Thursday 27 November 2014

மண்டல் கமிஷன் நாயகன்...

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இன்று நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) என்ற பிரிவை மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் அறிமுகம் செய்தவர். அதற்காக, மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற தனது பிரதமர் பதவியையே பணயம் வைத்தவர்.

இத்தனைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்குமாறு 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் பி.பி.மண்டல் அறிக்கை அளித்தும் 10 ஆண்டுகளாக பரணில் கிடந்தது. அந்த அறிக்கையை 10 ஆண்டுகள் கழித்தும் மறந்து விடாமல் தூசிதட்டி எடுத்து, அமல்படுத்தி சாமானிய மக்களுக்கு வாழ்வு அளித்தவர்.

இடதுசாரி கட்சிகள், பா.ஜனதா என நெருங்கவே இயலாத இரண்டு வெவ்வேறு துருவங்களின் ஆதரவோடு ஆட்சி நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். ராமர் கோயில் கோஷம் எழுந்தபோது ரத யாத்திரைக்கு முட்டுக்கட்டை போட்ட துணிச்சல்காரர்.

ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பவர்புல் இலாகாவில் இருந்தாலும் பிரதமர் ராஜீவ் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டும் ஆமாம் சாமியாக இல்லாமல் தவறை துணிச்சலாக தட்டிக் கேட்டவர். போபர்ஸ் ஊழலை தோலுரித்த நேர்மையாளர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராஜ வம்சத்தில் பிறந்த போதிலும் ஏழை மக்களைப் பற்றியும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் சிந்தித்த சிந்தனையாளர். 

இந்தியாவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற உண்மையை தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி நிரூபித்து காட்டியவர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணியின் பிரதமராக பதவியேற்றபோது, தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களை அதிமுக=காங்கிரஸ் அணி கைப்பற்றி இருந்தது. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

அந்த சூழ்நிலையிலும், மந்திரிசபையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பதவியை அளித்து நகர்ப்புற வளர்ச்சி துறையை ஒதுக்கியவர்.

இப்படி, அவரின் பெயரைப் போலவே அவரது பெருமைகளும் சாதனைகளும் மிக நீளமானவை. அவர்
.
.
.
.
.
.
.
.

முன்னாள் பாரத பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இன்று அவரது நினைவு தினம் (27-11-2008)

= வை.ரவீந்திரன் 

No comments: