Wednesday, 19 May 2021

கி.ரா - அஞ்சலி

 கரிசல் மண் இலக்கிய தந்தை தமிழ்  எழுத்துலக  பிதாமகன் கரிசல் மண்ணிலேயே விதையாகி விட்டார்.

புதுச்சேரியில் இருந்த நாட்களில் அவருடன் கிடைத்த அனுபவத்தை அசை போட்டு பார்க்கிறேன். சில இடங்கள் மட்டும்தான் சிலரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். என்னை பொருத்த வரை அதுபோன்ற இடம் என்றால் புதுச்சேரி. ஆன்மீக பூமி, எழுத்தாளர்களின் சுவர்க்க புரி. நாற்பதுக்குள் மறைந்த பாரதியும் சரி. சதம் எட்டிய கி.ரா.வும் சரி. இதற்கு சரியான உதாரண நாயகர்கள்.

புதுச்சேரி பல்கலை கழகத்தின் கவுரவ விரிவுரையாளராக மட்டுமே பணியாற்றிய கி.ராஜநாராயணனுக்கு ஓய்வுக்கு பின்னும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கி கவரவம் செய்தது புதுச்சேரி அரசு. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உளள அந்த குடியிருப்பில்தான் பல தசம ஆண்டுகளாக அவர் வசித்தார். தமிழகத்தில் இப்படி ஒரு கவுரவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பத்து ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி சென்ற புதிதில் கி.ரா அங்கிருக்கிறார் என்பது மட்டும் தெரியும். எங்கிருக்கார் என தெரியாது. ஒருநாள் கமல்ஹாசன் அங்கு வந்து சென்றதாக செய்தி வந்தது. கி.ரா. 90வது பிறந்த நாளையொட்டி யாரும் அறியாமல் இரவு நேரம்  வந்து திரும்பி இருக்கிறார். எழுத்தாளர்களை பாராட்டுவதில் கமல் தனி ரகம். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை கவனித்திருக்கலாம்.

கமல் வந்து சென்ற பின்தான், லாஸ்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அவர் வசிப்பது தெரிந்தது. ஒருநாள் காலை வேளையில் அவரது வீட்டை தேடிச் சென்றபோது, அந்த குடியிருப்புக்குள்ளேயே பல தெருவை சுற்றி கடைசியாக ஒரு பிளாக்கில் மேல்தள வீடு ஒன்றை அங்குள்ளவர்கள் காட்டினார்கள். அங்கு சென்று பார்த்தால் அது எழுத்தாளர் பிரபஞ்சன் வீடு. ஆம். புதுச்சேரி அரசு அவருக்கும் அதே லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி இருந்தது.

இந்து தமிழ் இதழின் புதுச்சேரி பதிப்பு ஆசிரியரான பின்புதான் கி.ரா. அறிமுகம் வாய்த்தது. நான்கைந்து முறை அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அப்போது இந்து தமிழில் தொடர் ஒன்றை கி.ரா. எழுதிக்கொண்டிருந்தார். அவரது கையெழுத்துப் பிரதியை வாங்கி வருவதற்காக சென்றதுண்டு. ஆண்டுதோறும் நடத்தும் வாசகர் விழாவுக்கும் கி.ரா. வந்திருந்தார். அவருடன் பேசும்போது கிராமத்தில் தாத்தாவிடம் பேசும் உணர்வு தான் வரும். தமிழில் வட்டார மொழிகளை மறக்கக் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணம்.



இந்த சந்திப்புக்கெல்லாம் சிகரமான ஒரு சந்திப்பு உண்டு. அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாததொரு தருணம். 

அந்த நல்ல நாளின் காலைப்பொழுதில் இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக அவருடன் புதுச்சேரி வந்திருந்தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஏற்கனவே எனது புத்தக வெளியீடு மூலம் எஸ்.ரா. அறிமுகமாகி இருந்ததால் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் ஒன்று வெளியாகி இருந்த தருணம் அது. 

கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் என்றும் கி.ரா வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சிறந்த தருணம் அது. கடற்கரை சாலை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே புத்தகம் போடும் அளவுக்கு இருந்தது. 

கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை எல்லாம் எஸ்.ரா.வுடன் அசை போட்டுக் கொண்டார். சின்ன வயதில்  எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டிருக்கிறார். புதுமைப் பித்தனை பதம் பார்த்த அதே வியாதி. அதில் இருந்து மீண்டு, எமன் வாயில் இருந்து ஆங்கிலேய மருத்துவர் ஒருவர் அவரை மீட்டு வந்தது. புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். 

அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் கி.ரா. உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது. அவரவர் சொந்த ஊர் எத்தனை ஆண்டு பழமையானது, அதன் பெயர் காரணம் போன்றவயெல்லாம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எத்தனை பேர் அதில் குறைந்த பட்ச ஆர்வம் காட்டியிருப்பாம் என்ற எண்ணம் தான் அப்போது மேல் எழுந்தது.

அவருக்கு பதிலாக, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி சுவை. அவர் தேசாந்திரி என்பது அவரை வாசித்த வாசகர்கள் அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்தது,  அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, அந்த பகுதியின் புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. 

கிராமங்களின்  பெயர்கள் பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழில் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார் எஸ்.ரா. அங்குள்வர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார். இரண்டு இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது.



அதன்பிறகு, அதீதி ஓட்டலுக்கு எஸ்.ரா அவர்களுடன் திரும்பியபோது, கி.ரா. உடனான சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், 

"தற்சமயம், 90 வயது கடந்து வாழும் முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்".

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இருவருமே சதமடிப்பார்கள் என நினைத்தோம். காலத்தின் கணக்கு வேறு மாதிரியாகிப் போனது...

#நெல்லை_ரவீந்திரன் 

மிக அரிய வாய்ப்பின் தருணத்தை அன்றைய எனது மொபைலில் படம் எடுத்துக் கொடுத்தவர், கி.ரா.வின் புதல்வர்.

Monday, 19 April 2021

கடல்புறா... சுக அனுபவம்...

 சின்ன வயசில வாசிப்பு பழக்கம் ஆரம்பிச்சப்போ நிறைய தினசரி, வாரப்பத்திரிகைகளை படிப்பேன். அதுக்கப்புறம் ஆலங்குளம் லைப்ரரிக்கு போக ஆரம்பிச்சப்ப எனக்கு அறிமுகமானது அவரது எழுத்துகள். 

வரலாற்று நாவல்னாலே அவர்தான். அவர் மட்டும்தான். எனக்கு வேகமாக நகரும் கதையை விட காட்சிகளை நின்று நிதானமாக ரசித்து சொல்பவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் சாண்டில்யனின் நாவல்களும். என்னோட முதல் சாய்ஸ் அவர்தான்.

சாண்டில்யனுக்கு அப்புறமா, சின்ன காட்சிய கூட பல பக்கம்... பத்தி பத்தியா... சுவாரஸ்யமா எழுதுறவர், எஸ்.ரா. இது என்னோட எண்ணம். சாண்டில்யன் வரலாறுக்குன்னா இவர் சம கால சமூகத்துக்கு...

சின்ன வயசில லைப்ரரி மெம்பராகி கடல்புறா, ஜலதீபம், யவன ராணி, ராஜமுத்திரை மாதிரி நாவல்களையெல்லாம் ஒவ்வொரு பாகமா தேடித்தேடி சொல்லிவச்சி வாங்கிப் படிச்சிருக்கிறேன். அப்புறமா சென்னை பாண்டிச்சேரின்னு லைப்ரரிங்கள்ல மெம்பரானாலும் சாண்டில்யன் மட்டும் மிஸ்ஸாயிட்டே இருந்தாரு. சில நேரம் ரொம்ப பழைய புக்கா படிக்க உதவாதுன்னு சொல்லி ஓரங்கட்டி வச்சிருப்பாங்க...

ஒவ்வொரு முறை புத்தக கண்காட்சி போகும்போதும் சாண்டில்யன் புத்தகங்கள வாங்கனுமின்னு நினைச்சிப் போனா, வேற புத்தகங்கள வாங்கிட்டு இத வாங்க முடியாம போகும். டைம் இருக்காது.. இல்ல பணம் இருக்காது...



இந்த தடவை அப்பிடி இல்ல. இன்றைக்கு (பிப். 28) தி.நகர் பர்ச்சேஸ் முடிஞ்சி நேரா புத்தக கண்காட்சிக்குப் போய் மொதல்ல வாங்கினது, கடல்புறா புத்தகம்தான். ரொம்ப வருஷத்துக்கப்புறம் ஸோ ஹேப்பி..

.

.

கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம், (ஏப்.18) கடல் புறாவில் பயணம். உண்ணும்போதும் உறங்கும்போதும் அதில் கடல்வலம். காதல், வீரம், சோகம், அரசியல் சூழ்ச்சி, போர் வியூகம். இப்படியாக கடல்புறா தளத்தில் இளைய பல்லவன், அமீர், கண்டியத்தேவன், சேத்தனோடு கூடவே நானும்.

சிறு வயதில் இருந்தே பரிச்சயமான கடல்புறாவில் என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றவர், சாண்டில்யன். கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் காலத்துக்கு பின், மீண்டும் கீழ் திசை நாடுகளை கையகப்படுத்திய அநபாயன் எனும் குலோத்துங்க சோழன்காலத்து கதை.

தமிழகத்தின் புகாரில் புறப்பட்டு இன்றைய ஒரிசாவான அன்றைய கலிங்கத்தின் பாலூர் துறைமுகம் துவங்கி, ஸ்ரீவிஜயம், சுவர்ண தீவு, சாகர தீவு என கரம் பிடித்து கடல் வழியே அழைத்துச் சென்ற கடல் புறாவை பிரிய மனமில்லை. கதைக்களம் சரியாக இரண்டு ஆண்டுகள். ஒரு சித்திரா பவுர்ணமியில் துவங்கி, இரண்டாவது சித்ரா பவுர்ணமியில் நிறைவடைகிறது. நாவலை படித்து முடித்த இந்த தருணமும் கூட சித்திரா பவுர்ணமியின் நெருக்கம்தான்.


கடாரத்தின் கட்டழகி காஞ்சனா தேவி, சீனத்தின் கலப்பின மஞ்சளழகி என ஒரு புறம் மயக்க வைக்கின்றனர். சீனத்து கொள்ளைக்காரனும் பிற்கால சீன அரசனுமான அகூதா, அரேபியாவின் பிரம்மாண்ட அமீர், அவர்களிடம் கடல்போர் பயிற்சி பெற்ற நாயகன் சோழர் படை தளபதி இளைய பல்லவன் என மறுபுறம் வியக்க வைக்கின்றனர். 

கருணாகரன் என்ற இளையபல்லவன் என்ற கடல்புறாவின் தலைவர் வரும் காட்சிகளைப் படிக்கும் போது எல்லாம் எம்ஜிஆரும் அவரது சண்டைக் காட்சிகளும் நினைவில் வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. கடல்புறா நாவலின் மூன்றாம் பாக இறுதியை நோக்கிச் சென்றபோது, ஜெயா டிவியில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏதேச்சையாக ஔிபரப்பானது.

அந்த படத்துக்கும் கடல் புறாவுக்கும் பல ஒற்றுமைகள். மாநக்காவர தீவு தலைவன் கங்கதேவன், நம்பியாராகவும்... அட்சயமுனை தலைவனும் மஞ்சளழகியின் வளர்ப்புத் தந்தையுமான பலவர்மன், கன்னித்தீவு தலைவனும் ஜெயலலிதாவின் வளர்ப்புத் தந்தையுமான எஸ்வி ராம்தாஸாகவும்... தெரிந்தது. இப்படிப்பல... அதை தனியாகவே எழுதலாம். சாண்டில்யனின் கடல்புறா பாதிப்பில்தான் ஆயிரத்தில் ஒருவனை பி.ஆர்.பந்துலு எடுத்திருப்பார் போலும்.


சரி... கிட்டத்தட்ட ஒரு மண்டலமாக கடல்புறாவில் உலா வந்து, பிரிய மனமின்றி புகார் கரையில் இறங்கியாகி விட்டது. 

மறுபடியும் ஒரு கடல் பயணம் செல்லலாமா? என்ற யோசனை எழுந்த போது, சிவகாமியின் கொலுசு சத்தம் காதுகளில் கீதம் இசைக்கிறது. கூடவே மாறுவேட புலியான மகேந்திர வர்மரும் நரசிம்ம வர்மரும் அழைக்கிறார்கள், வாதாபியை நோக்கி... சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக...

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 31 December 2020

எனது பாசமிகு மாமாவுக்காக


நெல்லை மாவட்டம் (இப்போது தென்காசி) ஆலடிப்பட்டி கிராமத்தில் 1933ம் ஆண்டு பிறந்தவர், ஆலடி அருணா. ஆலடிப்பட்டியின் பிரபலமான வைத்தியலிங்க சுவாமி திருக்கோயிலில் பூஜை செய்யும் குடும்பத்திலேயே பிறந்த போதிலும் இறுதி வரை பகுத்தறிவு சுடராகவே வலம் வந்தார். ஆலடி அருணாவின் தந்தை பெயர் வைத்தியலிங்கம் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. 


பள்ளி, கல்லூரி படிப்பின் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு நெல்லை முதல் சென்னை வரை மேடைகளை அதிரச் செய்தவர். பின்னாளில், வழக்கறிஞர் பட்டம் பெற்று, அண்ணா, பெரியார் மீது கொண்ட பற்றால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்தவர்.  


அவரது அறிவையும் வாதத் திறமையையும் கண்டு வியந்து காங்கிரஸ் கட்சியில் சேருமாறும் அரசு வழக்கறிஞர் பணி தருவதாகவும் பெருந்தலைவர் காமராஜர் அழைத்தபோது, அதை மறுத்தவர். பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை என திராவிட கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றிய வெகு சிலரில் ஆலடி அருணாவும் ஒருவர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என தமிழகத்தின் மிக முக்கியமான ஆளுமைகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர். 


திமுக முன்னணி மேடைப் பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த அவர் வகித்த பதவிகள் ஏராளம். நெல்லை மாவட்டம் ஆலங்குளம்  தொகுதியில் இருந்து தமிழக பேரவைக்கு 1967, 1972, 1996 என மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இருந்து 1977ம் ஆண்டு மக்களவைக்கும் அதிமுக சார்பாக 1984ம் ஆண்டு டெல்லி மாநிலங்களவை எம்பியாகவும் தேர்வானவர். 


அவர் எம்பியாக இருந்த காலத்தில் தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்தது. தான் சார்ந்த அதிமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதிலும், கூட்டணி கட்சியின் தலைவராக பிரதமர் ராஜிவ் இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக உண்மையை பேசியவர். மிகச் சிறந்த பாராளுமன்ற வாதிகளில் தானும் ஒருவர் என்பதை அந்த சமயத்தில் உலகுக்கு உணர்த்தினார். போபர்ஸ் ஊழல் குறித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் உண்மைக்கு மாறான கூட்டுக் குழு அறிக்கையை கிழித்து எறிந்து ரூ.60 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். 


எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு மீண்டும் திமுகவுக்கு திரும்பி 1996ம் ஆண்டில்  கருணாநிதி தலைமையிலான தமிழக அரசில் 5 ஆண்டு காலம் சட்ட அமைச்சராகவும் ஆலடி அருணா பணியாற்றினார். 

மேடைப்பேச்சு, பாராளுமன்ற விவாதத் திறன், அரசியல் தலைவர் என்ற வரிசையில் பத்திரிகையாளர், எழுத்தாளர் என்ற முகங்களும் ஆலடி அருணாவுக்கு உண்டு. 


பள்ளி பருவத்திலேயே கையெழுத்து பத்திரிகை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. 'எண்ணம்' என்ற வார பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய ஆங்கில புத்தகங்களில் ‘Unfederal Features of the Indian Constitution என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் மிகவும் முக்கியமானது. 

இது தவிர,  இந்தி எதிர்ப்பு, ஆலடி அருணா சிறுகதைகள், இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், காமராஜர் ஒரு வழிகாட்டி போன்ற புத்தகங்களும் குறிப்பிடத்தக்கவை. 

நெல்லையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாநில அரசியல், தேசிய அரசியல், எழுத்துப்பணி என பேரும் புகழும் பெற்றிருந்தவரும் எனது பாசமிகு மாமாவுமான ஆலடி அருணாவின் நினைவு தினத்தில் (31/12/2004) அவரது நினைவை போற்றுகிறேன். 

நெல்லையில் இருந்து என்னை முதன் முதலில் சென்னைக்கு அழைத்து வந்து மறைந்த பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனாரிடம் அறிமுகம் செய்து ‘கதிரவன்’ வாயிலாக எனது பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் அவரே. அவரது சொந்த அத்தையின் (அவரது தந்தையின் உடன் பிறந்த சகோதரி) மகன் வழி பேரன் என்பது எனது பேறு.

வீடு, கோட்டை, ஊரில் எங்கு எப்போது சந்தித்தாலும், 'என்னடே... மாப்பிள...' என நெல்லை தமிழில் அழைத்தது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது...

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 15 December 2020

எம்ஜிஆர் - 1977 Vs 2021

தமிழக அரசியலில் நடிகர்கள் நுழையும் போதெல்லாம் உதிர்க்கப்படும் வார்த்தை எம்ஜிஆர். ஆதரவோ, விமர்சனமோ... இதை எந்த தரப்பு உச்சரித்தாலும் அதன் அடி நாதத்தில் ஔிந்து கிடப்பது, அவர் ஒரு நடிகர் என்ற பார்வைதான். நடிகராக அவரைப்பற்றி பேசும் பலரும் அவரது அரசியல் பயணம் பற்றி அறியாதவர்கள் என்பதே உண்மை.

எம்ஜிஆரின் அரசில் பயணம் என்பது 1950களிலேயே துவங்குகிறது. எல்லா மனிதரைப் போலவே அனைத்து நடிகர்களுக்குள்ளும் அரசியல் சார்பு உண்டு. அதை எம்ஜிஆர் மறைக்கவில்லை. நடிப்பு தொழிலுடன்  திராவிட இயக்கங்களிலும் தனது முழு ஈடுபாட்டை காட்டினார். 1950களின் இறுதியில் திமுக ஆரம்பித்தபோது அதன் முழு நேர உறுப்பினர், எம்ஜிஆர்.



அவ்வளவு ஏன்? தனது படங்களிலும் திமுக கொள்கைகளையும் சின்னத்தையும் பிரபலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். கருப்பு வெள்ளை படங்களில் இருந்து வண்ணப்படங்கள் வரை எம்ஜிஆர் பட காட்சி பின்னணிகளை நுணுக்கமாக பார்த்தால்  இதை அறியலாம். இது போன்ற துணிச்சல், அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர்கள் எவருக்காவது உண்டா என்றால் இல்லை என்பதே பதிலாகும். 1957ல் மிகுந்த பணக் கஷ்டத்தோடு நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் தயாரித்தபோது, தனது எம்ஜிஆர்  பிக்சர்ஸின் லோகோவே திமுக கொடி தான்.

இத்தனைக்கும், அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆட்சி. திமுக அப்போது தான் புதிதாக துளிர்விட்ட கட்சி. பொது சின்னம் கூட கிடையாது.

இதை, இன்றைய புதிய  நடிகர்கள் வரை தங்கள் புதுப்பட ரிலீசுக்காக மட்டுமே அரசியல் பேசுவதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

1967 வரை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக (இது எம்ஜிஆரின் கதாநாயக பயணத்தில் 20 ஆண்டுகள்) திமுக பொதுக் கூட்டங்களில் பிரசாரம் செய்தவர் எம்ஜிஆர். காங்கிரஸ் சார்பு நிறுவனம் என்பதால் ஏவிஎம் பேனரில் கூட (அன்பே வா தவிர) அவர் நடித்ததில்லை. படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் எல்லாம் திமுக கட்சிப் பணியாற்றியவர். இந்த துணிச்சல் இன்றைய பிரபல நாயக  நடிகர்களிடம் துளி கூட இல்லாத ஒன்று.

அதிமுக என்ற கட்சியை துவங்கும் முன், அவர் திமுக பிரமுகர், நிர்வாகி, அந்த கட்சியின் பொருளாளராக மூத்த தலைவர், அந்த கட்சியில் எம்எல்சி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிக்கு நிகரான சிறு சேமிப்பு குழு தலைவர் என பதவிகளை வகித்தவர். அண்ணா மறைந்தபோது திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைவதிலும் பங்கெடுத்தவர். 1972ல் அண்ணா இல்லாத தேர்தலில் கூட்டாக நின்ற காமராஜரையும், ராஜாஜியையும் கருணாநிதியுடன் கைகோர்த்து தோற்கடித்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர். அந்த தேர்தலில் பெற்றதை போன்ற இடங்களை இதுவரை தமிழகத்தில் எந்த ஆளுங்கட்சியும் பெறவில்லை.

அதாவது, அதிமுக ஆரம்பிப்பதற்கு முன்,  எம்ஜிஆரின் முழு நேர அரசியல் அனுபவம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். 

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவை துவக்கியபோது, எம்எல்ஏக்களில் பலர் தன்னுடன் வந்ததால் (அப்போது கட்சித்தாவல் தடை சட்டம் கிடையாது) எதிர்க்கட்சி தலைவராகவும் எம்ஜிஆர் இருந்தார். 

அந்த கால கட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் நெருக்கடிகளையும் எதிர் கொண்டவர், எம்ஜிஆர். அரசியல் ரீதியாகவும் (மதுரை மேயர் முத்து விவகாரம் ஒரு உதாரணம்) சினிமா ரீதியாகவும். எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பட ரிலீஸ் பற்றி அந்தக் கால கட்சிக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள்.

இப்படியாக பல அரசியல் அனுபவங்களுடன் தான் அதிமுக என்ற புதிய கட்சியுடன் 1977ல் தனியாக களம் புகுந்தார் எம்ஜிஆர். அவருக்கு முதல் தேர்தலிலேயே வெற்றி. தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களில் வென்ற தமிழகத்தின் ஒரே ஹாட்ரிக் முதல்வர் அவர்தான்.



இந்த வெற்றிகளுக்கு எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும் அன்றைய அரசியல் சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக இருந்தது. அது என்ன சூழல்?

1977 சட்டப்பேரவை தேர்தலின் போது அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார் இப்படி பெரிய தலைவர்கள் யாரும் கிடையாது. இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் மறைவால் குழம்பிக் கிடந்த சமயம். ஆக... பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தல். கருணாநிதி, எம்ஜிஆர் இருவரின் வயதும் 50 பிளஸ்.

அன்றைய சூழலில் ஆளும் திமுக மட்டுமே ஏகபோக கட்சி. அதுவும் எம்ஜிஆருக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து தெரிந்தோ தெரியாமலோ ஸிம்பதி கலந்த ஆதரவை எம்ஜிஆருக்கு அதிகரித்துக் கொடுத்தது. இறுதியாக, களத்தில் ஏகபோகமாக இருந்த திமுகவுக்கு மாற்றாக எம்ஜிஆரால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. 

அதன் பிறகு, இரண்டு கழகங்களின் ஆதிக்கம் தான். இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏமாளித்தனத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது உஷாராக இருந்திருந்தால் மூன்றாவது அணி, தேசிய கட்சிக்கான வாய்ப்பு போன்றவை ஒருசில மாநிலங்களில் இருப்பதை போலவே தமிழகத்திலும் கருகிப் போகாமல் இருந்திருக்கும். 


 ஆனால், 1980ல் இருந்தே இரண்டு கழகங்களின் தோளில் சவாரி செய்து சுகம் காண தொடங்கியது, காங்கிரஸ் கட்சி (இன்றைய காங்கிரஸ் நிலைக்கு அதுவும் காரணம். அதைப்பற்றி தனியாகவே எழுதலாம்). இது இரண்டு கழகங்களுக்கும் சாதகமானது. எம்ஜிஆரின் வள்ளல், ஏழை பங்காளன் என்ற தோற்றம், அவரை இறுதி வரை ஆட்சிக் கட்டிலில் அழகு பார்க்கச் செய்தது. 



இதுதான் எம்ஜிஆரின் உண்மையான  அரசியல் வரலாறு. இதில் ஏதாவது ஒன்றாவது எம்ஜிஆர் பெயரை கூறும் நடிகர்களுக்கு ஒத்துப் போகிறதா? 

மற்றொன்று, அதிமுகவை துவக்கி எம்ஜிஆர் களம் புகுந்தபோது திமுக என்ற ஒரு கட்சிதான். இப்போது, இரண்டு கழகங்கள் வலுவாக இருக்கின்றன. மூன்றாவது வரும் கட்சி ஆட்சியமைக்கும் பலத்துடன் வெற்றி பெறுவது கஷ்டம். ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் மகாராஷ்டிரா போல வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் ஆளுநருக்கு வேலை வைத்ததே இல்லை.

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 23 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 21

ரசிகர்களை மகிழ்விப்பதை கடந்து எதிர்காலத்தை சரியாக கணித்து சொல்வதோடு மக்களுக்கு தேவையான விஷயங்களையும் கூறும் கலைஞனே காலத்தை வென்று நிலைத்து நிற்பான். அதற்கு மிகச் சிறந்த ஒரே உதாரணம் இவர்தான்.  "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..." என தன்னைத் தானே கூறிக் கொண்டவர். அவர்தான், இறந்து அறுபது ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 


நாகர்கோவிலில் பிறந்த இவர், ஏழ்மையால் நாடக கொட்டகையில் தின்பண்டங்கள் விற்று வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் சொந்தமாக நாடக கம்பெனியையே நடத்தும் அளவுக்கு உயர்ந்தார். வில்லுப் பாட்டுக்காரராகவும் சில காலம் காலம் தள்ளியவர், என்எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் முகவரி தந்த 'சதிலீலாவதி'தான் இவருக்கும் முதல் படம். ஆனால், முதலில் வெளியானது 'மேனகா' என்ற படம். 1935ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுக்குள் பாகவதர் காலம் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி காலம் வரை 150 படங்களில் நடித்து விட்டார்.


1940களில் தமிழ் திரை உலகை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் மனம் தளராதவர், என்எஸ்கே. அந்த வழக்கில் சிக்கிய அன்றைய சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதரே நிலை குலைந்து அதற்கு பின் படங்களில் பெரிதாக தலைகாட்ட வில்லை. ஆனால், என்எஸ்கே தளரவில்லை. அதுதான் அவரது எதையும் தாங்கும் குணம். சிறை மீண்ட பிறகு தான் அவருக்கு கலைவாணர் பட்டம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.


என்எஸ்கே அவரது மனைவி டி.ஏ. மதுரம் இருவரும்  இணைந்து நடித்த அனைத்து காமெடி ஸீன்களுமே தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்கள் 1936ம் ஆண்டில் வெளியான 'வசந்த சேனா' படத்தில் ஜோடியாக அறிமுகமான மதுரம், பின்னர், நிஜத்திலும் என்எஸ் கிருஷ்ணன் ஜோடியாகி விட்டார்.



எதிர்ப்பவரின் மனம் புண்படாமல் படங்களில் பகுத்தறிவு புகட்டியவர். சமூக சீர்திருத்த கருத்துகளை நாசூக்காக சொன்னவர். பராசக்திக்கு முன்பே அண்ணா கதை வசனத்தில், இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'நல்ல தம்பி' (1949) படத்தின் தயாரிப்பாளர் என்எஸ் கிருஷ்ணன். 


இந்த படத்தில் இவர் பாடும் "விஞ்ஞானத்த வளக்க போறேண்டி..." பாடலை முழுமையாக கேட்டால் போதும் அவரது எதிர்கால தீர்க்க சிந்தனையை அறியலாம். கிரைண்டர், டெஸ்ட் டியூப் பேபி, அணு மின்சாரம் என ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு பிந்தைய விஞ்ஞான வளர்ச்சிகளை நான்கு நிமிட பாடலில் என்எஸ்கே பிட்டு பிட்டு வைத்திருப்பார். "மனுஷன மனுஷன் ஏய்ச்சி பிழைச்சது அந்தக் காலம்..." பாடல் இவரது முற்போக்கு சிந்தனையை சொல்லும். அந்த படத்திலேயே அவரது கிந்தனார் கதாகாலட்சேப பாடல், நையாண்டியுடன் கூடிய அக்மார்க் சமுதாய  விழிப்புணர்வு ரகம்.



இதுபோல, "சிரிப்பு... சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு..." பாடலில் மனிதர்களின் சிரிப்பின் வெரைட்டிகளை என்எஸ்கே பாடியிருப்பார். அது யாருமே சிந்திக்காத விஷயம். 'முதல் தேதி' படத்தில் "ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்..." பாடலில் மாத சம்பளக்காரனின் நிலையை அப்போதே தெளிவாக சொல்லியிருப்பார், என்எஸ் கிருஷ்ணன்.

'அம்பிகாபதி' படத்தில் "கண்ணே உன்னால நான் படும் கவலை கொஞ்சமா...." என டிஏ மதுரத்தை சீண்டியபடி, தங்கமே... தேனே... என வரிக்கு வரி நையாண்டியுடன் பாடும் பாடல் எவர்கிரீன் காதல் நகைச்சுவை ரகம். 


தமிழில் வழக்கொழிந்து போன லாவணி வகை பாடல் ஒன்றை 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் எம்ஜிஆருடன் பாடியிருப்பார் என்எஸ்கிருஷ்ணன். அதில் ஒரு வரி "உலகிலே மிக பயங்கரமான ஆயுதம் எது... கத்தி.. இல்ல... கோடாரி... இல்ல... மனிதனோட நாக்கு...". 



எம்ஜிஆரின் வளர்ப்பு தந்தையாக 'மதுரை வீரன்' படத்தில் நடித்திருப்பார், என்எஸ்கே. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏழைகளுக்கு உதவும் குணம் எம்ஜிஆரிடம் குடியேறியதற்கு காரணமே என்எஸ்கே தான். அவரது வள்ளல் தன்மை தான் எம்ஜிஆரையும் தொற்றியது.

தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மட்டுமல்ல என்எஸ் கிருஷ்ணன் நல்ல வசனகர்த்தாவும் கூட. அவரது காமெடி டிராக்குகளை அந்தக்கால தயாரிப்பாளர்கள் விலை கொடுத்து வாங்கி பயன் படுத்தியுள்ளனர். இது மட்டுமல்ல, சிவாஜி நடித்த பணம் (1952) மற்றும் மணமகள் (1951) படங்களையும் இயக்கி இருக்கிறார், என்எஸ்கே. இரண்டுக்கும் கதை வசனம் கலைஞர் கருணாநிதி.


1937ம் ஆண்டு பாகவதரின் அம்பிகாபதி படத்திலும் 1957ல் வெளியான சிவாஜியின் அம்பிகாபதி படத்திலும் நடித்திருக்கிறார். இதுபோல 1939ல் வெளியான மதுரை வீரன் படத்திலும் 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்திலும் நடித்திருக்கிறார், கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் முதல் திராவிட இயக்க ஆதரவாளர் என்எஸ்கே தான். திமுகவுக்காக பிரசாரமும் செய்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என மூவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த என்எஸ்கே 'பணம்' படத்தில் பாடிய பாடல் ஒன்று, "தீனா மூனா கானா...." என தொடங்கும்.

ஆனால், திராவிட ஆட்சி அமைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு  முன்பே கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் மறைந்து விட்டார். சிரிப்பு மருத்துவர், இந்தியாவின் சார்லி சாப்ளின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டில் இறந்தபோது அவரது வயது 50ஐ கூட தொடவில்லை. வெறும் 48 தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 10 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 20

இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்சி. 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர், கேபி சுந்தராம்பாள். இசை ரசிகர்களின் நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும் பெயர். சிறு வயதில் இருந்தே கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சுந்தராம்பாளின் பாடலை கேட்க ஊரே கூடுவது வழக்கம். கோயில் விழாவில் பாடி வந்த அவர், சொந்த ஊரான கொடுமுடியில் இருந்து உறவினர் வீடு இருந்த  கரூருக்கு ரயிலில் செல்லும் போதும் பாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை ரயிலில் நாடக நடிகர் ஒருவரின் கவனத்தில் பட்டு நாடக துறைக்கு வந்தார்.


9 வயதிலேயே இலங்கை, தமிழ்நாடு என நாடக குழுக்களுடன் சுற்றி வந்த அவர், நாடக இடைவேளை சமயத்தில் என்டர்டெய்னராக பாட ஆரம்பித்து, பின்னாளில் வேடங்கள் போட  துவங்கினார். அவரது வள்ளி திருமணம், நல்ல தங்காள், கோவலன் போன்ற நாடகங்கள் எல்லாம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கூடவே, கேபி சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, 1927ம் ஆண்டில் நிஜத்திலும் தம்பதியானார்கள்.



இருவருமே மிக தீவிரமான சுதந்திர போராட்ட தியாகிகள். நாடகங்களின் நடுவே தேசபக்தி காட்சிகளை சேர்த்ததோடு சுதந்திர வேட்கையூட்டும் பாடல்களையும் தனியாக பாடி  வெளியிட்டனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இசை ஆல்பம் போட்ட பெருமை இவர்களையே சேரும். சுந்தராம்பாளை போலவே, கிட்டப்பாவின் குரலும் எட்டுக்கட்டை சுருதியை கொண்டது. இருவரின் பாடல்களுக்கு மக்களிடம் அவ்வளவு மவுசு. 


யார் கண்பட்டதோ அற்ப ஆயுளிலேயே கிட்டப்பா காலமானார். 1933ம் ஆண்டில் அவர் இறந்தபோது வயது 28. கேபிஎஸ் வயது 25. அதன்பிறகு நடிப்பதை துறந்து வெள்ளை கதராடை, நெற்றி நிறைய விபூதி என தவ வாழ்க்கையில் புகுந்தார், கேபி சுந்தராம்பாள். இந்த சமயத்தில்தான், நந்தனார் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது. அவர் மறுக்க, தயாரிப்பாளரோ விடாப்பிடியாக நெருக்க, கடும் நிபந்தனைகளை சொல்லி தவிர்க்க பார்த்தார், கேபிஎஸ்.



எந்த ஆணுடனும் ஜோடி சேர மட்டேன். சம்பளமாக ஒரு லட்சம் வேண்டும். இது மாதிரியான நிபந்தனைகளையும் ஏற்றார் தயாரிப்பாளர். அந்த அளவுக்கு நாடகம், சுதந்திர போராட்டம் மூலமாக புகழ் பெற்றிருந்தார்,  கேபிஎஸ். நந்தனார் படத்துக்காக 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார், சுந்தராம்பாள். அப்போது தங்கம் விலை சவரனுக்கு 13 ரூபாய். 


நந்தனாரில் ஆண் வேடமிட்டு நடித்த கேபிஎஸ், தனது 30 ஆண்டு திரை வாழ்க்கையில் சொற்ப எண்ணிக்கையிலேயே படம் நடித்தாலும் வெண்கலக் குரலால் என்றென்றும் நிலைத்திருக்கிறார். தமிழ் மூதாட்டி அவ்வையார் என்றால் கேபி சுந்தராம்பாள் முகம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். அவ்வையார், மணிமேகலை, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார் என தான் நடித்த படங்களில் தனது பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.



திருவிளையாடல் படத்தில் முருக கடவுளுடன் விவாதம் செய்து, "ஞானப் பழத்தை பிழிந்து..." என பக்தி ரசத்தை பாடலில் பிழிந்து தந்த கேபிஎஸ், அடிப்படையில் ஒரு முருக பக்தை. "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...!" பாடல் தொடங்கி மகாகவி காளிதாஸ் படத்தில் "சென்று வா மகனே செனறு வா, அறிவை வென்று வா மகனே வென்று வா...", "காலத்தில் அழியாத காவியப் பொருள் என்று...", காரைக்கால் அம்மையார் படத்தில் "தக தக தக தக தகவென ஆடவா... சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடவா.." என சிவ தாண்டவ பாடல், திருமலை தெய்வம் படத்தில் "ஏழுமலை இருக்க எமக்கென்ன மனக்கவலை..." என கேபிஎஸ் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழழியாத காவிய கீதங்கள்.


கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிலப்பதிகார கதையை அடிப்படையாக கொண்டு தயாரித்த 'பூம்புகார்' படத்தில் சமண துறவி கவுந்தியடிகளாக நடித்திருப்பார். கோவலனுடன் படகு பயண காட்சியில், "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்...", என்ற பாடலும் "தப்பித்து வந்தானம்மா, தனியாக நின்றானம்மா.." பாடலும் மனித வாழ்க்கையை சொல்பவை. 

தீவிர ஆன்மிகவாதியான இவர், பூம்புகார் படத்தில் "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது..." என்ற வரிகளையே, விடாப்பிடியாக நின்று "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது..." என கருணாநிதியை மாற்ற வைத்ததாக கூறுவது உண்டு.

பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவான சத்திய மூர்த்தி தான் கேபி சுந்தராம்பாளுக்கும் அரசியல் குரு. இந்தியா சுதந்திரம் பெறும் முன்னும் சரி. பின்னும் சரி. காங்கிரஸ்  கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர். இதனாலேயே, சுதந்திரம் கிடைத்ததும் சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர் ஆனார். 



ஆம் 1951ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்திருக்கிறார், கே.பி.சுந்தராம்பாள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து பேரவைக்குள் நுழைந்த முதல் திரை பிரபலம் இவர்தான். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களால் மதிக்கப்பட்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 7 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 19

தமிழ் சினிமாவின் முதல் சமூக, குடும்ப கதைகளின் வெற்றி இயக்குநர், இன்றைய டிவி சீரியல்களின் சிக்கலான அழுகாச்சி கதைகளுக்கு முன்னோடி, இந்த கேள்விகளை எழுப்பினால் பதிலாக வந்து நிற்பவர் இயக்குநர் பீம்சிங். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டாலும் சென்னையில் படித்து வளர்ந்த இவர், சினிமாவில் அடியெடுத்து வைத்தது எடிட்டராகத்தான். அதாவது படத்தொகுப்பாளர். "பராசக்தி" படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சுவிடம் அசிஸ்டென்டாக சேர்ந்து உதவி இயக்குநராக உயர்ந்தவர்.


"பராசக்தி" படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களை உதவி இயக்குநராக சிவாஜி கணேசனுக்கு சொல்லிக் கொடுத்தவர், இவர்தான். இந்த பழக்கம் தான் பின்னாளில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் கதைப் போக்கையே மாற்றிப் போட உதவியது. இயக்குநரானதும்  பீம்சிங் இயக்கிய "அம்மையப்பன்", "ராஜா ராணி" என முதல் இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் பீம்சிங்கை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது "பதி பக்தி" படம்தான். அதன் பிறகு, இவருக்கு ஏறுமுகம். மன்னர் கதைக்கள டைப் படங்களாகவே வெளியாகி வந்த தமிழ் சினிமாவை குடும்ப கதைகளின் பக்கம் திருப்பியதில் பீம்சிங்கின் பங்கு அதிகம்.

'ப'கர வரிசை டைட்டில்களில் பீம்சிங் கொடுத்த சுமார் 20 படங்களில்,  பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், பச்சை விளக்கு என ஹிட்டடித்த படங்கள் ஏராளம். 1960களில் பீம்சிங், சிவாஜி, கண்ணதாசன், எம்எஸ்வி ராமமூர்த்தி கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே வலம் வந்தது. "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து..."

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை...", "எல்லோரும் கொண்டாடுவோம்..." என எவர்கிரீன் பாடல்களை கொண்ட பாவ மன்னிப்பு படத்தின் கதையே வித்தியாசமானது. மத நல்லிணக்கத்தை சொல்லும் அந்த கதை, நடிகர் சந்திரபாபுவினுடையது. அதை மெருகேற்றியவர் பீம்சிங். இன்று வரை அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணம் காட்டப்படும் "பாசமலர்" வேறு மாதிரியான கதை. புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் டாக்டர், அவரிடம் பணிபுரியும் நர்ஸ் இடையிலான காதலை சொல்லும் "பாலும் பழமும்". இப்படி மூன்று வெவ்வேறு கதைகளைக் கொண்ட படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து மூன்றையும் வெற்றிப் படங்களாக்கியவர், பீம்சிங்.

இந்த படங்களின் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்...", "மலர்ந்தும் மலராத பாதி மலர் போலே...", "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...", "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...", "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்..." உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே 60 ஆண்டுகளை கடந்து இன்றும் ரசிகர்களின் மனதை இனிமையாக்குபவை.



இவை தவிர, பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பார் மகளே பார் என சிவாஜி கணேசனின் நடிப்பு தாகத்துக்கு சரியான தீனி போட்டவர் பீம்சிங் என்றே சொல்லலாம். "ஒரு இயக்குநர் என்பவர் நல்ல எடிட்டராகவும் இருக்க வேண்டும்" என்பது பீம்சிங் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.



தனது வெற்றிப் படங்களை எல்லாம் இந்தி, தெலுங்கு என ரீமேக் செய்வது இவரது வழக்கம். அதன்படி, 25 ஆண்டு இயக்குநர் வாழ்க்கையில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் படங்களை இயக்கி இருக்கிறார். "களத்தூர் கண்ணம்மா" படத்தின் இயக்குநரும் இவரே. இந்த படத்தின் மூலமாக உலக நாயகன் கமலஹாசனை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்த பெருமை பீம்சிங்கையே சேரும். 



குடும்ப படங்கள் மட்டுமல்ல, கிரைம் கலந்த முழு நீள நகைச்சுவை படத்தையும் தன்னால் தர முடியும் என "சாது மிரண்டால்" படம் மூலம் நிரூபித்தவர். இந்த படத்தின் சுட்ட ஸீன்கள் தான், டாக்சியில் பிணத்தோடு வடிவேலு பயணம் செய்யும் நகைச்சுவை.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கதையை படமாக்கி இருக்கிறார், பீம்சிங். இந்த படத்துக்காக நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது கிடைத்தது. கருணாநிதியின் கைவண்ணத்தில் தனது இயக்குநர் பாதையை தொடங்கிய பீம்சிங்கின் கடைசி படத்துக்கு கதை  ஜெயகாந்தன். அந்த படம், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" (1978).

இதில் தனது மகன் பி.கண்ணனை ஔிப்பதிவாளராக, திரை வாரிசாக பீம்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கண்ணன் வேறு யாருமல்ல. "பாரதிராஜாவின் கண்கள்" என போற்றப்படும் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஔிப்பதிவாளரே தான். 


படத் தொகுப்பாளர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகம் இருந்தாலும் படத் தொகுப்புக்கு முக்கியத்துவம் அளித்த பீம்சிங்கின் பெயரை அவரது மற்றொரு மகன் தமிழ் சினிமாவில் காப்பாற்றி விட்டார். அவர் படத் தொகுப்புக்காக விருதுகளை பெற்ற பிரபல எடிட்டர் பி.லெனின். 

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 3 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...18

சினிமாவில் அம்மா, அப்பா, அண்ணன் இப்படி சில வேடங்களை பேசும்போது ரசிகர்கள் மனதில் சிலரது பெயர்கள் மட்டுமே வந்து போகும். அந்த வகையில் அம்மா வேடம் என்றாலே தமிழ் ரசிகர்களினா நினைவுக்கு வருபவர் பண்டரிபாய். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வரை அம்மாவாக நடித்தவர். ஆனால், அவரது சினிமா பின்னணியை புரட்டிப் பார்த்தால் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. 



அடிப்படையில் அவர் ஒரு கன்னட நடிகை. சிறு வயதிலேயே மராத்தியில் நீண்ட நேரம் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு திறமைசாலி. அதனாலேயே 10 வயதில் கன்னட சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழில் அவரது அறிமுகம் 14 வயதில். படம், 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்த தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸ்" (1944). அந்த படத்தில் சிறிய வேடம்தான். பெண் பித்தனாக ஹரிதாஸ் துரத்தும் பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் தமிழே தெரியாது. ஏவிஎம் ஏற்பாட்டில் தமிழ் கற்றுக் கொண்ட இவர், பின்னாளில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசும் அளவுக்கு தமிழை தெளிவாக கற்றுக் கொண்டார். அதனாலேயே தேன்மொழியாள் என்றும் அவரை அழைப்பதுண்டு. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, கன்னடம் என ஏழு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவரது தமிழ் படங்கள் நூறுக்குள் தான். ஆனால், அனைத்து மொழிகளிலுமே சொந்த குரலில்தான் பேசி, நடித்திருக்கிறார், பண்டரிபாய்.




1950களில் நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த பண்டரிபாய், அன்றைய இரண்டாம் நாயகர்களான சித்தூர் நாகையா, பிரேம் நசீர், டிஆர் மகாலிங்கம்  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான "பராசக்தி" படத்தின் கதாநாயகி பண்டரிபாய் தான். அதன்பிறகு, சிவாஜி கணேசனின் அடுத்தடுத்த படங்களான "திரும்பிப்பார்", "அந்த நாள்" படங்களுக்கும் பண்டரி பாய்தான் ஹீரோயின். கன்னட ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான "பேடர கன்னப்பா" படத்தின் நாயகியும் இவரே. இருவரின் முதல் படங்களிலும் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இருவருக்குமே தாயாகவும் பின்னாளில் நடித்தார், அதுதான் சினிமா உலகம்.


1960களில் முழு நேர தாய் வேடத்துக்கு மாறிய பண்டரிபாய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா ஆனார். தெய்வமகன், கவுரவம், பாவை விளக்கு, இரு துருவம், இரும்புத்திரை, ராஜா, டாக்டர் சிவா, வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என அம்மாவாக நடித்த சிவாஜி படங்கள் ஏராளம். தெய்வ மகனில் அப்பா சிவாஜிக்கு ஜோடியாகவும் மகன்களான இரண்டு சிவாஜிக்கு தாயாகவும் 3  சிவாஜிகளுக்கு இணையாக சிறப்பாக நடித்திருப்பார். இதுபோல, "கவுரவம்" படத்தில் வக்கீல் ரஜினிகாந்த் சிவாஜிக்கும் மகன் கண்ணன் சிவாஜிக்கும் இடையே பண்டரிபாயின் நடிப்பு ஆஸம்.



எம்ஜிஆர் என்றாலே தாய்க்குலம், தாய்ப்பாசம் இப்படி தோன்றும் எண்ணத்துக்கு வலு சேர்த்தவர் பண்டரிபாய். தெய்வத்தாய், தாயின் மடியில், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, காவல்காரன், சந்திரோதயம், அன்னமிட்ட கை, இதயக்கனி என எம்ஜிஆருக்கு தாயாக நடித்த படங்களின் பட்டியல் மிக நீளம். பெரும்பாலான படங்களை பார்த்தால் டைட்டிலே தாயை பற்றியதாகத்தான் இருக்கும். "தாயின் மடியில் தலை வைததிருந்தால் துயரம் தெரிவதில்லை...", "தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை...", தெய்வத்தாய் படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் டைட்டில் ஸாங்.. என பண்டரி பாய் அம்மா வேடத்தில் நடித்த எம்ஜிஆர் படங்களில் தாயின் புகழ் பாடும் பாடல்களும் அதிகம். இத்தனைக்கும் எம்ஜிஆரை விட 11 வயது இளையவர், பண்டரிபாய்.



1970, 1980களில் கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு தாயாக நடித்த பண்டரிபாய், தமிழிலும் ரஜினிக்கு தாயாக நடித்திருக்கிறார். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." என்ற 'மன்னன்' பாடலின் அம்மா, பண்டரிபாய் தான். சினிமாவுக்கு பிறகு கன்னட சின்னத்திரையில் நுழைந்த பண்டரிபாய், 2000 வரையிலும் கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday, 31 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 17

நூறாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் முதல் தலைமுறை கதாநாயகிகள் பலர் இருந்தாலும் இவர்தான் உண்மையான கதாநாயகி. முதல் கனவு கன்னி, லேடி சூப்பர் ஸ்டார், கருப்பாக இருந்தாலும் கவர்ச்சி கட்டழகி என எல்லாவித பட்டங்களையும் 1940களிலே பெற்றவர். அவர்தான் டி.ஆர்.ராஜகுமாரி. ராஜாயியாக அறிமுகமாகி, ராஜலட்சுமியாகி, பின்னர் ராஜகுமாரியானவர். அந்த வகையில் சினிமாவில் நடிகைகளின் பெயர் மாற்றும் டிரெண்டை ஆரம்பித்தவரும் இவரே. 



1939ல் அறிமுகமான இவருக்கு பெயர் வாங்கித் தந்தது கச்ச தேவயானி (1941). தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் அடுத்த தலைமுறையில் எம்ஜிஆர், சிவாஜியுடனும் ஜோடியாக நடித்தவர். இவரது பொருத்தமான ஜோடி பி.யூ.சின்னப்பா என்பது அன்றைய ரசிகர்களின் கணக்கு. நடிப்பு, நடனம், பாடகி, தயாரிப்பாளர் என பலமுகம் கொண்டவர், டி.ஆர்.ராஜகுமாரி.


பாகவதருடன் நடித்த  சிவகவி, ஹரிதாஸ், அமரகவி படங்கள் அக்கால சூப்பர் டூப்பர் ஹிட். ஹரிதாஸ் (1944) படத்தில் தாசிப் பெண் ரம்பா வேடத்தில் இவர் காட்டிய நளினமும் கவர்ச்சியும் (தமிழின் முதல் கவர்ச்சி நாயகி இவர்தான்) தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக்கியது. இன்றளவும் ரசிகர்கள் முணுமுணுக்கும் "மன்மத லீலையை வென்றார் உண்டோ...என் மேல் உனக்கு பாரா முகம் ஏனோ..." என்ற பாடலை இவரைப் பார்த்துதான் பாகவதர் பாடுவார். இந்த பாடலின் நடுவே இவர் தரும் ஃபிளையிங் கிஸ், அன்றைய காலகட்டத்தில்  பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்.



தமிழ் சினிமாவின் நிரந்தர புகழ்பெற்ற சினிமாக்களில் ஒன்றும் அக்காலத்திலேயே மிகப் பெரும் செலவில் எடுக்கப்பட்ட படமுமான ஆனந்த விகடன் முதலாளி எஸ்எஸ் வாசன் தயாரித்த சந்திரலேகா (1948) படத்தின் நாயகி இவர்தான். இதில் சர்க்கஸில் பார் விளையாடும் பெண்ணாக நடித்த டிஆர் ராஜகுமாரியின் ஜிப்ஸி நடனம் ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் கிளைமாக்சில் பிரம்ண்ட முரசுகள் மீது ராஜகுமாரியும் நடன பெண்களும் ஆடும் நடனம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பிரமாண்டம்.



நாயகியாக எம்ஜிஆருக்கு இவர் சீனியர். ஆனால், எம்ஜிஆருடன் பணக்காரி படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். குலேபகாவலி படத்தின் நாயகிகளில் ஒருவர். பகடை ஆட்டத்தில் ஏமாற்றி ஒவ்வொருவராக வீழ்த்தி அடிமையாக்கும் கேரக்டர். இதில், ராஜகுமாரி பாடும் "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே பாடல்..." பிரபலமானது. பெண்களே ஆளும் அல்லி ராஜ்ஜியமான பகாவலி நாடு, குலேப் பூ என ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் படம் இது. இந்த படத்தின் "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..." பாடல் இன்றும் சுண்டி இழுக்கும் ரகம்.



அந்தக் கால நயன்தாரா என்றே சொல்லும் அளவுக்கு நாயகியாக கலக்கிய ராஜகுமாரி, வில்லி வேடத்தையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான மனோகரா படத்தில் "வசந்த சேனை... வட்டமிடும் கழுகு... வாய் பிளந்து நிற்கும் ஓநாய்..." என சிவாஜி கணேசன் கனல் கக்கும் வசனங்களை பேசுவது இவரைத்தான். ஆம். மனோகரா படத்தின் வசந்த சேனை, டிஆர் ராஜகுமாரியே.


தனது தம்பியும் இயக்குநருமான டிஆர் ராமண்ணாவுடன் சேர்ந்து படங்களையும் தயாரித்திருக்கிறார், ராஜகுமாரி. சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக் கிளி, இவர்களது தயாரிப்புதான். 


பாசம், குலேபகாவலி, பணம் படைத்தவன், பறக்கும் பாவை, பெரிய இடத்துப் பெண் என பல படங்களை தம்பியுடன் சேர்ந்து தயாரித்த இவர், குணச் சித்திர வேடங்களுக்கும் மாறினார். எம்ஜிஆருக்கு தாயாக (பாசம்), அக்காளாக (1963ல் வெளியான பெரிய இடத்துப் பெண்) நடித்த ராஜகுமாரி தனது 43 வயதில் நடிப்பை நிறுத்திக் கொண்டார். 1963ல் வெளியான அவரது கடைசி படமான 'வானம்பாடி'யில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார், கமல்ஹாசன்.


ராஜகுமாரி நடித்த சுமார் 35 படங்களில் 25 ஹீரோயின். 100க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி இருக்கிறார், டிஆர் ராஜகுமாரி. புதுமைப்பித்தன் படத்தில் டிஎஸ் பாலையாவுடன் "மோகனா, மன மோகனா..." என 1955 வரை 15 ஆண்டு காலம் கனவு கன்னியாக ஜொலித்தவர். 


முதன் முதலில் சொந்தமாக தியேட்டர் கட்டிய நடிகையும் இவர்தான். சென்னை பாண்டி பஜாரில் இவர் கட்டிய 'ராஜகுமாரி தியேட்டர்'தான், முதலாவது ஏசி தியேட்டர். சென்னையில் முக்கிய லேண்ட் மார்க்காக, 20 வருஷத்துக்கு முன்பு வரையிலும் கூட இருந்த அந்த தியேட்டர், வணிக வளாகமாகி விட்டது.

தனது தம்பிகளின்  குடும்பத்துக்காகவே திருமணம் முடிக்காமல் கடைசி வரை வாழ்ந்த டிஆர் ராஜகுமாரியை பற்றி கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்: மறு பிறவி என இருந்தால் டிஆர் ராஜகுமாரியின் தம்பியாக பிறக்கணும்...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 28 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 16

தமிழ் சினிமாவில் சின்னவர் என்றால் எம்ஜிஆர் ஒருவரைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் இவர் தான். இவரை பெரியவர் என அழைத்ததாலேயே தானாகவே எம்ஜிஆர் சின்னவர் ஆனார். அவர்தான் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. நாடகங்கள் நடித்த காலத்தில் இருந்து இறக்கும் வரை தம்பிக்கு சினிமாவிலும் அரசியலிலும்  பக்கபலமாக இருந்தவர். அதனாலேயே தனது வாய்ப்புகளை சுருக்கிக் கொண்டாலும் சிறந்த நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். 



எம்ஜிஆரின் இரண்டாவது படமான "இரு சகோதரர்கள்" (1937) இவரது அறிமுகம். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக குழுவில் இருந்து நடிக்க வந்த சக்கரபாணியின் ஒரிஜினல் பெயர் நீலகண்டன். அடுத்தடுத்த படங்களில் வில்லனாக மிரட்டியவர், சக்கரபாணி. மாயா மச்சிந்திரா, மகமாயா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, அபிமன்யூ, ஸ்ரீமுருகன்,  பொன்முடி, திகம்பர சாமியார், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, இதயகீதம், குடும்ப விளக்கு, பிரேமபாசம் என வில்லன் மற்றும் குண சித்திர நடிப்பில் ஜொலித்தவர். மகமாயா படத்தில் காமுக அரசனின் நெருங்கிய மந்திரியாக இவர் பேசும் வசனங்கள் தான், தமிழ் சினிமாவின் முதல் நக்கல் வசனங்கள். 



தம்பி எம்ஜிஆருடனும் பல படங்களில் நடித்திருக்கும் சக்கரபாணி, கணீர் குரலுக்கு சொந்தக்காரர். மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், என் தங்கை, என் மகள், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், நாளை நமதே, நேற்று இன்று நாளை, இதய வீணை வரை நடித்திருக்கிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பேராசை பிடித்த காசிம்கானாக நடித்திருந்தார். குகைக்குள் சென்று பொக்கிஷத்தை அள்ளி விட்டு, சந்தோஷத்தால் மந்திரத்தை மறந்து "கதவே திறந்திடு, சக்கரமே திறந்திடு" என கூறி கடைசியில் 40 திருடர்களிடம் சிக்கி கொலையாகி உயிரிழக்கும் கேரக்டர் இவர்தான்.



மன்னாதி மன்னன் படத்தில் கரிகால் மன்னனாக எம்ஜிஆரின் மாமனாராக நடித்திருப்பார். தம்பி தயாரித்து இயக்கிய தமிழின் முதலாவது பரீட்சார்த்த முறை வண்ணப்படமான நாடோடி மன்னனில் வில்லன் குழுவில் முக்கிய நபர் சக்கரபாணி. வழுக்கை தலையை தடவியபடி மற்றொரு கையில் கம்பு ஊன்றி வீரப்பா மற்றும் நம்பியாருடன் சேர்ந்து மன்னனுக்கு எதிராக சதி வலை பின்னும் கார்மேகம் கதாபாத்திரத்தை இன்றும் ரசிக்கலாம்.



60 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை கடந்து பேசப்படும் இந்த படத்தை 'எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரித்தபோது, தம்பிக்கு முழு பலமாக இருந்தவர் சக்கரபாணி. பணம் முழுவதையும் இந்த படத்தில் போட்டு விட்டு நின்றதை பார்த்து இவர் கேட்ட கேள்விக்கு  எம்ஜிஆர் சொன்ன பதில். "இந்த படம் ஓடினால் மன்னன். இல்லாவிட்டால் நாடோடி". ஆனால், படம் பெரு வெற்றி.

அதன்பிறகு, சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் வேகமான வளர்ச்சியால் அவருக்கு உதவுவதற்காக, தனது பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு  மேனேஜர் போலவே மாறிக் கொண்டார். ஆனாலும் அவ்வப்போது எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்  தலை காட்டியதோடு பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.



ஜெயலலிதாவும் சரோஜாதேவியும் சேர்ந்து நடித்த ஒரே படமான "அரச கட்டளை"யின் இயக்குநர் எம்.ஜி.சக்கரபாணி தான். படத்தை தயாரித்தவரும் இவரே. நாடோடி மன்னனில் தம்பியின் இயக்கத்தில் நடித்தவர், இதில் தம்பியை இயக்கினார்.

நாடக வாழ்க்கையில் இருந்தே தம்பிக்கு முழு பலமாக இருந்த சக்கரபாணி, சினிமாவிலும் ஜாம்பவான் தான். ஆனால் தம்பிக்காக வாய்ப்புகளை துறந்த அவர், முதல்வரான பிறகும் கூட தம்பியிடம் எந்தவித ஆதாயமும் பார்க்காதவர். எம்ஜிஆர் மறைவுக்கு முந்தைய ஆண்டுதான் (1986) சக்கரபாணி மறைந்தார். எம்ஜிஆருக்கு 1980களில் சிறுநீரக தானம் செய்தது, இவரது மகள் லீலாவதி தான். 

பொதுவாக, 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என சொல்வார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் சகோதரர்கள் விஷயத்தில் "அண்ணன் உடையான்..." என்றே சொல்லலாம்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்