Thursday 27 November 2014

மங்காத வீரம்... மண்டியிடாத மானம்

கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் இணையற்ற இனமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் இனம், தமிழ் இனம்.

உடலில் தொண்ணூற்று மூன்று விழுப்புண்களை பெற்று, மகன் ஆதித்த சோழனுக்கு மகுடம் சூட்டிய பிறகும் கூட முதிய வயதில் இரண்டு கால்களை இழந்த நிலையில் போர்க்களம் புகுந்த விஜயாலய சோழன் பிறந்தது, தமிழ் மரபு. இரண்டு வீரர்கள் தோளில் சுமந்து செல்ல இரண்டு கைகளிலும் வாள்களை ஏந்தி எதிரிகளின் தலைகளை பந்தாடியவன், விஜயாலய சோழன்.
எண் கொண்ட தொன்னூற்றின் மேலுமிரு மூன்று
புண் கொண்ட வெற்றிப் புரவலன்’

= என விஜயாலயச் சோழனை புலவர்கள் பாடி வைத்துள்ளனர்.

மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட (சேர, சோழ, பாண்டிய) தமிழ் தேசத்தின் பெருமையை இமயமலையில் வில் கொடியை பதித்து பறை சாற்றினான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனது இந்த பெருமையை,
‘அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க....’

= என்று பதிற்றுப்பத்து இலக்கியம் பாடுகிறது.

18 வயது சிறுவனாக இருந்தபோதிலும் மிகப்பெரிய படைகளை தலையலங்கானம் என்ற இடத்தில் தன்னந்தனியனாக எதிர் நின்று வென்ற தலையலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பிறந்ததும், இந்த தமிழ் மரபில் தான்.

குடம் நிறைய ஆயர் குல பெண்டிர் சேமித்து வைத்திருக்கும் பாலுக்குள் துளி அளவு மோர் கலந்து அதை கலங்கச் செய்வது போல, எதிரியின் படைக்குள் புகுந்து கலங்கச் செய்பவன், என பண்டைய தமிழகத்தின் சாதாரண படை வீரர்களுக்குள் கூட மிகப்பெரிய அளவில் பராக்கிரமம் நிறைந்து கிடந்தது என்பதை,
‘குடப்பால் சில்லுறைப் போல படைக்கு
நோய் எல்லாம் தான் ஆயினவே’

= என்று புறநானூறு பாடல் விளக்கி கூறுகிறது.

வடநாட்டு மன்னர்கள் கனகர் மற்றும் விசயனை வென்று அவர்களுடைய தலை மீது கற்களை ஏற்றி சுமந்து வந்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை எடுத்தவர்கள், தமிழ் மன்னர்கள். இலங்கையை வென்று மீன் கொடி ஏற்றிய பாண்டியனும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனை வென்று ஈழத்தை கைப்பற்றியதோடு முந்நீர் பழந்தீவு என அழைக்கப்பட்ட மாலத்தீவுக்கு கடல் கடந்து சென்று போர் முரசம் கொட்டிய ராச ராச சோழனும் தமிழரின் வீரம் செறிந்த மரபின் வரலாற்று உதாரணங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்து மாபெரும் கடற்படையை திரட்டிச் சென்று மலேசியா எனப்படும் கடாரம் தீவை வெற்றி கொண்ட ராசேந்திர சோழனின் வீரத்தை என்னவென்று வியப்பது....?
தமிழ் மரபில் இந்த அளவுக்கு வீரமும் தீரமும் செறிந்தவர்கள் இருந்தார்களா...? மனதுக்குள் இதுபோன்ற ஒரு ஐயம் எழுந்ததும் அதை போக்கும் விதமாக பிறந்தவர், பிரபாகரன்.

நான்கு வகை படைகளை நடத்திய தமிழ் மன்னர்களை நினைவூட்டும் வகையில் இந்த நவீன விஞ்ஞான உலகில் ஆதரவு ஏதுமின்றி முப்படைகளை திறமாக நடத்தி வெற்றிகளை குவித்தவர். காய்த்தல், உவர்த்தல் இன்றி தனி மனிதனாக அவரை உற்று நோக்கினால் தமிழர் வீரத்தின் மிச்சம் அவர் என்பதை உணரலாம்.

நாகரீக உலகில் நாடு பிடிப்பதற்காக இதுபோன்று சண்டை போடுவதா? என்ற கேள்வி எழும்போது, அவரது அருமை தம்பி திலீபன் நடத்திய அறவழி போராட்டத்தினால் கிடைத்த பலன் பற்றி அறிந்தால் எழுந்த வேகத்திலேயே அந்த கேள்வி அடங்கி விடும்.

சொந்த மண்ணிலேயே அடிமைகளாக கிடந்து அடிப்படை உரிமைகளுக்கு கூட போராடி, வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் விடுதலைக்காக வீறு கொண்டு எழுந்து,

பாரதி கூறிய, ‘ரவுத்திரம் பழகி’ உலகின் கவனத்தை ஈர்த்த அந்த வீரத் திருமகன் அவதரித்த தினத்தில் (நவம்பர் 26) தமிழ் இனத்தின் மங்காத வீரத்துக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 




வீரனின் வாழ்வு...
வீழ்ந்து விடுவதில்லை...
விதைக்கப்படுகிறது....
வரலாறாய் மாறுகிறது

= வை.ரவீந்திரன் 

No comments: