Monday 24 November 2014

அப்பிராணியும்.... அதானியும்....




வணக்கமுங்க... நடுத்தர வர்க்கமுன்னு சொல்றாங்கள... அந்த வர்க்கத்துல நானும் ஒருத்தன். என் பேரு... அது அவ்ளோ முக்கியமில்லீங்க... அப்பிராணின்னு வச்சிக்கோங்களேன். வந்தார வாழ வைக்கிற சென்னைக்கு குடியேறி 17 வருசம் ஓடிட்டு. சொன்னது போலவே, நல்லாவே சென்னை வாழ வச்சுதுங்க. புறநகர் பக்கமா 10 வருசத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு வூடு வாங்குனேங்க. அது ஒரு சென்டு இடம் இருக்குங்க... அப்போ பொழச்ச பொழப்புக்கு அதுவே பெரிய விஷயங்க.

அப்ப வூடு வாங்குறதுக்காக அரசாங்க பேங்குல 20 வருசத்துக்கு ரூ.3 லட்சம் கடன வாங்கினேங்க. மாச சம்பள வேல பாத்ததால லோன குடுத்தாங்க. மாசா மாசம் நான் கட்டுன தொகையில வட்டிக்கு தாங்க அதிகமா போய்கிட்டு இருந்துச்சு. எப்படியாச்சும் இந்த தொல்லைய ஒழிச்சு கட்டணுமின்னு ராப்பகலா யோசிச்சேங்க.. அதே சிந்தனையா இருந்ததால ஒரு வழியா 10 வருசத்துக்குள்ள அந்த கடன முழுசா அடைச்சிட்டேங்க.

இப்போ, வீட்ட சுத்தி பாத்தா நெறய வீடுங்க வளந்து நின்னுகிட்டு இருக்குங்க. அத பாத்ததும் இந்த மனசுக்குள்ள ஒரு ஆச வந்து ஆட்டிச்சு. அதுக்கு நாலே கால் லட்சம் வரை செலவாகுமுன்னு சொன்னாங்க. கடன தான் அடைச்சிட்டோமே... அதனால மாடிய கட்டதுக்கு அதே வங்கில போயி லோன கேட்டா என்ன? நம்ம வூட்டு பத்திரம் கூட பத்திரமா அங்க தான இருக்கு? இப்படி மனசுக்குள்ள கேள்வியோட மேனசர போய் பாத்தேங்க.

அவரும் சம்பளம் என்ன?ங்கிற விவரம் எல்லாம் கேட்டுட்டு... மாடி கட்ட பிளான மட்டும் வாங்கிட்டு வாங்கன்னாரு. இந்த 10 வருசத்துக்குள்ள மாநகராட்சிய விரிச்சிட்டாங்க. என் வீடும் மாநகராட்சிக்குள்ள வந்துட்டு. அதனால, மாடி கட்ட பிளான் கேட்டு மாநகராட்சிக்கு போனேங்க. அந்த நேரத்துல தான் மவுலிவாக்கங்கிற இடத்துல பெரிய கட்டிடம் ரெண்டு இடிஞ்சு விழுந்துடுச்சு.

உடனே, பிளான குடுக்குறதுல பயங்கரமா கெடுபுடி காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வழியா அறுபது ஆயிரம் ரூபா வரைக்கும் (சத்தியமாங்க... ஒரு சென்டு இடத்துல மாடி கட்டத்தான்) செலவு பண்ணி பிளான வாங்கிட்டேன். அதுவும் 5 மாசத்துக்கு மேல ஆயுடுச்சு. அத வாங்கிக்கிட்டு பேங்குக்கு போனா, அங்க புது மேனேசரு ஒக்காந்து இருக்காரு. மனசுக்குள்ள சின்னதா அதிர்ச்சி.

ஆனாலும், மனச திடப்படுத்திக்கிட்டு அவருகிட்ட போயி முழு விவரத்தையும் சொன்னேன். பழைய மேனேசர் சொன்னதையும் சொல்லி பிளானயும், பில்டரு கொடுத்த எஸ்டிமேட்டையும் என்னோட சம்பள பட்டியலயும் (இந்த பத்து வருசத்துல சம்பளமும் கணுசமா கூடிட்டுங்க.. அத நான் சொல்லியே ஆகணும்) கொடுத்தேங்க.. மாடிய கட்றதுக்கு எனக்கு 3 லட்சம் லோன் குடுங்க சார். மீதிய நானே பாத்துக்கறேன்னேன். 

அதுக்கு அந்த மேனேசரு சொன்னாரு பாருங்க. ‘வீட்டுக்கு ஒரு எவாலுயசன் ரிப்போர்ட்ட வாங்கிடுங்க. அப்படியே லீகல் ஒப்பினீயன் வாங்கிடுங்க. ஈசியும் போட்டு எடுத்துட்டு வாங்க. சீக்கிரமா லோன குடுத்துரலாம்’ இந்த பதில கேட்டதும் ஆடிப் போயிட்டேங்க. ஏன்னா, என்னோட வூட்டு பத்திரம் அந்த பேங்குலதாங்க இருக்கு.  

சரி. அது என்ன எவாலுயசன், லீகல் ஒப்பீனியன் அப்படின்னு விசாரிச்சேன். அந்த பேங்குக்குன்னு வக்கீலும் என்ஜீனீயரும் இருந்தாங்க. அவங்க கிட்ட போன போட்டு பேசுனா ஒரு 15 ஆயிரத்துக்கு பில்ல போடுறாங்க. நாலே கால் லட்சத்துல மாடிய  கட்டுறதுக்கு ஏற்கெனவே, பினானுக்கு 60 ஆயிரம் செலவழிச்ச நெலமையில இது என்னடா எக்ஸ்ட்ரா செலவுன்னு நொந்து போயிட்டேங்க.. ஒரு 3 லட்சம் லோனா தரதுக்கு இவ்ளோ பார்மாலிட்டியா...?

இவ்ளோத்துக்கும் இப்போ என்னோட வீட்டு சந்த மதிப்பு 15 லட்சத்த தாண்டிடுச்சுங்க. என்னோட சம்பளத்த மட்டும் வச்சே பர்சனல் லோனா தனியார் பேங்குங்கள்ல ரூ.3 லட்சம் வரை வாங்கலாங்கிறதையும் விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டேங்க. இப்பிடி இருக்கும்போது என்னோட வீட்டு பத்திரத்த வச்சிகிட்டே 3 லட்சம் தரதுக்கு பேங்கில இந்த அளவுக்கு யோசிக்கிறாங்களே...?ன்னு எனக்கு கோபம் கோபமா வந்துச்சுங்க.. அப்புறமா... பரவாயில்ல. நம்ம அரசாங்க பேங்குல்லாம் ரொம்பவும் உஷாரா இருக்காங்களே.. இந்த அளவுக்கு உஷாரா இருந்தா சீக்கிரமே இந்தியா ரொம் முன்னேறிருமுன்னு நெனச்சுகிட்டேன். இந்தியா முன்னேறிச்சுன்னா நல்லதுதாங்களே..

அதுக்கு பொறவு கொஞ்ச நாளுல பேப்பருங்கள்ல பார்த்தேங்க. ஆஸ்திரேலியாவுல இருக்குற அதானின்னு ஒருத்தருக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய இந்தியாவுல இருக்க ஸ்டேட் பேங்கு கடனா குடுக்கப் போவுதாம். என்னோட பத்துரத்த பேங்குல வச்சிக்கிட்டே 3 லட்சத்துக்கு இந்த பாடு படுத்துன அரசாங்க வங்கிங்க, அந்த அதானியா என்ன பாடு படுத்த போறாங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். என்னோட வீடாவது பேங்கு பக்கத்துலேயே இருக்குது. இந்த அதானி, ஆஸ்திரேலியாவுலல்லா கம்பெனி ஆரம்பிக்காறாம். அதுக்கு என்னென்ன பார்மாலிட்டியோ? எவாலுயசேனோ? லீகல் ஒப்பீனியனோ? அத அந்த மனுஷன் எப்படி சமாளிக்க போறாரோ?ன்னு நெனச்சுக்கிட்டேன். இத அப்படியே எங்க ஆபீசுல ஒண்ணா வேல பாக்குற ஒருத்தருகிட்ட சொன்னேன்.


என்னைய மேலயும் கீழயும் பார்த்துகிட்டு அவரு சொன்னாருங்க.. “இவ்ளோ அப்பிராணியா இருக்கியே... அந்த லோன குடுக்கதுக்கு பிரதமரே சிபாரிசு பண்ணிட்டாருப்பா... ஏற்கெனவே, இப்படித்தான் மல்லையான்னு ஒருத்தரு மூவாயிரம் கோடிக்கு மேல பேங்குல வாங்கிட்டு மஞ்ச கடுதாசி குடுத்துட்டாரு... இந்த அதானி எப்போ மஞ்ச கடுதாசி குடுக்க போறாரோ...?’ ன்னு சலிச்சுக்கிட்டே சொன்னாரு.

இப்போ எனக்கு ஒரு சின்ன கேள்விங்க.. உங்கள்ல யாருக்காவது பிரதமர நல்லா தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி எனக்கு 3 லட்சத்த வாங்கி குடுங்கங்க. மல்லையா, அதானி மாதிரி நான் மஞ்ச கடுதாசில்லாம் குடுக்க மாட்டேன். ஏற்கெனவே, என்னோட 20 வருஷத்து  லோன 10 வருசத்துக்குள்ள வேற கட்டி முடிச்சிருக்கேங்க. அதனால... கொஞ்சம் பிரதமருகிட்ட சொல்லி அதானிக்கு மாதிரி இந்த அப்பிராணிக்கும் சிபாரிசு பண்ணுங்களேன்.

= வை.ரவீந்திரன்.
 

No comments: