Friday 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 7


1962 தேர்தல் முடிந்து 1967 தேர்தலுக்குள் 5 ஆண்டுகளில் கட்சிகளில், ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள். எல்லாவற்றுக்கும் மேல் இரண்டு போர்களை இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா பார்த்தது. பதினைந்து ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்த நாட்டில் ஐந்து ஆண்டுகளில் 4 பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள். கிங் மேக்கராக காமராஜர் உயர்ந்ததும் இந்த 5 ஆண்டில் தான்.

1962 பிப்ரவரியில் தேர்தல் முடிந்த சில மாதங்களில் சீனாவுடன் போர் மேகம் சூழ்ந்தது. அக்டோபரில் அது போராக வெடித்தது. சுமார் 35 நாட்களுக்கு இந்தியா - சீனா போர் நடைபெற்றது. இந்த போர் முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் நீட்சியாக மற்றொரு போர் மேகம் இந்தியாவை சூழ்ந்தது. 1965ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு யுத்தம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க, அதுவரையிலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

1964ம் ஆண்டில் நேரு மறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து பிரச்னைகள் உருவாகின. முன்னதாக, கட்சிக்குள் ஒருவருக்கு ஒரு பதவி என 'கே' பிளானை அறிமுகப்படுத்தியதோடு, தமிழக முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார், காமராஜர். தேசிய அரசியலுக்குள் காமராஜர் நுழைந்ததும் தமிழகத்தில் காங்கிரஸ் சரிவை நோக்கி பயணித்தது.



நேரு மறைவுக்கு பிறகு, இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்றார். இரண்டு வாரங்களில் காமராஜர் தலையீட்டால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும் பாகிஸ்தான் போர் முடிந்த சில வாரங்களில் 1966ல் மறைந்தார். மீண்டும் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்க அடுத்த பிரதமர் தேடுதல் தொடங்கியது.



கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலருக்குள் கடும் போட்டி. இறுதியாக, காமராஜரின் முயற்சியால் நேருவின் மகள் இந்திராகாந்தி பிரதமரானார். மொரார்ஜி தேசாய் துணை பிரதமராக பதவியேற்றார். இதுபோன்ற ஏராளமான சிக்கல்களுக்கிடையே 1967 தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: