Friday, 22 February 2019

நாடாளுமன்ற தேர்தல் 4

இந்தியாவின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன், மொழிவாரி மாநில மறுவரையறை குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. 1948ல் அமைக்கப்பட்ட அந்த குழு, ஏழெட்டு ஆண்டு ஆய்வுக்கு பிறகு அளித்த பரிந்துரையை 1956ம் ஆண்டில் மத்திய அரசு ஏற்று 'மாநில மறுவரையறை சட்ட'த்தை கொண்டு வந்தது. அதன்படி, சென்னை மாகாணமும் பிரிக்கப்பட்டு சிறியதானது.

கேரளா, மைசூரு, ஆந்திரா என புதிய மாநிலங்கள் உருவானதால் சென்னை மாகாணத்தின் பகுதிகள் அங்கு சென்றன. இதனால், 75 எம்பிக்களை கொண்டிருந்த சென்னை மாகாணம் 34 உறுப்பினர்களை கொண்டதாக சுருங்கியது. அதே நேரத்தில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 494ஆக அதிகரித்தது. மூன்று உறுப்பினரை தேர்வு செய்யும் தொகுதி ரத்து செய்யப்பட்டது.

மொத்த தொகுதிகளான 403ல் 312 தொகுதிகளில் தலா ஒரு எம்பியும் 91 தொகுதிகளில் தலா 2 எம்பிககளும் (கூடுதலாக எஸ்சி அல்லது எஸ்டி வேட்பாளர்) தேர்வு செய்யும் வகையில் அமைந்திருந்தன. இப்படியான மாற்றங்களுடன் 1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.




வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, போக்குவரத்து வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இது போன்று ஐந்தாறு மாதங்களுக்கு தேர்தல் பணிகள் நீடித்தன. இந்தியாவின மேனோபோலி கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் மறுபடியும் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், திமுக களமிறங்கிய முதலாவது தேர்தல், சுயேச்சைகளின் ஆதிக்கம் என சுவாரஸ்யங்களுக்கு இந்த தேர்தலில் பஞ்சமில்லை.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 3

முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் 36 கோடி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானோர் மட்டுமே, அதாவது பத்தரை கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது 489 இடங்களில் 364 இடங்களை நேரு தலைமையிலான காங்கிரஸ் கைப்பற்றியது. பதிவான மொத்த வாக்குகளில் நான்கே முக்கால் கோடி வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேரு தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 1952ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று மீண்டும் பிரதமரானார், நேரு.
16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இந்த தேர்தலில் பல பெருந் தலைகள் உருண்டன. ஆச்சார்யா கிருபளானியின் கிஸான் மஸ்தூர் கட்சி 9 இடங்களை பிடித்தபோதிலும் உத்திர பிரதேச மாகாணம் பைசாபாத்தில் கிருபளானி தோல்வியடைந்தார்.
இதுபோல அம்பேத்கரின் எஸ்சி பெடரேஷன் கட்சிக்கு இரண்டு இடம் கிடைத்தும் பம்பாய் வடக்கு மத்தி தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். 1954ல் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலிலும் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. மேல்சபை வழியாக நியமன உறுப்பினராகத்தான் அவரால் நாடாளுமன்றம் செல்ல முடிந்தது.




1952 தேர்தலில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம். இந்து அமைப்புகள் 10 இடங்களை பிடித்திருந்தன. இந்து மகாசபா கட்சிக்கு 4 ஜன சங்கம் மற்றும் ராம ராஜ்ய கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. இதில் ஜனசங்கம் மட்டும் 32.5 லட்சம் வாக்குகளை வாங்கியது. இரண்டாவது பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் வாங்கிய மொத்த வாக்குகள் 35 லட்சம் என்பதும் கவனிக்கத்தக்கது.
முதலாவது, தேர்தலின்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டில் ஆந்திரா, கேரளா, மைசூர் போன்ற பகுதிகளும் இணைந்திருந்ததால் உ.பி. மாகாணத்துக்கு அடு்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய மாகாணமாக இருந்தது.
மொத்தம் 62 தொகுதிகளில் இருந்து 75 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாகாணத்தில் தேர்வான 75 பேரில் 35 பேர் காங்கிரஸ் கட்சியினர். கம்யூனிஸ்ட் சார்பாக 8 பேர் வெற்றி பெற்றனர்.
ஆனால், இரண்டாவது நாாளுமன்ற தேர்தல் 1957ல் நடந்தபோது சென்னை மாகாணத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 34ஆக குறைந்து விட்டது.
(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் 2

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தேர்தலில் களமிறங்க தலைவர்கள் பலர் தயாரானார்கள். ஜனநாயகம் என்றாலே பல கட்சிகளின் பங்களிப்பு தானே. நேரு தலைமையில் இருந்த தேசிய இடைக்கால அரசில் அங்கம் வகித்த தலைவர்கள் பலர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தனிக் கட்சிகளை தொடங்கினார்கள். தேர்தலில் போட்டியிடும் ஏற்பாடுகளையும் தொடங்கினார்கள்.
எஸ்சி பெடரேசன் என்ற கட்சியை அம்பேத்கர் தொடங்கினார். இந்த கட்சி தான் பின்னாளில் குடியரசு கட்சியாக மாறியது. கிஸான் மஸ்தூர் கட்சியை ஆச்சார்யா கிருபளானியும் ஜன சங்கம் கட்சியை ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தொடங்கினார்கள். இது போல ஏராளமான கட்சிகள் தொடங்கப்பட்டன. மாகாண அளவிலும் மாகாணங்கள் அளவிலும் செல்வாக்கு பெற்றிருந்தன, அந்த கட்சிகள். இது தவிர, அப்போது பலமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலுக்கு தயாராக இருந்தது.
உண்மையான ஜனநாயக நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 'சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்காக போராடிய காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் எனவும் சுதந்திர போராட்டத்துக்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது' எனவும் காந்தி கூறியது உண்டு. ஆனால், சுதந்திரம் பெற்ற சில மாதங்களியே காந்தி மறைந்து விட்டதால் அது ஈடேறவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, சுதந்திம் வாங்கித் தந்த கட்சி என்ற கிரெடிட்டுடனேயே தேர்தலில் களமிறங்கியது. மக்களுக்கும் அதன் மீது பெரிதான கிரேஸ் இருந்தது.
இப்படியான காட்சிகளுடன் புதுப்புது கட்சிகளும் களமிறங்கிய முதலாவது பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை பல கட்டங்களாக 120 நாட்கள் நடைபெற்றது. சென்னை மாகாணம் உட்பட 25 மாகாணங்கள். மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. முதல் தேர்தலிலேயே காஷ்மீரின் பங்களிப்பு கிடையாது. இமாச்சலில் பனி காரணமாக ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.



இந்தியா முழுவதும் வாக்களிக்க தகுதியானவர்களாக 36 கோடி பேர் இருந்தனர். 6 மாதங்களுக்கு மேலாக நீடித்த தேர்தல் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கிலான ஊழியர்கள் ஈடுபட்டனர். அன்றைய தேர்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் ரிசர்வ் (தனி) தொகுதிகள் கிடையாது. மாற்றாக இரட்டை பிரதிநிதித்துவ முறை அமலில் இருந்தது. எப்படி..?
நாடாளுமன்றத்துக்கு 489 பேரை தேர்வு செய்யும் தேர்தல் என்றாலும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 401தான்.
இந்த 401ல் 314 தொகுதிகளில் தலா ஒரு எம்பி தேர்வானார். 86 தொகுதிகளில் எஸ்சி அல்லது எஸ்டி ஒருவரை கூடுதலாக தேர்வு செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது இரட்டை உறுப்பினர்கள் தொகுதிகள். ஒரே ஒரு தொகுதியில் மூன்று எம்பிக்கள் தேர்வானார்கள்.
இப்படியான பல்வேறு வித்தியாசமான அனுபவங்களுடன் நடந்த முதலாவது பொதுத் தேர்தலிலேயே பல அதிர்ச்சிகரமான முடிவுகளை இந்திய வாக்காளர்கள் அளித்தனர். முக்கியமான பிரபலமான தலைவர்கள் பலர் தோல்வியடையும் வரலாறும் அந்த தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 1


2016 பிப்ரவரியில் இதே நாளில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் பரவத் தொடங்கியும், தமிழக தேர்தல் பற்றிய நினைவுகளை எனது வலைப்பூவில் (திலீபன் சிந்தனை) அசை போட்டபோது 35 பகுதிகள் வரை போனது.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் காய்ச்சல் பரவ தொடங்கி விட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்களாக இளம் தலைமுறையினர் வருகின்றனர். இந்த தேர்தலிலும் தான். சட்டப்பேரவை தேர்தல் போலவே நாடாளுமன்ற தேர்தல் நினைவுகளையும் சுழல விடலாம் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன்.
1947ல் சுதந்திரம் பெற்றபோது குத்தகைதாரரை காலி செய்து விட்டு ஹவுஸ் ஓனர் குடியேறிய வீடு போலத்தான் இந்தியா இருந்தது. இது, கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டு குத்தகையாக இருந்ததால் செப்பனிட வேண்டிய பணிகள் அதிகம். சமையலறை, ஹால் தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்தது புதுப்பிக்க வேண்டியிருந்தது.
அதாவது, தனி அரசியலமைப்பு உட்பட ஒட்டு மொத்தமாக மாற்றம் தேவைப்பட்டது. இதைத்தான் 1947 ஆகஸ்டில் அமைந்த நேரு, படேல் தலைமையிலான அரசு செய்தது. இந்தியாவுக்கென தனி அரசியலமைப்பு சட்ட கொள்கைகளை அம்பேத்கர் வகுத்தார். 1949 நவம்பரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பட அனைத்து விதமான நிர்வாகங்களும் தயாரானது.
அடுத்தகட்டமாக குடியரசு நாடாக இந்தியாவை மாற்றும் பணிகள் தொடங்கின. நேரு தலைமையிலான அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் இடம் பெற்ற இடைக்கால தேசிய அரசு இந்த நடவடிக்கைகளை தொடங்கியது. 1950 ஜனவரியில் முறைப்படி குடியரசு எனப்படும் ஜனநாயக நாடாக இந்தியா மாறியது.
அதன் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் ஏற்பாடுகளை தொடங்கும் பணி. சுதந்திர அமைப்பாக தேர்தல் ஆணையத்தை ஏற்படுத்தியதும் அதில் ஒன்று. இந்த ஜனநாயக பணிகளில் கொஞ்சம் கோக்கு மாக்கு நடந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இப்போது நம்மால் பேச முடியாது. பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
புது வீட்டுக்கு குடியேறுவது போல பார்த்து பார்த்து செய்த வேலைகள் எல்லாம் நிறைவடைவதற்கு முழுமையாக 4 ஆண்டுகள் பிடித்தது. அதுவரையிலும் நேரு தலைமையில் தேசிய அரசு தொடர்ந்தது.
இறுதியாக 1951 மத்தியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் அறிவிப்பு வெளியானது. மிக நீண்ட காலம் நடைபெற்ற தேர்தல் அது..




(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

Saturday, 8 December 2018

நீ வருவாய் என...

கிளைகளில் இளைப்பாறி
இலைகளின் ஊடாய்
வழிந்தோடுகிறது பனித்துளி
நூலிழையாய் பிணைந்து
நெஞ்சுக்குள் குளிரை தைக்கிறது
தெருவிளக்கின் மின்னொளியில்
தோற்றுப் போகிறது மின்மினிகள்
விடியலுடன் கூடிக் கரைய
காத்திருக்கும் பின்னிரவு
இரவு பாடல்கள் தீர்ந்த பின்னும்
முணுமுணுத்துக் கிடக்கும்
சுவத்துக் கோழி சுட்டிகள்
வைகறைப் பொழுதின்
ஏகாந்தத்தில் தனித்திருக்கிறேன்
நீ வருவாய் என....

Saturday, 1 September 2018

கவனம் திருப்பும் குயிலிசை...

பாளம் பாளமாய் கிடந்த
வெடிப்புகளில் பாய்ந்த
புது வெள்ளத்தால்
பருவ பெண்ணாய்
பூத்து கிடக்கிறது கண்மாய்

உடை வேம்பு ஊடாய்
வேம்பு புளியை கடந்தலைந்த
வெயிலின் வெம்மை தணிந்து
குளுமை குளம்வலம் வருகிறது
உறுத்தாத நறுமணம் தரித்து...

பொட்டலில் காற்றுக் குடித்து
மயங்கி கிடந்த அரவங்களின்
கும்மாளம் குளக்கரையில்...
மஞ்சள் பாம்பாக நெளிகிறது
தண்ணீரில் தவறி விழுந்த
மத்தியான நேரத்து சூரியன்...

பழுத்த இலைகளை
துளி துளி கண்ணீராய்
உகுத்து நின்ற ஆலமரத்தில்
புதிதாக பரவிய பசுமை
புது பணக்காரன் போல
காற்றுடன் கலந்து
அருவியாய் சலசலக்கிறது

மனித இயற்கை பந்தயமாய்
மீன் கொக்கு சடுகுடு ஆட்டம்
சீட்டியடித்து உற்சாகமூட்டும்
குருவி, கிளிகளின் கூட்டம்
நொடியில் கவனம் திருப்பும்
தூரத்து குயிலிசை...

= நெல்லை ரவீந்திரன்


அதிகாலை சிணுங்கல்...

போதும் என்கிறது மனம்
தேகமோ இன்னும் கொஞ்சமென
பாவமாய் கெஞ்சுகிறது
போர்த்திய இருளின் சுகத்தில்
நீடிக்கிறது கதகதப்பு
இருட்டு போர்வையை விலக்கி
எட்டிப் பார்க்கும் சூரியனுக்கும்
மசமசப்பு கலந்த மயக்கம்

தாழ்வாரத்தில் சொட்டும்
மழை நீரின் மத்தள சத்தமும்
மாமர குயிலின் குழலிசையும்
உள்ளுக்குள் குறுகுறுவென
எங்கோ இழுத்து செல்கிறது
அதிகாலை மழை குளிரின்
வேணும் வேணும் என்ற
மெல்லிய சிணுங்கலில்
கலைய மறுக்கிறது உறக்கம்...

= நெல்லை ரவீந்திரன்

சிதறிப்போன எழுத்துகள்...

குதிருக்குள் குவிந்து கிடக்கும்
நெல்மணிகளாய் எழுத்துகள்...
வெல்லக்கட்டியை இழுத்துச்
செல்லும் எறும்பாக மாறி
துண்டுகளாக சேகரித்து 
வைக்கிறேன் எழுத்துகளை
கதிரின் ஊடாக பறந்து
கம்பும் சோளமுமாக
கொத்திச் செல்லும்
கிளியாக எடுத்து வந்து
உள்ளங் கையில் சேமித்து
வைக்கிறேன் எழுத்துகளை
இடையில் முடிந்திருக்கும்
சில்லறை காசுகளை
திரும்ப திரும்ப எண்ணும்
பராரியாக ஒவ்வொன்றாய்
எண்ணிப் பார்த்து
வைக்கிறேன் எழுத்துகளை
எப்படியாவது எழுத்துகளை
வார்த்தைகளாக்கி
கவிதை தோரணம்
கட்டி விடும் வேகம் எனக்குள்
எழுத்துகள் ஒன்று கூடி
வார்த்தையாகும் தருணம்
சிறுவாடாய் சேகரித்த
எழுத்துகள் எல்லாம்
சில்லறையாய் சிதறின
உன் விழி ஈர்ப்பு விசை கண்டு..


Friday, 20 April 2018

நாடோடி மன்னன்

திரைத்துறை வேலை நிறுத்தம் முடிவதற்கு முன் தினம். மீண்டும் ஒரு முறை அந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 280 இருக்கை கொண்ட தியேட்டரில் 80 பேர் வரை இருந்தார்கள். அன்று 30வது நாளை தாண்டி இருந்தது. 



செந்தமிழே வணக்கம்.. என்ற பாடலுடன் படம் தொடங்கியது. கருப்பு சிவப்பு கொடியை 4கே டிஜிடலில் கருப்பு சிவப்பு நடுவில் அண்ணாவை சேர்த்து மாற்றியிருந்தார்கள். எம்ஜியார் பிக்சர்ஸ், எம்.ஜி.ராமச்சந்திரன், டைரக்சன் எம்,ஜி,ஆர். என்ற எழுத்துகள் தொடங்கி மக்களாட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் எம்ஜிஆரின் முகம் தெரியும் வரை கைதட்டல்கள் ஓயவில்லை. 

1958ல் வெளி வந்த படம். 60 ஆண்டுகளான பிறகும் இன்றைய அரசியலுக்கான படமாகவே தெரிகிறது. படத்துக்கு வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் (ஆஹா…)

.

.

சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை.. 

மார்த்தாண்டன்… மன்னனாம்… மறைந்த மன்னனுக்கு மருமகனாக இருந்தால் என்ன.. அந்த ஆண்டவனுக்கே அருள்மகனாக இருந்தால் என்ன… எனக்கு தேவை என் சொல் பேச்சு கேட்கும் ஒரு பொம்மை….

நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மக்களை பார்க்கிறேன்….

நீங்கள் ஒருவர் அரண்மனையில் எல்லாரையும் முட்டாளாக்குகிறீர்களே..? இல்லை. அரண்மனையில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என பார்க்கிறேன்.

ஆண்டியின் மடமாக இருந்தாலும் அழகிகளுக்கு பஞ்சமில்லை….

.

.

இவை எல்லாம் கண்ணதாசனின் வசன தேன் குடத்தின் சில துளிகள்.

உன்னைத்தான் இந்த நாடே நம்பி இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட பிறகு சுக துக்கங்களை பார்க்கலாமா...? 


தெரிந்தோ தெரியாமலோ 1958லேயே இப்படி எல்லாம் எம்ஜிஆரை பார்த்து கதாபாத்திரங்கள் பேசுகின்றன. 

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு. நம்பிக் கெட்டவர்கள் ஒருவருமில்லை. 

எம்ஜிஆரின் காலங்களை கடந்த வசனமும் இந்த படத்தில் தான்.

கதை....

ரத்தினபுரியின் மன்னர் காலமானதோடு இளவரசியும் காணவில்லை. இதனால், அவரது தமக்கை மகன் மார்த்தாண்டன் மன்னர் பட்டத்துக்கு வருகிறார். அதை ராஜகுரு, தளபதி, ராஜகுருவின் கையாள் தடுக்க முயற்சிப்பதோடு, மார்த்தாண்டனை கொல்ல முயற்சிக்கின்றனர். அதில், அவன் மயக்கமடைய மக்களாட்சிக்காக போராடும் நாடோடி, உருவ  ஒற்றுமையால் மன்னராக்கப் படுகிறான். உபயம் மதி மந்திரி..

அடுத்தடுத்த அரசியல் சதிராட்டத்தில் நாடோடி பற்றி ராஜகுருவுக்கு தெரிய வர, சில தகிடு தத்தங்களுக்கு பிறகு கன்னித் தீவுக்கு மார்த்தாண்டனை கடத்திச் செல்கிறார். அந்த தீவின் தலைவராக இருப்பதும் ராஜகுருவே. அது, அவரது அடிப்பொடிகளுக்கு கூட தெரியாது. இந்த தகவலை அறிந்ததும் நாடோடியும் தீவுக்கு செல்கிறார். அங்கு சில பல திருப்பங்களுக்கு பிறகு மன்னனை கண்டு பிடித்து மீட்கிறார். இதில் நாடோடி, மன்னன் இருவரும் எம்.ஜி.ஆர். ராஜகுரு பி.எஸ். வீரப்பா, அவரது கையாட்கள் நம்பியார், எம்.ஜி.சக்கரபாணி.

இந்த கதைக்கு இடையே பானுமதி, சரோஜாதேவியுடன் எம்ஜிஆர் காதல். மன்னர் மார்த்தாண்டனுக்கு ராணியான எம்.என்.ராஜத்துடன் காதல். மறைந்த மன்னரின் மெய்க்காப்பாளர் தலைமையில் ஒரு புரட்சிப்படை, நகைச்சுவைக்கு சந்திரபாபு அவருக்கு இரண்டு நாயகிகள் என இடைச் செருகல்கள். 

சற்றே நீளமான இந்த கதையை (கதை... ஆர்எம் வீரப்பனின் கதை இலாகா குழு)  குழப்பம் ஏதுமில்லாமல் சலிப்பு தட்டாமல் திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார், இயக்குனர் எம்ஜிஆர். 60 ஆண்டுகளுக்கு முன்பே... 

.

.

நான் சிறுவனாக இருந்தபோது மூன்றே முக்கால் மணி நேரம் ஓடிய திரைப்படம். இப்போது சந்திரபாபுவின் நகைச்சுவை, காதல் காட்சிகள், சண்டை காட்சிகளின் நீளம், கன்னித் தீவின் அறிமுக காட்சி என ஏராளமான கட்டுகளுக்கு பிறகு 4கே டிஜிட்டல் நுட்பத்தில் 200 நிமிடங்களாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. 

பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த படம் 6.30க்கு, (நடுவில் 5 நிமிடமே இடைவேளை) முடிந்தபோது நம்பவே முடியவில்லை.

சண்டைக் காட்சிகளில் எம்ஜிஆரின் ஜம்பிங் உப்பரிகையில் இருந்து குதிப்பது ஜாக்கிசானை நினைவு படுத்துகிறது. வீரப்பா, நம்பியாருடன் தனித்தனியாக அவரிடும் துறு துறு வாள் சண்டை அபாரம். கிளைமாக்சில் வரும் கயிற்றுப் பால சண்டைக் காட்சியை ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்திலும் பார்த்ததாக நினைவு. மார்த்தாண்டனை பாதாள சிறையில் அடைத்திருக்கும் காட்சியை 23ம் புலிகேசி படத்திலும் பார்க்கலாம். இப்படியாக வருங்கால சினிமா தலைமுறைக்கு எம்.ஜி.ஆர். வாரித் தந்திருக்கும் காட்சிகள் இந்த படத்தில் ஏராளம்.

முதலில் கருப்பு வெள்ளையாகவும் கடைசி முக்கால் மணி நேரம் கோவா வண்ண படமாகவும் வந்துள்ள இது, தமிழின் முதல் பரிசோதனை வண்ணப்படம் என்பது கொசுறு. அலிபாபாவும் 40 திருடர்களும் முழு நீள வண்ணப்படம் என்பது கூடுதல் கொசுறு. வண்ணப் பகுதியில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அறிமுகம்.

தூங்காதே தம்பி..., 

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே..., 

சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர பூட்டி… 

உட்பட படத்தில் 10 பாடல்களும் அருமை. பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட கவிஞர்கள். 

இது இரட்டை வேட படம் என்பதையும் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட வியக்கத்தக்க முயற்சியையையும் சொல்லியே ஆக வேண்டும். 

முதன் முதலில் இரண்டு எம்ஜிஆரும் சந்திக்குபோது இருவரும் பேசும் வசனங்களில் கண்ணதாசன் நிற்கிறார். காட்சிகளின் தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நிற்கிறார். பின்னர், படத்தின் கிளைமாக்சில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக தோன்றும் காட்சிகள்.

கன்னித் தீவு காட்சிகளின் ஆரம்பம், கழுகு குகை, கிளைமாக்சில் பிரவாகமெடுக்கும் தண்ணீர். மலை உச்சியில் உக்கிரமான சண்டை (இதே சண்டை காட்சியை ரஜினியின் மாப்பிள்ளை படத்திலும் கிளைமாக்சில் பார்க்கலாம்) என கோவா கலரில் ஒவ்வொரு காட்சிகளும் அதன் ஒளிப்பதிவும் சிறு வயதில் பார்த்தது இன்னும் மனக் கண்ணில் நிற்கின்றன. 

ஆனால், டிஜிடலில் அந்த காட்சிகளை குறைப்பதாக கருதி ஆச்சரியத்தை ஆ... என்ற அளவிலேயே நிறுத்தி விட்டனர். அப்போதே மும்பை சென்று கோவா கலர் பிரிண்ட் போட்டிருந்ததை கொஞ்சம் நினைத்து பார்த்திருக்கலாம்.

முற்றாக… 

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்த இந்த திரைப்படம் 60 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை கவர்வதில் வியப்பில்லை. தியேட்டரை விட்டு வந்த பிறகும் தலையை தடவியபடியே சகுனி வேலை பார்க்கும் எம்.ஜி.சக்கரபாணியின் முகம் நினைவில் நிற்கிறது. கூடவே, வீரப்பாவின் பல்லிடுக்கின் வழியாக வெளிவரும் மிரட்டல் குரலும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Tuesday, 2 January 2018

ரஜினி… அரசியல்… அதிர்வு…

20 ஆண்டு கால யோசனைக்கு பிறகு முடிவை அறிவித்து விட்டார், ரஜினி. அவரது 5 நிமிட உரையின் அதிர்வலை அடங்குவதற்கு இன்னும் சில வாரம் பிடிக்கலாம். ரஜினியே கூறியது போல, அவரது 45வது வயதில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மீதான வெறுப்பு, கலைஞர் மீதான அவநம்பிக்கையால் 1996 தேர்தலில் அந்த யோகம் அமைந்தது. அப்போது மூப்பனாருடன் ரஜினி கை கோர்த்திருந்தால் அண்ணாமலையின் சைக்கிள் ரெக்கை கட்டி பறந்திருக்கும். அந்த தேர்தலில் திமுக கூட்டணிக்காக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்தது கூட, அடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து தான்.
ரஜினியின் தயக்கத்தாலும், கலைஞரின் ராஜதந்திரத்தாலும் திமுக கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது. அதன்பிறகும் கூட, அரசியல் கடலில் குதிக்காமல் கரையில் அமர்ந்து ஆழத்தை அளந்து பார்த்தே காலம் உருண்டோடி விட்டது. இன்று ஒரு ரசிகர், பேரன், பேத்தி எடுத்து விட்டதாக கூறுகிறார். ஆனாலும் 1996ல் இருந்த ஆர்வத்தில் தான் இருக்கிறார். அரசியல் அறிவிப்பை முழுமையாக வெளியிடாவிட்டாலும் குற்ற உணர்வு உறுத்தும் என கூறி விட்டதால் நிச்சயமாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்பார்க்கலாம். கூடவே, சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால்… நிச்சயம் 1996 திரும்பும் என ரசிகர்கள் நம்புவார்கள்.
அதற்கு முன்பாக சில விஷயங்களில் ரஜினி தயாராக வேண்டும். இதுவரை ரஜினியை ரசித்தவர்கள், புத்தாண்டில் இருந்து வேறுபாடு பார்க்கலாம். கவிஞர் வைரமுத்து கூறியது போல, கலைஞனுக்கும் தலைவனுக்கும் வேறுபாடு உண்டு. தலைவனாக மாறும்போது சிலவற்றை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் எழுப்பிய கேள்விகள் இன்னும் பதில் கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன.
அது ஒருபுறம் இருக்க… காவிரி, மீத்தேன் போன்ற பிரச்சினைகளில் ரஜினி குரல் கொடுத்தாரா என குரல்கள் எழும்பும். ரஜினியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என மற்றொரு பக்கம் இருந்து குரல்கள் எழும்பும். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர். கலைஞர், ஜெயலலிதா என யாருக்கும் கொள்கைக்காக யாரும் ஓட்டு போடவில்லை என தெரிந்தும் இந்த கேள்வி கணைகள் வரும். மிக உறுதியான கொள்கைகளை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கி இல்லை என்பது தெரிந்தும் கூட, நாம் தமிழர் கட்சிக்காக அல்லாமல் சீமானுக்காக வாக்கு விழுகிறது என தெரிந்தும் கூட கேள்விகள் எழும்பும். அவற்றுக்கு சரியான பதில் ரஜினியிடம் இருக்க வேண்டும். எப்போதுமே நேர்முக தேர்வுகளில் செயல்களை விட பொருத்தமான பதில்கள் தான் வெற்றியை தேடி தரும். அது, அரசியல் நுழைவு தேர்வுக்கும் பொருந்தும்.



75 நாட்களாக முதல்வரை கண்ணில் காட்டாமலேயே ஆட்சி நடத்திய அரசியல், கூவத்தூர் டிராமா, உடை அலங்காரத்தை மாற்றி அரியணையை நெருங்கியது, இடை தேர்தல் மூலமாக முதல்வர் நாற்காலிக்கு பிராக்கட் போட்டது என பல விதமான அரசியல் நிகழ்வுகளை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்ததோடு சில தருணங்களில் அவற்றுக்கு ஒத்துப்போன அரசியல் தலைவர்களையும் தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அந்த தலைவர்களுக்கும் சரியான பதில்கள் கைவசம் தேவை. பாஜக உடன் ரஜினியை தொடர்பு படுத்தி எழும் விமர்சனங்களுக்கும் மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல் தான் தனிபர் விமர்சனங்கள் தாறுமாறாக எகிற தொடங்கும். மலையாளி, அட்டைகத்தி வீரன், கோமாளி என எம்ஜிஆரும் பால்கனி பாவை, பாப்பாத்தி, செல்வி…? என ஜெயலலிதாவும் எதிர்கொண்ட விமர்சனங்களை ஒரு புத்தகமாகவே போடலாம். அதை தாண்டியே, புரட்சித் தலைவராகவும் அம்மாவாகவும் அவர்கள் உயர்ந்தார்கள். ரஜினிக்கு குடும்பம் இருப்பதால் மனைவி, மகள், மருமகனின் தவறுகளும் பூதக் கண்ணாடி போட்டு பார்க்கப்படும். இதற்கெல்லாம் ரஜினி தயாராக இருக்கிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். எனினும், அவரது அரசியல் பிரவேசம் டூடூடூ லேட்..
ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளை மட்டும் மிக தீவிரமாக எதிர்க்கும் தமிழ் அமைப்புகளும், கன்னடத்தை உள்ளடக்கிய திராவிடத்தின் பெயரை கூறிக் கொண்டு ரஜினியை கன்னடர் என விமர்சிக்கும் திராவிட கட்சிகளும் இப்போதே தங்கள் எதிர்ப்பை தொடங்கி விட்டன.
இது ஜனநாயக நாடு. மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் புகழ், பதவி என்னும் பட்டம் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறக்கும். ‘உங்களில் உத்தமர் ஒருவர், இந்த பெண்ணின் மீது கல் எறியுங்கள்‘ என இயேசு பிரான் கூறிய கருத்தை உள்வாங்கி வைத்திருப்பவர்கள், தமிழர்கள். எனவே, ரஜினியை விமர்சிப்பவர்களை எளிதில் தரம் பிரித்து பார்த்து விடுவார்கள். ஆனால், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகள் தான் அந்த ஆதரவை உறுதி செய்யும்.
= நெல்லை ரவீந்திரன்.