Sunday 10 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -9

இந்திய அரசியலில் 1967ம் ஆண்டு தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலுடன் பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில், அதுவரை 30 ஆண்டுகளாக மோனாபோலியாக ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் கோட்டைகளில் ஓட்டைகள் விழுந்தன. 

அதுவரை 300க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மைக்கு சற்று அதிகமாக 283 இடங்களில் மட்டும் வென்றது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி 44, பாஜகவின் ஆதிக்கட்சியான ஜனசங்கம் 35 என பெற்றன. அன்றைய சென்னை மாகாணமான தமிழகத்தில் இருந்து 25 தொகுதிகளை வென்று 4வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் வளர்ந்திருந்தது திமுக.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 36ஐ திமுக ராஜாஜி கட்சி கம்யூனிஸ்ட் கூட்டணி வென்றது. நாகை, தென்காசி, நாகர்கோவில் என 3 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் ஆட்சியையும் பறி கொடுத்தது. அதன்பிறகு, 50 ஆண்டுகளை கடந்தும் காங்கிரசால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.



அந்த தேர்தலின்போது முதல்வராக இருந்த பக்தவச்சலம் 9000 ஓட்டில் தோற்றுப்போனார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலரம் தோற்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் காமராஜர் வெற்றியை இழந்ததும் அப்போதுதான். அதே நேரத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணா எம்பியாக வென்றிருந்தார். ஆனால், ஆட்சியை பிடித்ததால் அவர் எம்பி பதவியை ஏற்கவில்லை. எம்எல்சியாகி தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சரானார்.

தமிழகத்தில் திராவிட சரித்திரம் தொடங்கிய வேளையில், 1967 தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் கேரளா, பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி உட்பட 8 மாநிலங்களில் ஆட்சியை பறி கொடுத்தது, காங்கிரஸ். எனினும், மூத்த தலைவர்களின் அதிருப்தியால் மத்தியில் சரிவுடன் தத்தளித்து ஆட்சியை பிடித்த இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். துணை பிரதமரானார், மொரார்ஜி தேசாய்.



இந்த தேர்தலுக்கு பிறகு பிளவை நோக்கி பயணித்தது, காங்கிரஸ்.  நாடும் மற்றொரு யுத்தம் நோக்கி பயணமானது.

(நினைவுகள் சுழலும்)

நெல்லை ரவீந்திரன்

No comments: