Monday, 20 April 2015

ரகசிய பெட்டகங்கள்



 
 நீங்காத நறுமணங்கள்
நிறைந்த நந்தவனம்
இந்த உலகம்
ஓட்டை பானையில்
ஒழுகும் நீர் போன்ற
ஆயுள் கொண்ட மனிதன்
பாதம் பதிந்த பகுதிகளில் மட்டும்
பெயர்களின் வாசம்


காலம் நம் கரம் பற்றி
இழுத்து செல்லும் வழியில்
கரடு முரடான மலைகளும்
வளைந்த முகடுகளும்
வருத்தங்களை தரலாம்
வருத்தம் நீங்கி தடைகளை கடந்தால்
குளிர்தரும் நீரோடைகளும்
நறுமண சோலைகளும் வரவேற்கலாம்


ரகசியங்களின் குவியல்
ஆழ்கடலுக்கு மட்டுமேயானதல்ல
உயிர்தாங்கி உலவும்
உடல்கள் ஒவ்வொன்றும்
உடல்களை தாங்கும்
பூமியின் ஒவ்வொரு அங்குலமும்
சாவி இல்லா ரகசிய பெட்டகங்களே


= வை.ரவீந்திரன் 

Friday, 17 April 2015

எங்கே செல்லும் இந்த பாதை...?





இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது. இடையில் மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்திய மேலாதிக்க சிந்தனையை உடைத்தவர் அவரே. கடவுளின் பெயரால் கருத்துக் குருடர்களாக இருந்தவர்களின் கண்களை திறந்தவரும் அவரே. ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த இனத்தவரின் குழந்தைகளும் இன்று பள்ளிகளில் பலகைகளில் அமர்ந்து கல்வி பெறுகிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த போராட்டத்தால் விளைந்த பலன்களில் ஒன்று.

இவை எல்லாம் சாதனைகளா என்று யாரேனும் மனதுக்குள் நினைத்தால், இப்போதும் பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளாக அன்றாடச் செய்திகளில் வருபவற்றை சற்றே அசைபோட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கைம்பெண் மறுமணம், விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு திருமணம் என பெரிய மாற்றங்கள் எல்லாம் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்றால் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே அதற்கு காரணம். ஆனால், பெரியாரின் முற்போக்கு சமூக சீர்திருத்தக் கொள்கைகளை அவருக்குப் பின்னால் வந்த அவரது சீடர்கள் சரியாக எடுத்துச் செல்கிறார்களா...?  

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் இன்னமும் கவுரவ கொலைகள் நடைபெறுவதற்கு பெரியார் தோற்றுவித்த இயக்கத்தில் இப்போது இருப்பவர்கள் கூறும் பதில் என்ன...? இது ஒருபுறம் இருக்க... மூட நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளையும் (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)  எந்த மண்ணில் பெரியார் தீவிரமாக எதிர்த்து வந்தாரோ அதே மண்ணில் மீண்டும் மதச்சார்பு கொள்கைகளும் மூட நம்பிக்கைகளும் வேகமாக வேர் பிடித்து வருவதற்கு காரணம் என்ன? பெரியாரின் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் முறையாக கொண்டு செல்லும் பணிகளை சரியாகச் செய்யாதது தான்.

சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதும் சமூக சீர்திருத்தப் பணிகளும் மட்டுமே தனது தலையாய பணி என்று கூறியதோடு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர், தந்தை பெரியார். அரசியல் பிரவேச ஆசையினாலேயே அவரது திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவானது என்பதும் அண்ணா உள்ளிட்டோரை ‘கண்ணீர் துளிகள்’ என்று பெரியார் வருணித்ததும் வரலாற்று உண்மை.

ஆனால், பெரியாருடைய திராவிடர் கழகத்தின் இன்றைய நிலை என்ன? பெரியார் தெரிவித்த சமூக சீர்திருத்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பதிலாக ஏதோ ஒருவகையில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தேர்தல் அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் வேலைகள் மட்டுமே செவ்வனே நடைபெறுகின்றன. அதில் ஒன்று தாலி அறுப்பு போராட்டம்.
எத்தனை சுயமரியாதை திருமணங்களில் பொன்னணி என்ற பெயரில் தாலி கட்டுகின்றனர் என்ற உண்மை போராட்டம் நடத்தியவர்களுக்குத் தெரியாதா...? பிறகு, என்ன தாலி அறுப்பு போராட்டம்? ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற அந்த போராட்டத்துக்கு வந்த 21 தம்பதியினரில் பெரும்பாலானோர் (தங்களின் தங்கத் தாலியை (பொன்னணி) பத்திரப்படுத்திவிட்டு) புது மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கு அணிந்து வந்தனர், என்பது பத்திரிகைகள் கூறும் தகவல்.

தந்தை பெரியாரின் கொள்கை என்ற பெயரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் இந்து மத அமைப்புகளை கோபமூட்டும் வகையில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினால் அவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும். அதன்பிறகு, இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும் (திராவிடர் கழகம் அல்லாத), பெரியாரிஸ அமைப்புகளும் ஒன்று திரண்டு எதிர்வினையாற்றுவார்கள்.

அந்த சமயத்தில் அவர்களை ஓரணியில் மெதுவாக திரட்டுவதோடு, அதிமுக தலைமை மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கமான பாணியில் வசை பாடிவிட்டு அப்படியே அந்த அணியை திமுக ஆதரவு அணியாக இழுத்து வருவது தான் வீரமணியின் தாலி அறுப்பு அஜண்டா வின் பின்னணி. பெரியாரிசத்தை பரப்புவது தான் முதன்மையான நோக்கமெனில் தமிகத்தின் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் தலைவிரித்தாடும் சாதி மோதல்களுக்கு எதிராக சாதி மறுப்பு பிரச்சாரத்தில் அல்லவா, பெரியாரின் இயக்கம் களம் இறங்கி இருக்க வேண்டும்?

இலங்கை இனப் படுகொலைக்கு பிறகு தமிழ் அமைப்புகளும் பெரியார் கொள்கைகளை (கி.வீரமணி போல அல்லாமல்) முன்னெடுத்துச் செல்லும் பிற இயக்கத்தினரும் திமுக மற்றும் காங்கிரஸ் மீது மிகவும் கொந்தளிப்பில் இருந்து வருவதும் இலங்கை இன பிரச்சினையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்டோரின் எந்த சால்ஜாப்புகளையும் ஏற்கும் மன நிலையில் தமிழக மக்கள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

பெரியாருடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை இருந்தால் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிஸ அமைப்புகள் வலியுறுத்துவது போல, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்த புத்தகங்களை நாட்டுடைமையாக்க முன் வந்தால் போதும். பெரியார் தெரிவித்த கருத்துகளை திருக்குறள் போன்று பல்வேறு தமிழ் பதிப்பகங்களும் புத்தகங்களாக வெளியிடும்போது பெரியாரைப் பற்றி சாமான்ய மக்களும் தாமாகவே படித்து அறிந்து தெளிந்து கொள்வார்கள். பெரியார் கூறிச் சென்ற சமூக சீர்திருத்த, பகுத்தறிவு கொள்கைகளுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை.

பெரியாரின் பெயரில் இந்து அமைப்புகளுக்கு எதிராக கொம்பு சீவும் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், பெரியார் என்பவர் இந்து மதத்துக்கு எதிரானவர் என்ற பிம்பம் மட்டுமே எதிர்கால சந்ததியினரின் மனதில் படிந்து விடும். அவரது சமூக நீதி போராட்டங்களும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான கருத்துகளும், சாதி மறுப்பு கொள்கைகளும் சுயமரியாதைச் சிந்தனைகளும் மறக்கடிக்கப்பட்டு விடும். இதுதான், அவருக்கு செலுத்தும் மரியாதையா...?

= வை.ரவீந்திரன் 

Thursday, 16 April 2015

திரு அணங்கையர்





அரி அரன் அரவான்
அடுக்கடுக்காய் கடவுள்
நாமங்களைக் கூறினாலும்
கடவுளுக்கே தாலி கட்டியபோதும்
சமூகத்தின் ஜனத் திரளுக்குள்
தொலைந்து விட்ட மனித இனம்.


குரோமாசோம்களின்
குளறுபடியான குறும்பில்
குழந்தையாய் விளைந்த
மலர முடியாத அரும்புகள்
வண்டுகள் நாடா மலர்கள்

ஒரு பாதி ஆணாய்
ஒரு பாதி பெண்ணாய்
அர்த்தநாரீஸ்வரராய் இருந்தும்
அங்கீகாரத்துக்காக போராடும்
அங்கீகாரமற்ற ஆண் தேவதைகள்...?

இயற்கையின் முரண்பாட்டால்
விளைந்த மூன்றாம் பாலினம்
மனித(?) சமுதாயத்தின் தவறால்
தவறே இழைக்காமல்
தண்டனை அனுபவிக்கும் சிற்றினம்

சீழ்க்கை ஒலிகளும்
சகிக்க முடியா கேலிகளும்
புல்லினமாக கூட மதிக்க முன் வரா
சமூகத்தின் கழுகுப் பார்வைக்குள்
பாதுகாப்பை தேடும் பறவைக் குஞ்சுகள்

(ஏப்ரல் = 15  திருநங்கையர் தினம்)

= வை.ரவீந்திரன் 

Thursday, 9 April 2015

கூலித் தொழிலாளியின் கையறு நிலை









உன் இருட்டு தொழிலுக்குள்
எங்களை இழுத்துச் செல்கிறாய்...!
எங்கள் வறுமை நெருப்பின் மீது
கரன்சி நோட்டுகளை வீசிறி
மயக்கம் ஏற்படுத்துகிறாய்...!

வனத்தின் மூச்சு திணறும் வரை...
எங்களையும் சேர்த்து இழுக்கிறது
உனது அடங்கா பண வெறி...!
உன் பசிக்கு எங்களை தின்னுகிறாய்!
எங்களை முன்னிறுத்தி நடக்கிறது உனது ஆட்டம்

கரன்சி, காக்கி, கடத்தல், கவர்மென்ட்
வலிமையான ஆரவாரங்களுக்குள்
எங்களின் அவலக்குரல் அமுங்கி விட்டது...
சத்தமின்றி வனத்தில் தொடங்கிய பயணம்
பேரொலியோடு புறப்பட்ட புல்லட்டுகளின்
சத்தத்தில் சத்தமின்றி அடங்கி விட்டது...
மரக்கட்டைகளுடன் எங்கள் உடல் கட்டைகள்

எங்களின் மிச்ச சொச்சங்களை
கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டு
மீண்டும் தேடுகிறாய் எங்களைப் போல
மற்றொரு எங்களை...
பணமே பிரதானமாகிவிட்ட மண்ணில்
இந்த இரவு மட்டுமல்ல
நாளைய விடியலும் கூட
உனக்காக மட்டுமே...!



 = வை.ரவீந்திரன்.

Tuesday, 17 March 2015

கம்பர் பார்வையில் இலங்கை


மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு இலக்கியம் மீது கொண்ட காதலால் விளைந்த கட்டுரை இது.... 

 = வை.ரவீந்திரன்.


வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும் கம்பரின் ராமாயணத்துக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு. தமிழருக்கே உரித்தான பண்பாட்டை மிகச் சிறப்பாக கம்பர் விவரித்திருப்பார். தமிழ் இலக்கியங்களில் கம்பரின் ராமாயண காவியம் தனித்துவமானது. கம்பரின் கற்பனை வளமும் இலக்கிய புலமையும், உவமை செறிவும் அதில் நிறைந்து காணப்படும். அந்த காவியத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் இலக்கிய ஆர்வலர்களின் ரசனைக்கு சிறந்த விருந்தாக இருப்பதாலேயே, ‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்’ என்ற சொல் வழக்கு தமிழில் உருவானது.

பல்வேறு காண்டங்களாக பகுக்கப்பட்டிருக்கும் ராமாயணத்தில், ‘சுந்தர காண்டம்’ பகுதி சிறப்பு வாய்ந்தது. சுந்தரன் என்றால் அழகன் என்று பொருள். கம்பர் சுட்டிக் காட்டும் அந்த அழகன் யாரெனில் அனுமன். ஒருவரது புறத்தோற்றம் மட்டுமே அழகு அல்ல. சவுந்தர்யம், பராக்கிரமம், அறநெறி, தீமையை வேரறுத்தல் போன்ற குணங்களை கொண்டவரே உண்மையான அழகன் என அனுமனின் குணங்களை வெளிக்காட்டி பெருமைப்படுத்தி மகிழ்கிறார், கம்பர்.

இலங்கையில் அசோக வனத்தில் சிறைப்பட்டு கிடக்கும் சீதையின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக புறப்பட்டுச் செல்கிறான், அனுமன். வங்கக் கடலை கடந்து இலங்கை தீவுக்குள் அனுமன் நுழைந்ததும் அனுமனின் கண்கள் வழியாகவே இலங்கை மாநகரின் அழகையும் அதில் புதைந்து கிடக்கும் ஆபத்தையும் ஒரு சேர விவரிக்க தொடங்குகிறார். இலங்கையை மூதூர் என்று குறிப்பிடுவதோடு அந்த படலத்துக்கும் ‘ஊர் தேடு படலம்’ என்றும் பெயர் சூட்டியுள்ளார். சுந்தர காண்டத்தில் உள்ள படலங்களில் மிகப் பெரியதாக இந்த படலம் உள்ளது.

ஒரு விருந்தினராக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் சிறப்பு விருந்தினராகவே இருந்தால் கூட, அந்த நாட்டின் சிறப்பான பகுதிகளை மட்டுமே சுட்டிக் காட்டுவார்கள். மறைக்க வேண்டியதை மறைத்து உயர்த்த வேண்டியதை உயர்த்தி காட்டும் மரபே இன்று வரை தொடருகிறது. அதனால்தான், இலங்கையை முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் ‘ஏரியல் வியு’ எனப்படும் கழுகுப் பார்வை மூலமாக விவரிக்கிறார்.

ஒரு பொன் அந்தி மாலைப் பொழுதில் பவள மலையில் சென்று இறங்குகிறான், அனுமன். அங்கு இருந்தபடியே இலங்கையை காண்கிறான், மாருதி. அந்த இடத்தில் இலங்கையின் பரப்பளவும், தோற்றமும் சுட்டிக் காட்டப்படுகிறது. முட்டை வடிவில் காணப்படும் இலங்கை, 700 யோசனை பரப்பளவு கொண்டதாகவும் 3 பிரிவுகளாகவும் கடல், மலை, காடு போன்ற இயற்கை அரண்களோடு மதில், அகழி என்று பாதுகாப்பு அரண்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

இந்திரன் மாளிகையை விட சிறந்ததாக வானுயர்ந்து நிற்கும் மாளிகைகள் உள்ளன.தெருவின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்வது என்பது ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்வதை போன்றதாகும். சூரியனிடம் உள்ளது போன்ற ஒளி மிகுந்த திடகாத்திரமான குதிரைகள், யானைகள், மக்கள் கூட்டம் என இலங்கை நகரம் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள மரங்கள் கூட, இந்திரனிடம் இருந்து ராவணன் பறித்து வந்த கற்பக தருக்கள் என்று வருணிக்கிறார், கம்பர்.

அடுத்தபடியாக, கம்பரின் கற்பனை திறன் சிறகடித்து பறப்பதை பாருங்கள். மலை போல உயர்ந்து நிற்கும் மதில் சுவர்களை தாண்டி நுழைய முடியாத காரணத்தால் மின் மினி பூச்சி போல கதிரவனின் ஒளி நகருக்குள் நுழைகிறதாம். சூரியனின் கதிர்கள் படாத காரணத்தால் மிகுந்த கரிய நிறமுடைய அரக்கர்களின் மேனிகளும் கூட சற்று வெளுப்படைந்து காணப்படுகிறதாம். நகரில் உள்ள தரை முழுவதும் பொன்னாகி விட்டதாலும் மாளிகைகளில் பொன், முத்து, வைரம், மணிகள் நிறைந்து காணப்படுவதாலும் அந்த ஒளியே சூரியனின் ஒளியை விழுங்கி விட்டது என்றும் கம்பர் விவரிக்கிறார்.  

இதை, ‘கறங்கு கால் புகாகதிரவன் ஒளிபுகா மறலி...’ என்று ஆரம்பித்து,

 ‘அறம் புகாதிந்த அணிமதிர் புறத்து நின்றகத்தின்...’ என்ற வரிகளுடன் நிறைவு செய்கிறார்.

அதாவது, இலங்கைக்குள் சூரியன் எவ்வாறு புகுந்து செல்ல முடியவில்லையோ அதுபோல அறநெறியும் அந்த மதில் சுவருக்குள் புக முடியாமல் புறத்தே நிற்கிறது என்று கூறுகிறார். அறம் நுழைய முடியாத அந்த மதிலுக்கு அப்பால் என்ன நடக்கிறது? அதையும் விவரிக்கிறார். வீணை இசைப்பதில் வல்லவனான ராவணனுக்கு இனிய இசை மீது அதிக மோகம் உண்டு. தனது கொடியிலேயே வீணையை இலச்சினையாக பொறித்தவன். அவன் வழியிலேயே இலங்கை நகர மாந்தர்களும் இனிய இசையை இசைத்து மகிழ்ந்து கிடக்கின்றனர்.


‘சாடியுள் நறவம் உண்டாள் தன் உரு வேறுபாட்டை

ஆடியுள் நோக்கி நானோ அல்லனோ.....’
என்ற வரிகள் மூலமாக மது மயக்கத்தில் கண்ணாடி முன்பு மருங்கி நிற்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அதே நேரத்தில் இலங்கை பெண்களின் குரலையும் அனுமன் வாயிலாக வியந்து
‘குழலும் வீணையும் யாழும் என்றினைய குழைய

மழலை மென்மொழி கிளிக்கிருந் தளிக்கின்ற மகளிர்’ 

என பாராட்டுகிறார், கம்பர்.


தேவாதி தேவர்களையும் வெற்றி கொண்டு தனது அடிமைகளாக ராவணன் வைத்திருந்தான் என்பது தெரியும். அவர்களும் இலங்கை நகரில் எப்படி இருக்கிறார்கள் என்பதை,

‘சித்திரப் பந்தியில் தேவர் சென்றனர்

இத்துணை தாழ்தனம் முனியும் என்றுதம்

முத்து இன ஆரங்களும் முடியின் மாலையும்

உத்தரீ யங்களும் இரிய ஒடுவார்’
என கூறுகிறார். 

அலுவலக நேரத்தை கடந்து சென்றால் சம்பளப் பிடித்தம் செய்வார்களோ என்று அஞ்சி ஓடும் தனியார் நிறுவன ஊழியர்கள் போல தேவர்கள் ஓடுகிறார்கள். எப்படி? மார்பில் அணிந்திருந்த மாலைகளும், அணிந்திருந்த ஆடைகளும் துவண்டு சரிய ஓட்டம் பிடிக்கின்றனர். அரண்மனைக்குள் நுழையும் போது அவர்கள் பணிந்த முறையானது, அடிமை வாழ்க்கையை சுட்டிக் காட்டுகிறது.

இதுபோல, ரம்பை, திலோத்தமை உள்ளிட்டோர் செல்வதை
‘உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர

      மேனகை வெள்ளடை உதவ

செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல

       அரம்பையர் குழாம் புடைசூழ.....’   என்று பாடியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பல தேசத்து மன்னர்களும் இலங்கை வேந்தனின் தாழ் பணிந்து தொழுது நிற்கின்றனர். அவ்வாறு மண்ணில் மண்டியிடும்போது கழுத்தில் அணிந்த மாலைகளில் இருந்து முத்து மற்றும் மணிகள் உதிருகின்றன. சூடியுள்ள பூக்களில் இருந்து மகரந்த தூள்கள் சிதறுகின்றன. இவை எல்லாம் தெருவில் குப்பைகளாக தேங்குகின்றன. அவற்றை வாயு பகவான் உடனுக்குடன் பெருக்கித் தள்ளி தெருவை சுத்தம் செய்கின்றான். இதில், மற்றொரு உட்பொருளும் பொதிந்துள்ளது. முத்தும், மணியும் தெருவில் கிடந்தாலும் யாரும் அதை பொருட்படுத்தாத அளவுக்கு செல்வச் செழிப்பில் இலங்கை இருக்கிறது என்பதே அதன் அர்த்தம்.  கம்பனின் கற்பனை வளத்தை என்னவென்று வியப்பது...?

பவள மலைக்கு அனுமன் வந்து நெடுநேரமாகி விட்டது. அங்கிருந்தபடியே இலங்கையை பார்த்த அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இப்போது, இருட்ட தொடங்கி விட்டது. இலங்கையின் வானில் மெதுவாக இருள் கவிவதை, ‘ராவணனின் பாவம் போல வளர்ந்து, அவனது பழி போல பரந்து விரிகிறது இருள்’ என கம்பர் வருணிக்கிறார்.

இலங்கை நகரின் புற அழகை இந்த அளவுக்கு வருணித்து விட்டு அப்படியே அரண்மனை நோக்கி பயணிக்கிறார், கம்பர். அனுமன் வாயிலாக. ஆம். இருள் கவியத் தொடங்கியதும் பவள மலையில் இருந்து புறப்பட்டு அரண்மனைக்குள் உள்ள மாளிகைகளை நோக்கி செல்கிறான், அனுமன். சீதையை காணும் முன் அரண்மனைக்குள் அவன் பார்த்த காட்சிகளை விவரிப்பது தனி ரகம். அள்ளிப் பருக பருக சுவை குறையாத கம்ப ராமாயணத்தின் சிறு பகுதி இது

= வை.ரவீந்திரன் 

Tuesday, 17 February 2015

டெல்லி தோல்வி... மோடி கடிதம் எழுதினால்...?

உடன்பிறப்பே,

அம்மையார் வழி காட்டுதலில் நடந்த ஆட்சியின் எண்ணிலடங்கா ஊழல்களால் மனம் வெதும்பி இருந்த இந்திய மக்களை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் மனதில் கொண்டு இமை துஞ்சாமல் நாம் களப்பணி ஆற்றினோம். அண்ணல் வாஜ்பாயி வழியில் நாடு முழுவதும் சுழன்று வந்து ஊர் தோறும் உங்களை சந்தித்தேன்.

இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் 3000 கூட்டங்களில் பங்கேற்றேன் என்றும் இது மிகப்பெரிய சாதனை என்றும் அந்த அம்மையாரின் ஆதரவு ஏடுகள் கூட எழுதின. தேர்தலில் நமக்கு மிகப்பெரிய வெற்றியை நாட்டு மக்கள் வழங்கி அவர்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் பெரும்பான்மை வழங்கியதாக 15 ஆண்டுகளுக்கு முன் நமக்கு எதிரான பொய் பிரசாரத்தில் ஈடுபட்ட ஏடுகள் கூட பாராட்டின.

அவை எல்லாவற்றையும் விட கண்மணியே உன்னை நேரில் வந்து சந்தித்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை மட்டுமே நினைத்து நான் அகம் மகிழ்கிறேன் என்பது உனக்கு தெரியாதது அல்ல. குஜராத் வீதிகளில் தேநீர் விற்று கொண்டிருந்த என்னை இந்த பதவிக்கு உயர்த்தியது உடன்பிறப்பே உனது உழைப்பு அல்லாமல் வேறு ஏது? அந்த நினைவுகள் அனைத்தும் இன்றும் கூட என் கண் முன்னே நிழலாடுகிறது.

குடியரசு தின விழாவில் நான் அணிந்திருந்த ஆடையை பார்த்து அமெரிக்க அதிபரே வியந்து நின்றதை உலகம் அறியும். சிறு வயதில் தேநீர் விற்பதற்காக ஆற்றுக்கு அக்கரையில் உள்ள கிராமத்துக்கு நான் சென்றபோது வழியில் முதலையை பார்த்ததும் மற்ற சிறுவர்கள் எல்லாம் மீண்டும் கரைக்கு திரும்பியபோது நான் மட்டும் முதலையுடன் சண்டையிட்டு அக்கரைக்கு சென்ற கதையை இப்போது நினைவு கூர்ந்து அக்கறையுடன் விசாரித்தார், அமெரிக்க அதிபர்.

இப்படி இந்தியாவின் புகழை உலக அளவில் வியக்கச் செய்தது மாத்திரமல்ல, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என நமது அண்ணல் கூறியபடி ஆட்சி செய்து வருகிறாம். அதனால் தான், அம்மையார் கையசைவில் நடந்த ஆட்சியின்போது அறிமுகமான திட்டங்களை கூட மன மாச்சரியம் இன்றி நமது ஆட்சியிலும் தொடருகிறோம்.

ஆட்சியில் இல்லாதபோது நெருப்பாகவும் ஆட்சியில் இருக்கும்போது மிக பொறுப்பாகவும் நாம் இருப்பது எதிர்க்கட்சி தோழர்களுக்கும் நடுநிலையாளர்களும் தெரியும். இந்த சாதனைகளுக்கு பரிசாகத்தான் மராட்டியம் முதல் காஷ்மீர் வரை நாம் ஜெயபேரிகை கொட்டிச் செல்ல முடிந்தது.

அந்த வெற்றி களிப்பிலேயே நாம் மயங்கி இருந்து விட்டோமா அல்லது அண்ணனின் தேநீர் சுவையில் மெய் மறந்து விட்டாயா என தெரியவில்லை சுண்டைக்காய் மாநிலமான டெல்லியில் வெற்றிக் கனி எட்டா உயரத்துக்கு சென்று விட்டது. அதிலும் நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தோல்வி நமக்கு அல்ல, அம்மையாருக்குத்தான். இந்த கருத்தை நமது பெரிய ஆசிரியர் அமித் ஷாவும் ஒப்புக் கொண்டார்.

டெல்லியில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது நமது கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 33 விழுக்காடு. தற்போது, 32.20 விழுக்காடு கிடைத்துள்ளது. நமது வாக்கு விகிதத்தில் 0.80 விழுக்காடு மட்டுமே வேறுபாடு. அதே நேரத்தில், அந்த அம்மையாரின் கட்சிக்கு 25 விழுக்காடு வாக்குகள் சரிந்து விட்டன.
ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக நாம் போர்ப்பரணி பாடி நாட்டு மக்களை எழுச்சியுறச் செய்தபோது, ஊழல் எதிர்ப்பு என்ற கூர்மையான ஆயுதத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகவே சாமான்ய மக்கள் என்ற புதிய இயக்கத்தை அந்த அம்மையாரின் கட்சியினர் தொடங்கச் செய்தனர்.
அவர்களது ஆசியுடன் தொடங்கப்பட்ட அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தான், இப்போது ஆட்சியை பிடித்திருக்கிறார். இப்போது அந்த அம்மையாருக்கு கிடைத்த தோல்வி என்பது விதியோ, சதியோ அல்ல.. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதை தவிர வேறு இல்லை.

ஆட்சி கட்டிலில் புதிதாக அமரும் அருமை நண்பருக்கு எனது வாழ்த்துகள். இந்த முறையாவது முழுமையாக ஆட்சி செய்வார் என்று நம்புகிறேன். நம்மை எதிர்த்து நின்ற அவரது கட்சியின் பெயரில் மட்டும் தான் சாதாரண மக்கள் என்ற பதம் இருக்கிறது. உண்மையில் அந்த கட்சித் தலைவர் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி. ஐ.ஆர்.எஸ் என்றால் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ஆனால், நமது கட்சியின் தலைமை பீடத்தில் இருக்கும் நானோ, மிகச் சாதாரணமான தேநீர் விற்பனை செய்த ஏழை என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற தவறி விட்டோம். அதனால் தான், இந்த சரிவு நமக்கு ஏற்பட்டுள்ளது.
வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் சமமாக கருதுபவனே என் தம்பி என அண்ணலும் ஜனசங்க தலைவர்களும் நான் தேநீர் விற்ற காலத்திலேயே கூறினர். அவர்கள் காட்டிய வழியில், இந்த சரிவு என்னும் இடையூறை புறந்தள்ளி விட்டு பீகார், தமிழகம், கர்நாடகம் என நமது களப்பணி தொடரட்டும். குடும்ப ஆட்சியின் ஊழல்களையும் அம்மையாரின் அதிகார துஷ்பிரயோகங்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

டெல்லியில் தோல்வி ஏற்பட்டதாலேயே நமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக ஆர்ப்பரிப்பவர்கள், நமது ஆட்சியின் மகோன்னதம் புரியாதவர்கள். இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ள டெல்லியின் தேர்தல் முடிவுகளை பூதாகரமாக்கி மகிழ்பவர்களை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நமது வளர்ச்சியை பொறுக்க முடியாத சில ஏடுகளும் நம்மை வசை பாடுவதையே தொழிலாக வைத்துள்ளோரும் கூறுவதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மக்களுக்கான நமது பணிகளை தொடருவோம்.

அன்புடன்
ந.மோ.

காதலி விடு தூது

கண்ணுள்ளே இருக்கிறாய் நீ
சிறிய உரு கொண்டு - ஆதலின்
இமைப்பதை மறந்தேன்...!

தீட்டினால் துன்புறுவாய் என
மையிடலை துறந்தேன்...!
நெஞ்சுள்ளே உன் நினைவு
நிறைந்து கிடப்பதால்
சூடான உணவு உண்ணேன்...!
 

அயலரறியா என் காமம்
தெருவெல்லாம் திரிகிறது
மயக்கம் கொண்டு...!
நான் பட்ட பாட்டை
தான் படாத பேதையர்
என் நிலை கண்டு நகைப்பா்...!
 

ஆயினும்
வள்ளுவன் வெட்டிய
இன்பப்பால் கடல் நோக்கி
தூது விடுகிறேன்
என் உயிர் காதலை...


= வை.ரவீந்திரன் 

Monday, 19 January 2015

ஹேப்பி பொங்கல்...!

கழனிகளை திருத்தி
காலனிகளாக்கி விட்டோம்
விளை நிலங்கள் அனைத்தும்
விலை நிலங்களாகி விட்டன
சாலையோர வயல்களை அழித்து
நெடுஞ்சாலை என தார் ஊற்றி
நடுவில் மலர்க்கொத்து நட்டாகி விட்டது


ஊருக்கு சோறிட்ட உழவனின் வயிறு
உள்வாங்கி பரிதாபமாக நிற்கிறான்
உழவனின் உபகாரியான
காளைகளும் காணாமல் போய்விட்டன
தமிழன், தமிழ், வேட்டி, தமிழர் திருநாள்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
உச்சரிக்கும் சம்பிரதாய சொற்களாகி விட்டன

அதிகாலை எழுந்து வாசலில்
சாணம் தெளித்து கோலமிட்டு
புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு
மாடுகளை அலங்கரித்து
மஞ்சள், கரும்பு, மாவிலை தோரணத்துடன்
கதிரவனை வணங்கி வரவேற்று கொண்டாடிய
தமிழனின் பொங்கல் போய் விட்டது

அடுக்குமாடி குடியிருப்பில்
அடுத்தவருக்கு தெரியாமல்
எரிவாயு அடுப்பில் பொங்குகிறது
தமிழனின் தமிழ் பொங்கல்
அதனாலென்ன...!
நாமும் சொல்வோம்...!
ஹேப்பி பொங்கல்...!

= வை.ரவீந்திரன்  
 


Tuesday, 6 January 2015

வெள்ளைக் கொடியில் படிந்த ரத்த துளிகள்

வௌ்ளைக் கொடி ஏந்தி வந்த
வீரா்கள் வீழ்த்தப்பட்டனர்
கொடியில் படிந்த ரத்தத் துளிகளும்
உறைந்து நாளாகி விட்டன
நெஞ்சம் நிமிர்த்தி நின்ற
வேங்கைகளும் வதைக்கப்பட்டன
ஏதுமற்ற ஏதிலிகளாய்
எல்லோரும் துரத்தப்பட்டனர்

பச்சிளம் பாலகனின் பசியாற்றி
புல்லட்டுகள் இரை எடுத்துக் கொண்டன
 நந்திக்கடலும் குருதி பூசி
செந்நிறமாகிக் கிடக்கிறது
யுத்தம் முடிந்து விட்டதாக
அறிவித்த பேரொலிகள் அடங்கி விட்டன
வேதனை முனகலும் வலிகளின்
கதறலும் காற்றில் கரைந்து விட்டன
காய்ந்து போன கண்ணீரில்
சமாதிகளும் மவுனித்து விட்டன   

சம்பிரதாய போர் செய்திகளும்
உருவம் மறைத்து அருவமாகி விட்டன
சோலைவனமாக பூத்துக் குலுங்கி
பாலைவனமாகி விட்ட பூமியில்
புதிதாக சில கூக்குரல்கள்
பூபாளம் இசைத்து வலம்வருகின்றன

சொந்த மண்ணில் சொந்தம்
இழந்து நிற்கும் ஏதிலிகளிடம்
பசப்பு வார்த்தைகள்
பல்லிளித்து வட்டமிடுகின்றன
வெந்து தணிந்த கரங்களில்
வைக்கப்பட்ட வாக்கு ஆயுதம்
என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்?
கேள்விகள் தொக்கி நிற்கிறது
வழியற்றவா்களின் விழிகளில்.....

= வை.ரவீந்திரன்  



வளமாக்கும் சிக்கனம்

வரலாறுகளில்
தகராறுகள் உருவாவது
சொல் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

குடும்பங்களில்
மன பேதங்கள் உருவாவது
பொருள் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

வயல்கள் எல்லாம்
மனைகளாக உருவாவது
நீர் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

சிதையாத சிக்கனம்
வாழ்வை வளமாக்கும்
இலக்கணம்

= வை.ரவீந்திரன்