Monday 25 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -12

 

இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஒருபுறம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலான மற்றொரு காங்கிரஸ் மறுபுறம் என களை கட்டியது 1971ல் நடைபெற்ற ஐந்தாவது பொதுத் தேர்தல். இது தவிர, 1967க்கு பிறகு மாநில கட்சிகளின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. எனவே எதிர் பார்ப்பு எகிறத் தொடங்கியது.



தேர்தல் முடிவில் 352 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்திராவின் காங்கிரஸ். நாடு முழுவதும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக உயர்ந்தார். அதே சமயத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் 51 இடங்களில் மட்டுமே வென்றது. 

இது தவிர, ஜனசங்கம் 22, இந்திய கம்யூனிஸ்ட் 23, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 என வெற்றி பெற்றன. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் இரும்பு பெண்மணியாக மாறத் தொடங்கினார் இந்திரா காந்தி. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. 1971ம் ஆண்டு டிசம்பர் 3ல் தொடங்கிய போர் சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது.

இந்தியாவுக்கு மேற்கு பக்கம், கிழக்கு பக்கம் என இரண்டு பக்கமும் இருந்த பாகிஸ்தானால் இந்தியாவுக்கு தொல்லை அதிகமாக இருந்தது. இதற்கிடையே, மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) நிர்வாகம் தங்களை இரண்டாம்தரமாக நடத்துவதாக கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

பாகிஸ்தானின் இந்த உள்நாட்டு குழப்பத்தை சாதகமாக்கி களத்தில் இறங்கியது. இந்திராவின் தலைமையிலான இந்தியா. கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்க இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வெடித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கு வெற்றி. அதன் விளைவாக, இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, பாகிஸ்தான். 



ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்திராவால் இப்படி இரண்டாக பிரிந்தது. இந்தியாவின் உதவியோடு, 1971 டிசம்பர் 16ம் தேதி கிடைத்த உள்நாட்டு கிளர்ச்சியின் வெற்றியை தொடர்ந்து 1972 மார்ச்சில் வங்கதேசம் என்ற தனி நாடாக கிழக்கு பாகிஸ்தான் மாறியது. இதனால், இந்திய மக்களின் மத்தியில் இந்திராகாந்தி என்ற பெயரே பிரமிப்பை ஏற்படுத்தியது. அது, இந்திராகாந்தியை சர்வாதிகார பாதையை நோக்கி பயணம் செய்ய வைத்தது.

ஏற்கனவே கட்சிக்குள் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி தேர்தலில் வென்ற இந்திராவை,  மக்கள் தந்த வெற்றியும் போருக்கு பிந்தைய செல்வாக்கும் வேறு பரிமாணம் நோக்கி அழைத்துச் சென்றது. கூடவே, அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. விளைவு, இந்திய ஜனநாயகமானது பேராபத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: