Friday 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 8

இந்திய பிரதமராக 1966ல் பதவியேற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிருப்தியை இந்திரா ஏராளமாக சம்பாதிக்கத் தொடங்கினார். ஏற்கனவே நேருவின் போக்கால் பத்து ஆண்டுகளுக்கு முன் தனிக்கட்சியை ராஜாஜி தொடங்கியது போலவே, இந்திராவுக்கு எதிரான மனநிலைக்கு மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

கம்யூனிஸ்டை போலவே இந்தியாவின் முதல் பெரிய கட்சியும் பிளவை நோக்கிய பாதையில் பயணம் செய்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் 4வது பொதுத்தேர்தல் நெருங்கியது. இதற்குள் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள் இந்திய குடியரசுக்குள் முழுமையாக வந்திருந்தன. 1967ம் ஆண்டு நடந்த அந்த தேர்தலில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 26 அதிகரித்து 520 ஆக உயர்ந்திருந்தது.

இரண்டு நாடுகளுடன் நடந்த போர்கள். காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதமர்களின் மறைவு. நேருவின் வாரிசு இந்திரா அறிமுகம் என பல சாதகங்களுடன் தேர்தலை சந்தித்தாலும் 1967 தேர்தல் காஙகிரசுக்கு இனிமையானதாக இல்லை என்றே கூறலாம்.



காங்கிரஸ் கட்சி மீதான இந்திய மக்களின் மயக்கமும் இந்த தேர்தலில் மெதுவாக தெளியத் தொடங்கியது. இருபது ஆண்டுகளாக ஏகபோகமாக இருந்த காங்கிரசின் ஆதிக்கம் சரிய தொடங்கியது.

நாடாளுமன்றத்தோடு மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து மொத்தமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும் காமராஜருக்கு பேரதிர்ச்சியையும் தந்தது 1967ம் ஆண்டு தேர்தல்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: