Monday 29 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -20

காங்கிரஸ் மூத்த தலைவர்களை வெற்றி பெற்றதில் தொடங்கி, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியது, பாகிஸ்தான் போர் வெற்றி, இரண்டாண்டு எமர்ஜென்சி, பிரதமராகவே தோல்வியடைந்த ஒரே நபர் என்ற போதிலும் மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றிய மன உறுதி என வளர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை பொற்கோயிலுக்குள்ளேயே சென்று துவம்சம் செய்தது வரை பார்த்த இந்திய மக்கள், இந்திராவை வியப்புடன் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கிடந்தனர். ஆனால் இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான துணிச்சல்தான் அவருக்கு முடிவுரையை எழுதியது. 



புளூ ஸ்டார் ஆபரேஷன் முடிந்த நான்கே மாதத்தில் 1984 அக்டோபர் 31ம் தேதியன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திராகாந்தி. இரும்பு பெண்மணியின் சரித்திரம் அவரது சொந்த மெய்க் காவலர்களான சீக்கிய இனத்தை சேர்ந்த சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற இருவரால் சரிந்தது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்னமும் நீடிக்கும் அந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் ஒருவர். இது தனியொரு அத்தியாயம்.

இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் படலம் காங்கிரஸ கட்சியில் தொடங்கியது. அதில் முன்னணியில் இருந்தவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர். ஆனால், சஞ்சய் காந்தி மறைவால் அரசியலுக்கு வந்து அமேதி எம்பி யான ராஜீவ் காந்திக்கு அந்த பதவி வந்து சேர்ந்தது. கட்சியின் ஒற்றுமை என்ற காரணத்தால் அரசியலில் நுழைந்த மூன்றே ஆண்டில் பிரதமர் பதவி தேடிவந்தது ராஜீவ் காந்தி வசம். பிரதமரான சில வாரங்களிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாரானார், ராஜீவ்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி தலைவரான எம்ஜிஆர், 1984ம் ஆண்டு இறுதியில் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். சென்னை அப்பலோவில் இருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படட எம்ஜிஆருக்கு இந்திரா காந்தியின் மறைவு செய்தி கூட சொல்லப்படவில்லை. ஆம். இந்திராவின் இறுதிச் சடங்கின்போது அமெரிக்காவில் இருந்தார் எம்ஜிஆர்.



இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜீவ் காந்தி தயாரானதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் ஆறு மாதங்களுக்கு முன்பே எதிர்கொள்ள தீர்மானித்தது, அதிமுக அரசு. 1985 ஜூன் மாதம் வரை ஆட்சியின் பதவிக்காலம் இருந்தது. அப்போதைய இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன், மூத்த அமைச்சர் ஆர்எம் வீரப்பன் போன்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து இரண்டு தேர்தலையும் சேர்த்து எதிர்கொள்ள தமிழகம் தயாரானது. 

1984ம் ஆண்டின் இறுதி நாட்களில் நடந்த அந்த தேர்தல்களின் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நேரடியாக தேர்தல் களத்தில் இல்லை. 

இரும்பு மனுஷி இந்திரா காந்தியோ இந்த உலகிலேயே இல்லை. ஆனால், இருவரும் தான் அந்த தேர்தலின் பிரதானமாக இருந்தனர். இப்படியொரு சூழ்நிலையில் 1984ம் ஆண்டு தேர்தலை காங்கிரசும் அதிமுகவும் சந்தித்தன. 

(நினைவுகள் சுழலும்)

- வை.ரவீந்திரன்

No comments: