Monday 15 April 2019

இது '94

உணவின் சூட்டை உள்வாங்கி கிறங்கி கிடக்கும் வாழை இலை போல மனதுக்குள் உறங்கி கிடக்கிறது நினைவுகள் தாலாட்டும் மூன்றாண்டு பிஎஸ்சி கணிதம். பதின்ம வயதுக்கே உரித்தான குறும்புகள், சேட்டைகள் எல்லாம் கரைந்த பின்னும் அடிநாக்கில் இனித்துக் கிடக்கும்  கற்கண்டாய் 

இன்றளவும் சுவை கூட்டுகிறது.

கால சக்கரத்தின் கோரப்பிடியில் சிக்கி சுழன்றாலும் மேலும் மேலும் சுவை கூட்டும் பண்டங்களில் மனிதனின் பழைய நினைவுகளும் ஒன்று. 

கல்லூரியின் முதல் நாள் வகுப்பு தொடங்கி நிறைவு நாளில் ஆட்டோகிராப், சினிமா, பிரியாணி என சுழன்ற 1994 நினைவுகளை மூளை நரம்புகள் பசுவாய் மாறி அசை போடுகின்றன. அந்த பொக்கிஷ நினைவுகளோடு இன்றைய நனவுகளும் சேர்ந்தது.


தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலேயே எனது 1991-1994 பிஎஸ்சி கணிதம் நண்பர்களின் சந்திப்பு ஈடேறியது. இன்றே தீர்த்தவாரியில் எழுந்தருளும் சுவாமிகளைப் போல எங்கள் பேராசிரியர்கள் பதின்மரை சந்திக்கும் வரம் பெற்ற பாக்கியசாலிகளானோம். அவர்களில் இருவர் எங்கள் கல்லூரியின் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த மனோன்மணியம் சுந்தரனார் தான் எங்கள் கல்லூரியின் முதல் முதல்வர். புதுமைபித்தன்,  பாரதி தொடங்கி சாகித்ய அகாடமி பெற்ற அறுவரை தந்த கல்லூரியும் எங்களதே. நெல்லை மண்ணுக்கே உரித்தான ஏலேய், மக்கா, மாப்ளே என விளித்த வார்த்தைகளை 45 பிளஸில் கேட்டபோது, சந்திப்பின் நோக்கம் கூடுதல் அர்த்தம் பெற்றது.

- நெல்லை ரவீந்திரன்

.


நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியின் 1991-1994 கணிதர்களின் சில்வர் ஜூப்ளி சந்திப்பு.

No comments: