Thursday 25 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -18

1980ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பிரமாண்டமான வெற்றியை பெற, அப்போதைய பிரதமர் சரண்சிங்கின் ஜனதா கட்சி 41 இடங்களையும் சந்திரசேகரின் ஜனதா கட்சி 31 இடங்களையும் மட்டுமே பெற்றன. இது தவிர மார்க்சிஸ்ட் 37 இடங்களை வென்றிருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் அணியில் இருந்த திமுக 16 இடங்களை கைபபற்றியது. ஆளுங்கட்சியான எம்ஜிஆரின் அதிமுக சிவகாசி, கோபி என இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இந்த வெற்றியின் களிப்பால், இந்திரா கந்தி பாரதமரான உடனேயே ஆட்சி கலைப்பு அரங்கேறியது. கருணாநிதியின் நெருக்கடியால் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைப்பது சாதாரணமான நிகழ்வுகளாக இருந்து. இதனால், தமிழக மக்கள் மறுபடியும் ஒரு தேர்தலை சந்தித்தனர்.

1980 ஜனவரியில்  நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தலா 114 என தொகுதிப் பங்கீட்டோடு களமிறங்கின, திமுக காங்கிரஸ் அணி. அதில் முஸ்லிம் லீக்குக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சிகள் இருந்தன.

ஆனால், திமுகவின் கணக்கு பொய்யானது. ஜனவரி நாடாளுமன்ற தேர்தலில், இந்திராவை ஆதரித்த தமிழக மக்கள் மே மாத சட்டப்பேரவை தேர்தலில் அம்ஜிஆரையே மீண்டும் தேர்வு செய்தனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை பிடித்தது. அதிமுக மட்டும் 129 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்றது. தலா 114ல் களமிறங்கிய  திமுகவுக்கு 37 காங்கிரசுக்கு 31 என வெற்றி கிடைத்தது.



மூன்றே மாதங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்த இந்திரா காந்தி, அதன்பிறகு எம்ஜிஆருடன் நட்பு பாராட்டினார். மத்திய அரசின் உதவி தேவை என்பதால் முதல்வர் எம்ஜிஆரும் நட்புக்கரம் நீட்டினார். இந்த நட்பானது அடுத்த 16 ஆண்டு காலத்துக்கு அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமானது.

இந்த காலகட்டத்தில் தான், 1980ல் அமேதி தொகுதியில் வென்ற இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி அகால மரணம் அடைந்தார். அந்த தொகுதிக்கு 1981ல் நடந்த இடைத்தேர்தல் மூலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார் விமானியாக இருந்த இந்திராவின் மூத்த மகன் ராஜீவ் காந்தி. 



இப்படியாக அரசியல்களம் பல மாற்றங்களை சந்தித்த நிலையில், எம்ஜிஆரும் இந்திராவும் அசைக்க முடியாத தலைவர்களாக மாறிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தான், 1984 நாடாளுமன்ற தேர்தலின் மையமாக இருநதனர்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: