Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 16


ஒத்திசைவான மனம்

பிரபஞ்ச வெளியில் சூரியன், பூமி, சந்திரன் உள்ளிட்ட கோள்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தொலைவுக்குள் நிற்பதாலேயே பூமி என்னும் இந்த உலகம் சாதாரணமாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த ஒத்திசைவு என்பது சிறிது மாறினாலும் நிலைமை தலைகீழாகி விடும்.

திரைப்படம் பார்க்கச் செல்கிறோம். அந்த திரைப்படத்தின் வசன ஒலியும் காட்சியும் தொடர்பற்றோ அல்லது சில வினாடிகள் இடைவெளியிலோ இருந்தால் எப்படி இருக்கும்? உங்களால் எவ்வளவு நேரம் அப்படி பொறுமையாக காண முடியும்? தலையை அசைத்து இனிமையாக கேட்கும் பாடல் வரிகளில் கூட இசையும் வார்த்தைகளும் ஒத்திசைவுடன் இருந்தால் மட்டுமே ரசிக்க முடிகிறது. மனதை கட்டிப்போடும் கதாகாலட்சேபம், பிரார்த்தனை கூட்டம், பிரசங்கம் போன்ற நிகழ்வுகளில் இசையுடன் சேர்ந்து ஒத்திசைவுடன் இருக்கும் வசீகர சொற்பொழிவுகள் தான் மனதை ஈர்க்கும். குடும்பத்திலும் ஒத்திசைவு இல்லாவிட்டால் சிதைந்து விடும்.

இவை அனைத்தும் தனி மனிதனுக்கும் பொருந்தும். மனித உடல் இயங்குவதே ஒத்திசைவு அடிப்படையில் தான். உடலுக்குள் ஏராளமான உள்ளுறுப்புகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மிகச் சரியான அசைவில் ஒருங்கிணைந்து இயங்காவிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும். வெளிப்புற நெருக்கடி ஏற்படும்போது உடலும் மனமும் ஒத்திசைவுடன் இல்லாத நிலை உருவாகும். அந்த சமயங்களில் அஜீரணம், பசியின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுவது உண்டு.

மனித மனம் என்பது குறைந்தபட்சம் 2 வகையில் இருந்து அதிகபட்சமாக 6 வகையில் இயங்கக் கூடியது. இந்த ஆறு வகையான உள் மனதை கட்டுப்படுத்தி இயங்கச் செய்வதே வெற்றிக்கு அடித்தளம். கல்வி என்ற சொல்லின் ஆங்கில வார்த்தை எஜூகேசன் என அனைவருக்கும் தெரியும். ‘எஜூகோ’ என்பது லத்தீன் வார்த்தை. அதில் இருந்து வந்தது தான் எஜூகேசன். எஜூகோ என்றால் உள்ளிருந்து வளர்வது என்று பொருள். ஆம். உள்ளுக்குள் வளர்ந்து வெளிப்படுவதுதான் கல்வி.

உண்மையான கல்வி என்பது அறிவாற்றலை ஒட்டு மொத்தமாக மூளைக்குள் குவித்து வைத்திருப்பது அல்ல. மனதை மிகச் சரியாக ஒருங்கிணைத்து தனது அறிவாற்றலை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகும். அதனால் தான் வெளித் தோற்றத்தில் படிப்பறிவற்றவராக இருப்பவர்கள் கூட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி காப்பவராக இருக்கின்றனர். சட்டம், மருத்துவம் அல்லது இதுபோன்ற உயர் கல்வியில் தங்கப்பதக்கம் வென்றவர்களை காட்டிலும் சராசரியாக கல்வி கற்றவர்கள், அந்தந்த துறைகளில் உயர்ந்து நிற்பதை காணலாம். அதற்கு மனமும் மூளையும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

உலகில் மிகப்பெரிய வெற்றியாளராக, அறிவு மிகுந்தவராக அறியப்படும் அனைவரும் பெரிய அறிவாளிகள் அல்ல. அனைத்தையுமே அறிந்தவர்களும் அல்ல. சராசரி அறிவுக்கும் குறைந்தவர்களாக கூட இருக்கலாம். ஆனால், தாங்கள் அறிந்து வைத்துள்ளவற்றை சரியான சமயத்தில் சரியான முறையில் வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். தனது அறிவை முழுமையான முறையில் மிகச் சரியாக பயன்படுத்துவதே அவர்களின் வெற்றி ரகசியம். அதற்கு அடிப்படையாக இருப்பது உள் மனதின் சரியான ஒருங்கிணைப்பு.

ஆண்டுதோறும் ஏராளமான இளைஞர்களை பட்டதாரிகளாக்கும் மிகப்பெரிய கல்வி குழுமங்களின் உரிமையாளரான கல்வியாளர் ஒருவருக்கு  பூர்வீக சொத்து ஒன்று கிடைத்தது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த அந்த இடத்தில் எதுவுமே விளையாது. அந்த நிலத்தால் எந்த உபயோகமும் இல்லை என அவர் கருதினார். அதனால், யாரிடமாவது விற்கலாம் என்ற யோசனையில் இருந்தார். இதற்கிடையே, அந்த வழியாக காரில் சென்ற கல்வியறிவு குறைந்த வர்த்தகர் ஒருவரின் கண்ணில், அந்த இடம் தென்பட்டது.

அவருடைய பார்வையில், மிக அமைதியான இடமாக அது தோன்றியது. மேலும், அங்கிருந்து பார்த்தபோது மலை முகடுகளும் இயற்கை காட்சிகளும் வித்தியாசமாக காட்சி அளித்தன. உடனே, கல்வியாளரை அணுகி அந்த நிலத்தை விலைக்கு தருமாறு கேட்டார். அவரும் மிக மகிழ்ச்சியாக குறைந்த விலைக்கு தனது நிலத்தை அந்த வர்த்தகருக்கு விற்று விட்டார். நிலத்தை வாங்கியவரோ, அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியதாக ஒரு உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதியை முதலில் கட்டினார். வியாபாரம் மெதுவாக சூடுபிடிக்கத் துவங்கியதும் அந்த இடத்தை முற்றிலும் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றினார்.

சுற்றிலும் பல கி.மீட்டர் தொலைவுக்கு அங்குள்ள மக்களுக்கு விடுமுறையை கழிக்க பொழுதுபோக்கு பூங்கா போன்ற முக்கிய இடங்களோ, கடல் பரப்போ இல்லை என்பதால் அது பிரபலமடைய தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு இடத்தையும் அவர் விலைக்கு வாங்கியதோடு ஆழ்துளை கிணறுகளை அமைத்து பண்ணை மற்றும் பூங்காக்களை அமைத்தார். எதற்குமே உதவாது என கல்வியாளரால் கருதப்பட்ட இடம், இப்போது பச்சைப் பசேலென அருமையான பூங்காவானது. அங்கிருந்த தங்கும் விடுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இருந்து விடுமுறையை கழிக்கத் தொடங்கினர்.

இதை பார்த்த அந்த கல்வியாளர், ‘பல ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் நடத்தி நான் சம்பாதித்ததை ஒரே ஆண்டில் இவர் சம்பாதித்து விட்டாரே?’ என ஆச்சரியமடைந்தார். இத்தனைக்கும் அந்த நிலத்தை வாங்கியவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரால் அதை எப்படி சாதிக்க முடிந்தது? அதற்கு காரணம், மனமும் மூளையும் ஒரே திசையில் பயணித்தது தான்.

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆறு வகையான மனதை ஒரே லகானில் பூட்டினால் ஒத்திசைவாக மாற்றினால் அந்த மனக் குதிரையின் வேகமும் வெற்றியும் அலாதியானது. அதைத்தான், அந்த வழிப்போக்கர் நிரூபித்தார். நாமும் அந்த வழிப்போக்கராக மாறினால் வெற்றி நிச்சயம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

No comments: