Friday 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 6

சுதந்திர இந்தியாவின் 3வது பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பெரிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. ஆளுங்கட்சியான காங்கிரசில் நேருவின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறி, தேர்தலுக்கு முன்னதாக 1959ல் தனிக்கட்சியை தொடங்கினார் ராஜாஜி. அதுதான் சுதந்திரா கட்சி. காமராஜரின் கை ஓங்கியதும் கூட ராஜாஜியின் முடிவுக்கு காரணம். 1954ல் சென்னை மாகாண முதல்வரான காமராஜரின் செல்வாக்கு தேசிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியது.



இதுபோல, தேர்தலுக்கு பின், இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்டில் பிளவு ஏற்பட்டு 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோன்றியது.
அதுவரையிலும் இருந்த இரட்டை உறுப்பினர்கள் தொகுதி முறை ஒழிக்கப்பட்டு முதன்முறையாக தொகுதிக்கு ஒரு எம்பி என 1962 தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 494 இடங்களுக்கு எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 361 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார், நேரு.

இந்திய கம்யூனிஸ்ட் 29, ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18, ஜனசங்கம் 14, சுயேச்சைகள் 20 என டபுள் டிஜிட் வெற்றிகள் ஏராளம். முதன் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது, திமுக. அந்த கட்சியில் 7 பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றனர்.

சென்னை மாகாணத்தில் மொத்தம் இருந்த 41 தொகுதிகளில் 31 தொகுதிகளை காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி அள்ளியது. திமுக 7 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடத்திலும் பார்வர்டு பிளாக் ஒரு தொகுதியிலும் வென்றன. காங்கிசுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்டுக்கு பதில் திமுக தலையெடுத்தது.

1962 பாராளுமன்ற தேர்தலுடன் சென்னை மாகாண சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், திமுக 50 இடங்களை வென்றும் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். இதனால், முதன்முறையாக மாநிலங்களவை மூலமாக நாடாளுமன்றத்துக்கு அடி எடுத்து வைத்தார், அண்ணா.

அதே நேரத்தில், நேருவுக்கு எதிராக ராஜாஜி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் களமிறங்கியபோதும் 1962 பொதுத் தேர்தலில் நேருவே வென்று பிரதமரானார். ஆனால், அடுத்த பொதுத் தேர்தலுக்குள் 4 பிரதமர்களை இந்தியா பார்த்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

No comments: