Saturday 27 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -19

1980 தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழல்கள், அதிமுக காங்கிரஸ் இடையிலான பந்தத்தை உறுதி செய்தன. 'மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் அதிமுக' என்பதே அந்த பந்தத்தின் பிரதான அம்சம். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் காங்கிரசுக்கும் சட்டப்பேரவையாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு அதிமுகவுக்கும் ஒதுக்கப்படும் என்பதே அந்த ஒப்பந்தம். இவ்வாறாக, கூட்டணி நீடிக்க இந்திரா காந்தியும் எம்ஜிஆரும் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக உயர்ந்தனர்.

இவ்வாறாக, அடுத்த தேர்தலை நோக்கி சென்றது. அந்த தேர்தலுக்கு முன்னால் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. அதற்கு 'காலிஸ்தான்' என்ற இயக்கம் பற்றி சில வரிகள் தெரிந்து கொள்வது நல்லது. பஞ்சாப், அரியானா உட்பட சீக்கியர்களின் பூமியை தனி நாடாக அறிவிக்க கோரி 1970களில் உருவானது தான் 'காலிஸ்தான்' இயக்கம். வெளிநாடுவாழ் சீக்கியர்கள் துணையோடு உருவான இந்த இயக்கத்தை பாகிஸ்தானும் ஊக்குவித்ததாக கூறுவது உண்டு. 



இப்போது காஷ்மீர் போல, அப்போது பஞ்சாபும் இந்தியாவின் தலைவலி. நாடாளுமன்ற தேர்தல் கூட தனியாகவே நடக்கும் அல்லது பல மாதங்கள் நடக்காமலே கூட இருந்தது உண்டு.  காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைக்கு அளவில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த சூழ்நிலையில் தான், அதன் தளபதி பிந்தரன் வாலே, சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் இருந்தபடி வன்முறையை அரங்கேற்ற தொடங்கினார்.



இதனால், காலிஸ்தான் தலைமை பீடமாக பொற்கோவில் மாறி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கையை தொடங்கினார், பிரதமர் இந்திரா காந்தி. 'ஆபரேசன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பொற்கோவில் முன் ராணுவத்தை நிறுத்தினார். கோவிலுக்குள் இருந்த தீவிரவாதிகளை சரணடைய சொன்ன ராணுவததின் எச்சரிக்கை பலனளிக்கவில்லை. இந்திரா உத்தரவின் பேரில், பொற்கோவிலுக்குள் நுழைந்தது ராணுவம்.



1984 ஜூன் முதல் தேதியில் இருந்து எட்டு நாட்கள் கோவிலுக்குள் முகாமிட்டு, உள்ளிருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்தது இந்திய ராணுவம். புனிதமான பொற்கோவிலுக்குள் ரத்த ஆறா...? என கொதித்தது சீக்கியர்களின் உள்ளம். இதனால் விளைந்தது, இந்தியா அதுவரை காணாத ஒரு அதிர்ச்சிகரமான துயரம். அது...?

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: