்படியாக  வி.கே.ராமசாமி மூலம்  மூன்றாவது இன்னிங்சை எம்.ஆர்.ராதா தொடங்கியபோது அவரது வயது 51. ஆனால் வி.கே.ஆர். வயது 32.

சிவாஜி-பிரபு, முத்துராமன்- கார்த்திக், சிவகுமார்- சூர்யா என அடுத்தடுத்த தலைமுறைகளை பார்த்து 55 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த அவரை, "சினிமாவில் பிழைக்கத் தெரியாத மனிதர்..." என அவரிடமே சிவாஜி சொல்வாராம். உண்மையும் அது தான். 1960களின் பிற்பகுதியில் தான் ஓரளவுக்காவது வி.கே.ராமசாமி பிழைக்கத் துவங்கினார் என்பதே நிஜம்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 28 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -30

தமிழ் சினிமாவில் கணவன் -மனைவி அண்ணன் -தம்பி, அம்மா -மகள் அப்பா -மகன் இப்படி பலர் வலம் வந்திருக்கின்றனர். அது போன்ற ஒருத்தரைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர், பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன். தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார்.  ஆனால், இவர்  திரை உலகுக்குள் நுழைந்தது ஒரு நடிகராகத்தான். 



சிறு வயதிலேயே மேடை நாடக குழுக்களில் சேர்ந்து பி.யு.சின்னப்பா, காளி என்.ரத்தினம், எமஜிஆர் என அக்கால பிரபலங்களுடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு பாடும் திறமையும் இசை ஞானமும் இருப்பது கூடுதல் பலம். அப்படித்தான் இவரும். இவருக்கு பாட மட்டுமல்ல... வயலின் மற்றும் மிருதங்கம் வாசிக்கவும் தெரியும். இவரது தந்தை லட்சுமண பாகவதர் கர்நாடக இசைக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.



1947ல் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்த ஏ.எல்.ராகவன். கிருஷ்ண விஜயம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை பின்னணி பாடகராகத்தான் சினிமா உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காண்பித்தது. பாடகராக்கியவர் அன்றைய பிரபல பின்னணி பாடகர் சி.எஸ்.ஜெயராமன் (எஸ்.ஜானகியை பாடகியாக அறிமுகம் செய்தவரும் சி.எஸ்.ஜெயராமன் தான்). படம் விஜயகுமாரி. அப்போது ஏ.எல். ராகவனுக்கு சிறு வயது என்பதால் படத்தின் நாயகிக்காக பெண் குரலில் பாடினார். 



அதன் பிறகு 1950 தொடங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளளுக்கு மேலாக தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார். 1970களுக்கு பின் அவ்வப்போது பாடிய ஏ.எல்.ராகவன் கடைசியாக பாடியது,  'ஆடாம ஜெயிச்சோமடா' படம்...!

சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வி, எஸ்.வி. வெங்கட்ராமன் என தொடங்கி இளையராஜா, தேவா வரையிலான ஏராளமான  இசையமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார். டி.எம்.எஸ்., ஏ.எம். ராஜா, ஜிக்கி, ஜமுனா ராணி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, மனோரமா, வாணி ஜெயராம் ஸ்வர்ணலதா வரையிலான பாடக, பாடகிகளுடன் இணைந்து பின்னணி பாடி இருக்கிறார், ஏ.எல். ராகவன்.



இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் காமெடி பிளஸ் நையாண்டி ரகம். அன்றைய தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு மட்டுமல்ல... நாகேஷ், தங்கவேலு போன்ற  காமெடியன்களுக்கும் பாடல்கள் இருக்கும். நம்பியார், அசோகன்,  எம்.ஆர்.ராதா, டி.எஸ். பாலையா எல்லாம் திரைப் பாடல்களுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். 

இன்று வரையிலும் கேட்டு பார்த்து ரசிக்க கூடிய ஹிட் பாடலான 'இருவர் உள்ளம்' படத்தின் "புத்தி சிகாமணி பெத்த பிள்ளை..." என்ற பாடல் எம்.ஆர்.ராதா நடித்ததுதான். அந்த பாடலை அவருக்காக பாடியவர், ஏ.எல்.ராகவன். 


இது போலவே "மணக்கும் ரோஜா மை லேடி, எனக்கு நீதான் சரி ஜோடி..." என்ற பாடலை 'கவிதா' படத்தில் டி.எஸ். பாலையாவுக்காக பாடி இருக்கிறார்.


அதே நேரத்தில் ஜெமினி, முத்து ராமன், கல்யாண் குமார், பாலாஜி, நாகேஸ்வர ராவ் மாதிரியான கதை நாயகர்களுக்கும் பாடி இருக்கிறார். 


'நெஞ்சில் ஒரு ஆலயம்' படத்தில் கல்யாண் குமாருக்காக பாடிய  "எங்கிருந்தாலும் வாழ்க, உன் இதயம் அமைதியில் ஆழ்க...", பாடலும்


'பார்த்தால் பசி தீரும்' படத்தில் ஜெமினிக்காக பாடிய... "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ..."  பாடலும்


ஏ.எல்.ராகவனின் பெயரை காலா காலத்துக்கும் ஒலிக்கும் எவர்கிரீன் ரகங்கள்


ஏ.எல்.ராகவனின் குரல் மிகவும்  ரசிக்கத்தக்கதாகவும் பெகுலியர் வாய்ஸாகவும் இருந்தது ஸ்பெஷல். குறிப்பாக நாகேஷுக்கு இவரது குரல் ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.


"சீட்டுக்கட்டு ராஜா ராஜா என்னை திரும்பிப் பாரு லேசா லேசா..."


"உலகத்தில் சிறந்தது எது..."


"ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறைஞ்சிருக்கு..."


இவை நாகேஷுக்கு பாடிய பாடல்களில் சில.


"பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு..." (படிக்காத மேதை படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக)


"ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாலி..."


"என்ன வேகம் நில்லு பாமா, என்ன கோபம் சொல்லலாமா..."


இவையெல்லாம் ஏ.எல். ராகவன் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களில் சில துளிகள்


பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் எவர்கிரீன் நகைச்சுவை இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை, படத்தில் முத்துராமனுக்காக (நடிகர் கார்த்திக்கின் தந்தை) ஏ.எல். ராகவன்  பாடியிருக்கிறார். 


இதுபோலவே 'மனிதன் மாறவில்லை' படத்தில் நாகேஸ்வர ராவுக்காக (நடிகர் நாகார்ஜுனாவின் தந்தை) பாடிய..., "காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பக சோலையும் ஏனோ..?" என்ற காதல் பாடலை பாடியவரும் இவரே.


தமிழ், மலையாளம் கன்னடம் தெலுங்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார், ஏ.எல்.ராகவன்.



திருவிழாக்களில் களை கட்டிக் கொண்டிருக்கும் மேடைக் கச்சேரிகள் எனப்படும் ஆர்க்கெஸ்ட்டிராவை முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் ஏ.எல். ராகவனையே சேரும்.  எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்டிராவை ஆரம்பித்தவர் இவரே. எக்கோ எனப்படும் எதிரொலி டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே குரலிலேயே எக்கோ ஜாலம் காட்டியவர்.


'வேட்டைக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்..." பாடலில் இடையே அவ்வப்போது வரும், "ஹா ஊ ஹா..." என்ற எக்கோ ஹம்மிங் இவருடையதே.


பாடகராகவே அறியப்பட்டாலும் இவருக்குள் இருந்த நடிகன் அவ்வப்போது எட்டிப்பார்க்க  தவறவில்லை. பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜனுடன் சேர்ந்து படமும் தயாரித்து நடித்திருக்கிறார். 1968ல் வெளியான 'கல்லும் கனியாகும்' படம் இவர்கள் இருவரின் தயாரிப்புத்தான். அதில் இவர்கள் இருவருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். 



இதுபோல 1980ல் 'கண்ணில் தெரியும் கதைகள்'  என்ற படத்தையும் ஏ.எல்.ராகவன் தயாரித்திருக்கிறார். சரத்பாபு, ஸ்ரீபிரியா நடித்த இந்த படத்துக்கு கே.வி.மகாதேவன், சங்கர் -கணேஷ், ஜி.வி.வெங்கடேஷ், இளையராஜா என ஐந்து இசையமைப்பாளர்கள்...!


நடிகர், பின்னணி பாடகர் தயாரிப்பாளர் என பல முகங்களை காட்டிய ஏ.எல். ராகவன் இன்றைய டி.வி. யுகத்திலும் கால் பதித்திருக்கிறார். ஆம், தனது 65வயதுக்கு பிறகு சன் டிவியில் 2000களில் ஔிபரப்பான 'அலைகள்', 'அகல்யா' ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார்.



கடந்த பதிவில் நாம் பார்த்த 'வின்னர்' படத்தில் பாட்டியாக நடித்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமின் கணவர்தான் இந்த ஏ.எல்.ராகவன் என்பது கூடுதல் தகவல்.

தற்போது வரை உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு கடந்த 2020ம் ஆண்டில் தனது 87வது வயதில் இரையாகிப் போனார் ஏ.எல்.ராகவன்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 20 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -29

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களை பட்டியல் போட்டால் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என நிறைய பெயர்கள் நினைவுக்கு வரும். ஆனால் வில்லி என்றால்...? சில பெயர்களிலேயே ஸ்ட்ராக்காகி நின்று விடும். அந்த ஒரு சில பேரில் ஒருவர் எம்.என்.ராஜம். 'வின்னர்' படத்தில் வடிவேலுவின் பாட்டியாக வருவாரே அவரே தான்.



"வயசானாலும் இந்த வில்லத்தனம் மட்டும் போகல'ன்னு அந்த படத்தில் வடிவேலு பேசும் டயலாக், நம்பியாருக்கு மட்டுமல்ல,  எம்.என்.ராஜமுக்கும் பொருந்தும்தான். "இந்த கைப்புள்ள இப்ப எங்க இருக்கானோ? சாப்பிட்டானோ இல்லியோ"ன்னு இன்றைய மீம்ஸ் யுகம் வரை வலம் வரும் எம்.என்.ராஜம், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1949. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்த அன்றைய ஹிட் படமான 'நல்லதம்பி'யில் 10 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். 

குழந்தை நட்சத்திரமாக இருந்து அவருக்கு கிடைத்த புரமோஷன், வில்லி வேடம். அதுவும் சாதாரண வில்லி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கே வில்லி. அவரது எவர்கிரீன் சூப்பர் ஹிட்டான 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தில் காந்தா என்ற தாசிப்பெண் வேடத்தில் வில்லியாக கலக்கி இருப்பார், எம்.என்.ராஜம்.



பணக்கார பாரீன் ரிட்டர்னாக தன்னிடம் வந்து சேர்ந்து, பின்னர் தொழு நோயாளியாக மாறிப்போன எம்.ஆர்.ராதாவை மாடிப் படிக்கட்டுகளில் அவர் எட்டி உதைக்கும் காட்சிகளும், "அடியே காந்தா ... ... ... நீ கொழுத்து திரிகிறாய். நான் புழுத்துச் சாகிறேன்" என எம்.ஆர்.ராதா பேசும் வசனங்களும், ""உங்கள் மனைவியோ பருவ மங்கை, பாலுவோ பார்த்தோர் மயங்கும் பருவ வயதினன்..." என எம்.ஆர்.ராதாவிடம் அவர் பேசும் வசனங்களும் அவரது வில்லித்தனத்தின் உச்சம் பேசும். அப்போது பதின்ம வயதுதான் எம்.என்.ராஜமுக்கு. காலால் உதைக்கும் ஸீனில் நடிக்க தயங்கியபோது நடிப்புத்தான் என ஊக்கப்படுத்தி அவருக்கு தைரியம் கொடுத்தவர் எம்.ஆர்.ராதா. 

சிவாஜி பத்மினி நடித்த 'தங்கப் பதுமை' படமும் அவரது வில்லித்தனத்துக்கு மற்றொரு உதாரணம். கண்களை உருட்டிக் கொண்டு வாயை ஒரு விதமாக சுளித்தபடி வில்லித்தனம் செய்யும் எம்.என்.ராஜம் நடிப்பை தற்போது 60ஐ கடந்தவர்களால் நிச்சயமாக மறந்திருக்க முடியாது. 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை வேடம் இவருக்கு. 



இன்றைய டிவி சீரியல்களின் வில்லிகள் எல்லாம்  இவரது லேட்டஸ்ட் வெர்ஷன்கள் தான். தமிழில் 1960களில் வெளியான ஏராளமான சினிமாக்களில் குடும்ப கதைகளின் ஆஸ்தான வில்லி எம்.என்.ராஜம் தான். 

வில்லியாக மட்டுமல்ல,  குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நாயகர்களுடன்   ஜோடி சேர்ந்து நாயகியாகவும் நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். 'நாடோடி மன்னன்' படத்தில் மன்னராக வரும் எம்ஜிஆரின் ராணி மனோகரி இவர்தான். 'பாசமலர்' படத்தில் சிவாஜியின் ஜோடியும் இவர்தான். 



படங்களில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக இணைந்து ஆடிப் பாடி எம்.என்.ராஜம் நடித்த சூப்பர் ஹிட் எவர்கிரீன் பாடல்கள் பல உண்டு. குறிப்பாக சிவாஜியுடன் ஏராளமான பாடல்களில் ஜோடியாக ஆடிப் பாடி இருக்கிறார்.




 எம்.என்.ராஜம் ஹிட் பாடல்களில் ஸாம்பிள்கள் சில...

'பாசமலர்' படத்தில் சிவாஜியுடன் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்...


'பாவை விளக்கு' படத்தில் சிவாஜியுடன் காவியமா நெஞ்சில் ஓவியமா...


கொக்கர கொக்கரக்கோ சேவலே...


'தெய்வப்பிறவி' படத்தில் காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு...


'மங்கையர் திலகம்' படத்தில் ஒருமுறைதான் வரும், கதை பல கூறும், உல்லாச புதுமைகள் கூறும் இளமை வர்ணங்கள் பலவாறு காட்டும்...


'ரத்தக் கண்ணீர்' படத்தில் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்டத்தை பார்க்கவில்லை ஆளை ஆளை பார்க்கிறார்...


'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே...


எம்ஜிஆருடன் 'திருடாதே' படத்தில் ஓ மிஸ்டர் பாலு...


எஸ்எஸ்ஆருடன் தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா...

அவ்வளவு ஏன்? வில்லன் நடிகர் எம்என்நம்பியாருடன் கூட ஜோடி போட்டு பாடி ஆடி நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். அந்த பாடல், 'மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம்பெற்ற ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...




1970களுக்குப் பிறகு தனது வயதுக்கு ஏற்ற வேடங்களுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு, கிராஜூவலாக தமிழ் சினிமாவில் தன்னை நீடித்துக் கொண்டார்.



பெண்மணி அவள் கண்மணி,  திருமதி ஒரு வெகுமதி, அந்த ஒரு நிமிடம், மாங்குடி மைனர் என 1980 களிலும் அவரது திரைப்பபயணம் தொடர்ந்தது. 

அதன் பிறகும் கூட 'மறுமலர்ச்சி' படத்தில் ரஞ்சித்தின் தாயார், 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் கமலின் பாட்டி, 'திருப்பாச்சி' படத்தில் த்ரிஷாவின் பாட்டி, 'மருதமலை' படத்தில் ஹீரோயினின் பாட்டி, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'... 

இப்படியாக, 1950களில் ஆரம்பித்த இவரது கலைப்பயணம் தொய்வு இல்லாமல் 2k கடந்தும் நீடிக்கிறது. சின்னத்திரை தொடர்களிலும் எம்.என்.ராஜம் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம், வில்லி, நாயகி, குண சித்திரம், அம்மா, பாட்டி என எழுபது ஆண்டுகளாக நீடித்ததோடு இன்றைய மாஸ் மீடியாவான சின்னத்திரை வரையிலும் ஆரவாரம் இல்லாமல் முத்திரை பதித்த பெருமை எம்.என்.ராஜத்தை மட்டுமே சேரும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சேரும். தமிழ் திரையுலகில் வெளிமாநில நடிகைகள் கோலோச்சியபோது மதுரையில் இருந்து வந்து தமிழ்ப் பெண்ணாக கலக்கியவர், எம்.என்.ராஜம்.

இவ்வளவு பெருமைக்குரிய எம்.என்.ராஜமின் கணவரும் ஒரு திரை பிரபலம் தான். அவர் யார் தெரியுமா? அவர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 17 January 2022

அது ஒரு பொ(ற்)ங்கல் காலம்

வருஷா வருஷம் களை கட்டுற நாலு நாள் பொங்கல் திருழாவுக்காவ நாலு வாரத்துக்கு முன்னேயே ரெடியாயிருவோம். நெட்டூரு ரோட்டுல சுண்ணாம்பு காளவாயிக்கு போயி சாக்குல சுண்ணாம்புக் கல் வாங்கியாந்து தண்ணீரில கொட்டினதும் சுறுசுறுன்னு பொங்க ஆரம்பிச்சதுமே சந்தோஷமும் பொங்க ஆரம்பிச்சிரும். மறுநா காலைல அடங்கிக் கிடக்கிற சுண்ணாம்புத் தண்ணியில நீலப் பொடிய கலந்து சுவத்துக்கு அடிச்சதும் பொங்கல் களை கட்ட ஆரம்பிச்சிரும்.

இப்பல்லாம் ஒரு வாட்டி அடிச்சா ஏழெட்டு வருஷம் நிம்மதியா இருக்கலாம்னு பெயிண்ட் வந்தாச்சி, வீடுங்களும் மாறியாச்சி.

.

மழைய மட்டுமே எதிர்பாத்து கிடக்குற விளங்காட்டில விளைஞ்ச தட்டைப் பயிறு, கானம், சிறு பயிறு இதெல்லாம் அறுவடை முடிஞ்சி வர ஆரம்பிச்சிரும். கூடவே, பனங்காட்டு குழியில போட்டிருந்த பனங்கொட்டையும்  நல்ல பனங் கிழங்கா விளைஞ்சிருக்கும். இதெல்லாம் பொங்கல் கால ஸ்பெஷல் அயிட்டங்கள்.

.

வெள்ளையடிச்ச பிறகு, வீட்டு திண்ணையில (இப்பல்லாம் கிராமங்கள்ல கூட திண்ணைய பாக்க முடியல) காவி கலரில பட்டை பட்டையா கோடு போட்டதும் வீட்டுக்கே ஒரு பொலிவு வந்திரும்.

செம்மண்ணை எடுத்து வந்து கொழைச்சி சின்ன சைஸ் குத்துச்சட்டி அளவுக்கு கட்டியா பிடிச்சி, காய வச்சி, அதுக்கும் சுண்ணாம்பு, காவில்லாம் ரெண்டு நாளைக்கு முன்னே அடிச்சி காய வச்சிருவோம். இதுதான் பொங்கல் பானை வைக்கிறதுக்கு கல். இப்ப ஸ்டவ்விலயே பொங்கல் வைக்க ஆரம்பிச்சாச்சி. 

.

ரெண்டு வாரத்துக்கு முன்னே கடைகளல்லாம் கலர் கலர் படங்களா பொங்கல் கிரீட்டிங் கார்டு குவிஞ்சி கிடக்கும். 25 பைசா அட்டையில ஆரம்பிச்சி, கவருக்குள்ள வச்சி அனுப்புறா மாதிரி கட்டிங் படங்கள், ஜிகினா படங்கள்னு விதம் விதமா தொங்க விட்டிருப்பாங்க.



அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சினிமா எம்ஜிஆர் தொடங்கி ரஜினி, கமல், சில்க், அம்பிகா, ராதான்னு ஒரு வகையான படங்களும் வயல்வெளி, சாமிங்கன்னு மற்றொரு வகையான படங்களும் நிறைஞ்சிருக்கும். தீபாவளிக்கு பட்டாசுன்னா பொங்கலுக்கு இதுதான். 



சில கிரீட்டிங் கார்டுகள்ல இருக்கிற படத்தை பார்த்ததும் அனுப்பவே மனசே வராம வீட்டில ஓரமா வச்சிருந்ததும் உண்டு. தேவையான அளவு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பலைன்னா கிரீட்டிங் கார்ட போஸ்ட் மேன் தரும்போது ஃபைன் போடுவாங்க.



பொங்கல் முடிஞ்ச பிறகு ஒரு வாரத்துக்கு நன்றி கார்டு சீஸன். பொங்கல் வாழ்த்து சொல்லி அனுப்புன ஒவ்வொருத்தருக்கும் பதிலுக்கு அந்த கார்ட அனுப்புவாங்க. அதுக்காக தனியா பொங்கல் நன்றி கார்டுகளும் விப்பாங்க... இப்பல்லாம் உடனடியா வாட்ஸ் ஆப்பிலயே ரிப்ளை பண்ணிடுறோம்.

.

மார்கழி கடைசி நாள் ராத்திரி பனங் காட்டில இருந்து பனை ஓலைக் கட்டு, பச்சை பனை மட்டை (பொங்கல் சோறு கிளறுவதுக்காக), ஆவாரம் பூ, மாவிலை, கண்புழை செடி, அருகம் புல். அப்புறம் கடையிலருந்து கரும்பு, மஞ்சக் கொழை எல்லாம் வீட்டுக்கு வந்து சேந்திரும். ஒரு பொங்கல் ன்னிக்கு காட்டிலருந்து கொண்டு வந்து தந்த ஓலைக்கட்டுக்குள்ள சின்ன சைஸ் பாம்பு ஔிஞ்சிருந்ததும் அதை உரல் உலக்கையாலேயே அம்மா அடிச்சி கொன்னதும் நினைவுகள்.

.

தை முதல் நாள் பொங்கல் அன்னிக்கு குளிருக்குள்ள காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி, குளிச்சிட்டு... காவி அடிச்சி வச்சிருக்கிற மண்ணு கட்டிய அடுப்பா கூட்டி... வெண்கலப் பானையில அம்மா பச்சரிசிய களைஞ்சி போடுவாங்க. பனை ஓலைய எடுத்து வைக்கிற வேலை எங்களது. சரியா ஈசான மூலையில பொங்க பான பொங்கி வரவும் காலையில சூரியன் வரவும் ரொம்ப சரியா இருக்கும். அப்ப அம்மா விடுற குலவைச் சத்தம் இன்னும் காதுக்குள்ளாற கேட்டுக் கிட்டே இருக்கு.

அந்த அடுப்பிலயே பச்சை மட்டைய கரண்டியாக்கி பொங்கல் சோறு ஆக்கி (பச்சை மனை மட்டை வாசத்தோட அந்த பொங்கல் சோறு இப்பவும் நாசிய சுத்திகிட்டு கிடக்கு), நிறைய காய்கனிகளை போட்டு சாம்பார், அவிச்ச பனங்கிழங்குன்னு எல்லாத்தையும் அம்மா ரெடி பண்ணிருவாங்க. அதுக்குள்ள அப்பாவோட சேந்து சாமி கும்பிட கரும்பு கட்டுறது, வீடு முழுசா சந்தனம் குங்குமம் வைக்கிறதுன்னு வேலை போயிட்டிருக்கும்.

.

ஒரு வழியா ஒம்பது மணிக்குள்ள பொங்கல் வச்சி முடிஞ்சி சாமி கும்பிட்டுட்டு, புது டிரஸ் போட்டுட்டு ஆலங்குளம் தியேட்டருக்கு முதல் ஆட்டம் (அப்ப அஞ்சி ஷோ. மொத ஷோ காலை 9.30மணிக்கு ஆரம்பிக்கும்)பார்க்க கிளம்புவோம்.

உதயகீதம், காக்கிச் சட்டை, சிப்பிக்குள் முத்து, பாட்டி சொல்லை தட்டாதே, கரகாட்டக்காரன்னு  பொங்கல் படங்கல்லாம் இன்னும் ஞாபத்துக்குள்ள, புஸ்தக மயிலிறகா பத்திரமா இருக்கு.

.

பொங்கலுக்கு மூணு நாலு நாளைக்கு விளையாட்டு விழா நடக்கும். பானை உடைத்தல், மங்கைக்கு திலகம் வைத்தல், முறுக்கு கடித்தல்னு ஜாலி விளையாட்டில தொடங்கி ஓட்டப் பந்தயம், கபடி, சைக்கிள் ரேஸ்னு வீர விளையாட்டுகள் வரை நடக்கும். பக்கத்து ஊரெல்லாம் சுத்தி வருவது மாதிரில்லாம் சைக்கிள் ரேஸ் நடக்கும். ஊரே அங்கின தான் கூடி நிப்பாங்க. சைக்கிள் ஸ்லோ ரேஸ், நைட்ல நடக்கிற மேடை போட்டிங்கள்ல பேச்சுப் போட்டி என்னோட பேவரைட். பரிசெல்லாம் கூட  வாங்கிருக்கேன்.

.

இப்பல்லாம் தை குளிருக்கு போர்வைக்குள்ள பதுங்கி கிட்டு வாட்ஸ் ஆப்பில வாழ்த்து அனுப்பும் போது, பொங்கல் விளையாட்டு விழா பாக்கும் போது அந்த கூட்டத்துக்குள்ள எங்க ஊரு போஸ்ட் மேன் காந்தி சார், தேடி வந்து வாழ்த்து அட்டைய தந்ததும் ஜன்னல் வழியா பொங்கல் வாழ்த்து கார்டை போட்டுட்டு போன ஃபிரண்டு ரவியும்தான் செல்போன் ஸ்கிரீன்ல தெரியுறாங்க.

.

ஏழு மணிக்கு எழுந்திருச்சி, ஸ்டவ் அடுப்பிலேயே அவசர பொங்கல் வச்சிட்டிருக்கப்ப தீபாவளி மாதிரி பொங்கலுக்கு மட்டன் கிடையாதாப்பான்னு பையன் கேக்குறப்ப பொங்கல கெட்டி தயிர் ஊத்தி சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருது.

பத்து பதினோரு மணிக்குள்ள பொங்கல முடிச்சிட்டு டிவியில சினிமா, ஜல்லிக்கட்டுன்னு லைவ் ஷோ பார்த்துட்டு, இந்தக்கால பொங்கலும் நிழற்படமாத்தான் போயிட்டிருக்கு, அடுத்த தலைமுறைக்கு எந்தவொரு உணர்வுப்பூர்வமான பொங்கல் நினைவுகளையும் பரிமாற முடியாமலேயே...

#நெல்லை_ரவீந்திரன்